ஞாயிறு, நவம்பர் 09, 2014

மூட-நம்பிக்கை என்பது என்ன???



   சென்ற வாரம் நண்பனொருவன் "வாட்ஸ்-ஆப்"பில் பற்பசை-குழாயின் மேல் இருக்கும் நிறப்பிரிகைக்கும்; பசையிலுள்ள பொருட்களின் குனாதிசியங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாய் கூறும் ஒரு புகைப்பத்தை அனுப்பினான். அது தவறான தகவல் என்று முன்பே தெரியும்; இன்னொரு நண்பன் அதை தவறென்று சுட்டிக்காட்டினான். என்னைத்தவிர, அந்த குழுவில் அனைவரும் மருத்துவம்/உயிரியல் சார்ந்து ஆராய்ச்சி செய்திருந்ததால், அவர்கள் அதை மையப்படுத்தி அலசினார்கள். எனவே, என்னால் அங்கே அதிகம் பங்கேற்க முடியவில்லை. அது சார்ந்த தொடர்ந்த உரையாடலின் போது, இரண்டாவது நண்பன் - இணையத்தில் இது போன்ற பல வதந்திகள் உள்ளன. அதை பலரும் "மூட-நம்பிக்கை" போன்றே நம்புகின்றனர் என்றான். உண்மை தான்! இங்கே, ஆயிரம் பொய்களும்/வதந்திகளும்/இது போன்ற மூட-நம்பிக்கைகளும் - இணையத்தில் நிறைந்துள்ளன. உடனே, எனக்கு "மூட-நம்பிக்கை என்பது என்ன???" என்ற தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

       வெகு சமீபத்தில், தில்லி மிருகக்காட்சி சாலையில் நடந்த விபத்தை பற்றி, தவறான தடயவியல் அறிக்கை ஒன்றை உண்மையென்று நம்பி முக-நூலில் பகிர்ந்திருந்தேன். பின்னர், வேறொரு நட்பு அதை தவறென்று சுட்டிக் காட்டியதும், மன்னிப்பு கோரியிருந்தேன். தொடர்ந்து யோசிக்கையில், 1992-இல் இளங்கலை நட்புகளோடு திருமலை சென்றிருந்த போது; நானும், இரமேசு என்ற என் நண்பனும் சேர்ந்து ஒரு விளையாட்டு-குரும்பை செய்தோம். இன்று, அது ஒரு "மூட-நம்பிக்கை"! ஆம்; பெரிய-உண்டி அருகே உள்ள மண்டபத்தின் ஒரு தூணில், ஒரு சிலை இருந்தது. அது எவரென்று, எங்களுக்கு (இன்னமும்)தெரியாது. நாங்கள் இருவரும், அந்த சிலையின் காலை தொட்டு வணங்கி ஒரு கும்பிடு போட்டோம். நாங்கள் மொத்தம் 19 பேர் சென்றிருந்தோம். அனைவரையும், அவ்வாறு செய்ய சொன்னோம்; மீண்டும், மீண்டும் செய்து பலரின் கவனமும் எங்கள் மேல் படும்படி செய்தோம். இன்று, அவ்வாறு செய்யாதவர்களை விரல்-விட்டு எண்ணிவிடலாம்!

         நாங்கள் செய்தது பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன். அவ்வப்போது, சிலையின் அந்த பகுதி மட்டும் தேய்வதால், அதை மாற்றியும் வருகிறார்கள். அதை இனிமேல் தடுப்பது/நிறுத்துவது சிரமம்! இன்று, அது வரலாறு ஆகிவிட்டது. அதற்கு, பலரும் - பலவாறாய் விளக்கம் கொடுத்திருக்கக் கூடும்! பல கதைகள் புனையப்பட்டு இருக்கும்; ஒவ்வொரு கதையும் பலத்த நம்பிக்கையை உருவாக்கி இருக்கும். ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லை; அது, வெறும் "மூட-நம்பிக்கை"! ஆனால், இதை தெரிந்த எனக்கும்; இனிமேல், இதை படித்து தெரிந்துகொள்ள போவோர்க்கும் தான் அது "மூட-நம்பிக்கை". மற்றவர்களுக்கு அது நம்பிக்கையாய் தான் தொடர்ந்து கொண்டு இருக்கும். இதுபோல், பல நம்பிக்கைகள் "மூட-நம்பிக்கை"களாய் இருப்பதை நான் எதைக்கொண்டும் "மூடி"மறைக்க விரும்பவில்லை. "மூட-நம்பிக்கை" என்றால் என்ன? என்பதை தொடர்ந்து உண(ர/ர்த்த) தான் முயன்று வருகிறேன். எல்லா நம்பிக்கைகளிலும், இப்படிப்பட்ட மூட-நம்பிக்கைகள் இருக்கும்.

