வெள்ளி, ஜூலை 31, 2015

இறந்த பின்னும் மனிதம் விதைக்கும் கலாம்...



  திரு. விஜயகாந்த் அவர்களை தேவையேயில்லாமல்; சம்பந்தமே இல்லாதவர்கள் "வடமாநிலம்"ஒன்றை சேர்ந்த ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய "ஜோக்குகள்"  போன்று இவரைப்பற்றியும் தொடர்ந்து "ஜோக்குகள்" வருவதைப் பார்க்கும்போது எனம் மனம் புழுங்கும். சில பதிவுகளில் என் மனத்தைக் கூட பிரதிபலித்து இருக்கிறேன். 

         அவரைப் பற்றி சில பhttp://vizhiyappan.blogspot.ae/2014/03/blog-post_5395.htmlதிவுகள் கூட என் வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன். அதைக் கூட வெகு-அளவில் எவரும் புரிந்து கொள்ள வில்லையே என்ற ஆதங்கம் கூட தொடர்ந்து இருந்தது. 

     திரு. கலாம் அவர்களின் இறுதி-அஞ்சலியில் திரு. விஜயகாந்த் தன் மனத்தை அப்படியே பிரதிபலித்து அழுகையாய் வெளிப்படுத்தியதைப் பாராட்டி, அவரின் குணத்தைப் புரிந்து கொண்டதைப் போன்று பலரும் எழுதி வருவதை... 

http://tamil.thehindu.com/opinion/blogs/இணைய-கலாய்ப்பாளர்களை-கலங்கவைத்த-விஜயகாந்த்/article7484879.ece 

போன்ற இணையதளங்களில் பார்ப்பது பெருத்த மகிழ்ச்சியை தருகிறது. இது மென்மேலும் தொடர வேண்டும் என்பதே என் ஆதங்கம். 

       திரு. பாலகுமாரன் அவர்கள் கூட திரு. விஜயகாந்த்தின் குணத்தைப் பற்றி உயர்வாய் பேசி இருக்கிறார். அதைக்கூட என் வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன். அவர் சொன்னது போலவே, நானும் விஜயகாந்த் ஆதரவாளன் அல்ல! ஆனால், அவரிடம் ஒரு நேர்மை இருப்பதை உணர முடிகிறது. உணர்வுகளைப் போலித்தன்மை அற்று வெளிப்படுத்துபவர்களே சிறந்த மனிதர்களாய் இருக்க முடியும். அது அவர்களின் மனிதத்தை/தனி-மனித ஒழுக்கத்தை பரைசாற்றுவதாகவே எனக்கு தெரிகிறது.

*****
அட... அட... அட...! 

என்னே ஒரு விந்தை? திரு. கலாம் அவர்கள் இறந்த பின்னும்; அவரின் இறுதி-சடங்கு நிகழ்வின் போது கூட "தனி-மனித ஒழுக்கம்/மனித-நேயம்" என்னவென்றால் என்னவென்பதை திரு. விஜயகாந்த் மூலம் - அவரைத் தேவையற்று/நியாயமற்று விமர்சிக்கும் உள்ளங்களுக்கு "ஒரு பாடமாய்" உணர்த்தி இருப்பதாய் தான் எனக்கு படுகிறது!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!

*****

இப்போதாவது மரத்துடன்-சேர்த்து; மனிதத்தையும் விதைக்க முனைவோம்!!!


செவ்வாய், ஜூலை 28, 2015

ஒரு மரணம் (திருத்தப்பட்டது)...


{நல-விரும்பிகள் சிலரது விமர்சனத்தால் "நன்றிகளுடன்" திருத்தப்பட்ட வடிவம்...!}
   
        கூடியிருந்தவர்கள் எப்படி? என்ன?? என்று விசாரிக்க; உறுதியாய் எதுவும் சொல்லமுடியாமல் மூர்ச்சையாகிறாள் - மரணித்து கிடந்தனின் அருகில் தொடர்ந்து அழுதுகொண்டிருந்த மனைவி. கூடியிருந்தோர் தெரிந்தவர்களுக்கு தகவல் கொடுக்க அப்பெண்ணின் அலைபேசி கேட்டனர். அவள் தன் 4-வயது மகளை காட்டினாள். எதையோ ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த அவளிடமிருந்து ஒருவர் அலைபேசியை வாங்கி அதிர்ச்சியுடன் பார்த்தார். வெளியே சென்று ஒரு எண்ணை அழைத்து பேசினார். ஒரு மணி நேரத்தில், காவலர்கள் வந்து கணவனை கொலை செய்ததற்காக அப்பெண்ணை கைது செய்தனர். அப்பெண் தன்-கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவள் கணவனை கீழே தள்ளி ஏதோ செய்தது; 4-வயது மகள் எதேச்சையாய் பதிந்த "10 வினாடியில் ஒரு காணொளி" - யில் தெளிவாகியது. காவலர்களின் "முறையான" விசாரிப்பில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டாள்.

*******

பின்குறிப்பு: "ஒரு மரணம்" கொலையென்று நிரூபிக்கப்பட்டு "சட்டம் நிலைநாட்டப்பட்டதை" எண்ணி மகிழ்வதும்; தன்னை(யும்) அறியாமல் பதிந்த காணொளியால் "யாருமற்று தனித்திருக்கும்" 4-வயது குழந்தையைப் பற்றி கவலைப்படுவதும் - உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம்!

திங்கள், ஜூலை 27, 2015

ஒரு மரணம்...


     
        மரணித்து கிடக்கிறான்! மனைவி அழுது புலம்புகிறாள். உறவும்/சுற்றமும் எப்படி? என்ன?? - வித விதமாய் கேட்கிறார்கள். அவளால் உறுதியாய் எதுவும் சொல்லமுடியவில்லை! மீண்டும், மீண்டும் அழுகிறாள்; மூர்ச்சையாகிறாள். உறவும்/சுற்றமும் தெரிந்தவர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். தெரியாதவர்களின் தொடர்பை பெற அப்பெண்ணிடம் அலைபேசி கேட்கிறார்கள்; அவள் கையை காண்பிக்கிறாள். 4 வயது மகள் அலைபேசியில் எதையோ பார்த்து கொண்டிருக்கிறாள். ஒருவர் அலைபேசியை வாங்கி பார்க்கிறார்; வெளியே சென்று ஒரு எண்ணை அழைத்து பேசுகிறார். சிறிது நேரத்தில் காவலர்கள் வருகிறார்கள்; கணவனை கொலை செய்ததற்காக அப்பெண் கைதாகிறாள்.உடனிருந்த ஆணைப்பற்றிய விபரம் தெரியவில்லை; இருவரும் சேர்ந்து அந்த கணவனை கீழே தள்ளி ஏதோ செய்கிறார்கள். 4 வயது மகள் ஏதோ ஒரு பொத்தனை அழுத்த "10 வினாடியில் ஒரு காணொளி" பதிவாகி இருந்தது. காவலரின் விசாரிப்பில்; ஒப்புக்கொண்டாள்...

கள்ளக்காதலுக்காய்... கணவனை கொன்றுவிட்டேன் என்று!!!  

10 வரியில் ஒரு கதை - முன்னுரை


       திடீரென ஒரு எண்ணம்; குறும்படம் போன்று ஒரு "குறுங்கதை" எழுதவேண்டும் என்று! அது சிறுகதை என்ற வட்டத்துக்குள் வரக்கூடாது என்று எண்ணினேன். அதுபோல், பாக்யா-இதழில் வெளிவருவது போல் "ஒரு பக்க கதை" என்றும் இருக்கக்கூடாது என்று தோன்றியது. பின்னர் எப்படி? என்றொரு கேள்வி எழுந்தது; ஒரு தனித்துவம் வேண்டும் என்ற பதில் வந்தது. உடனே "10 வரியில் ஒரு கதை" என்றொரு எண்ணம் உதித்தது; அது சரியெனப்பட்டது. உடனே ஒரு புது-பகுதி துவங்கி அதை "10 வரியில் ஒரு கதை" என்று தலைப்பிட்டு இந்த முன்னுரை எழுதி இருக்கிறேன். 10 வரியில் சுவராஸ்யமாய் ஒரு கதை சொல்லமுடியுமா?! என்றொரு ஐயம்; ஊடே... ஏன் எழுதமுடியாது என்ற வாதமும்! இதோ முன்னுரை எழுதி, ஒரு கதையும் எழுதி இருக்கிறேன்; சாதாரண கதைதான். ஆனால், 10 வரியில் சொல்லி இருக்கும் விதத்தில் ஒரு சுவராஸ்யம் இருக்கிறது என்று நம்புகிறேன்; நீங்களும் அப்படியே நம்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.  

75-இலும் தசை ஆடும்!!!



        மே-மாதம் என்னப்பனும், என்மகளும் என்னுடன் தனியே இங்கே தங்கியிருந்த போது; ஒரு நாள் கீழ்வரும் சம்பவம் நடந்தது. என்மகளுக்கு சிறு-பண்டத்தை "சக்கர-நாற்காலியில்" அமர்ந்து ஊட்டிக் கொண்டிருந்தபோது - விளையாடும் ஆர்வத்தில் நான் சொல்ல, சொல்ல கேளாமால் நகர்ந்து சென்றுகொண்டே இருந்தாள். நானும் எட்டி, எட்டி ஊட்டிக்கொண்டிருந்த போது சமநிலை-தவறி நாற்காலி சாய்ந்துவிட்டது; நானும் கீழே விழுந்துவிட்டேன். பெருத்த-அடி ஏதுமில்லை; நான் அடித்துவிடுவோனோ?! என்ற பயத்தால், விழித்துக் கொண்டிருக்கும் என்மகளை அந்த நிலையிலும் நான் கவனிக்க தவறவில்லை! ஆனால், இன்னொன்றை அந்த கணம் கவனித்து/உணரவில்லை. 
   
    ஆம்! நான் விழுந்த  அடுத்த கணம் என்னப்பன் என்னருகே வந்துவிட்டார். பெரிதாய் ஒன்றுமில்லை ஒரு 2 மீட்டர் இடைவெளி தான்; ஆனால், கடுமையான-மூட்டு வலி கொண்ட என்னப்பனுக்கு அது மிகப்பெரிய தூரம். கட்டிலில் இருந்து எழும்போது "முருகா! முருகா!" என்று சொல்லிக்கொண்டே முதல்-அடியை எடுத்து வைத்து தடுமாறித்தான் அடுத்த அடியை எடுத்து வைப்பார். ஆனால், மறுகணமே எப்படி எவரால் என்னை அணுக முடிந்தது? "என்னப்பா! என்னைப் பார்த்து உட்காரென சொல்லிவிட்டு; நீ இப்படி கவனக்குறைவா இருக்கலாமா?!" என்று வினவிக்கொண்டே எனக்கு கைகொடுத்து தூக்கியும் விட்டார். அந்தக்கணம் நான் அந்த நிகழ்வை உடனே உணர்ந்து பார்க்கவில்லை; பின்னர் யோசிக்கும் போதுதான் அந்த வியப்பு என்னுள் பரவியது. அப்போது, ஒன்று புரிந்தது...

ஆம்! 75-இலும் தசை ஆடும்!!

உறவும் உடைசலும்...




       சென்ற சூலை-16 ஆம் தேதியன்று இரவு மேலுள்ள படத்தில் உள்ள சிறு-தட்டு உடைந்து விட்டது. 2 ஆண்டுகளுக்கும் மேலாய்... என்னுடன் இருந்தது! எனக்கு, என்னவளுக்கு, என்மகளுக்கு என்று - மூன்று, மூன்றாய் வாங்கிய பொருட்களுள் ஒன்று. அன்றே மூன்று முறை தவறியது; கீழே விழாமல் பிடித்துவிட்டேன். ஆனால், நான்காவது முறை தவறிவிட்டது. சரி... அதற்கென்ன?! என்கிறீர்களா; இதோ, வருகிறேன்:
  • நாம் ஒவ்வொருவரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறவுகளை இப்படி உடைந்து/விரிசல் விடுவதை கடந்து வந்திருப்போம். ஆனால், எத்தனை முறை அப்படி உடையக்கூடாது  என்ற கவனத்துடன் செயல்பட்டிருப்போம்?! ஒருமுறை? இரண்டுமுறை??
  • மேற்சொன்னது போல் அன்றே முதல் மூன்று முறை நான் கவனமாய்; உடைந்து விடுமோ?! என்ற ஐயத்தால்; உடைந்து விடக்கூடாதே! என்ற ஆதங்கத்துடன் இருந்ததால் - அதை தடுத்து காப்பாற்றி/பத்திரப்படுத்த முடிந்தது.
  • ஆனால், நான்காவது முறை எனக்கு அந்த ஐயமும்/ஆதங்கமும் இல்லை; அல்லது... அதுபற்றிய கவனம் இல்லை. ஒரு அலட்சியம்  இருந்திருக்கிறது; அதனால், அந்த பொருளை பத்திரப்படுத்த  முடியாமல் போய்விட்டது. 
  • அதுபோலவே, நாம் ஒவ்வொரு உறவும் உடையும் நிலை வரும்போதெல்லாம் சில/பல நேரங்களில் "கவனமாய்"தடுத்திருப்பினும்; ஏதோவொரு ஒருமுறை கவனக்குறைவால் தவறவிட்டு அந்த உறவை உடைத்து விட்டிருப்போம்.
  • சரி... உடைந்ததை (மேலுள்ள தட்டு போல்) ஒட்டவைப்பது சாத்தியம் அன்றுதான்! ஆனால் "தவற விட்ட தவறை" எண்ணி; அதற்காய் வருந்த வேண்டும்! கண்டிப்பாக பழையவாறே அந்த உறவை(தட்டை) மீட்டிடுதல் சாத்தியமில்லை. ஆனால் "சிறு-தழும்புடன்" அதை பழைய-நிலைக்கு மிக-அண்மையான நிலைக்கு மீட்டிடுதல் சாத்தியமே!
  • குறைந்தபட்சம் - அதற்கான முயற்சியையாவது நாம் செய்யவேண்டும்! அந்த முயற்சி கூட செய்யவில்லை எனில் "தவற விட்ட தவறு";  பின் குற்றமாகிவிடுகிறது! குற்றம் என்று தெரிந்தபின் வரும் அந்த குற்ற-உணர்வு பெருவலி கொண்டது. எனவே, உடைந்த உறவுகளை சரிசெய்திட... 
சிறு-முயற்சியாவது செய்வோம்! குற்ற-உணர்வின்றி இருப்போம்!!

செஞ்சுருவேன் - மாரி



     சமீபத்துல வெளிவந்த மாரி-படத்துல தனுஷ்; அடிக்கடி கையை ஸ்டையிலா(?!) ஆட்டி, ஆட்டி "செஞ்சுருவேன்"ன்னு மொட்டையா சொல்லுவாரு.

     சரி... என்ன செஞ்சுருவேன்னு சொல்லு(ங்க)ய்யா! மொட்டையா செஞ்சுருவேன்னா; அதுல "பலானா, பலானா" அர்த்தம் கூட வருதில்ல?!

   அதுல வேற... எப்ப பார்த்தாலும் "ஒரு ஆம்பளைய பார்த்து; இன்னொரு ஆம்பளை" செஞ்சுருவேன்னு சொல்றாங்க!! அட... அப்ரசுன்ட்டுகளா!... பார்த்து பேசுங்கப்பா!!

{காக்கா-முட்டை போன்ற படங்களை தயாரிச்சா மட்டும்; போதாதுங்கறேன்...!!!}  

பின்குறிப்பு: அப்புறம் தனுஷு! ஒருத்தரு "ஒரு விரலை ஆட்டி ஆட்டி" பேசுனதுக்கே இரசிகப்-பெருமக்கள் நல்லா செஞ்சுட்டாங்க! நீங்க 2 விரலை காட்டுறீங்க; பார்த்து... உங்களுக்கு "மொத்தமா"செஞ்சுறப் போறாங்க!!!



முக்கிய கட்சிகளின் பெயர்கள்...


இதை கவனித்து இருக்கிறீர்களா?!

      இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான கட்சிகளின் தமிழ் பெயர்கள் "கழகம்/கட்சி" என்ற பெயரில் தான் முடிகின்றன! இவற்றின் "சுருக்கெழுத்து" பெயர்கள் "க" என்ற குரிளுடன் தான் முடிகின்றன. அதாவது "பாஜக/திக/திமுக/அதிமுக/மதிமுக/தேமுதிக/..." என்பன போன்று.

ஆனால்...

பேச்சு வழக்கில் பாஜ"கா"/தி"கா"/திமு"கா"/அதிமு"கா"/... என்று "கா" என்ற நெடிலோடு தான் "சொல்லவோ/கேட்கவோ" செய்கிறோம்.

இதை "எவரேனும்" கவனித்து இருக்கிறீர்களா?!   

ஞாயிறு, ஜூலை 26, 2015

இறை-நம்பிக்கையில் ஓர் பகுத்தறிவு...



           இறைவன் இருக்கிறாரா? இல்லையா?? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இரண்டு தலையங்கள் இறை-நம்பிக்கையூனூடே "ஒரு பகுத்தறிவு(வும்)" இருப்பதை வெளிப்படுத்தும். பாகம்-1 இல் "றைவழிபாட்டில் அபத்தங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை; எந்த ஓர் நம்பிக்கையும் வரைமுறை தாண்டி அதிகமாகும் போது "மூட நம்பிக்கை" உருவாவதை தடுக்க முடியாது; அது அளவு கடந்த நம்பிக்கையின் பால் விளையும் ஒரு விளைவு. அம்மாதிரியான மூட-நம்பிக்கைகளில் எனக்கும் உடன்பாடில்லை" என்ற பின்குறிப்பை இட்டிருப்பேன். ஆம்! இறைவழிபாட்டில் "மூட-நம்பிக்கை(யும்)" இருக்கிறது என்ற என்-ஒப்புதல் இன்றும் அப்படியேத்தான் இருக்கிறது. அதனால் தான் "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற தலைப்பில் ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறை பற்றி எழுதிய என்னால் "இறைவழிபாட்டில் நேர விரயம் தேவையா?..." என்றும் எழுத முடிந்தது. மற்ற விசயங்களைப்  போல் இறை-நம்பிக்கையையும் பகுத்தறிந்து பார்க்க விரும்பிகிறேன். 

      அதனால் இறைவன் (/இயற்கை/உயர்-சக்தி) மேல் இருக்கும் என் "அடிப்படை நம்பிக்கை" மாறவில்லை. பாகம்-2 இன் பின்குறிப்பில் சொல்லி இருந்த வண்ணம் "இந்த பிரபஞ்சத்திற்கு இணையான; இன்னுமோர் பிரபஞ்சத்தை - மனிதன் உருவாக்கும் வரை; நமக்கும் மேலான உயர்-சக்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது". அப்படி ஒரு பிரபஞ்சம் உருவானால், இறைநம்பிக்கையில் உள்ள என் மேற்கூறிய "அடிப்படை நம்பிக்கை" கூட மாறும். அப்படி மாற்றிக்கொள்ள எனக்கு எந்த தயக்கமும் இருக்காது. வாட்ஸ்-ஆப்பில்என்-நட்பு வட்டத்தில் திருக்குறள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, நட்பொன்று என்னை ஒரு திருக்குறள் சொல்ல சொல்லிற்று. நான் என்னப்பன் அடிக்கடி சொல்லும் "ஊழிற் பெருவலி யாவுள?..." என்ற குறளை சொன்னேன். விளக்கம் கேட்க, அதையும் சொன்னேன். உடனே, "அப்படியானால், எல்லாவற்றையும் விதி என்று ஏற்கவேண்டுமா?" என்றொரு விவாதம் துவங்கியது.

        "காரணம் ஏதுமின்றி, என்மீது எந்த குற்றமும் இல்லாமல் - நான் தண்டிக்கப்படும்போது" அதை விதி என்று நான் ஏற்றுக்கொள்வேன் என்றேன். வேறென்ன செய்வது? என் மனம் அமைதி கொள்ள எனக்கொரு காரணம் தேவைப்படுகிறது. அதற்காய் எல்லாவற்றிற்கும் "விதியே காரணம்" என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றேன். அப்போது ஒருவரின் விதி கடவுளால் அவர் பிறக்கும்போதே விதிக்கப்படுவது என்ற வாதம் வந்தது; எனக்கு அதில் உடன்பாடில்லை என்றேன். என் இறை-நம்பிக்கை என்பது வேறு! எல்லாவற்றையும் இறைவனோடு தொடர்புபடுத்துவது என்பது வேறு. எவரேனும் என்னிடம் "கடவுளை காட்டு!" என்றால் நான் உடனே சரணடைந்துவிடுவேன்; இல்லையப்பா! நான் கடவுளைப் பார்த்தது கிடையாது! எனவே என்னால் காட்டமுடியாது; ஆனால், அவர் இருக்கிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பேன். "தூணிலும் இருக்கிறார்! துரும்பிலும் இருக்கிறார்!!" என்றால் "காற்றில் உமிழ்வது" கடவுளின் மேல் உமிழ்வதாய் ஆகிவிடும். 

     மற்றவரை திட்டினால் "அது கடவுளை திட்டுவதாய்" ஆகிவிடும். "அஹம் பிரம்மாஸ்மி (நான் கடவுள்)!" என்பது உண்மையாகிவிடும்; ஏனெனில் எனக்குள்ளும் தானே கடவுள் இருக்கிறார்? புலால் உண்ணுதலை "கொன்றால் பாவம்! தின்றால் தீரும்" என்று நியாயப்படுத்த முடியாது; ஏனினில், ஒவ்வொரு உயிரும் கடவுளே! கடவுளுக்கு "உயிர் பலி" கொடுத்தல் கூடாது. இப்படி பலவற்றை உதாரணம் காட்டி கேள்வி கேட்கமுடியும்.  அது போலவே "அவனின்றி ஓரணுவும் அசையாது!" என்பதும். அப்படியானால் பிறந்து ஒரு-மாதமே ஆன ஒரு குழந்தை "கடுமையான நோயால்" பாதிக்கப்படுவது; அப்படி பாதிக்கப்பட்டு இறக்காமலும் சித்திரவதை அனுபவிப்பதற்கும் கடவுள் பொறுப்பேற்கவேண்டும்! அல்லவா? அப்போது, கடவுள் ஏன் இப்படி செய்கிறார் என்ற கேள்வுக்கும் பதில் சொல்ல நாம் கடமைப்பட்டு இருக்கவேண்டும்! மாறாய்... அதெல்லாம் கடவுள் ஏற்கனவே எழுதிய விதி என்று சொல்லி தப்பித்தல் நல்லதன்று. 

      தொடர்ந்த விவாதத்தின் போது இன்னொரு நண்பர் "நம்பிக்கை+வினை+விதி+முற்பிறவி+கர்மா+மற்றும்பல = சக்தி/கடவுள்" என்றார். அந்த விளக்கத்தில் எனக்கு முழு உடன்பாடு இருக்கிறது; ஆம், பலதும் சேர்ந்ததன் கலவை தான் "கடவுள்". எனவே, கடவுளே எல்லாவற்றிற்கும் காரணம் என்பது சரியல்ல. இந்த கருத்தை படித்தவுடன் எனக்குள் கீழ்வரும் உவமானமும்/விளக்கமும் வந்தது. உலகம் என்பதை "ஒரு கார்ப்பரேட்" நிறுவனம் என்றும், கடவுள் என்பதை அந்த நிறுவனத்தின் "நிர்வாக இயக்குனர்" என்றும்  வைத்துக் கொள்வோம். பொதுவான பார்வையில் நிர்வாக இயக்குனர்(கடவுள்)-தான் எல்லாவற்றையும் செய்வதாய் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல... அவர் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்ப்பவர். அவரின் முக்கிய-வேலை கம்பெனி நடப்பதற்கு தேவையான பணம்/பொருள் போன்றவற்றை கொடுப்பது; அது கிடைக்க வழி வகுப்பது. அதாவது, கடவுள் - மனிதனையும்/மற்ற உயிரனம் போன்றவற்றை படைத்தது போல்!

       நிர்வாக இயக்குனர்(கடவுள்) என்பவர் தனக்கு கீழே "நம்பிக்கை+வினை+விதி+முற்பிறவி+கர்மா+மற்றும்பல" போன்று பல துறைகளை அமைக்கிறார்! அதன் பின்னர் அவருக்கு அங்கே பெரிய வேலையில்லை. ஏனெனில், அவற்றை கவனிக்க தகுதியான ஆட்கள் உள்ளனர். வேறொரு துறையில் உள்ள ஒருவர் செய்யும் தவறுக்கு நிர்வாக இயக்குனர்(கடவுள்) பொறுப்பாவாரா?! ஒரு உதாரணம்: கழிவறை சரியாக சுத்தம் செய்யப்படவில்லை என்றால், அதற்கு நிர்வாக இயக்குனர்(கடவுள்) பொறுப்பாவாரா?! இல்லையே! கழிவறையை சுத்தம் செய்யும் வேலையை கண்காணித்து, பராமரிக்கும் துறை தான் அதற்கு காரணம்; அத்துறை தலைவர் கூட நேரடியாய் பொறுப்பாக மாட்டார். ஏனெனில், ஒவ்வொரு துறையும் பல்வேறு ஊழியர்களை கொண்டிருக்கிறது; ஒவ்வொரு ஊழியரும், ஒவ்வொரு "தனி" செயல்/வினைக்கு காரணம். எனவே, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு செயலுக்கும்/வினைக்கும் ஆன சாதக/பாதகங்கள் உள்ளன.

     அப்படிதான் கடவுள் என்பவரும்! எல்லாவற்றிற்கும் கடவுள் (நிர்வாக இயக்குனர்) என்ற ஒருவரையே காரணம் காட்டுதலோ/சாடுதலோ முறையன்று. இவை எல்லாம் தனித்தனி நிகழ்வுகள்(துறைகள்); இவற்றிற்குள் ஒரு தொடர்பு இருக்கலாம்! இவை எல்லாம் சேர்ந்த தொகுப்பாய் கடவுள் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் கடவுள் மட்டுமே காரணம் அல்ல; அதை கடவுளே(கூட)ஏற்கமாட்டார். மேலும், உலகம் என்பது "இல்லம்" என்று கொண்டால்... அந்த இல்லத்தில் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமாகிறது; குடும்பத் தலைவர் தான் இல்லத்தின் எல்லா விசயங்களுக்கும் காரணம் என்றால் சரியாகுமா?! அங்கே மனைவி/கணவன்/மகன்/மகள்/பெற்றோர் என்ற பல உறவுகளின் பங்களிப்பு உள்ளது. இதில் எவரது பங்களிப்பு உயர்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை! எல்லாவற்றையும் சேர்த்த கலவை தான் அந்த இல்லம். கடவுளே என்றாலும்... ஒரு குடும்பத்தை அவரால் மட்டுமே நடத்துதல் சாத்தியம் இல்லை. ஒருவேளை...

  ஆண்தான் ஒரு குடும்பத்தின் எல்லாவற்றிற்கும் ஆதாரம்!
    என்ற தவறான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் மனோநிலை தான்... 
            உலகின் எல்லாவற்றிற்கும் கடவுள்தான் ஆதாரம் என்று சொல்ல வைத்ததோ???!!!                        

பகுத்தறிவு எப்போது உருவானது???



          "இறை-நம்பிக்கையில் ஓர் பகுத்தறிவு" என்ற இந்த வார தலையங்கத்தை படித்திருப்பீர்கள். அந்த விவாதத்தின் போது என் நட்புகளிடம் "எனக்கும் இறை-நம்பிக்கை உள்ளது; ஆனால், அந்த நம்பிக்கையையும் நான் பகுத்தறிய விரும்புகிறேன்" என்றேன். அவர்கள் நான் கடவுள்-மறுப்பாளன் என்ற ரீதியில் அடிக்கடி; கடவுள் இருக்கிறார் - தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்பன போன்ற பொது-விவாதங்களை வைக்க ஆரம்பித்தனர். அவர்கள் இறை-நம்பிக்கையில் பகுத்தறிவது தவறு என்ற அடிப்படையில் பேசியதாய் தோன்றியது. அப்போது, நட்பொன்று என்னைப் பார்த்து "பகுத்தறிவு எப்போது உருவானது?!" என்றொரு கேள்வியை கேட்டது. நான் சற்றும் யோசிக்கவில்லை! இப்படி பதிலளித்தேன்: ஆதாம் - ஏவாள் என்பவர்களை கடவுள் படைத்தார் என்பதில் பெரும்பான்மையில் எல்லா மதங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அப்படியெனில், ஏவாள் ஆப்பிளை உண்டபோதே பகுத்தறிவு உருவாகிவிட்டது என்றேன். 

       ஆம்! கடவுள் அந்த பழத்தை உண்ணவேண்டாம் என்று கூறியும், அதை ஏவாள் உண்டாள் என்றால்... அங்கே "ஏன்? உண்டால் என்ன?" என்றொரு கேள்வி எழுந்திருக்கிறது. அந்த கேள்விதான் பகுத்தறிவின் பிறப்பிடம் என்று நான் பார்க்கிறேன். இங்கு இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்; கடவுள் நேரடியாக "இந்த ஆப்பிளை உண்!" என்று கட்டளை இட்டிருக்க முடியும். ஆனால், அப்படி செய்யாது "உண்ண வேண்டாம்" என்றார்; அப்படி எனில், பகுத்தறிவை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதைக் கடவுளே, மனிதனிடமே விட்டு விட்டதாய் தெரிகிறது. மனிதன் தானாகவே "பகுத்தறிய வேண்டும்" என்பதே கடவுளின் விருப்பமாய் இருந்திருக்க வேண்டும்; உனக்கு பகுத்தறிவை கொடுத்ததோடு என் கடன் முடிந்துவிட்டது. இனி, உன் பகுத்தறிவை உண்மையாய்/உரிமையாய் உபயோகிப்பது உன் கடமையடா மனிதா! என்று அவர் விட்டிருக்கவேண்டும். எனவே, என்னளவில் - பகுத்தறிவு என்பது...

ஏன் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது? - என்ற கேள்வியில் பிறந்திருக்கவேண்டும்!!!      

சனி, ஜூலை 25, 2015

பூர்விகா ஆடி-சேல்...



"பூர்விகாவுல ஆடி சேலு! என்ன வேணுமோ கேளு!!"

வேணாம்...

ஏதாவது ஏடாகூடமா கேக்கறதுக்குள்ள ஓடிடு!! ;)

புதன், ஜூலை 22, 2015

கொசமட்டம் ஃபைனான்ஸ்...


கொசமட்டம் "கோல்டு"லோன்னா... (நகை)உங்க வீட்டுல இருக்கற மாதிரி!
அய்...
அப்புறம் ஏன்யா "வட்டி" வாங்கறீங்க?! wink emoticon

திங்கள், ஜூலை 20, 2015

விதியும் மதியும்...


"விதியை மதியால் வெல்லலாம்"
சரி...
விதியை எதனால் அறியலாம்?!
அறிந்தால் தானே மதி-வெல்லும்??!!

வியாழன், ஜூலை 16, 2015

எளிய முறையில் "அயர்ன்" செய்ய...



    எளியமுறையில் துணிகளை "அயர்ன்" செய்யவேண்டுமா?! இதோ... ஒரு உபயோகமான/வெற்றிகரமான வழிமுறை. முதல் படத்தில் காட்டியுள்ளது போல்; முதலில், துணிகளை ஒழுங்காய் மடித்து உங்கள் படுக்கையின் மேல் சரியாய் அடுக்குங்கள். பின்னர், இரண்டாவது படத்தில் உள்ளது போல், படுக்கை-விரிப்பை அதன் மீது சரியாய் விரித்து; வழக்கம்போல் உறங்குங்கள். ஓரிரு தினங்களில் துணிகள் நன்றாக "அயர்ன்"  செய்யப்பட்டிருக்கும். உடல் எடையைப் பொறுத்து "அயர்ன்" செய்யப்படும் நேரம் மாறுபடும் (சிரிக்காமல்... சிந்தியுங்கள்!). 

கவனிக்க வேண்டியவை: 
  1. மின்சார செலவு மிச்சம்.
  2. நிறைய துணிகளை அடுக்கக்கூடாது; முதுகு-வலி ஏற்படும்.
  3. அயர்ன்-மூலம் ஏற்படும் வெப்பம் இல்லாததால், துணிகள் விரைவில் வீணாகாது.
  4. இலவச முதுகு-மஸ்ஸாஜ் கிடைக்கும். மனைவியையோ அல்லது வேறோருவரையோ நாடத் தேவையில்லை (நோ சிரிப்பு! சிந்தனை...!).
  5. ப்ளானிங் ரொம்ப முக்கியம்! சோம்பல் கூடாது (ஹா... ஹா... ஹா...); 2 நாட்களுக்கு பின் அணியவேண்டிய துணிகளை இன்றிரவே படுக்கையில் அடுக்கவேண்டும்.

புதன், ஜூலை 15, 2015

சென்ற தலைமுறை அப்பாக்கள்...

 


    சவாலான-சம்பளத்துடன், வாழ்க்கை ஓட்டத்தில் "மிக வேகமாய்/மிக விவேகமாய்/மிக சிரத்தையாய்" ஓடிய சென்ற-தலைமுறை அப்பாக்கள் - வாழ்க்கை சூழலால் தங்கள் பிள்ளைகளுக்கு செய்ய-மறந்த/செய்ய-முடியாத பலவற்றை; தங்களின் "பெயரன்/பெயர்த்தி" இவர்களுக்கு செய்வதன் மூலமாய் நிவர்த்தி செய்துகொள்கிறார்கள்.

இந்த விசயத்தில்; சென்ற-தலைமுறை அப்பாக்கள் பேரதிஷ்ட்டக்காரர்கள்!!!

செவ்வாய், ஜூலை 14, 2015

ரோமியோ ஜூலியட்...



          நேற்றிரவு இணையத்தில் "ரோமியோ  ஜூலியட்" தமிழ் திரைப்படம் பார்த்தேன். அருமையான கரு கொண்ட கதைக்களம். என்னளவில்... விட்டுவிட்டுப்போன-அந்த காதலியை; "உண்மையாகவே" காதலன் வெறுத்து அவளை ஏற்றுக்கொள்ளாமல் முடித்திருக்க வேண்டிய படம். ஆனால்... "காமடி"; மற்றும் எவர் வகுத்தது என்றே தெரியாத "கமர்ஷியல்" படமாகவேண்டும் என்ற கோட்பாடு - இவையிரண்டும் பின்பாதியை வீணடித்து கருவையும் "அபார்ஷன்" செய்துவிட்டார்கள். இறுதியில்... கமர்ஷியலாகவும் அந்த படம் எதையும் சாதிக்கவில்லை! மட்டமான படங்களின் பட்டியலில்; இணைந்திருக்கும் இன்னுமொரு படம் என்ற சாதனையைத்தவிர!!

பொதுக்குறிப்பு: கமர்ஷியலாக படமெடுக்கிறேன் என்ற டுபாக்கூர்-கோட்பாட்டுடன் இப்படி அருமையான "கருவை" அபார்ஷன் செய்யும் அபத்தத்தை இன்னும் எத்தனை நாளைக்கு தான் கடைபிடிக்கப் போகிறார்களோ?!

திங்கள், ஜூலை 13, 2015

பொய்யன்பு...


பிறர் மீதான நம்அன்பே,
நம் மீதான "ஓர்"அன்பை;
தீர்மானிக்கும் எனில், அவ்வன்பு
பொய்யன்பு! (நம்)தசையாடா அன்பு!!

ஞாயிறு, ஜூலை 12, 2015

இறுதி-துளி நம்பிக்கை...



     ஒரு உறவின் மீதோ (அல்லது) ஒரு பொருளின் மீதோ - நாம் வைத்த "இறுதி-துளி நம்பிக்கை"யும் பொய்த்து போன பின்; ஒரு வீரமும்/புரிதலும் வரும் பாருங்கள்... அதுதான் வாழ்வை அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்வதற்கான அடித்தளம்!!! 

இளங்கோவும் இஃப்தாரும்...



   தலைப்பை பார்த்தவுடனே ஓரளவுக்கு தலையங்கத்தின் மைய்யக்கரு புரிந்திருக்கும். "அம்மாவாசைக்கும்; அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" என்ற சொற்றொடரை பலரும் கேட்டிருக்கக்கூடும். அதையே தவறென்பவன் நான்; ஆம்! அம்மாவாசை என்பது ஒருவரின் "அம்மா/அப்பா"-வின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம்; அவர்களுக்கு பிடித்ததை சமைத்து வழிபடும் ஒரு நாள் என்று பொருள்படும். அப்படி எனில் ஏன் அம்மாவாசைக்கும், அப்துல் காதருக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது?! அப்துல் காதருக்கும் அம்மாவும்/அப்பாவும் உண்டுதானே?! என்று பார்ப்பவன் நான். அப்படிப்பட்ட சிந்தனை தான்; இந்த ஆண்டு இரமலான்-நோன்பு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது. ஆம்! இந்த கணம் வரை 3 வாரங்களையும் கடந்து இரமலான்-நோன்பு இருந்து வருகிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு, என்மகளின் பிறந்த நாளுக்காய் இந்தியா சென்றபோது கூட நோன்பை நிறுத்தவில்லை.

         என்மகளின் பிறந்த நாளன்று கூட அது தொடர்ந்தது. இக்கணம்வரை எந்த சிரமமும் இன்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது; அதனால் தான் "இளங்கோவும் இஃப்தாரும்" என்று தலைப்பிட்டேன். நோன்பு இருக்க முடிவு செய்ததும் ஷார்ஜாவில் இருக்கும் என் நண்பன் காதரை தொடர்பு கொண்டு அது பற்றி விவாதித்தேன். நோன்பிற்கான விதிமுறைகளை எளிதாய் விளக்கி, என் "நோன்பு-குருவாய்" ஆனவன். அத்தோடு நிற்காமல், 2-ஆம் நாள் நோன்புக்கான "இஃப்தார்" முடிக்க அவன் வீட்டிற்கு அழைத்தான்; அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களே மேலே உள்ளவை! இஃப்தார் எப்படி இருக்கவேண்டும்; அன்றைய நோன்பை எப்படி முடிக்கவேண்டும் என்பதை அவனும்; அவன் அன்பு-குடும்பமும் அன்போடு விளக்கியது. அவர்களுக்கு "அல்லா" வேண்டிய அருளை வழங்கட்டும்; முன்பே அவன் இல்லத்தில் உணவருந்தி இருக்கிறேன் (என்மகளுடன் கூட) எனினும், கண்டிப்பாக இஃப்தார் விருந்து வித்தியாசமான அனுபவம்.

          முதல் நாள் நோன்பன்று; முதலில் என் அம்மாவிடம் சொன்னேன் - நோன்பிருக்கிறேன் என்று. மிகுந்த கடவுள் பக்தி கொண்ட அவர் எந்த மறுப்பும் சொல்லாது; புன்னகையுடன் அதை ஆமோதித்தார். என் தமக்கைக்கு அத்தனை ஏற்புடையதாய் இல்லை; எதிர்த்து கேட்டால், நான் ஏதாவது சொல்லிவிடுவேன் என்ற தயக்கம் - அதனால், எதுவும் சொல்லவில்லை. என் தமையன் சிறிது தயக்கமாய் "நீ ஏன் நோன்பு இருக்கிறாய்?" என்றார்; ஏன், இருந்தால் என்ன? என்று கேட்டேன்; அதன் பின் அவர் ஏதும் பேசவில்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாத என்னவள், அது பற்றி பெரிதாய் ஏதும் சொல்லாது "சரி" என்றாள். ஆனால், தமிழ் படித்த/மனிதம் படித்த என்னப்பன்; எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்ட அவர் அதை வரவேற்று "அல்லா, உனக்கு நல்வழி காட்டி துணை இருக்கட்டும்!" என்று வாழ்த்தினார். என்னப்பனின் இந்த உயரிய குணத்தை என்போல் எவரும் இதுவரை உணரவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு.

        இப்படியாய், நோன்பை இன்று வரை நன்முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்போது நான் நோன்பிருக்கும் போது; விரதம் இருக்கும் முறை பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். அதனால், ஒருவேளை உணவருந்துவது எனக்கு பெரிய விசயமில்லை. காலையில் உணவருந்தி நோன்பை ஆரம்பிக்கும் வழக்கம் இன்று வரை எனக்கு கைகூடவில்லை; எச்சில் விழுங்காத ஒழுக்கமும் இன்னும் சரிவர கைகூடவில்லை!. ஓரிரு நாட்கள் பழரசம்/பன் போன்று சிறுபண்டங்கள் உண்டேன்; மற்றபடி, காலையில் உணவருந்தும் வழக்கத்தை என்னால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், அதிகாலை 3 மணிக்கு எழுந்து 1.5 லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு (25 ஆண்டுகளாய் காலையில் தண்ணீர் குடிப்பதால்) பின்னர் 30/40 நிமிடங்கள் உறங்கிவிட்டு; பின்னர் "சேஹர்" ஆரம்பிக்கும் முன் எழுந்து, (சாப்பிடும் எண்ணமிருப்பின் ஏதாவது சாப்பிட்டுவிட்டு)  மீண்டும் 1.5 லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு என் நோன்பை ஆரம்பித்து விடுவேன்.

     இந்த 3 வாரங்களிலேயே நல்ல பலன்; உடல் பழைய ஆரோக்கியத்தை நோக்கி திரும்ப ஆரம்பித்திருக்கிறது; மனதும் பழையவாறு ஒருமுகப்பட பழகி வருகிறது. மசூதிக்கு சென்று தொழவேண்டும் என்று தோன்றவில்லை! கண்டிப்பாய், இது வேறு கடவுள் என்பதால் அல்ல. நான் வணங்கும் கடவுளையே, வீட்டில் உருவகமாய் வைத்து வணங்குவதில்லை; உருவிலா வழிபாடு என்னுள்-தானே எழுந்திருக்கிறது என்று முன்பே எழுதியுள்ளேன். அதனால், வழிபாடு என்பது நான் தினமும் வழக்கமாய் செய்யும் வண்ணம் தொடர்கிறது. இரமலான்-நோன்பை வேற்று மதத்தவர் கடைபிடிக்கக்கூடாது என்று "இசுலாமிய மார்க்கம்" சொல்லி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. வேறெந்த மதமும் கூட, நோன்பு/விரதம் மேற்கொள்ளும் விதத்தில் மதத்தை போதிப்பதாய் எனக்கு தெரியவில்லை. எல்லா மதமும் "மனிதம்" ஒன்றை மட்டும் தான் போதிக்கிறது. எனவே, என்னுடைய பார்வையில்; அம்மாவாசைக்கும், அப்துல் காதருக்கு மட்டுமல்ல...

"இளங்கோவுக்கும் இஃப்தாருக்கும்" கூட சம்பந்தம் உண்டு என்றே தோன்றுகிறது!!!  

மதமும்... "மாதா"வே!!!



     இந்த ஆண்டு நான் "இரமலான்-நோன்பு" இருப்பதை; இந்த வார தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். என்னளவில், இப்படி நோன்பு/விரதம் இருப்பது நல்ல விசயம்; எனக்கு பிடிக்கும். என்னவோ... திடீரென்று நோன்பு இருக்கவேண்டும் என்று தோன்றியது; உடனே ஆரம்பித்து நன்முறையில் கடைபிடித்தும் வருகிறேன். அத்தலையங்கத்திலேயே... மசூதிக்கு சென்று வழிபாடு செய்யவில்லை என்றும்; அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளேன். நான் இந்த நோன்பு/விரதம் என்பதை உடல் உறுப்புகளுக்கு ஒய்வு கொடுக்கும் விசயமாய் மட்டுமே பார்க்கிறேன். பல நாட்களாய்/ஆண்டுகளாய் தொடர்ந்து, கண்டதையும் உண்டு சேர்த்திட்ட கொழுப்பை கரைக்கும் விதமாகவும் பார்க்கலாம். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி... மனதை ஒருமுகப்படுத்த இப்படிப்பட்ட நோன்பு/விரதம் உதவும். "செவிக்குண வில்லாத போழ்து" என்ற வள்ளுவன் வாக்குடன்; வயிறுமுட்ட உண்ட என் நிலையை ஒப்பிட்டு முன்பொரு கவிதை எழுதி இருக்கிறேன்!

         நட்பொருவர் "விட்டால் இசுலாமியன் ஆகிடுவாய் போல?!" என்றார்.  நான் மேற்கூறியவற்றை விளக்கி; நோன்புக்கும், கடவுள்/மதம் இவற்றிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை விளக்கினேன். தொடர்ந்து... என்னளவில் மதம் என்பது "மாதாவுக்கு சமமென்றேன். அதனால், மதம் மாறுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை! அங்கே, உண்மையில்லை!! ஆம்! இன்னொருவரின் தாயைப் பார்த்து "அட! இந்த தாய் எவ்வளவு வியக்க வைக்கிறார் என்றோ அல்லது வேறுவகையிலோ சிலாகிக்கலாம்; தவறில்லை! ஆனால், தன் தாயை உதறிவிட்டு; அந்த தாயை, தன் தாயாய் சொந்தம் கொண்டாட எண்ணுவது மடத்தனம். தாய் என்பது எப்படி ஒருவருக்கு "மாற்ற முடியா" அடையாளமோ; அப்படித்தான் மதமும் இருக்கவேண்டும். மதத்தில் நாட்டமில்லை! மதத்தில் நம்பிக்கையில்லை!! என்ற கொள்கை-கூட எனக்கு(மு)ண்டு; ஆனால், தன் மதத்தை மாற்றிக்கொள்வது என்பது மடத்தனம்/பாவச்செயல்!!! எனவே, என்னளவில்...

மதமும், மாதாவும் ஒன்றே!!! 

வெள்ளி, ஜூலை 10, 2015

ஏன் இப்படி ஒரு சர்வே எடுங்களேன்...



சற்று முன்னர் "ஆயுத எழுத நீட்சியில்" ஹரிஹரன் நடத்திய "தலைக்கவசம் அணிதல் கட்டாயம்" என்ற விதி பற்றிய விவாதத்தில் ஒரு வழக்கறிஞர் ஒருவர் இப்படி சொன்னார்:

வழக்கறிஞர்: ஒரு சர்வே எடுங்கள்! அதில் வரும் முடிவு படி தலைக்கவசம் வேண்டுமா? இல்லையா?? என்பதை முடிவு செய்யலாம் என்று வாதிட்டார்!
{சம்பந்தமே இல்லாம... எனக்கு "பாபநாசம்" படத்தில் அந்த ஐ.ஜி. மேடம் கேட்கும் "நீயெல்லாம் எப்படிய்யா போலிஸா ஆன?!" என்ற வசனம் ஞாபகத்து வந்து போனது}

ஹரிஹரன்: ஹரிஹரன் "டாஸ்மாக் கடைக்கு முன்னாடி நின்னு டாஸ்மாக் வேண்டுமா? வேண்டாமா?? என்று சர்வே நடத்தினால் சரியாய் வருமா?" என்று எதிர்கேள்வி கேட்டார்.

நான்: உடனடியாய் எனக்கு இப்படி ஒரு யோசனை எழுந்தது. துரதிஷ்டவசமாய் இன்று "வரதட்சனை ஒழிப்பு"சட்டத்தின் மூலம் பல அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவதை தொடர்ந்து பார்த்துக்கொண்டே வருகிறோம். "வரதட்சனை ஒழிப்பு சட்டம் வேண்டுமா? வேண்டாமா?? என்று ஆண்களிடம் ஒரு சர்வே எடுங்களேன்!!!" என்பதே அது.

