ஞாயிறு, ஜூன் 24, 2012

என் தமிழுக்கு வித்திட்டவர்...



        என்னுடைய தமிழின் தரம் படிப்படியாய் உயர்ந்து வருவதாய் ஓர் எண்ணம்! என்னுடைய படைப்புகள் கூட அடுத்த நிலை தரத்தை அடைந்திருப்பதாய் ஓர் உணர்வு; நான் தானே என்னுடைய படைப்புகளின் முதல் "இரசிகனாய்" இருந்திட முடியும்! அப்படியெனில், என்னுடைய படைப்புகளின் தரம் உயர்வதை எளிதில் உணரமுடியும் தானே? அந்த நம்பிக்கையின் அடிப்படையில், நான் பல நாட்களுக்கு முன்பே எழுதிட நினைத்திட்ட தலையங்கத்தை இந்த வாரம் எடுத்திருக்கிறேன். அது! என்னுடைய தமிழுக்கு வித்திட்டவர் யார் என்பதைப் பற்றி!! அவர் எப்படி என்னுள் தமிழ்-தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைப் பற்றி!!! என்னுடைய பள்ளி நாட்கள் துவங்கி, எப்படி என்னுள் இந்த விதையை விதைத்தார் என்பதைப் பற்றி எங்கனம் எழுதிட மறந்திட முடியும்? அவர் எத்தனை கடினமான மனநிலையில் இருப்பினும், எவ்விதமான தாக்குதலுக்கு உட்பட்ட சூழ்நிலையில் இருப்பினும் - நான் எப்போது வேண்டுமானாலும் - அவரிடம் என்னுடைய சந்தேகங்களை, என் கற்பனைகளை விவாதிக்க முடியும். இரு வாரங்களுக்கு முன் கூட என் கவிதையில் ஓர் "சொல்" குறித்து விவாதித்து என் சந்தேகத்தைத் தீர்த்துக்கொண்டேன். உண்மையில், மற்ற விசயங்களில் எப்படியோ?! இந்த விதத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்றே சொல்லவேண்டும். என் தமிழுக்கு வித்திட்டு அதை இன்றளவும் தேவையின்போது தண்ணீர் ஊற்றி வளர்த்து வருபவர் - என்னப்பன் புலவர். இளமுருகு அண்ணாமலை. ஆம்! என் உயிருக்கு வித்திட்டவரே, என் (தமிழ்)உணர்வுக்கும் வித்திட்டவர். 
   
      பொதுவாய், என் வாழ்க்கையை செம்மைப்படுத்த அவர் செய்த செயல்களை முன்பு "கும்பிடறேன்பா" என்ற தலையங்கத்தில் விவரித்திருந்தேன். அத்தலையங்கத்தில் விவரித்திட்ட அதே அடிப்படையில், என் தமிழறிவு வளர்வதில் கூட அவர் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை; மாறாய், என் பள்ளியின் சூழல் அதற்கு உதவியாய் இருக்கவேண்டும் என்பதற்காய் என் "பத்தாவது" வயதில் என் பள்ளியையே மாற்றினார். ஆனால், நான் என்னுடைய விருப்பின் பால் - என் தந்தையின் பெருமை காத்திட வேண்டி - நானே தான் விரும்பி தமிழை நேசிக்க ஆரம்பித்தேன். நான் படித்த தமிழிலக்கணம், இப்போது எனக்கு பெரிதாய் வழக்கத்தில் இல்லை! ஒவ்வொரு முறையும் விடுப்பில் இந்தியா செல்லும் போது, இலக்கணம் பற்றி என் தந்தையிடம் (மீண்டும்) கற்றிட வேண்டும் என முனைந்து நேரமின்மை காரணமாய் அது செயலாக்கபடாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இன்னும் ஓர் வாரத்தில், என் மகளின் பிறந்த நாளுக்காய் விடுப்பில் செல்கிறேன்; பார்ப்போம்! இந்த முறையாவது இலக்கணம் ஏதேனும் கற்க முடிகிறதா என்று!! அவருக்கும் வயது கடந்து கொண்டே போகிறது!!! அவரிருக்கும் போதே என் இலக்கண அறிவுக்கும் "பிள்ளையார் சுழி" போட ஆசைப்படுகிறேன்; அது அவருக்கு பெருத்த ஆனந்தத்தையும், கர்வத்தையும் கூட கொடுக்கக்கூடும். பெருந்தகையின் "மகன் தந்தைக்காற்றும் உதவி…" எனும் "குறள்" போல், இதை அவருக்காய் செய்திடல் வேண்டும். இந்த முறை செய்திடுவேன் என்ற நம்பிக்கை மிகுந்தே உள்ளது.

          என் பள்ளிக்காலத்தில், என் தந்தை தான் எனக்கு தமிழ் மற்றும் வகுப்பாசிரியர்; எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த வாய்ப்பு எனத் தெரியவில்லை! எனக்கு வாய்த்தது. எங்கள் (உயர்)பள்ளியில் (எட்டு முதல் பத்து வரையிலான வகுப்புகள் கொண்டது), காலை "கடவுள் வாழ்த்து/ தேசிய கீதம்" முடித்த பின் தினமும் ஒரு "திருக்குறள்" சொல்லவேண்டும் என்ற நியதி; "திருக்குறள்" என்றுரைத்ததும் - முன் வருவோர் - எவர் வேண்டுமானாலும் சொல்லலாம்; எந்த கட்டுப்பாடும் இல்லை. இது, என்னுடைய "எட்டாவது" வகுப்பில் துவங்கியது; முதல் ஓராண்டு "மூத்த மாணவி" ஒருவர் இருந்தார்; அவருக்கும் எனக்கு கடினமான போட்டி இருக்கும்! இதற்காகவே, இருவரும் முதல் வரிசையிலேயே நின்றிருப்போம் - ஓடி சென்று முதல் ஆளாய் சொல்ல!! உண்மையில், எவர் அதிகமான நாட்கள் சொன்னோம் என்று தெரியவில்லை; ஆனால், எங்கள் இருவர் தவிர யாரும் அதற்கு போட்டி போடுவதில்லை. நான் அடுத்த ஆண்டு சென்றபோது, அவர் பள்ளி இறுதியாண்டு முடித்து வேறு பள்ளிக்கு சென்று விட்டார்; அத்துடன், எனக்கு இருந்த ஒரே போட்டியும் இல்லாமல் போனது!!! ஆயினும், என் ஆர்வம் குறையவே இல்லை; வேறெவருக்கும் அந்த வாய்ப்பை எளிதில் விட்டுக்கொடுத்ததில்லை (ஓரிரு நாட்கள் தவிர). காலையில், உணவு உண்ணும் போதோ அல்லது பள்ளிக்கு கிளம்பும் போதோ தான் என் தந்தையிடம் ஓர் திருக்குறள் மற்றும் அதன் விளக்கமும் சொல்லக் கேட்பேன். அவர், பொதுவான விளக்கம் சொல்வதோடு அல்லாது, அவரின் பார்வையிலான விளக்கத்தையும் சொல்லிக்கொடுப்பார்.

             அவரின் பார்வை கலந்த விளக்கம் தான் என்னைப் பலவழியில் பன்படச் செய்தது. அவரின் பார்வையில், என்னை மிகவும் கவர்ந்த திருக்குறள் "இளைதாக முள்மரம் கொள்க…" என்பது. முதலில், முள்மரம் பற்றி கூறி, பின் அதற்கு அவர் சொல்லிய விளக்கம் "நாமும், நம் தவறுகளை சிறிய வயதிலயே களைந்து விடவேண்டும்; இல்லையேல், பின்னாளில் அதை களைவது மிக்க சிரமமாய் இருக்கும்" என்பது தான். இங்கே தான், வள்ளுவனையும் எனக்கு மிகவும் பிடிக்கும்; "ஐந்தில் வளையாதது..." என்பதில் இருந்த மாறுபட்ட வள்ளுவனின் கருத்து. சிரமம் எனினும், எப்போதும் எதுவும் சாத்தியம் என்ற வள்ளுவன் வாக்கு! அதன் அடிப்படையில் தான் "ஐந்தில் வளையாதது" என்ற என் புதுக்கவிதையை எழுதினேன். பெருந்தகையும், எந்தந்தையும் கலந்து ஊட்டிய தமிழ் இது!! திருக்குறளுக்கு பின், என் தந்தைக்காய் நான் செய்தது; எந்த பள்ளியில் "தமிழ் மன்ற தேர்வு" நடப்பினும் அதில் கலந்து கொண்டு  முடிந்த அளவில் "முதல் பரிசு" வாங்கச் செய்தது; எத்தனை தேர்வுகள் வென்றேன் என்று உண்மையில் எனக்கு நினைவில்லை; அதற்கான ஆதாரங்கள் எதுவும் இப்போது கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை. அதன் பின், பள்ளி கலைவிழாக்களில் கலந்து கொண்டு  பேசுவது! அத்தனை உணர்ச்சிகளையும், என் தந்தை எனக்கு சொல்லிக் கொடுப்பார். நான் பேசி, முடிந்ததும் என் தந்தையையும் முந்திக்கொண்டு என்னையும், என்னப்பனையும் பாராட்டிய ஆசிரியர்கள் நிறைய பேர். இது தற்பெருமை அல்ல; மாறாய், என் "தமிழ் ஆசான்" பற்றி விளக்கும் செயல்.

           இப்படியாய், பல விசயங்களை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம்; ஆயினும், சுருங்கச் சொல்ல வேண்டும் என்பதால், இவ்வலைப்பதிவிற்காய் நான் எழுதிய ஓர் புதுக்கவிதையில் எழுந்த சந்தேகம் பற்றி கூறுகிறேன். அது "கணினி" என்ற புதுக்கவிதை; அதில் "கணி நீ" என்று ஓர் சொற்றொடரை எழுதியிருந்தேன். பின், "கணி" என்ற சொல் "தனித்து" நின்று நான் எதிர்ப்பார்த்த பொருளை கொடுக்குமா என்று ஓர் சந்தேகம். உடனே, என் என்னப்பனை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டேன். அவர் சிறிது யோசித்து விட்டு, அவ்வாறு வரலாம்; அதில் தவறில்லை என்றார்! மேலும், தமிழ் இலக்கிய மரபு எப்போதும் "புதிய சொல்லாக்கத்தை" ஆதரிக்கும் என்றார்!! அது எனக்கு புதிய தகவல்; அது தான் என் தமிழறிவுக்கு முக்கியம். வேறெவரும் இந்த சொல்லாக்கத்தை கையாண்டிருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை!!! ஆனால், உண்மையில் நான் இத்தகைய தந்தை கிடைத்ததற்காய் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இது போல், பல நேரங்களில் அவரின் உதவி கோரியிருக்கிறேன். இவ்வாறாய், என்னப்பன் வித்திட்டதன் மூலம் என் "கன்னி புதுக்கவிதையை" நான் எழுதிய ஆண்டு 1996. அது "பணம்" எனும் புதுக்கவிதை; அவ்வாறாய், நான் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளை கொண்ட "ஏடு" தொலைந்துவிட்டது. என் வீட்டார் எவரும், பழைய தாட்கள் வாங்குபவரிடம் கூட விற்றிருக்கக் கூடும். எனினும், இந்த வலைப்பதிவை ஆரம்பித்த பின் ஒருசில புதுக்கவிதைகள் எனக்கு நினைவுக்கு வந்தன; அதில் "பணம்" எனும் என் முதல் புதுக்கவிதையும் ஒன்று; அதை, சிறு மாற்றம் செய்து இவ்வலைப்பதிவின் முதல் வார பதிப்பிலேயே பதித்துவிட்டேன். இப்படியாய், என்னப்பன் வித்திட்ட இந்த தமிழுணர்வு மென்மேலும்…

செழிக்கும் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை!!!

பின்குறிப்பு: என் தந்தையின் தமிழறிவும், திறனும் அசாதாரணம்! இதை உணர்ந்தோர்க்கு தெரியும் என் கூற்று மிகையல்ல என்பது!! ஏனோ, சூழ்நிலை காரணமாய் அவரால் ஓர் எல்லை தாண்டி விரிவடைய இயலவில்லை; விரிவடைந்திருப்பின், தமிழ் வளர்ச்சிக்கு அவரின் பங்கு பெரிதாய் இருந்திருக்கும். அதற்கு, மிகச்சிறிய உதாரணம் - இவ்வலைப்பதிவில் "என்னப்பனின் பார்வை" என்ற பிரிவில் வெளியிட்டிருக்கும் அவரின் முதல் கவிதை; அது, முதல் பரிசும் பெற்ற "கோதுமை தந்த குணம்" என்ற ஈற்றடி வெண்பா. அதை எழுதும்போது அவருக்கு "இருபத்தைந்து" அகவை; எத்தனை அரசியல் ஞானம், அந்த வயதில் இருந்திருப்பின், அத்தகைய "வெண்பாவை" எழுதி இருக்க முடியும்? என் மகளுக்காய் அவர் எழுதிய பாக்களில் கூட அவரின் "அரசியல் கோபம்" வெளிப்பட்டிருக்கும்; வாய்ப்பும், விருப்பும் இருப்பின் அவைகளை ஓர் முறை படித்துப் பாருங்கள். ஏனோ! அவரை பெரிய அளவிற்கு வளரவிடாது அவர் சூழல் தடுத்துவிட்டது. என் தமிழறிவு, அவரைக்காட்டிலும் "மிகச்சிறியது" எனினும், என்னுடைய பங்களிப்பை எந்த தடையையும் தகர்த்து தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது தான் என் திண்ணமான எண்ணம்!!! எப்போதும் போல், என்னுடைய "தமிழுணர்வு" சார்ந்த இந்த புரிதலுக்கும் அவரின் வாழ்க்கையே எனக்கு பாடமாய் அமைந்திருப்பது கூட எனக்கு கிடைத்திட்ட வரமோ???                                     
    

ஒப்பிடுதலும், வாழ்க்கையும்...



ஒப்பிடுதலே - வாழ்க்கை
ஓட்டத்தின் பாதையை
நிர்ணயம் செய்கிறதோ?
நிர்ணயித்து; பாதையின்
திசையை வரையறுக்கிறதோ??
திசைதிருப்பவும் செய்கிறதோ???
ஒப்பிடுதல் எப்போது;
ஒவ்வாமை ஆவது?...

குழந்தையை குழப்பமாய்;
கருவணு கொடுத்த,
கருவை தாங்கிய,
கல்லறைவரை தொடர்கிற -
பெற்றோர் முகத்துடன்
பெருமையாய்; ஒப்பிடுதல்
தோன்றி - வாழ்க்கை
தொடர்கிறது ஒப்பிடுதலோடு!

ஐந்து விரல்கள்
ஐயம் கொள்வதில்லை;
வித்தியாசத்தை நினைத்து!
விந்தையாய்; அவைகளின்
வித்தியாசமே ஒருசேர
வித்தையை உருவாக்கிடும்!!
வாழ்க்கையும்; வித்தியாச,
விந்தைகளின் தொகுப்பே!!!

ஒப்பிடுதல் இருக்கட்டும்…
ஒவ்வொன்றுக்கும் அல்லாது!
ஒப்புக்கொள்ளும் அளவோடு!!
ஒருவரையும் காயப்படுத்தாது!!!
ஒப்பிடுதல் இருக்கட்டும்…
ஒழுக்கத்துடன் சேர்ந்து!
ஒற்றுமையை குலைக்காது!!
ஓருயிரையும் அவமதிக்காது!!!

ஒப்பிடுதல் விலகின்…
ஓடிடும் இன்னல்கள்!
ஒழிந்திடும் (தீய)எண்ணங்கள்!!
ஒலித்திடும் "மன"க்குரல்!!!
ஒப்பிடுதல் விலகின்…
ஒழுக்கம் பெருகும்!
ஒருவரும் எதிரியாவார்!!
ஒளிர்ந்திடும் வாழ்க்கை!!!

கற்பும், கண்ணகியும்...



கணவனைக் காப்பதும்
கற்பை காப்பதுவே!
கண்ணகி "கற்புக்கரசி"யானது;
கற்பை காத்ததுடன்,
"கள்ளக்காதலை"யும் மன்னித்து!!
கணவனைக் காத்ததாலே!!!

பெண்ணும், மனைவியும்...



காதலனுக்காய் பெற்றோரை
கதறவிட்டோடும் பெண்ணை;
கலங்கடிக்கும் சமுதாயமே!
பெற்றோருக்காய் - கணவனை
பிரிந்தோடும் மனைவிக்காய்;
பரிந்து பேசுவதேன்???

நட்பில் பிரிவு...


நிலையில்லாது, பிரியும்
நட்பின் வேதனை!
நெஞ்சை பிளந்து
நிகழ்த்தும் சோதனை!!
நிலை கொள்ளுங்கள்;
நட்பு கொளும்முன்!!!

ஞாயிறு, ஜூன் 17, 2012

பாடலை எப்படி வரையறுப்பது???



        சில மாதங்களுக்கு முன் தமிழ்த்திரைப்பட பாடல் ஒன்று - திரைப்படம் வெளியாவதற்கு முன்பே - இணையதளத்தில் வெளியாகி குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை அடைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதோ ஓர் புரட்சித்-தீ போல் அப்பாடல் பரவிற்று என்றால் கூட மிகையல்ல! அதிக அளவில் ஆதரவாளர்களை கொண்டது மட்டுமல்லாமல், அப்பாடலுக்கு பெருத்த எதிர்ப்பும் இருந்தது. எதிர்த்தவர்கள் அனைவரும் பெரும்பான்மையாய் சொல்லிய காரணம் அந்த பாலில் இருந்தது அனைத்தும் ஆங்கில வார்த்தைகள் (ஓரிரு தமிழ் வார்த்தைகள் தவிர) என்ற குற்றச்சாட்டு! அப்பாடல் தமிழுக்கும், தமிழ்த்திரைப்படத் துறைக்கும் பெருத்த அவமானத்தை உருவாக்கியதை போல் கோபப்பட்டார்கள்!! இதற்கு முன், பல தமிழ்த் திரைப்பட பாடல்களில் ஆங்கிலம் பெருத்த அளவில் கலந்து இருந்திருக்கிறது; இன்னமும் இருந்து கொண்டு வருகிறது என்பதை எவர் மறுக்க முடியும்? இத்தலையங்கத்தை படிப்போர், ஓர் கணம் சிந்தியுங்கள்; எத்தனை தமிழ்த்திரைப்பாடல்களில் "எவருக்கும் விளங்கா வண்ணம்" ஆங்கிலச் சொற்களைக் கொண்டு  இடையிடையே பாடுவார்கள் என்று!!! என்ன வார்த்தை, என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவர்களுக்காவது விளங்கி இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை? ஆனால், இங்கே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கும் பாடலில் வரும் அனைத்து ஆங்கில வார்த்தைகளையும் தெளிவாய் கேட்கமுடியும்; மேலும், அதை பாடியவரும் தெளிவான உச்சரிப்பில் நிதானமாய் பாடுவார். 

       அப்பாடல் இத்தனை அளவில் கவனிக்கப்பட, தெளிவான உச்சரிப்பு கூட காரணமாய் இருக்குமோ? ஏன் பல பேர் இந்தப்பாடலை எதிர்த்தனர் என்று யோசித்தபோது, அவர்கள் அனைவரும் விளம்பரத்தை நாடியே செய்ததாய் எனக்கு விளங்கியது. இத்தலையங்கம் கூட விளம்பர-முயற்சியாய் உணரப்படக்கூடாது என்பதற்காய் தான் இத்தனை காலம் கடந்து எழுதுகிறேன்; அந்த பரவசங்கள் அனைத்தும் அடங்குவதற்காய் காத்திருந்தேன். அதனால் தான் ஓர் நடிகையைப் பற்றி ஏன் எவரும் கவலைப்படவில்லை என்ற தலையங்கத்தை கூட காலம் கடந்து எழுதினேன். என்னுடைய பார்வையும், இந்த வலைப்பதிவும்  விளம்பரத்திற்காய் அல்ல; விளங்குவதற்காய்/ விளக்குவதற்காய். நான் அப்பாடலை வேறொரு பரிமாணத்தில் இருந்து பார்க்க முயற்சித்திருக்கிறேன். அதற்கு முன், ஓர் முக்கியமான எதிர்ப்பு பற்றி கூற விரும்புகிறேன். அப்பாடல் குறித்து, இந்த ஆண்டு தேசிய விருது வாங்கிய ஓர் கவிரிடன் நிருபர் ஒருவர் கருத்து கேட்கிறார்; அதற்கு அந்த கவிஞர் எந்த பதிலும் கூறாமல், அதற்கு பதிலளிப்பது "அவமரியாதை" என்பது போன்ற ஒரு கருத்தை கூறினார். இதில் முக்கியமானது, அவருக்கு தேசிய விருது கிடைத்த பாடலின் முதல் வரியின் இரண்டாவது வார்த்தை "ஆங்கிலம்"; மேலும் அதிக அளவில் "கொச்சைத் தமிழ்" போன்ற வார்த்தைகள் இருக்கும்; அதையும் பெரும்பாலோர் இரசித்ததனால் தானே விருதும் கிடைத்தது? எனவே, இரசிகர்கள் அனைத்தையும் இரசிக்கின்றனர் என்பதே உண்மை. எனவே, இங்கு தமிழுணர்வு பற்றி வீண்-விவாதம் செய்யாது அந்த முயற்சியை பாராட்டவேண்டும்.

     இவ்விதமான எதிர்ப்புகளுக்கும் மேலாய், அந்த பாடல் வெகுவாய் பலரையும் கவர்ந்தது; அந்தப்பாடலை தழுவி பலபாடல்கள் வந்தன; அந்தப்பாடலை பலர் பலவிதமாய் பாடினர்; அந்தப்பாடல் (கிட்டத்திட்ட) இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது; உலக அளவில் கூட பிரசித்திபெற்றது. ஓர் வெளிநாட்டவர் அப்பாடலை "கித்தார்" இசைக்கருவியில் எப்படி வாசிப்பது என்று ஓர் வகுப்பே எடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை கவனிக்க வேண்டாமா? ஓர் தமிழன் இதை சாதித்திருப்பதை எண்ணி பெருமைப்படவேன்டாமா?? ஆங்கில வார்த்தைகள்  இருக்கும் ஒரே காரணத்திற்காய் அதை எவ்வாறு இப்படி தூற்றமுடிகிறது??? அப்படியாயின் அவ்வாறே மேற்கூறிய வண்ணம் பல பாடல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போதெல்லாம் இவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? சமீபத்தில் நடந்த பெரிதும்-கவனிக்கப்படும் "கிரிக்கெட் தொடரில்" வடமாநிலத்தில் நடந்த ஓர் போட்டியின் போது (இடைவெளியில்) அந்த பாட்டு ஒளிபரப்பப்பட்டது; பலரை கவர்ந்ததால் தானே இது சாத்தியம் ஆயிற்று?  இதற்கெல்லாம் உச்சமாய் "இலங்கைத்தமிழர்" ஒருவர் இந்த பாடலை வேறொரு விதத்தில் தமிழைப் போற்றும் விதமாய் கொடுத்திருந்தார். வாய்ப்பு கிடைப்பின், அதைப் பார்க்காதோர் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். தமிழின்/ தமிழனின் பெருமையை உணர்த்தும் விதமாய் ஓர் பாடல் உருவாக காரணமாய் இருந்ததற்காய் பெருமைப்படவேன்டாமா? ஒருவேளை, இந்த தமிழ்ப்பாடலை கூட அவர்கள் விவாதத்திற்குட்பட்ட பாடலின் சாயல் என்பதால் வெறுத்து எதிர்ப்பார்களோ?? ஏன் இவர்களுக்கு இந்த "விளம்பர வெறி???". 
         
           பலரைக்கவர்ந்து அதன் தாக்கமாய் பல வடிவத்தில் பல திறமைகளை உணர காரணமாயிருந்த ஓர் பாடலை ஏன் எந்த காரணமும் இன்றி வெறுக்கவேண்டும்? உண்மையில், அந்த பாடலின் பால் எனக்கு "பெரிய ஈர்ப்போ" "அல்லது "சிறிய வெறுப்போ" இல்லை. அந்த பாடல் பற்றி இங்கிருக்கும் தமிழன்பர்கள் பலமுறை சொல்லியும் கூட நான் அதை பார்க்க முயற்சிக்கவில்லை. என்னவள் கூட பலமுறை அப்பாடல் குறித்து கூறினாள்; அப்போதும் கூட நான் அந்த பாடலை பார்க்கவில்லை. ஓர் நாள் - என் மகள் (அப்போது, இரண்டரை வயதுக்கு சற்று குறைவு) அந்தப்பாடலை முணுமுணுத்தது கண்டதும், அந்த பாடலை உடனடியாய் பார்த்தேன்; அப்போது கூட அந்தப்பாடல் குறித்து பெரிய அபிமானம் தோன்றவில்லை! "என்ன வாழ்க்கை இது?" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டது போல், என் மகளுக்காய் நான் சேகரித்த பாடல்கள், "கேலிச்சித்திர" படங்கள் அனைத்தும் அவளை வெகுவாய் கவர்ந்தது எனினும், அவளாய் விரும்பிட்ட முதல் பாடல் எனும்போது அப்பாடல் மேல் ஓர் அபிமானம் தோன்றிற்று. ஓர் சிறுமியை கவர்வதை காட்டிலும் ஒரு பாடலைப் பற்றி பாராட்ட வேறு என்ன காரணம் வேண்டும்? எந்த தடையும் தேவையில்லை என்று தோன்றுகிறது; இது ஓர் உதாரணம் தான், அப்பாடல் கவர்ந்த பில்லைச்செல்வங்கள் ஏராளம். நான் சில மாதங்களாய் "கித்தார்" இசைக்கருவி வாசிக்கப்பழகி வருகிறேன்; என்னுடைய இப்போதைய இலக்கு, என் மகள் அந்த பாடலிலிருந்து கேட்கும் குறிப்பிட்ட வரியை இசைத்து காண்பிப்பது; கூடிய விரைவில் இதை நிறைவேற்றவேண்டும்.

            தேவையில்லாமால் அப்பாடலை பற்றி குறை கூற வேண்டாம் என தோன்றுகிறது; அப்பாடலை போற்றமுடியாது போயினும், குறைந்தபட்சம் தூற்றாமலாவது இருக்கலாம். இதை விட இன்னொரு விசயம், உண்மையில் அந்த திரைப்படத்தில் மற்ற அனைத்து பாடல்களும் கூட அருமை. ஒரு பாடலில் - மீண்டும் ஆங்கில வார்த்தைகள் அதிகம் எனினும் - ஆழமான கருத்துகள் மிக எளிய வகையில் கூறப்பட்டிருக்கிறது. விவாதத்திற்கு உண்டான பாடலின் அதீத விளம்பரம் மற்றும் புகழால் கூட இந்த பாடல்(கள்) அதிகம் கவனிக்கப்படாது போயிருக்கக்கூடும்; வாய்ப்பு கிடைப்பின், மற்ற பாடல்களை கூட கேட்டு இரசியுங்கள். நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காய், அதிகம் கவனிக்கப்பட்ட, விரும்பப்பட்ட ஓர் பாடலை பற்றி தவறாய் விமர்சிப்பது எந்த விதத்திலும் நியாயமாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். மேலும், தமிழ் வளர்வதற்கு அல்லது தமிழைப் பறைசாற்ற வேறு பல வழிகள் உள்ளன என்பதை நான் தொடர்ந்து தலையங்கம் மூலமாயும், கவிதை மூலமாயும் வலியுறுத்தி வருகிறேன். பிற மொழிக்கலப்பால் எந்த மொழியும் அழிந்ததாய் அல்லது சிறப்பு குறைந்ததாய் இங்கே எந்த சான்றும் இல்லை. குறிப்பாய்,  தமிழ் போன்ற ஓர் "செம்மொழியை" எந்த மொழியும் எந்த விகிதத்தில் கலப்பினும் ஒன்றும் செய்து விடமுடியாது. எனவே, இம்மாதிரி தேவையில்லாத விமர்சனங்களை தவிர்த்து, அந்த பாடலையும், அதனால் உண்டான நல்ல-விளைவுகளை (மேற்குறிப்பிட்ட வண்ணம்) எண்ணி போற்ற முயல்வோம். எனவே, ஓர் பாடலை - அதன் புதுமுயர்ச்சியை அதன் தாக்கத்தை பாராட்ட மறுத்து…

மொழியை முன்னிறுத்தி விமர்சிக்கத் தேவையில்லை!!!                              

தெளிவுகொள் தமிழா...




தமிழை தவறின்றி
தெளிவாய்; பேசத்
தெரியாததை - தெம்பாய்; 
தம்பட்டம் அடித்து
திரியும் தமிழா!!!
தெளிவு ஏனில்லை,
தெளிந்திட வழியென்னவென;
தெரிந்திட முயல்வோமா?

ஊதியத்திற்கும், உயர்விற்கும்
ஊறு விளைவிக்கிறது -
என்பதற்காய்; சிரமம்
எத்தனையாயினும், சகலரும்
உன்னை இகழ்ந்தபோதும்;
ன்தாய் மொழிமறந்து,
அறவே தமிழ்கலவாத
ஆங்கிலத்தில் பேசுகிறாயே!

தாய்மொழி தமிழில்(மட்டும்)
தடுமாறி பேசுவதேன்?
தடுமாற்றம் தவறென;
தெரியாது இருப்பதேன்??
தெரிந்தது பலவாயினும்;
தாய்மொழியில் தான்
சிந்தனை வருமென்ற
சித்தாந்தம் மறந்ததேன்??

சிந்திப்பதே உந்தன்
செந்தமிழ் தாய்மொழியில்;
வந்திப்பது எவரெதுவாயினும்!
வார்த்தை தெரியாதென்பது;
எங்கனம் சாத்தியம்?
எங்கேயிதில் சத்தியம்??
பொய்யை மறைக்க;
பொய்மேல் பொய்யோ???

தெளிவுகொள் தமிழா...
தமிழும், தமிழுணர்வும்;
நிர்ப்பந்தத்தால் வருவதல்ல;
நின்பந்தத்தால் விளைவதென!
எந்த தேசத்தில்
எப்படியிருப்பினும்; உந்தன்
உயிரென!! உயிருடன்;
உணர்வும் கலந்ததென!

தெளிவுகொள் தமிழா…
தெளிவாய் எவன்மொழியோ
பேசும், உன்னால்;
பரணியெங்கும் பரந்த!
மொழியனைத்திலும் சிறந்த!!
மெய்(தாய்)மொழியாம் - தமிழில்;
இலக்கியம்சேர் கவிகூட
இயற்றிட கூடுமென்று!!

தெளிவுகொள் தமிழா…
தாய்மொழி கூட;
தானாய் அமைந்திட்ட
தாய்-தந்தை போலவென்று!
பெற்றோரிடம் பிணைப்பு;
பிறப்பிலேயே வருவது!!
ஆங்கே; தமிழு(ணர்வு)ம்
அதுவாய் வந்திடல்வேண்டும்!!!

நட்பின் வலிமை...


நட்பின் வலிமை;
நண்பர்களின் எண்ணிக்கையிலல்ல!
நண்பர்கள் இருவரேயாயினும்;
நீடித்த நட்பிலிலுள்ளது!!

சுயநலமும், பொதுநலமும்...


சுயநலத்தில் பொதுமையும்,
பொதுநலத்தில் சுயமும்;
இணையும் கலவையிலுள்ளது
இரண்டின் வலிமையையும்!!!

பிரிவின் வலி…



பாரபட்சமின்றி  எந்தவொரு,
புவியிலிருக்கும் உறவிலும்;  
பிரிவை முதலில்
பரிந்துரைப்பவரை விட;
பிரிவை எதிர்பாராதவர்க்கே
"பிரிவின்"வலி அதிகம்!!!

உண்மையும், பொய்யும்...

பொய்யினால் பெருகலாம்
பொருளும், புகழும்;
ஆயின்…
உறவும், உலகமும்
உயிர்த்திருப்பது உண்மையாலே!!!

காக்கைக்கும் தன்குஞ்சு...


"காக்கைக்கும் தன்
குஞ்சு பொன்குஞ்சு"

பொய்யாய் புகழ்ந்து
பொய்க்கு, தன்னையறியாது;
புகலிடம் கொடுக்கும்
பாதகமான செய்கை!!!
உள்ளதை, உள்ளபடி
உணர்வோம்; உண்மையாய்...

ஞாயிறு, ஜூன் 10, 2012

தம்பதியர்க்கிடையே என்ன பிரச்சனை???


        இந்த வாரம் எடுத்திருப்பது சிக்கலான விவாதம்; இதை விவரிக்க சரியான உணர்தல் வேண்டும். சிறிது எல்லை தாண்டினாலும், கருத்து வேறு விதமாய் மாறிவிடும் என்று எனக்கு நன்றாய் தெரியும். எனினும், இதை என்னால் சரியாய் செய்ய முடியும் என்ற நம்பிக்கையின் பால் - இந்த தலையங்கத்தை எழுதி உள்ளேன். உண்மையில், தம்பதியர்க்கு இடையே எழும் எந்த பிரச்சனையிலும் நியாயம் இருப்பதில்லை; இன்னும், தெளிவாய் சொல்ல வேண்டுமெனில் அவை பிரச்சனையே இல்லை; சிறிது நாட்கள் கழித்து நாமே நகைக்கும் நிகழ்வுகளாகத்தான் இருக்கும். இதை படிக்கும் தம்பதியர் ஓர் கணம் சில மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த ஓர் பிரச்சனையை எண்ணிப் பாருங்கள். இப்போது, அந்த பிரச்சனைக்கான அடிப்படை காரணத்தை தேடுங்கள்; வெகு நிச்சயமாய், எந்த நியாயமான காரணமும் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை. காரணம், இருந்தால் தானே கிடைப்பதற்கு? அதே சமயம், ஆழ்ந்த தெளிவான காரணம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை; அவை கண்டிப்பாய், விழுக்காட்டில் குறைவு. அதைப் பற்றி நான் இங்கே விவாதிக்கப்போவதில்லை; ஏனெனில், அவர்கள் சேர்ந்து வாழ்வதை விட பிரிவது நல்லது; இதை என்னுடைய சமீபத்திய புதுக்கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் பிரிந்து இருப்பது, அவர்களுக்கு மட்டுமல்ல; அவர்களின் குழந்தைகள் உட்பட அவர்கள் சார்ந்த அனைவருக்கும் நல்லது.

       மேலும், இணக்கமில்லா தம்பதியர்க்குள் உண்டான பிரச்சனையை வேறெவரும் தீர்க்க முடியாது; அவர்களே தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். கண்டிப்பாய், எந்த நடுவராலும் (அவர்கள் பெற்றோர்கள் உட்பட) சமாதானத்தை/ புரிதலை உருவாக்க முடியாது; சமாதனம் நிகழ அவர்களுக்குள் உண்மையான, விருப்பு வெறுப்பு கலவாத குற்றச்சாட்டுகள் நிகழ வேண்டும். அது நிகழ, அவர்கள் ஒருவரை ஒருவர் பகையாய் எண்ணாதிருத்தல் வேண்டும்; அப்படி எண்ணிட அவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்திடல் வேண்டும். நேசம் இல்லை என்பதால் தானே, அவர்கள் வேறொருவரை நாடுகின்றனர்?  எனவே, நான் இங்கே எடுத்துக்கொண்டிருப்பது பெரும்பான்மையான தம்பதிகளை. ஓர் இல்லறத்தில், மனைவி செய்த தவறால் எழும் பிரச்சனைகள் - கிட்டத்திட்ட  அனைத்தையும் - அந்த மனைவி நினைத்தால், எந்த கணம் வேண்டுமானால் சரிசெய்துவிடலாம் என்பதே நிதர்சனம். ஓர் கணவன், எத்தனை கோபமாய் இருப்பினும் "என்னங்க, என்னங்க" என்று அழைக்கும் போதே, அவன் பாதி விசயத்தை/ கோபத்தை மறந்து விடுவான். அதன் பின், மனைவி செய்யும் சிறு சிறு குறும்புகள் அல்லது வார்த்தை விளையாட்டுகள், அவனை படிப்படியாய் மாற்றி அதிக பட்சம் ஓர் பத்து நிமிடத்துக்குள் அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விடும். "நானெல்லாம் அப்படி கிடையாது என்று மார் தட்டுபவர்கள் கூட", ஏதும் செய்யவில்லை எனினும் - குறிப்பிட்ட காலத்திற்கு பின் - தானாய் இயல்பு-நிலைக்கு வந்துவிடுவர்; குடும்பம் வேண்டுமெனில், வேறு வழியேதுமில்லை.  

       ஆனால், இது மனைவி நினைத்தால் தான் சாத்தியம்; இல்லை எனில், கோபமாய் இருந்து கொண்டு - கணவன் தனியாய் சங்கடப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான். இல்லையேல், மனைவியின் தவறு தெரிந்தும், அவன் எந்த உணர்வும் காட்டாது - கோபப்படாமல் இருக்க வேண்டும். ஆண் எத்தனை "கோபக்காரனாய்" சித்தரிக்கப்படினும், அவன் தொடர்ச்சியாய் தன் தாயை, தமக்கையை, தங்கையை பார்த்தே வளர்கிறான்; அவனுள், பெண்ணின் மீதான ஓர் பாசம்/ பரிசம் தொடந்து இருந்து கொண்டே இருக்கும். மனைவியிடத்தில் அவன் இதை காண்பிப்பதில்லை எனினும், அந்த உணர்வு மனைவி சார்ந்தும் உள்ளதை மறுக்கமுடியாது. அதனால் தான் அவனை எளிதில் ஒரு மனைவியால் சாந்தப்படுத்தப்படுகிறது. இதை ஆண்களின் - பலகீனம் என்று பலரும் சொல்கிறார்கள்; ஆனால், நான் இதை ஆண்களின் "பலமாய்" உணர்கிறேன்; அதனால் தான் பல பிரச்சனைகள் எளிதில் தீர்க்கப்படுகின்றன. மாறாய், பிரச்சனையின் காரணம் கணவன் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அவன் எத்தனை முயன்றும், மனைவி என்பவள் அத்தனை எளிதில் அதை மறப்பதில்லை. மனைவியை எளிதில் சாந்தப்படுத்தும் அளவிற்கு கணவனுக்கு திறமை இல்லை அல்லது அவனுக்கு அந்த சாதுர்யம் போதவில்லை என்றும் கொள்ளலாம்; இதற்கு வயது என்பது ஓர் தடையே அல்ல ; எந்த தம்பதியர்க்கும் இது பொருந்தும். இங்கே எவரின் கோபம் உயர்ந்தது என்பது முக்கியமல்ல; சமாதானமும் சந்தோசமும் தான் முக்கியம்.

         ஆதலால் தான் "ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே" என்றார்கள். பெண்ணிற்கு தான் இந்த சாதுர்யம் இருக்கிறது என்பது உண்மை. எனக்கு தெரிந்த அளவில், இன்றைய காலகட்டத்தில், ஓர் கணவனால் தம்பதியர்க்கு இடையே உருவாகும் பல பிரச்சனைகளுள் முக்கியமானது, அவன் குடும்பம் சார்ந்த உறுப்பினர்களுக்கு பணம் செலவிடுவதால் விளைகிறது என்று தோன்றுகிறது. இந்த விசயத்தை இரண்டு சாயல்களில் பார்க்கலாம்; 1. ஓர் பிரிவனர், பணம் முழுவதையும் அவன் குடும்பத்தார்க்கு செலவழித்து விட்டு தன் குடும்பம் வருத்தப்படும் படி நடக்கும் கணவன்கள் (குறைந்த விழுக்காட்டில்);  2. இரண்டாம் பிரிவினர், ஓரளவு பணத்தை அவன் குடும்பத்தார்க்கு செலவழித்து விட்டு, தன்குடும்பத்தை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும்/ வைத்திருக்க முயலும் கணவன்கள் (அதிக விழுக்காட்டில்). முதல் பிரிவில் வரும் கணவன்கள் செய்வது கண்டிப்பாய் தவறு!!! இரண்டாம் பிரிவில் வரும் கணவன்களை, நிச்சயமாய் மனைவி என்பவள் புரிந்து கொள்ள முயல வேண்டும்; அவர்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும் - அவர்கள் தங்கள் மனைவிக்கோ அல்லது குழந்தைகளுக்கோ எந்த செலவும் செய்ய தயங்காதவர்கள்; அந்த மாதிரி கணவன்கள் கண்டிப்பாய் தன் மனைவி மற்றும் பிள்ளைகள் மேல் அதிக பற்றுடன் இருப்பர். "சிறந்த கணவன் ⇔ சிறந்த தந்தை" என்பதில் குறிப்பிட்டது போல், ஓர் குடும்பத்திலுள்ள சிறந்த மகனும் - சிறந்த கணவன்!!! என்பதும் உண்மை. அதே நேரம், அவன் முதல் பிரிவு கணவன் போல் - சூழ்நிலையால் மாறி விடாமல் தடுப்பது மனைவியின் உரிமை/ கடமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை ஓர் நடுநிலையோடு செய்ய முயலுதல் வேண்டும்.

         மனைவி என்பவள் செய்யும் பெரும்பான்மையான தவறுகள், தங்கள் குடும்பத்தை "பணம்" சார்ந்து அல்ல "மனம்" சார்ந்து இருப்பதில் தான் துவங்குகிறது என்று எண்ணுகிறேன். எப்படி ஓர் ஆண் "தன் குடும்பத்தை (குறிப்பாய், தன் தாயை)" போற்றி/ சார்ந்து பேசும்போது "மனைவிக்கு" கோபம் வருகிறதோ, அதே போல் ஓர் மனைவி எப்போதும் "என் தந்தை" என்றோ அல்லது என் குடும்பம் என்றோ பேசுவது அந்த "கணவனை" காயப்படுத்துகிறது என்பதையும் மனைவி புரிந்து கொள்ளவேண்டும். இங்கே, கணவன்-மனைவி இருவரும் திருமணத்திற்கு முன்னான "தன் குடும்பம்" என்பதை எப்படி வரையறுக்கவேண்டும் என்பதில் தான் அதிக பிரச்சனைகள் உள்ளதாய் எனக்கு படுகிறது. மேலும், என்ன தான் ஓர் ஆண் தன்  தாயை புகழ்ந்து அல்லது சார்ந்து பேசினும் அவன் ஒரு போதும் மனைவியை விட்டு "தாய் வீட்டிற்கு" சென்று விடுவதில்லை; அவனால், அத்தனை எளிதாய் விட்டு செல்ல முடியாது என்பதே உண்மை. ஒரு வாதத்திற்காய், அவ்வாறு ஒரு கணவன் சென்றால் மனைவி என்ற நீங்கள் என்ன செய்வீர்கள் என்று ஓர் கணம் யோசித்து பாருங்கள்! அதன் வலி புரிகிறதா என்று பாருங்கள்!! எதற்கெடுத்தாலும் "என் தந்தை வீட்டிற்கு சென்றுவிடுவேன்" என்று அடிக்கடி ஓர் மனைவி மிரட்டுவது மட்டுமல்ல; அவ்வப்போது சென்றும் விடுகிறார்கள். உண்மையில், அந்த தம்பதியர் உண்மையான/ அழகான ஓர் வாழ்க்கை வாழ்ந்திருபின் "ஒரு கணத்திலாவது" தன் தவறை மனைவி உணரக் கூடும்/வேண்டும்; அப்படி உணரவில்லை எனின், அவர்கள் வாழ்ந்ததில் உண்மையில்லை/ அழகில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

           இந்த உணர்வு வந்ததும் கூட, தன் தவறை தன் தந்தையிடமும் கூறாது, தன் கணவனிடமும் கூற முடியாது தவிக்கின்ற மனைவிகள் அதிகம். இதில் என்ன தயக்கமோ அல்லது அசிங்கமோ வேண்டி இருக்கிறது? கணவனை விட்டு உங்கள் தந்தை வீட்டிற்கு சென்ற போது எழாத "தயக்கமோ/ அசிங்கமோ" இந்த உணர்தலின் போது மட்டும் ஏன் வரவேண்டும்?? அவன் உங்கள் கணவனில்லையா??? அவனுடன், உடலும்-உணர்வும் கலந்த உறவுதானே நீங்கள்! பின் ஏன், இந்த இடைப்பட்ட நிலை? இதை உணராத மனைவியை விட; உணர்ந்தும் அதை திருத்திக் கொள்ளாத மனைவி செய்யும் தவறு தான் பெரிதாய் எனக்கு படுகிறது. முன்பே குறிப்பிட்டது போல், தம்பதியர்க்கிடையிலான பெரும்பான்மையான பிரச்சனைகளின் காரணம், கண்டிப்பாய் சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் தாண்டியதும் - நினைத்து பார்ப்பினும் நினைவுக்கு வருவதில்லை; அப்படியே வரினும், அவைகள் தம்பதிகளே நகைக்கும் வண்ணம் இருக்கும். பிரச்சனையின் காரணத்தை அறிய முற்பட்டு, இந்த உண்மை புரியும் போது எல்லாப் பிரச்சனைகளும் கண்டிப்பாய் மறைந்து விடும்! பிரிந்திருந்த தம்பதியர் கூடிவிடுவர்; பிரச்சனைகளால் விளைந்த காரணிகளும், காயங்களும் கூட மறைந்து விடும்!! ஆனால், அந்த இடைப்பட்ட காலத்தில் இழந்த இளமையும், அந்த நாட்களும் கண்டிப்பாய் திரும்ப கிடைக்காது. எனவே, தம்பதியர்கள் தங்களுக்கிடையே இருக்கும் எந்த பிரைச்சனையும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து இந்த மாதிரியான பிரிவை தடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து - விட்டு கொடுத்து வாழ்து மட்டுமல்ல....

மாறாய், ஒன்றாய் இணைந்து(ம்) வாழவேண்டும்!!!                              

உணவும், கற்பனையும்



வெகுநாட்களுக்கு பின்
வெய்யில் தாழ்ந்தஓர்
மாலை நேரத்தில்,
மனதின் ஆழத்தில் -
கற்பனையின் உருதேடி
காட்சிகளில் கவிதேடி
கவிதையின் கருதேடி
கடற்கரை மணலில்!

நண்பர்கள் இருவரும்
நகைக்கின்றனர், கதைக்கின்றனர்;
நானோ அவைகளில்
நாட்டமில்லாது; கற்பனையின்
முனையை பிடிக்க,
முனைப்புடன் இருக்க;
நேரமும் கரைந்தது
'நிமிட'த்திலிருந்து, "மணி"களாய்!!

எத்தனை முயன்றும்,
எதுவும் "கரு"வுறவில்லை;
யோசித்தேன் பிற்பாடு,
ஏன் கூடவில்லைஎன!
காரணம் என்னவென்று
தோரணம் ஏதுமின்றி
விளங்கியது; என்றுமழியா,
வள்ளுவனின் "குறள்"வழியா(ய்)!!!

"வேறில்லை செவிக்கெனில்,
வயிற்றுக்கு - என்றானே!"
வயிற்றில் இடமிருப்பின்,
வழிவரும் அனைத்தும்;
"வலி"யின்றி, செவிசேர்ந்து -
வலிசேர்க்கும் - என்பது(வும்);
வள்ளுவன் சொல்லாது
விளக்கிட்ட பொருளன்றோ???

வயிறுபுடைக்க உண்டு
வேறுவழி ஏதுமின்றி
கடற்கரை சென்று
கடுந்தவமே புரிந்திடினும்
கூடுவது எங்கனம்?
கற்பனையும், கவிதையும்??
பொய்த்துத்தான் போகுமோ;
பெருந்தகையின் பொதுமறையும்???

(பின்குறிப்புஉண்ட உணவு செரிமானம் ஆன பின்பே, "கரு"வும் இக்கவிதையும் உருவானது)  

யாழிசையும், ஏழிசையும்...



யாழிசையும், ஏழிசையும்
யாதும் செய்வதன்றி,
யாகம் செய்யும்;
யோகம் வாய்த்த,
மழலையரின் இயல்பு;
மனமகிழ் "குரல்"வெல்ல!!!

நம்பிக்கையும், பயமும்...



நம்பிக்கையும், பயமும்;
உறவின் வலிமையை
பொருத்து - எதிரெதிராய்
பயணிக்கும் இரட்டையர்!!!

சுனாமி...




அலைகள் ஓய்வதில்லை…
அயராது ஓடிய
அயர்ச்சியின் விளைவோ;
அதிபயங்கர "சுனாமி"???

காலையில் எழுதல்...



நாட்கள் நீண்டன;
"பா"க்கள் பல்கின;
விரயங்கள் விலகின;
சுமைகள் குறைந்தன;
எல்லாமும், எல்லோரும்
எண்ணியபோல் தோன்றின;
சிலகணங்கள் தூக்கத்தை
சிதைத்ததால் விளைந்தவையிவை!!!

நகைச்சுவையின் எல்லை...



நாகரிகத்தின் வரையறை கடந்து
நட்பின் எல்லை - மிஞ்சும்;
நல்ல நகைச்சுவையும் நஞ்சாகும்!!!

ஞாயிறு, ஜூன் 03, 2012

குழந்தைகளிடம் என்ன, ஏன் எதிர்பார்க்கிறோம்?...


             நாம் - குறிப்பாய் பெற்றோர்கள் - குழந்தைகளிடம் மிகவும் எதிர்பார்க்கிறோம்; பல சமயங்களில் சற்றும் நியாயமில்லாத - அந்த வயதில் சாத்தியமில்லாத - விசயங்களை எதிர்பார்க்கிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் சமுதாயத்தின் தாக்கம் - சமுதாயத்தில் இருந்து எழும் கேள்விகள் - என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், சமுதாயத்தின் மேல் பழியைப் போட்டுவிட்டு நம் செயல்களை நியாயப்படுத்துவது எந்த விதத்தில் சரியாகும்? நான் ஒரு முறை, இரண்டு வயது கூட கடக்காத, என் மகளை கூட கன்னத்தில் அறைந்ததை என்னுடைய முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். ஏன் அந்த தவறை செய்தேன் இன்றுவரை புரியவில்லை; ஆனால், என் மகளை ஒரு முறை அறைந்த பின் அதைப் பற்றி தீர யோசிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளிடத்திலுள்ள எதிர்பார்ப்பில், நாம் பல நேரங்களில் தன்னிலை தவறுவதை உணர்ந்தேன்; இந்த எதிர்பார்ப்புகளில், எனக்கு முக்கியமாய் முதலில் படுவது அதிக மதிப்பெண் எடுத்து வகுப்பில் முதல் மாணாக்கராய் தேர்ச்சி பெற வேண்டும் என நினைப்பது. இதைப்பற்றி நான் அதிகம் விவரிக்கப் போவதில்லை; ஏனெனில், இதைப்பற்றி மிகத்தெளிவாய் என்னுடைய இன்னுமொரு முந்தைய தலையங்கத்தில் விளக்கியுள்ளேன். நல்ல வேலை!!! உயர் மற்றும் உயர்நிலை பள்ளி இறுதியாண்டில் மட்டும் "மாநில அளவில் முதலிடம்" என்று பிரகனப்படுத்துகின்றனர். சற்று, யோசித்து பாருங்கள்! ஒவ்வொரு இறுதியாண்டு தேர்விற்கும் இது மாதிரி ஓர் விளம்பரம் இருப்பின், குழந்தைகளின் நிலை என்னவாகும் என்று?

               அடுத்து, அவர்கள் எந்த படிப்பை படிக்கவேண்டும் என்பதை திணிப்பது - இதில், சமுதாயத்தின் பங்கு பெரியது. நான் பத்தாம் வகுப்பு முடிக்கும் போது "பாலிடெக்னிக்" என்ற தொழில் சார்ந்த படிப்பு படிப்பதற்கு மிகப்பெரிய போட்டி இருந்தது. நான், உயர்நிலை பள்ளியில் விருப்பப்பட்டு தான் சேர்ந்தேன்; ஆனால், எங்கள் கிராமத்தில், ஏன்பா! "பாலிடெக்னிக்"-ல் இடம் கிடைக்கவில்லையா என்று கேட்டவர்கள் நிறைய பேர். இது தான் பிரச்சனை! கும்பல், கும்பலாய் சென்று ஓர் குறிப்பிட்ட படிப்பை மட்டும் படிப்பது!! குறிப்பிட்ட படிப்பை - படித்தவுடன் வேலை என்பது ஓர் எல்லை வரை தான் இயலும். மேலும், நாம் நம் குழந்தைகளை "சம்பாதிக்கும் இயந்தரமாய்" மட்டும் பார்க்ககூடாது. அதனால் தான், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாய் ஒரு குறிப்பிட்ட படிப்பை மட்டும் படித்தவர்களில் பெரும்பான்மையோனோர் இன்று எப்போது வேலை பறிபோகும் என்ற குழப்பத்தில் இருக்க காரணம். இப்படி குழந்தைகள் திறனும், ஈடுபாடும் எதில் உள்ளது என்பதை அறியாமல், எல்லோரும் சேர்கிறார்கள் என்பதற்காய் ஒரு படிப்பை படிக்க கட்டாயப்படுத்துதல் எந்த விதத்தில் நியாயம்? இந்த மாதிரி படிப்பை பெற்றோர்களும், சமுதாயமும் ஒரு குழந்தையின் மேல் திணிப்பது தான் அதிகம் என்பதால் தான், இதை அழுந்தச் சொல்கிறேன்.  இதில் சில பெற்றோர்கள் வித்தியாசமானவர்கள்; அவர்கள் தங்கள் பெற்றோர் நினைத்த படிப்பை படிக்கமுடியாததால் - தங்கள் குழந்தைகள் படிக்கவேண்டும் என்று விரும்புவது; இது என்ன நியாயம் ஐய்யா? இன்னும் சிலர், தாங்கள் செய்யும் தொழில் அல்லது தாங்கள் படித்த படிப்பையே தொடரும் படி வற்புறுத்துவது! இது தவறல்லவா??

          குழந்தைகளுக்கு என்ன தெரியும்?? என்ற விதண்டாவாதம் வேண்டாம். பெரும்பான்மையான குழந்தைகளுக்கு எந்த கல்வி அல்லது எந்த தொழில் சிறந்தது என்று "தெளிவாய்" தெரியாது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், உங்கள் குழந்தையின் தனித்திறன் என்ன என்பதை உங்களை விட, யார் - எங்கனம், சிறந்து கணித்துவிட முடியும்? அங்ஙனம் செய்யத் தவறி, எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காய் உங்கள் குழந்தையை கட்டாயப்படுத்துவது, உங்கள் தவறென்று எங்கனம் உணர மறந்தீர்கள்? எனவே, உங்கள் குழந்தைகளின் தனித்திறனை கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்; மேலும், அதனை சார்ந்த வேலையை தேர்ந்தெடுக்க உறுதுணையாய் இருங்கள்; குறைந்தது, அவர்களின் விருப்பம் என்ன என்பதை கேட்கவாவது செய்யுங்கள். படிப்பும், வேலையும் பொருளீட்ட மட்டுமல்ல; என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்! குழந்தைகளுக்கு விருப்பமாயும் இருக்கவேண்டும்!! பொருளீட்டுதல் என்னும் எண்ணம் ஓர் குறிப்பிட்ட காலம் வரை உந்திச் செல்ல உதவலாம்; ஆனால், அந்த கடன் தீர்ந்தவுடன் அது அவர்கள் விருப்பம் சார்ந்தும் இருக்கவேண்டும். நாம் - குறிப்பாய் பெற்றோர்கள் - குழந்தைகள் அனைத்திலும் சிறந்ததாய் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். ஒரு இயந்திரத்தை வாங்குவது போல, குழந்தை கூட இளமையிலேயே ஒரு தொகுப்பாய் (package) இருக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். இயந்திரம் வேண்டுமானால், எல்லோரிடமும் ஒரேமாதிரி இருக்கலாம்; ஆனால், எல்லா குழந்தைகளும் ஒரேவாறு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றுங்கள்.

          நாம் நம் குழந்தைகளின் வெற்றியின் அடிப்படையில் - நாம் வெற்றி பெற்றதாய் காட்டிக்கொள்ள முயல்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது! அதனால் தான், நாம் படிக்காத படிப்பு, நாம் படிக்கத் தவறிய படிப்பு, நாம் செய்யாத வேலை, நம்மால் செய்ய இயலாத வேலை என்று நம் கடமைகள்/ எண்ணங்கள் அனைத்தையும் அவர்கள் மேல் திணிக்க எத்தனிப்பதாய் தோன்றுகிறது. அவர்களுக்கென்று ஓர் உலகம் உண்டு; அதில் அவர்களின் விளையாட்டு உண்டு, அவர்களின் கனவு உண்டு, அவர்களின் விருப்பு-வெறுப்பு உண்டு என்பதை உணர்வோம்; அதை, அவர்களின் "தார்மீக உரிமை" என்று உணர்ந்து அதை அவர்களுக்கு விட்டுகொடுப்போம். நாம் முதலில் - நம் தாய் தந்தையரை மரியாதையாய் நடத்த, அவர்களிடம் மரியாதையாய் பேச கற்றுக்கொள்வோம். நான், என் தாய்-தந்தையரை ஒருமையில் தான் அழைப்பேன்! ஆனால், நீ என்னை மரியாதியாய் அழைக்கவேண்டும்!! என்ற பிடிவாதத்தை மாற்றுவோம். என் நண்பன் ஒருவன், அவனின் தாய்-மாமனை (அவருக்கென்று குடும்பம் இல்லை) ஒருமையில் தான் அழைப்பான்; அவனின் பெற்றோர்களும், தம்பிகளும் கூட அவ்வாறு தான் அழைப்பார்கள்; அவனின் மகளும் இப்போது அப்படித் தான் அழைக்கிறாள். அதையும் அவன் பொருட்படுத்தவில்லை; ஒரு மனிதனை மூன்று தலைமுறைகள் மரியாதையாய் நடத்தவில்லை. இதே போல் சூழல் உள்ள ஓர் குடும்பத்தில், அந்த கடைசி தலைமுறையை மட்டும் அந்த-மாதிரி உறவை "மரியாதையாய்" நடத்த சொல்லி ஓர் அறவுரை எழும் பாருங்கள்! அது தான் மிகக்கொடியது!!!. உடனடியாய் அக்குழந்தை மட்டும் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஏன் பிடிவாதம் பிடிக்கிறோம்?

         நம் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிடுதலில் பெரும்பான்மையான பிரச்சனைகள் வருவதாய்  எனக்கு படுகிறது. "என் குழந்தைக்கு இரண்டு மாதத்திலேயே "பல்" முளைத்துவிட்டது தெரியுமா?" என்பதில் துவங்குகிறது இந்த ஒப்பிடுதல்; ஆயின் என்ன? ஆனால், அவ்வாறல்லாமல் காலதாமதமாய் பல் முளைக்கும் குழந்தைகளின் பெற்றோர்களை அது பதட்டப்படுத்துகிறது என்பதை அறிவோம்; இந்த பதட்டம் பின்னர் அவர்களின் குழந்தைகளை சென்று சேர்கிறது. இங்கு துவங்குவது தான் பின் - படிப்பு, வேலை, மரியாதை கொடுத்தல் என்று பட்டியல் நீண்டு செல்கிறது. அதே போல், ஏதேனும் ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குறித்து கவலை தெரிவிப்பின், அக்குழந்தைகளை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தூற்றாமல் இருப்போம்; அம்மாதிரி செயல்தான் மற்ற பெற்றோர்களை பெரிதும் பாதிக்கிறது. எப்படி நம் பிள்ளையின் பெருமையை நம் வெற்றியாய் கருதுகிறோமோ, அதேபோல் சில குழந்தைகளின் வீழ்ச்சி அந்த பெற்றோர்களின் தோல்வியாய் நினைக்க வழிவகுக்கிறது என்பதை உணர்வோம். இங்கே, பெற்றோர்களின் பங்கு குழந்தைகளை நல்லவிதமாய் வளர்ப்பதில் மட்டும் தான் உள்ளது; அதை தன் கடமையை மட்டும் தான் பார்க்கவேண்டும். மாறாய், நம்முடைய எதிர்பார்ப்புக்களை, ஏக்கங்களை அவர்கள் மீது திணிப்பது சரியானது அல்ல; அது குழந்தைகளின் சுயத்தை அழிக்க வித்திடுகிறது என்பதை உணர்வோம்.

     அப்படியாயின், நம்முடைய குழந்தைகள் நன்றாய் இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கக்கூடாதா? அது தவறா?? என்ற வாதம் வேண்டாம். கண்டிப்பாய், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் இருக்கவேண்டும். என்னுடைய வாதம், அதை சரியான முறையில் சரியான அளவில் - அவர்களின் தனித்தன்மையை உணர்ந்து செய்யவேண்டும் என்பதே!. அதன் அடிப்படையில் தான், "குழந்தை வளர்க்க" என்ற புதுக்கவிதையை எழுதி இருந்தேன். நான் கூறியது, நாமும் குழந்தையாய் மாறவேண்டும்! அந்த குழந்தைப் பருவத்தை நாமும் அடையவேண்டும்!! நாமும் அதைக் கடந்து வந்தவர்கள் தானே!!! அதனால், நம்மால் எளிதில் அந்த மனநிலைக்கு செல்லமுடியும். நம் குழந்தைப்பருவ செயல்களை நினைத்தாலே போதும்; நாம் கண்டிப்பாய் நம் குழந்தைகளின் செய்கைகளை, அவர்களின் தேவைகளை/ வேதனைகளை புரிந்துகொள்ளமுடியும் என்று தோன்றுகிறது. நாம் வளர்ந்துவிட்ட ஒரே காரனத்திற்காய், எல்லா செய்கைகளையும் ஒரே நேரத்தில் ஓர்  குழந்தையிடம், மேற்கூறிய வண்ணம் ஒரு "தொகுப்பாய்" எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை! நம் குழந்தைகளின் ஒவ்வொரு செய்கையையும் - குறைந்த மதிப்பெண் பெறுவதில் துவங்கி - நம்முடைய குழந்தைப் பருவ செய்கைகளுடன் ஒப்பிட்டாலே போதும்! நம்முடைய பெரும்பான்மையான  எதிர்பார்ப்புகளும், அதன்பால் தொடரும் வற்புறுத்தல்களும் குறைந்துவிடும்.

எதிர்பார்ப்புகள் எளிமையாய், குழந்தைகளின் திறனறிந்து இருக்கட்டும்!!!      
                    

மேக(கருக்)கலைப்பு...




'மழையெனும்' மழலை  
முளைக்காது - கலைந்து,
கடக்கும் மேகமும்;
"கருக்கலைப்பு" போன்றதோ???

முத்தம்…



முத்தம்...
மணம், குணம்
முதலிய அனைத்தின் 
மொத்தம்! எனவே;
எச்சிலாய் இருப்பினும்,
எச்சமில்லாது இருக்கட்டும்!!!

நடப்பது நல்லதாகட்டும்!!!



நடக்கவிருப்பதை அறிதல் இயலாது!
நடந்தவைகளை மறப்பதும், கடப்பதும் -
நிகழ்ந்து; நடப்பது நல்லதாகட்டும்!!!

உறக்கம்...



முயற்சி தொடரும் முனைப்பும்,
அயர்ச்சி தரும் உழைப்பும்;
விரித்தது பாயாயினும், மெத்தையாயினும்
விரைந்து தரும் உறக்கம்!!!

நம்பிக்கையும், அவநம்பிக்கையும்...



நம்பிக்கை - அவநம்பிக்கையாவதும்;
அவநம்பிக்கை - நம்பிக்கையாவதும்;
நம்பிக்கையை எதிர்கொள்ளும்,
நபரைப் பொருத்தது!!!