      ஆனால், காரணமே தெரியாமல் எல்லாவற்றையும் "மூட-நம்பிக்கை" என்பது பகுத்தறிவல்ல என்பதை நான் சமீபத்தில் கூட ஒரு தலையங்கத்தில் வலியுறுத்தி இருந்தேன். உலகெங்கும் விவாதத்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கையையே உதாரணமாய் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு! எனக்கு கடவுள் நம்பிக்கை வந்ததே; "உபவாசம்" என்ற விரதத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையால் தான். 1983-இல் என் அண்ணன் ஒருவரைப் பார்த்து, வியாயக்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்தேன். விரதம் இருப்பது; உடல் உறுப்பு ஒய்வு பெற என்ற நம்பிக்கையே காரணம். ஆனால், அதை "ஒழுக்கமாய்" கடைப்பிடிப்பதில் சிரமம் இருந்தது! விரதத்தை, கடவுளை நினைத்து செய்தால் எளிது என்பதால்; அந்த நம்பிக்கையை நம்ப ஆரம்பித்தேன். இன்றும், அந்த விரதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம், 48 நாட்களும் ஒருமுறை மட்டுமே உண்பது வழக்கம் என்பதை ஐயப்பன் பற்றிய தலையங்கத்தில் கூறியிருக்கிறேன்.

         கடவுளை மையப்படுத்தலை தவிர்த்து, நான் பலமுறை விரதம் இருக்க முயன்று என் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறேன்; முடியவில்லை! எனவே, விரதத்தின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை நிலை நாட்ட நான் கடவுளை நம்ப ஆரம்பித்தேன். என்னுடைய தெளிந்த பகுத்தறிவால், கடவுள் வழிபாட்டில் நா(ன்/ம்) செய்யும் தவறை கூட உணர முடிந்தது. அதனால் தான், கடவுள் என்ற பெயரில் "மூட-நம்பிக்கைகள்" இருக்கின்றன என்பதை "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்திலேயே ஒப்புக்கொள்ள முடிந்தது. கடவுள் நம்பிக்கையும்; அந்த பயமும் தான் என்னைப்போன்ற பலரையும் பல தவறுகளையும் செய்ய விடாமல் தடுக்கிறது என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அப்படி, ஒரு மனிதனை "நல்ல மனிதத்துடன்" இருக்க "ஒரு நம்பிக்கை" உதவுமேயானால்; அந்த நம்பிக்கையை எதற்காய் மற்றவர் எதிர்க்கவேண்டும்? அவர்களுக்கு நம்பிக்கை "இல்லை" என்றால், இருந்துவிட்டு போகட்டும். பிறர் நம்பிக்கையை ஏன் காரணமே-தெரியாமல் தொடர்ந்து தூற்ற வேண்டும்?!

   ஒரு "தவறான நம்பிக்கை" சரியான விதத்தில் நிரூபிக்கப் பட்டால் மட்டுமே வேரரும்! மேற்குறிப்பிட்டது விளையாட்டென்று எனக்கும், என் நட்புகளுக்கு மட்டும் தான் தெரியும்! இதைப் படித்தும் கூட, எல்லோரும் அதை நம்பி மாற்றிக்கொள்வரா என்பது பெருத்த சந்தேகமே; அதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும்! இதை நாங்கள்தான் செய்தோம் என்பதற்கு என்னிடமே ஆதாரம் இல்லையே! ஆனால், நான் சொல்வது சத்தியம்!! ஒன்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். நம்புவதற்கு எந்த நிரூபணமும் தேவையில்லை! ஒரு நம்பிக்கையை பொய்யென்று நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் வேண்டும்!! எல்லா நம்பிக்கைகளும் தவறானவை அல்ல என்பதையும் உணரவேண்டும். "இவர்தான் உன் தந்தை!" தாய் சொல்வதை பிள்ளைகள் நம்புவது போல்; சில நம்பிக்கைகளை "அப்படியே" நம்பவேண்டும். இன்று வேண்டுமானால், தந்தையை உறுதி செய்யும் விஞ்ஞானமும்/அவநம்பிக்கையும் வந்திருக்கலாம். ஆனால், அது காலங்காலமாய் தொடர்ந்து வந்த/வரும் நம்பிக்கை!!!

        கெடுதல் செய்யாமல், நல்லது மட்டுமே செய்யும் ஒரு நம்பிக்கை எப்படி "மூட-நம்பிக்கை ஆகும்??? கடவுள் நம்பிக்கையில்; சில மூட நம்பிக்கைகள் இருக்கலாம்! ஆனால், கடவுள் நம்பிக்கையே "மூட-நம்பிக்கை" என்பது அர்த்தமற்ற பகுத்தறிவு!! "பூனை குறுக்கே சொல்லுதல்" போன்ற பல அர்த்தமற்ற நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கிறது. நம் "தெளிவான-சுய" பகுத்தறிவு முக்கியம்! அதனால் தான், பெரியார்; அன்றிருந்த சூழலில் எதிர்த்த இரண்டு கொள்கைகள் இன்று தேவையில்லை! என்றேன். பெரியார் போன்றோர்க்கு மனிதமும்/மனிதனும் வஞ்சிக்கப்படுவதை தாங்கமுடியாத துயரமே அடிப்படையாய் இருந்தது. அதுதான் முக்கியம்! பெரியாரின் பெயரில் "கொடி"பிடிக்கப்படும் "கண்மூடித்தனமான" கொள்கைகளை; இன்று, பெரியார் இருந்தால், அவரே எதிர்ப்பார். அவர் இல்லை என்பதால் தான், என்போன்ற "சிறியார்" அதை உண(ர/ர்த்த) முயல்கிறோம். எனவே, என்னுடைய மேற்கூறிய அனுபவம் மற்றும் என் புரிதலின் அடிப்படையில் எது பற்றியும்/எவர் கூறுவதையும்... 

கண்மூடித்தனமாய் நம்புவதே; "உண்மையான" மூட-நம்பிக்கை!!!

2 கருத்துகள்: