ஞாயிறு, நவம்பர் 24, 2013

"பேய்-பயம்" சரியா? தவறா??




     கடந்த வார "நீயா? நானா?" பேய் பற்றிய ஓர் அலசல் என்பது தெரிந்தவுடன், எப்போதும் ஓரிரு நாட்களில் "நீயா? நானா?"-வைப் பார்த்துவிடும் நான் நேற்று வரை தள்ளிபோட்டேன். இறுதியில், நேற்று மதியம் அதைப் பார்த்துவிட்டேன்; பின்னர் இரவு 8 மணி வரை இயல்பாய் வேலைகளை செய்துகொண்டு இருந்த எனக்கு, இரவு வந்ததும் ஓர் பயம் கலந்த பரவசம் வந்துவிட்டது. "அப்பார்ட்மெண்டில்" தான் வசிக்கிறேன் எனினும், (என்னுடைய ஃபிளாட்டில்)தனியாய் இருப்பதால் ஒருவித பயம். "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்தில் கூறியது போன்றே பேய் இருக்கிறதா? இல்லையா?? என்பதும் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை. எனக்கு பேய் இருக்கிறதா? இல்லையா?? என்பது பற்றி ஏதும் சான்றுகள் இல்லை; ஆனால், எனக்கு பேய் பற்றிய பயம் இருக்கிறது. இந்த பயத்தை ஒப்புக்கொள்ள எனக்கு எந்த பயமும் இல்லை!! இது சார்ந்த பயத்தால், நான் கொடுத்த தொல்லைகள் குறித்து என்-தாயும், தமக்கையும் நன்கு அறிவர்.

        பேய்-பயம் பெரும்பாலும், பெரும்பாலோருக்கு இரவில் தான் வருகிறது! இருளில் இருக்கும் மர்மம் தான் - இதற்கெல்லாம் காரணம் என்று தோன்றுகிறது. இருட்டில் மறைந்து இருந்து நம்மைப்போன்ற ஒரு மனிதன் "திருடனாய்" நம்மைத் தாக்கும்போதே?! நிலை குலைந்து விடுகிறோம். ஆனால், உருவமே இல்லாது அல்லது தெரியாது, பலரும் பார்த்திராத "பேய் என்ற ஒன்று" தாக்கினால்??!! எனவே, பேய் இருக்கிறதா? இல்லையா?? என்பதை தாண்டி - என்னுடைய பார்வை பேய்-பயம் சரியா? தவறா?? என்பதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. பேய் வேண்டுமானால், இல்லாமல் இருக்கலாம்! ஆனால், மரணம் நிச்சயம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்! இருப்பினும், மரணம் உறுதியானது என்றும்; அது எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்பதையும், நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை!! மேலும், "எதிர்காலத்தில் வரப்போகும் 3-ஆம் தலைமுறையையும் தாண்டி" சொத்து-சேர்க்க நாம் ஆசைப்படுகிறோம். அதனால் தான், மரணிக்கமாட்டோம் என்று திடமாய் நம்புகிறோம். 

     மரணம் வெகு-நிச்சயம் என்று நான் திடமாய் நம்புவதால் தான் "மரணத்திற்கு பிறகு, என்ன...???" என்று யோசித்து என்னால் - வாழ்க்கை குறித்த புரிதலை பார்க்க முடிந்தது. "மரண-நம்பிக்கை" மற்றும் "பேய்-நம்பிக்கை" - இவை இரண்டிற்கும் ஓர் தொடர்பு இருப்பதாய் படுகிறது. ஒரு சிறிய குட்டையில் இறங்க, குறைந்த-அளவு மின்சாரம் தேவைப்படும் ஓர் உபகரணத்தை தொட - இப்படி சிறுசெயல்கள் துவங்கி - "அணு-உலை" எதிர்ப்பு வரையிலான அனைத்து பயத்திற்கும் காரணம் - நாம் உயிர்த்திருக்க வேண்டும் என்ற ஆசைதான். அதே ஆசைதான் - பேய் என்ற ஒன்று நம்மை கொன்றுவிடுமோ?! என்ற பயம் வரவும் காரணம்! அதனால் தான், இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றேன். அதே சமயம், இங்கே - சுனாமியை எதிர்த்து நீந்துபவர்கள், அதிகபட்ச மின்சாரம் பயன்படுத்தும் உபகரணத்தை அனாவசியமாய் கையாளுவோர் - துவங்கி "அணு-உலையால்" எந்த ஆபத்தும் இல்லை என்று வெகு-நிச்சயமாய் நம்புவோர் வரை - அனைவரையும் பார்க்கிறோம்.

        இப்படி இருக்க, பேய் பற்றிய பயம் மட்டும் ஏன் அதிக அளவில் இருக்கிறது? அல்லது அது சார்ந்து மட்டும் ஏன் அதிகம் விவாதிக்கப்படுகிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். மரணத்தை பார்த்து வந்தேன்; மரணம் இப்படித்தான் இருந்தது என்றோ?! அல்லது இப்படி, இப்படியாய் - மரணத்தில் இருந்து தப்பி வந்தேன் என்றோ??!! கூறிட எவரும் இல்லை! மிகப்பெரிய நோயில் இருந்து தப்பியோரை நமக்கு தெரியும்; ஆனால், அது மரணத்தை வென்றதாய் அர்த்தம் அல்ல; மரணத்தை தள்ளி வைத்த செயல்; அவ்வளவே!! மேலும், மரணம் பற்றிய எந்த நிதர்சனமும் அதன் மூலம் கிடைப்பதில்லை. ஆனால், பேய் பற்றி நிறையக் கதைகள் உண்டு; பார்த்ததாய்/கேட்டதாய்/தப்பித்ததாய் பலரும் கூறுகின்றனர். பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன! ஆனால், இதுதான் மரணம் என்று கூறிட எதுவும்/எவரும் இல்லை! அதனால் தானோ என்னவோ, மரணம் உறுதி என்ற நம்பிக்கையும் நேரடியாய் வரவில்லை! ஆனால், உயிர்-பயம் அனைவருக்கும் இருக்கிறது! அது தான் மரணத்திற்கும், பேய்க்கும் உள்ள தொடர்பு.

     மரணம் உறுதி என்று நம்ப மறுப்போர் பலருக்கும் - மேற்குறிப்பிட்ட பல காரணங்கள் மூலம் உயிர்-போய்விடுமோ?! என்ற பயம் மட்டும் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்! பேய்-பற்றிய உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை எனினும், அது சார்ந்த கற்பனைகளும்/ கதைகளும் அதிகம். அதனால்தான், மற்ற காரணிகளைப் போல் அல்லாமல், பேய் பற்றிய பயம் மட்டும் தனியாய் பார்க்கப்படுகிறது. பேய் - நேரடியாய் உயிரோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாய் தெரிகிறது. இதை எளிதாய் விளக்க வேண்டுமெனில் "எந்த சண்டை வந்தாலும், உறவில் இருக்கும் ஒருவர் - இன்னுமொருவர் உண்ணும் உணவில் நஞ்சை கலக்கமாட்டார்கள்" என்ற நம்பிக்கை மட்டும் இல்லை எனில் உணவு-விடுதியில் கூட உணவு-உண்ண பயப்படுவோம்! இல்லையேல், தினமும் குறைந்தது 3 முறையாவது நாம் செத்து-பிழைக்கவேண்டும் அல்லவா? எனவே, பேய் என்பது இருக்கிறதா? இல்லையா?? என்பதைக்காட்டிலும், அதில் நம்பிக்கை இருக்கிறதா என்பதே முக்கியம்; மேலும்...

அது சார்ந்த உயிர்-பயத்தில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது!!!

பின்குறிப்பு: இதை அனைத்தையும் தாண்டி, மரணம் என்பது வெகு-நிச்சயம் என்பதை முழுமையாய் பெரும்பான்மையில் நம்புவதில்லை எனினும், மரணிக்கக்கூடாது என்ற ஆசை இல்லாத எவரும் இருப்பதில்லை! அதனால் தான், மரணம் என்பது நிகழாவண்ணம் தடுக்க - எது குறித்தும் ஓர் பயம் இருக்கிறது. பேயை விடுங்கள்! சிறு குட்டையில் இறங்க பயப்படுவோர் பலரை நான் பார்த்திருக்கிறேன்; நீங்களும் வெகு-நிச்சயமாய் பார்த்திருப்பீர்கள். எனக்கு நன்றாய் நீந்த தெரியும் என்பதால் - கடல் குறித்து கூட எனக்கு "ஓர் துளி" பயமும் இல்லை! பேய் என்பது என்னவென்றே தெரியாததால், அது குறித்து எனக்கு பயம் இருக்கிறது; சிறு-குட்டையில் இறங்கக்கூட பயப்பட பலர் இருக்கும்போது "பேய் "பற்றி பயப்பட?!" நான் ஏன் பயப்படவேண்டும்???!!! 

பெண் சமுதாயம்...


(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)
*****

பெண்களுக்கு யார்எதிரி? யுகங்கள் நூறாய்
          ஆணாதிக்கம் எனும்திமிரால் மடமை கொண்ட
ஆண்களுமோ; மனம்திருத்தி மகளிர் தம்பேர்
          பெருமையையும் முழுவதுமாய் உணர்ந்தார்! இன்றோ;
தூண்களுக்கு ஒப்பாய்பெண் அவள்வேண் டியாய்,
          இல்லறங்கள் பெற்றனவாம் அவள்நல் உள்ளம்!
பெண்களேதான் அவர்கட்கு தடைகற் கள்ஆம்;
           என்பதுவே என்னுள்ளம் உணர்த்தும் உண்மை!!      

கணவனவன்  இழந்தபெண்ணை வையகம் எங்கும்
          "கோவலன்"கள் எவனும்;கீழ் தரமாய் பாரான்!
கண்ணகிகள் அவர்தம்மே அதுபோல் செய்வர்!!
          மலர்,பொட்டு இரண்டுமட் டுமா?பெண் கள்தம்
கண்கள்?அல் லவே!என்றேல்; அவர்கள் ஆர்க்கும்
          வருமேஇந் நிலை;என்றே உணர்ந்தார் இல்லை??
குணங்கள்அல் லவா?பெண்கள் அவர்கள் கண்கள்
          என்றாங்கே உணரவில்லை??? சரியா இஃதும்?   

மருமகன்தம் மகளின்பால் காட்டும் பாசம்
          எனும்உரத்தின் வீரியம்பல் கிடவேண் டும்பெண்;
மருமகள்தம் மகனிடம்ஓர் உரமும் வேண்டல்
          தவறென்றாய்; உரைப்பதுவும் முறையோ? இல்லப்
பெரும்புகழ்சேர் திருவிளக்காம் "புகுந்தாள்" இன்பம்
          காப்பதையேன் மறந்துபோனர்? முகங்கள் பல்கொள்
பெருமகள்;தம் மகளவளின் வடிவம் என்றாய்
          உணரமறுப் பதேன்?உணர்வீர் பெண்கள் யாரும்!!       

அண்ணனிடம் உரிமைகோரும் தங்கை ஆங்கே;
         புதுஉறவாம் அண்ணியவள் அவனுள் பங்கும்
கொண்டவள்என் பதைஉணர்தல் மறந்தர்! என்தூண்,
         என்கனவன்; என்றென்னும் தமக்கை யாரும்
தூண்வேண்டல் பெண்கள்தம் இயல்பாம் என்றே;
         ஏன்உணர்தல் மறந்தர்?யார் உரைப்பர் பெண்கள்
அண்டமே;பெண் குலத்திற்கோர் தடைகள் என்றே?!
         புரிந்திடுமோ பெண்ணியத்தை பரிவோர் யார்க்கும்??
    
பொன்நகைக்காய் புன்னகையை அழித்தல் போலாம்
         பெண்ணினங்கள் அழிவதையும் உணர்ந்தார் இல்லை!
துன்பஅம்பும் தொடுக்கும்ஆண் இனங்கள் உண்டாம்;
         தந்தையாய்! தமையனாய்!தம் பியாய்!வன் காமம்
தன்னுள்சூழ் மாமனாராய்! கொழுந்தன் என்றோர்
         கொடியனாய்!எப் புத்தியற்ற கணவன் என்றாய்;
தன்னிலையில் இருந்திடாத பல,ஆண் கள்சேர்
         உலகொன்று உண்டெனினும்; இருப்போர் சிற்றோர்!!!              

"குறிஞ்சிபூ"வாய் அங்குமிங்கும் இருத்தல் உண்டாம்;
         பூவையர்அண் டம்காப்போர்! "ரோஸ்"பூக் கள்போல்
செறிந்துபூத்தல் என்றாம்?பின் எவர்க்காம்?? "காளான்"
         போலெங்கும் முளைத்திருக்கும் மகளிர் "சங்கம்"?
ஆறிடுமோ! பெண்களே,பெண் களுக்குள் ஆக்கும்
         இரணங்கள் தரும்இப்பேர் வடுக்கள்? சொல்வீர்;
அறிவையும்;காத் திடும்பெண்கள் யாரும்! நீவிர்
         இதைஉணரின் வேண்டிடுமோ? சங்கம் ஏதும்???

பெண்குலத்தை பெண்களேநல் வழியில் போற்றும்
         வகைசெய்வீர்! வாழ்க்கைதானே இயல்பாய் மாறும்!
உண்மையில்பின் எவர்சொல்வர்? பெண்கள் யாரும்
         நிகரில்லை ஆணுக்கென்று?? எதற்காய் பின்னர்
வேண்டும்முப் பதைஒட்டும் விழுக்கா டுக்காய்
          போராட்டம்?! நிரந்தரமாய் வராதோ! நல்ல
பண்பாடும்? உணர்வரோ!நல் இதயம் கொண்ட
          பெண்டிரும்?? உணர்தலேயாம் உயர்ந்த உள்ளம்!!!

இரண்டாம் உலகம் (2013)




விழியப்பன் பார்வை: இரண்டாம் உலகம் (2013) திரைப்படம்

         மிகுந்த எதிர்பார்ப்புடன் 2 நாட்களுக்கு முன் இரண்டாம் உலகம் (2013) திரைப்படம் பார்த்தேன். இறுதியில், சராசரியான "காதல் கதை" கொண்ட திரைப்படத்தை பார்த்ததை விட எந்த பெரிய-நிறைவும் இல்லை.
  • முதலில், படம் மிகப்பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டு இருக்கிறது - என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! அதிகம்  செலவாகி இருக்கும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!! ஆயினும், பிரம்மாண்டம் மட்டுமே படம் அல்லவே?! ஆனால், ஆரம்பம் முதலே ஏதோ பெரிய குறை இருப்பது - உறுத்திக்கொண்டே இருந்தது.
  • பலரையும் போல், இடைவேளைக்கு பின் படம் சரியான தளத்தில் செல்லும்; செல்வராகவன் ஏமாற்றமாட்டார் என்ற எண்ணம் நிறைந்திருந்தது. உடன் வந்திருந்தவரிடம், அதையே சொல்லி வந்தேன். அதே எண்ணத்துடன் தான் - இரண்டாம் பாகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
  • சிலர் "அவதார்" படம் பார்த்துவிட்டு அனைவரும் "ஜேம்ஸ் கேமரூனை" பெருமையாய் சொல்லி "படம் மிகப்பெரிய "காட்சி-விருந்து (Visual Treat)" என்று பாராட்டினோம் அல்லவா?! ஓர் தமிழ்ப்படத்தைப் பற்றி அவ்வாறே பாராட்ட வேண்டிய தருணம் இது என்று வாதிடுகின்றனர்! இல்லை எனவில்லை, தமிழ் திரை-வரலாற்றில் நல்ல "காட்சி-விருந்து" கொண்ட படங்களில் ஒன்று என்பதில் எந்த ஐயமும் இல்லை!
  • காட்சி விருந்தை மட்டும் எப்படி பார்க்கமுடியும்? அப்படியானால் - கும்கி, தங்க-மீன்கள், மைனா, எந்திரன் - போன்ற பல படங்கள் காட்சி-விருந்தை வெகுவாய் படைத்தனவே?! மேலும், "அவதார்" படம் - "காட்சி விருந்து" மட்டுமல்லாமல் நல்ல கதையை, நல்ல அறிவியல் அடிப்படையை கொண்டு இருந்ததை எவரும் மறுக்க முடியாது. அதனால் தான், அவதார் திரைப்படம் அத்தனை பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றது.
  • இந்த படத்தில் செல்வராகவன் என்ன சொல்ல வருகிறார் என்பதை இறுதி வரை புரிந்துகொள்ளவே முடியவில்லை!!! இன்னமும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! இரண்டாம் உலகம் ஒன்று இருக்கிறது என்கிறார் - சரி, (கற்பனையே என்றாலும்) இருக்கட்டும்; ஒப்புக்கொள்கிறோம்! அதை நோக்கித்தான் "இன்றைய அறிவியலும், இந்திய அறிவியலும்" பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. 
  • எனவே, இந்த திரைப்படத்திலும் - இரண்டாம் உலகம் உருவாக்கப்பட்டு விட்டது! ஒப்புக்கொள்வோம்!! சரி, அங்கேயுமா?! வில்லன் ஒருவரை கடத்த (சரி, பெரும்பான்மையான பெண் என்ற காரணத்தை விட்டுவிட்டு "கடவுள்" என்ற மாற்றம் உள்ளதே?! என்றே கொள்வோம்?!) முயல்வதாய், அதனை முறியடிக்க "ஹீரோ" சண்டை இடுகிறார்... என்று தொடர்வது??
  • புதிய உலகம் - எவரும் பார்த்திராத உலகம்! அறிவியல் கூட அங்கே இன்னும் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் உலகம்!! அங்கே, வாழ்வியல் அடிப்படையில் - எத்தனை கற்பனைகளை திணிக்கலாம்?! இயல்பு-உலக மக்கள் பொல்லாத தோற்றம், குடிக்க நல்ல தண்ணீர் இல்லாதது, சரியான மின்சாரம் இல்லாதது, சரியான மருத்துவ வசதி இல்லாதது போல் - எத்தனை, எத்தனை காரணிகளை கையாண்டிருக்க வேண்டிய தளம் இது? அந்த உலகத்தில் வேறுபட்டு எதையாவது சொல்லி இருக்கலாமே??!!
  • அந்த உலகத்தில் எல்லா வசதிகளும், வண்ணமயமான விளக்குகள் முதல் கொண்டு - அனைத்தும் இருக்குமாம். மாட-மாளிகைகள் இருக்குமாம்! அனைத்து சராசரியான வார்த்தைகள் கொண்டு (கணவன், மனைவி உட்பட) தமிழ் பேசுவார்களாம்; ஆனால், காதல் என்னவென்றே தெரியாதாம்! ஏன், அந்த வரத்தை கூட தெரியாதாம்!! காதல் இல்லாததால் "பூக்கள்" மட்டும் பூக்காதாம்?! ஆஹா.... என்ன ஒரு அற்புதமான சிந்தனை?!?!
  • அதனால், இங்கே இயக்குனர் எடுத்துக்கொண்டிருப்பது - காதல் இன்னமும் அந்த உலகத்தில் முளைக்கவில்லை என்பதை காட்டவாம்!? என்னையா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க, என்னை மாதிரியான "கோடிக்கணக்கான இரசிகர்கள்"??-ஐப் பற்றி?!! ஹீரோவின் அப்பாவுக்கு தன்-மகன் சிங்கத்தைக் கொல்ல காட்டுக்கு செல்லும்போது பதறும் அளவுக்கு "அன்பும்/ பாசமும்" இருக்குமாம்??!! ஆனால், (அவர் உட்பட) எந்த ஆணுக்கும் பெண் மீது காதல் இருக்காதாம்! பெண்ணை போதைப்பொருளாகவே எல்லாரும் பார்ப்பார்களாம்?! பெண் மீது காதல் இல்லாமல் மகன் என்ற பாசம் எப்படி வரும்? என்ன விதமான கதையம்சம் இது?!
  • கதையின் கருவாய் சொல்லப்படும் - இன்னுமொரு காரணம் "காதல் ஒருவனை எத்தனை தூரம் வேண்டுமானாலும் பயணிக்க வைக்குமாம்"! சரி, அதுவும் இருக்கட்டும்; "முதல் உலக" ஹீரோவை "இரண்டாம் உலகம்" வரை பயணிக்க வைக்கிறது. அவனின் வேலை, அங்கே இருக்கும் ஓர் பெண்ணுக்கு "காதலை" உணர்த்துவது/ காதலை வரவைப்பது/ காதலை புரிய-வைப்பது என்பது போல் - கதை நகர்கிறது!
  • ஆனால், அதற்கான திரைக்கதை அமைப்பில் - எந்த வலுவான காட்சியும்/செய்கைகளும் இல்லை!! "சக்களத்தி சண்டை" போன்று இரண்டு உலக ஹீரோக்களுக்குள் "சக்கலத்தன் சண்டை" என்பது போல்  தொடர்ந்து திரைக்கதை நகர்ந்து கொண்டு இருக்குமாம்! திடீரென, ஒரேயொரு இடத்தில் முதல் உலக ஹீரோ "புகைப்படத்தை" காட்டி கதை சொல்வானாம் - உடனே, இரண்டாம் உலக ஹீரோயினுக்கு காதல் புரிந்து விடுமாம்! அதன் பின், இரண்டாம் உலக ஹீரோயின் காதல்-வயப்பட்டு, இரண்டாம் உலக ஹீரோ மேல் "ஒரே காதலாய்" பொழிவாளாம்; உதட்டோடு முத்தமிடுவாளாம்! உடனே, இரண்டாம் உலக ஹீரோ "காதல்னா என்ன?"ன்னு கேட்கும்போது, முதல்-உலக ஹீரோ தான் காதலை சொல்லிக்கொடுத்ததாய் சொல்கிறது காட்சி அமைப்புகள்.
  • சரி, காதல்னா என்னன்னே தெரியாது; இரண்டாம் உலக ஆண்கள் அனைவரும், அனைத்துப் பெண்களையும் போதைப்பொருளாய் பார்க்கும் போது - இரண்டாம் உலக ஹீரோ மட்டும், ஒரு பெண்ணை அத்தனை காதல் நிறைந்து - ஒரு பெண்ணை முறையாய் அடைய நினைப்பது எப்படி வந்தது? (காதல் என்ற)பெயரே தெரியாது வந்தது என்றே கொண்டாலும், அதே வண்ணம் அந்த பெண்ணுக்கும் (இயல்பாய், போகப்போக)வந்ததாய் காட்டி இருக்கலாமே?!  இறுதியில் - அப்படித்தானே, இயல்பாய் அந்த பெண்ணுக்கு வந்ததாய் தோன்றுகிறது?! பிறகு, என்ன முதல்-உலக ஹீரோவுக்கு இரண்டாம் உலகில் வேலை?! அதுவும், அந்த வேலையை சற்றும் சரியாய் செய்யாத போது??!!
  • என்னைக்கேட்டால், இந்த படத்திற்கு 2 காதல்கள் தேவையே இல்லை! அதுவும், காதல் பற்றியே அத்தனை ஆழமாய் படத்தை நகர்த்தி இருக்க தேவையில்லை!! இல்லை எனில், குறைந்த பட்சம் படத்தின் பெயரை "இரண்டாம் காதல்" என்றாவது வைத்து இருக்கலாம்!
  • இம்மாதிரி பல கேள்விகள் எழுகின்றன! அனைத்தையம் கேட்டிட நான் விரும்பவில்லை; படம் எடுப்பது எத்தனை சிரமமான விசயம் என்பதை - அனுபவம் இல்லை எனினும் - என்னால் முழுதுமாய் உணர முடிகிறது! ஆனால், இவை எல்லாம் அடிப்படையான விசயங்கள்! இரண்டு விதமான காதல்களை சொல்வதற்கு "ராஜா-ராணி" போன்ற திரைப்படங்கள் போதாதா??!! அதற்கு ஏன், 6 ஆண்டுகள் சிரமமும், இத்தனைப் பொருட்செலவும்??!!
  • இன்னமும், இரசிகர்களாகிய எங்களையே காரணம் சொல்லி - அதனால் தான் காதல் காட்சிகள் வைத்தோம்! ஆடைகள் குறைந்த பாடல்கள் வைத்தோம்! என்று கூறி - எங்களை மென்மேலும் கொச்சைப் படுத்தாதீர்கள்!!! ஆளவந்தான், விக்ரம், குணா, மகாநதி - போன்ற படங்கள் இரசிகர்களால் பெரிதும் நிராகரிக்கப்பட்ட காலம் எல்லாம் எப்போதோ மாறிவிட்டது. அதனால் தான் - சேது, பிதாமகன், நந்தா, மைனா, பிஸ்ஸா, ஆடுகளம், எந்திரன், அந்நியன், கும்கி போன்று பல படங்கள் - இப்போது தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன! இரசிகர்களின் இரசிப்புத்தன்மை வெகுவாய் உயர்ந்து - வெகுகாலம் ஆகிவிட்டது. உண்மையில், இப்போது இயக்குனர்களின் திறமையும், திரைக்கதை வலுவும் குறைந்து வருகிறதோ என்ற சந்தேகமே எனக்கு வலுக்கிறது.
பின்குறிப்பு: இந்த படத்தை ஒரு முறையாவது பாருங்கள் - அதுவும், திரையரங்கில் பாருங்கள்! இம்மாதிரியான, தயாரிப்பாளர்களை காப்பாற்றவாவது - இதை செய்யுங்கள்!! இல்லையெனில், இது போன்ற படங்களை எடுக்க ஒருபோதும் "எவரும்" முன்வர மாட்டார்கள்! நான் முன்பே கூறிய வண்ணம் - இது மிகவலுவான தளம்-கொண்ட திரைப்படம்! நல்ல காட்சி-விருந்தாய், (சிறு, சிறு குறைகள் இருப்பினும்) நல்ல "கிராபிக்ஸ்" வேலைகள் நிறைந்த படம். ஆனால் - மிகக்குறைந்த தரமான கதை, மிகவும் வலுவிழந்த திரைக்கதை போன்றவற்றால் - இந்த படம், ஒரு சாதாரணமான படமாகத் தான் தோன்றுகிறது! மிகமுக்கியமாய் "இரண்டாம் உலகம்" என்ற தலைப்பு சற்றும் பொருந்தவே இல்லை!!!

திங்கள், நவம்பர் 04, 2013

"காரில்" முன்சீட்டு



"காரில்" முன்சீட்டில் உட்காருவது குறித்து, அதற்கான போட்டி பற்றி உங்களுக்கு தெரியும். அதில்...
  1. பெரும்பாலும் பலரும் உட்காருவது - வேடிக்கை பார்ப்பதற்காய் இருக்கும்.
  2. உடல்பருத்த சிலர் உட்காருவது - செளகர்யம் கருதியாய் இருக்கும்.
  3. உடல்மெலிந்த சிலர் (இன்னொருவர் உட்கார்ந்தும் கூட இடம் மிகுதியாய் இருக்கும்!) உட்காருவது - தானும் உறங்காது, ஓட்டுனரையும் உறங்கவிடாது பார்த்துக்கொண்டு மற்ற வாகனங்களை கவனித்து பத்திரமாய் செலவதற்காய் இருக்கும்.
இப்போது... (ஆங்!... அதேதான்!!) சாதாரணமாய் "காரில்" முன்சீட்டில் உட்காருவதற்கே இப்படி பலதரப்பட்ட காரணங்களும், முதன்மைத்துவங்களும் இருக்கும்போது...
  • ஒருவரின் பங்கும் - ஒவ்வொரு உறவும் சார்ந்தும் மாறுபடும்!/ மாறுபடவேண்டும்!! என்பதை  ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்? 
  • அவ்வாறே, ஒவ்வொரு உறவையும் பொறுத்து - சில விசயங்களின் முதன்மைத்துவங்களும் மாறுபடும்!/ மாறுபடவேண்டும்!! என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்??

ஞாயிறு, நவம்பர் 03, 2013

என்மகள் யாரைப்போல் இருக்கிறாள்???




       மேலுள்ள புகைப்படங்களில் இடது-பக்கம் இருப்பதை பாருங்கள்! நானும் என்மகளும் ஒன்றாய் இருக்கும் புகைப்படங்களுள் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதுபற்றி நானே சிலாகித்து பலரிடமும் கூறியதுண்டு, பின்வருமாறு! முதலில், நானும் என் மகளும் பார்க்கும் விதத்தை கவனியுங்கள்; இருவரும் ஒருபோலவே பார்ப்போம்! இருவரின் புருவங்களும் சுருக்கி இருக்கும் அளவை பாருங்கள் - இரண்டும் ஒரேமாதிரியே இருக்கும். இருவரின் முக-வடிவம், கூந்தல்-வடிவம், இருவரும் கைகோர்த்து இருக்கும் விதம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  இந்த புகைப்படத்தை எடுத்தது, என் அண்ணன்; இது எடுக்கப்பட்டது என் மகள் 2 ஆண்டுகள் கடந்த 2-ஆம் நாள்! அந்த வயதில், அவளுக்கு என்ன சொல்லி என்னைப்போலவே செய்கைகளை கொண்டிருக்க செய்திருக்க முடியும்?! இது, இயல்பாய் வந்தது. சரி! எல்லா தந்தைக்கும் இதுபோன்ற உணர்வே இருக்கும்; இதில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் இங்கே விளக்க-முனைவது, வேறொரு பரிமாணம். 

     என்மகள் என்னைப்போலவே இருக்கிறாள் என்று நானும் நினைத்துக்கொண்டு, எல்லோரும் சொல்லக்கேட்டுக் கொண்டு இருக்கும்போது - என்தங்கை ஒருவள் (அவள் நான் அடிக்கடி குறிப்பிடும் என் நண்பனின் தங்கை!); "அண்ணா! விழி அப்படியே அப்பா போல் இருக்கிறாள்!" என்றாள். என்னப்பனே எனினும், அதை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை; அவளிடமும் இல்லையில்லை, என்னைப்போல் தான் இருக்கிறாள் என்று வாதிடவும் இல்லை. ஆனால், இதற்கு முன் பலமுறை "நீங்க, அப்படியே அப்பா போல் இருக்கீங்கண்ணா!" என்று கூறியிருக்கிறாள்; அப்போதெல்லாம், அது கேட்டு அகமகிழ்ந்தேன். ஆனால், என்மகளை அவர்-போல் இருக்கிறாள் என்பதை, என்னால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?! என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு எனக்கு - இந்த சமுதாயம் சார்ந்த பார்வையில் ஒரு விளக்கம் கிடைத்தது; அதுதான் காரணமா?! என்று எனக்கு தெரியவில்லை! ஆனால், அதுவும் ஓர் காரணமாய் - அடிமனதில் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றே படுகிறது.

         இந்த சமுதாயம் சார்ந்த பார்வையை பார்க்கும் முன் வேறு சில நிகழ்வுகளை விளக்குதல் அவசியம் என்று தோன்றுகிறது; என்னவள் அடிக்கடி, எம்மகளின் சில நடவடிக்கைகள் "அவளின் தந்தை (என் மருதந்தை) போல் இருக்கின்றன!" என்பாள். முதலில், அது எனக்கு கோபத்தை கொடுக்கும்; பின் நாளடைவில், அதில் என்ன தவறு இருக்கிறது?! அதுபோல தானே என்மகள் செய்கிறாள்/இருக்கிறாள் என்ற உண்மை விளங்கும். மெல்லமெல்ல என்னவள் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று உணர்ந்துவிட்டேன். இதுமட்டுமல்ல! என்னவள் அதே-விதம் எம்மகளை என்னப்பனுடனும் ஒப்பிட்டு பேசுவாள்; குறிப்பாய், "விழி சாப்பிடற விஷயத்தில் அப்படியே உங்க-அப்பா மாதிரி" என்பாள். ஆம்! என்னப்பன் சாப்பிடும் விதத்தை எங்கள் உறவுகள் பலவும் இரசித்து கூறி இருக்கின்றன. ஒருவேளை, அவருக்கும் சமைக்க தெரியும் என்பதாலோ என்னவோ?! சாப்பாட்டில் எந்த குறை இருந்தாலும் - ஒருமுக பாவனையும் இல்லாது சுத்தமாய்/சுவைத்து சாப்பிடுவார்.

        என்னவளின், இவ்விருவிதமான செய்கைகளை நினைக்கும்போது - என்னுடைய சிந்தனை மேலும் விசாலமாகும்! ஏன், என்மகள் என்னப்பன் போல் இருப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை?! என்பதற்கு இந்த சமுதாயம் ஓர் காரணமாய் இருக்கலாம் என்று பின்வருமாறு உள்ளது! இயற்கை/இறைவன் விந்தையால் - ஓர்பெண் ஒர்குழந்தையை தன்குழந்தை என்று நிரூபிக்க எந்த அவசியமும் இல்லை! அவளின் - வலியும்/வேதனையும் அனைவரும் அறிவர்; முன்புபோல், (திரைப்படத்தில் கூட)குழந்தை மாறிப்போவதாய் காண்பிக்கும் சாத்தியமும் இப்போது இல்லை! மருத்துவமனை செயல்முறை அத்தனை சீர்மை! அதனால், ஓர்பெண் தன்குழந்தையை எவரிடம் ஒப்பிடவும் தயங்குவதில்லை என்று தோன்றுகிறது! ஆனால், ஓர் ஆணின் நிலை அப்படியல்ல; வேறொருவர் மாதிரி இருக்கும் பட்சத்தில் அவன் சந்திக்கவேண்டிய சூழல் வேறுவிதமாய் இருக்கிறது! இதைத்தான் பல திரைப்படங்களும் "நகைச்சுவை" என்ற பெயரில் காண்பிக்கின்றன.

   ஒருவேளை, அதனால்தான் நான் (அல்லது வேறொரு ஆண்) அப்படி ஒப்புக்கொள்ள முடியவில்லையோ?! இம்மாதிரி சிந்தனைகளுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் என்மகளின் 4-ஆவது பிறந்தநாளன்று எடுத்த புகைப்படத்தை (வலது!) பார்த்தேன். நானும், என்னப்பனும் - மேற்கூறிய வண்ணமே - ஒரேமாதிரி தலையை சாய்த்து இருப்பதும், ஒரேமாதிரி முக-அமைப்பு கொண்டிருப்பதும், ஒரே-அளவில் சிரிப்பதும் - இப்படி பலவான ஒற்றுமைகளையும் காண நேர்ந்தது. அட! நான் அப்படியே என்னப்பன் போலவே இருக்கிறேனே?! என்று சிலாகித்து கொண்டிருக்கும் போதுதான்; "அடே இளங்கோ! நீ அப்படியே உன்னப்பன் போல் இருக்கிறாய் என்றால், உன்மகள் - அப்படியே உன்னப்பன் போலிருப்பதில்" என்ன தவறடா?! என்று உள்மனம் கேட்டது. அடடே! ஏன் இத்தனை நாளும், இதை யோசிக்கவில்லை?! என்ற சிந்தனை வந்தது; சமுதாயம் என்ன?! எவர் என் ஆழ்மனதில் அப்படியோர் தவறான சிந்தனையை விதித்திருந்தால் எனக்கென்ன...

ஆம்! என்மகள் என்னப்பன் போல் தான் இருக்கிறாள்!!!              


படிப்புக்கும், சாதனைக்கும் என்ன சம்பந்தம்???



     ஒவ்வொரு முறையும் என்மகளுடன் - என்னவள் "ஹோம்-வொர்க்" முடிக்க போராடிக்கொண்டு இருக்கும் போதும் - நான் கேட்பது "ஏன் அவளை இப்படி போட்டு படுத்துறாங்க, அவங்க ஸ்கூல்ல?!" என்பது தான். என்னவள் சொல்லும் பதில் "உங்க பொண்ணு மட்டும் கஷ்டப்படல; எல்லாப் பசங்களும்  தான் படிக்கறாங்க!; போட்டி அப்படி இருக்கிறது" என்பது தான். மறுக்கவில்லை! இன்று பிள்ளைகள் எடுக்கும் மதிப்பெண் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், என்னுடைய "மனதங்கம்" வேறுவிதமானது; இருப்பினும், என்னவள் படும்-பாட்டை அறிந்து அவளுடன் - இப்போதெல்லாம் எதுவும் விவாதிப்பது இல்லை. மேற்கூறிய கேள்வியைக்கூட கேட்பதில்லை! ஆயினும், என்னுள் அந்த கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. "படிப்புக்கும், சாதனைக்கும்/வேலைக்கும் என்ன சம்பந்தம்?" என்பது தான் அந்த கேள்வி! தேவையற்ற/முறையற்ற இந்த போட்டியால் - எந்த நன்மையும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை; குழந்தைகள் "குழந்தைகளாய்" இருக்க-வேண்டியதை தொலைத்துவிட்டதை தவிர!!!

     இந்த கல்வி-முறையை நான் முன்பே பலமுறை பலவிதங்களில் விவாதித்து இருக்கிறேன்; என்னுடைய பார்வையாய் பதிந்தும் இருக்கிறேன். இருப்பினும் - என்மகள் போன்ற குழந்தைகள் படும் இன்னலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! ஓர் குழந்தைகளின் தரம் என்ன? அவர்களின் விருப்பு என்ன?? அவர்களின் ஆற்றல் என்ன??? என்பது போன்ற எந்த சிந்தனையும் இல்லாத "கல்வியல் முறை". எந்த படிப்பு எவருக்கு உகந்தது - என்பது பற்றிய அக்கறை இல்லாத கல்விமுறை. மேலும், இம்மாதிரி ஒருவர் படிக்கும் படிப்புக்கும் அவர் திறமைக்கும்/சாதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பின் ஏன், இந்த வயதிலேயே அவர்களுக்கு இப்படிப்பட்ட கல்விச்சுமையை கொடுக்க வேண்டும்?! பள்ளி-முடித்து, எந்த பிரக்ஞையும் இல்லாமல் - பெருங்கூட்டமாய் சென்று ஒரு குறிப்பிட்ட உயர்-கல்வியை படிப்பது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதற்கு 3 வயதில் ஒரு குழந்தை இந்த பாடுபட வேண்டும்? இவர்களிடம் எனக்கு இருப்பது இந்த ஒரேயொரு கேள்விதான்...

"Bill Gates" அவர்கள் கல்லூரி "டிராப்-அவுட்" என்பது எத்தனை பேருக்கு தெரியும்???     

என்மகளும், என்தாயின் "மகனும்"



"செல்போனில்" தீபாவளி வாழ்த்து
சொல்கையில் "ஏதாவது செஞ்சு
சாப்பிடுடா!" என்று அழுகையுடன்;
சொல்லும் என்தாயிடம்; எப்படி

சொல்வேன்? எப்படி சொல்வேன்??

முறுக்கு முதல் அனைத்தாலும்
"கிறுக்காய்; பலரையும்" சுவையால்
கட்டிப்போடச் செய்யும் வித்தையை
கிட்டியவன் - என்தாயிடம்; எப்படி

சொல்வேன்? எப்படி சொல்வேன்??

"என்மகள் அருகில் இல்லாததால்;
எனக்கேதும் செய்யவே பிடிக்கவில்லை!"
என்ற உண்மையை, எப்படி
என்தாயே?! உன்னிடம் திடமனதாய்,

சொல்வேன்? எப்படி சொல்வேன்??

உன்மகன் ஆனபின் தானே;
"நான்ஆனேன்?! என்னுயிர் ஆகிட்ட
என்மகளின் அப்பனாய்??!!"- தனித்திருப்பது
"உன்மகனும்" தானென்பதை அறிந்தும்...

எப்படி சொல்வேன்? சொல்-தாயே!

கடைப்பிள்ளை என்மீது மட்டுமல்ல;
கடவுள்மீதும் பித்து கொண்டவள்-என்ற
காரணத்தால்; "விரதம்"என பொய்
கூறிவிட்டேன் - மன்னித்துவிடு! என்பதைக்கூட?!;

எப்படி சொல்வேன்??? சொல்-தாயே!!! 

விழியப்பனோடு விவாதிப்போம் (03112013)




புகைப்படத்தில் உள்ள வாசகம் போன்ற பலவற்றை, பலரும் கேட்டிருக்கக் கூடும். தமிழில் சொல்லவேண்டுமானால் "கற்பழிப்பு என்பது தவிர்க்கமுடியாது போனால், அமைதியாய் அதை அனுபவியுங்கள்" என்று பொருள் கூறலாம். இதை மேலோட்டமாய் பார்க்கும்போது தவறாய் தோன்றக்கூடும். நானும், அப்படி யோசித்தவனே! ஆனால், ஆழ யோசிக்கும்போது - அவ்வாறு செய்ய முடிந்தால் - அந்த சம்பவம் "உளவியல்" போன்ற பின்விளைவுகளை தவிர்க்கக்கூடும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது!! இது போன்று பல காரணங்களும், இருக்கக்கூடும் என்று தோன்றியது!!!

இது சாத்தியமா?! என்று தெரியவில்லை! ஆனால், இதுபற்றி ஆழ யோசித்தபோது - எனக்கு வேறொரு யோசனை வந்தது. இம்மாதிரி கற்பழிப்பு என்பது தவிர்க்கமுடியாதது என்ற நிலை வரும்போது - பெண்கள், தங்கள் உடைகளை தாமே களைந்து எறிந்துவிட்டு "வாடா, மனித-மிருகமே?! இதற்கு தானே ஆசைப்பட்டாய்" என்று ஆவேசமாய் கதறி - ஓர் இறுதி-முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 

என்னுடைய கூற்றிற்கு இது தான் காரணம்: நிர்வாணத்தில், ஆபாசம் இல்லை! காமம் இல்லை!! அங்கே எந்த உணர்ச்சிகளும் இல்லை!!! இப்படி ஓர் பெண் செய்யும் போது - அந்த மனிதமிருகம் தடுமாறிட சாத்தியம் இருக்கிறது. அதை வைத்து, அவனை வீழ்த்த முனையலாம்! அல்லது அந்த மிருகம், செய்வதறியாது - கற்பழிப்பில் இறங்காமல் இருப்பதற்கும் சாத்தியம் இருப்பதாய் படுகிறது.

(குறிப்பு: கோவில்களில் இருக்கும் எந்த நிர்வாண-சிலையும் நம்மில் எந்த உணர்ச்சியையும் தூண்டாதத்திற்கு "வெறும்-பக்தி மட்டும்" காரணம் அல்ல! உண்மையில், இம்மாதிரியான விளக்கங்களை உண்டாக்கக் கூட அங்ஙனம் படைக்கப்பட்டிருக்கலாம்!!)

- இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாருங்களேன், விவாதிப்போம்!!  

வெள்ளி, நவம்பர் 01, 2013

அதீத நம்பிக்கை...




ஒவ்வொரு இரவும், நாளை காலை "எழுந்திரு(க்க/ப்போம்)" என்று "அலாரம்" வைத்து உறங்குவதைக் காட்டிலும் "அதீத நம்பிக்கை" வேறெதுவும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை!!!


(குறிப்பு: வேறென்ன காரணம் தேடுகிறோம்? இதைக் காட்டிலும் வெகு-குறைந்த அளவே வேண்டிடும் "நம்பிக்கையை", அதை எதிர்பார்ப்பவரிடம் காட்டிட???

(மற்ற)பெண்ணியவாதிகளிடம் ஓர் கேள்வி...


பெண்ணியம் பற்றி பேசுவோரிடம் ஓர் கேள்வி!
(நானும் பெண்ணியத்தை ஓர் நடுநிலையோடு அணுகுபவன் என்பதை மனதில் கொள்க!)...

எல்லாவற்றிலும் - சமவுரிமை கேட்கும்போது - வீடு வாங்குவது, சொத்து வாங்குவது போன்ற விசயங்களில் மட்டும் (இன்னமும்)ஏன் "அது ஆணின்(ஆண்மையின்) அடையாளம்" என்று தனித்து பார்க்கப்படுகிறது???!!!

"வலி"யில் வலியது...



உலகின் மிகச்சிறந்த பலசாலியின் மிகப்பலமான அறைதல் தருவதை விட; "உலகே அவரென" நினைக்கும், மிக-மென்மையான ஒருவரின் பேரமைதி தரும் "வலி" அதிகமாய் இருப்பதேன்???

(வலியில் ஒன்று மனம் சார்ந்து இருப்பதால் மட்டும் என்று எனக்கு தோன்றவில்லை!!!)

ஆம்ப்லெட்டில் பூண்டு...




என்னவளும், என்மகளும் - இங்கு வந்திருந்த போ து; வாங்கிய "பூண்டு" நிறைய மீந்து போயிருந்தது! என்ன செய்வதென்று யோசித்தபோது (வழக்கம் போல்) ஓர் புதிய யோசனை (??!!) வந்தது. பூண்டை பொடிப்பொடியாய் நறுக்கி "ஆம்ப்லேட்" செய்தேன் (முதல் படம்); நல்ல சுவையாக இருந்தது. வேறெங்கும் இது போல் செய்கிறார்களா?! என்று எனக்கு தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை - இது புதிய விசயம். 2 நாட்கள் கழித்து, பூண்டுடன் - நறுக்கிய காய்கறிகளையும் - சேர்த்து இன்னுமோர் "ஆம்ப்லேட்" செய்தேன் (இரண்டாவது படம்). அது, மேலும் நல்ல-சுவையாய் இருந்தது!!

விருப்பம் இருப்பின், நீங்களும் - இதுபோல் செய்து பார்க்கலாமே?