வியாழன், ஜூலை 09, 2015

நம் வரையறை உணர்வோம் - 2


{திருமணமாகி, வேலைக்கும் செல்லும் பெண்கள் பலர் செய்யும் செயல் பற்றி!}

       துப்பு இருக்குதா? - ஒரு வீடு வாங்க துப்பு இருக்குதா?! ஒரு கார் வாங்க துப்பு இருக்குதா??!!அப்பப்போ நகைகள் வாங்கிக் கொடுக்க துப்பு இருக்குதா???!!!  போன்ற கேள்விகளை மனைவி மூலமாய் எதிர்கொள்ளாத கணவர்கள் மிகச்சிலரே என்றால், அது மிகையன்று. இப்படிப்பட்ட பேர்-வசதிகள் இல்லாத பொருளாதார நிலை கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்து வளர்ந்தவர்கள் தான் நம்மில் பலரும். எனவே, திருமணமான உடனே வீடு வாங்குதல் என்பது பலருக்கு இயலாத காரியம். அதிலும், வீடு வாங்குவதால் உருவாகும் கடன் தொல்லை/பிரச்சனையால் இன்றைய வாழ்வை வாழ்தல் சாத்தியமன்று என்பதாலேயே - சிலர் வீடு வாங்குதலை தள்ளிப் போடவும் செய்கின்றனர். வாங்க முடிந்தும் தள்ளி போடுகின்றனரா? அல்லது வாங்க "துப்பு" இல்லையா?? என்ற விவாதம் (இப்போதைக்கு)ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைக்கு, என்னுடைய பார்வை...
  • எல்லாவற்றிலும் சம-உரிமை கேட்டு; பலவற்றில் பெற்றுவிட்ட பின்னரும் - அதென்ன?! வீடு போன்ற பெருஞ்செலவு ஆகும் விசயங்களில் மட்டும் "ஆண் தனித்து நின்றே" துப்பு காட்ட வேண்டி இருக்கிறது? இத்தனை சம-உரிமை இல்லாத காலக்கட்டத்தில், வேலைக்கு சென்ற பெண்கள் கூட; கணவனிடம் தாம் ஈட்டியதையும் கொடுத்து தானே பெற்றனர்?
  • பெரும்பாலான பெண்கள் நினைப்பது, அவரவர் பெற்றோர் அவர்களுக்கு அளித்திட்ட சொத்தில் வீடும் இருக்கிறது என்ற பெருமிதம் தான். இருக்கட்டும்! அதேபோல் தானே, ஆணுக்கும் அவரவர் பெற்றோர் கொடுத்த நிலமோ? மற்ற சொத்தோ?! ஏன், அங்கு மட்டும் "அது அவர்கள் கொடுத்தது; நீங்கள் என்ன செஞ்சு கிழிச்சீங்க?! என்ற ஏளனப்பேச்சும்; துப்புக்கெட்டவன் என்ற தூற்றுதலும்??"
  • "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்பதை மாற்றக்கோரி எத்தனை பாடுபட்டீர்கள் பெண்களே? உத்தியோகம் புருஷ இலட்சணம் என்றிருப்போர் "வீடு வாங்க துப்பு இல்லையா?!" என்று கேட்பதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது! "உத்தியோகம் தங்கள் இலட்சணமும்" என்போர்க்கு துப்பில்-தப்பாது பங்குண்டு தானே?
  • சில கணவர்களுக்கு பெற்றோர் மூலம் வீட்டு-மனை கிடைக்கும். அதில் சிறிது சிறிதாய், வீட்டை அவர்களால் கட்டிவிடமுடியும். ஆனால், எல்லாவற்றிற்கும் தன் சம்பாத்தியமே மூலாதாரம் என்றிருக்கும் (இன்றைய பெரும்பான்மை)கணவர்களால் என்ன செய்ய முடியும்?! "துப்பு இல்லையா?!" என்று திரும்ப, திரும்ப கேட்டால் - ஆமாம்! துப்பில்லை என்று சொல்வதை விட வேறென்ன செய்ய முடியும்?!
  • கண்டிப்பாக எல்லா கணவர்களும் இன்று தெளிந்த முடிவோடு தான் இருக்கிறார்கள். தம் பிள்ளைகளுக்கு என்று தனி-வங்கி கணக்கு, வைப்பு நிதி, அவ்வப்போது பொன்-நகைகள் வாங்கி சேர்ப்பது - போன்ற பல வழிகளில் "கடன் ஏதுமின்றி" சேமித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தன் சம்பாத்தியத்தை மட்டும் கொண்டுதான் செய்கின்றனர்; மனைவியின் சம்பாத்தியத்தை பெறுவதில்லை. இன்னும், வேறென்ன செய்ய முடியும்/வேண்டும்? எப்படி சம்பாதித்தாலும் பரவாயில்லை என்றால்; முயற்சித்து பார்க்கலாம்!!
  • இப்படி எல்லாவற்றையும் தன் குடும்பத்திற்காகவும்; தான் சார்ந்த குடும்பத்திற்காகவும் செய்யும் ஒரு ஆண்-மகனுக்கு எப்படி உடனடியாய் "வீடும் வாங்க"துப்பு இருக்கும்? வங்கிகள் தானே-முன்வந்து கடன் கொடுக்கின்றன என்பதற்காய் ஒரு வீட்டை வாங்கி; எவருக்கோ வாடகை விடுவதா புத்திசாலித்தனம்? நாம் வசிப்பதற்காய் இருப்பினும் பரவாயில்லை!
  • மிகுந்த சம-உரிமை கொண்ட இக்காலக்கட்டத்திலும், அதென்ன ஆணுக்கு மட்டும் வேண்டி இருக்கிறது அந்த "துப்புக்கெட்ட"துப்பு? ஏன் இக்காலப் பெண்கள் நாம் எதற்கு "துப்பு"ஆகிவிட்டோம் என்று, தங்களைக் கேட்டுக் கொள்வதில்லை? எவர் வகுத்த நியதி இது? நீங்கள் வேண்டுமானால் உங்கள் "துப்பை காட்டி" உங்கள் சம்பாத்தியத்தில் வீடு வாங்குங்கள்; உங்கள் கணவர்கள் எந்த சலனமும் இன்றி வந்து குடும்பம் நடத்துவர்!!!
பொதுக்குறிப்பு: வீடு வாங்கக்கூடாது என்பது என் வாதமல்ல! ஆனால், அதற்காய் ஒரு வங்கியிடம் "பெரிதாய்" கடன்பட்டு; எவருக்கோ வாடகைக்கு விடவேண்டாம் என்பதே என் வாதம். தாம் வசிப்பதற்கு எனினும், தகுந்த சூழ்நிலையில்/குறைந்த கடனுடன் வாங்குவதே சிறந்தது என்பதே என் வாதம். 

புதன், ஜூலை 08, 2015

சந்தோஷம்னா...?!



"சந்தோஷம்னா... என்னன்னு அதை அனுபவிக்கறப்போ தெரியறதில்லை"!

- விருமாண்டி திரைப்படத்தில் வரும் வசனம் இது! வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை சொற்ப வார்த்தைகளைக் கொண்டு "ஒரே வரியில்" விளக்கும் வசனம். இதுபோன்ற "அனுபவம் பொதிந்த" வசனங்களும் ஒரு காரணம்; கமல் என்னும் அந்த அனுபவஸ்த்தனின் "அபிமானி" என்று என்னை சொல்லிக்கொள்ள!!

நம் வரையறை உணர்வோம் - 1


{தன் கணவன் "தனக்கு மட்டும்தான் சொந்தம்" என்றென்னும் பெண்களுக்காய்!!}


   குறைந்தது 25-ஆண்டுகளாவது ஒரு ஆண்மகனை வளர்த்து ஆளாக்க, அவனுடைய பெற்றோர்களும்; அவனின் உடன்-பிறந்தோரும் பலவிதத்தில் உதவி செய்திருப்பர்! பல தியாகங்களை செய்திருப்பர். தம் வளர்ச்சியை கூட மட்டுப்படுத்திக் கொண்டு, அவன் வளர்ச்சியை ஒரு பொருட்டாய் மதித்திருப்பர். அப்படிப்பட்ட ஒருவன், தான் வளர்ந்து ஆளான தருணத்தில் - உங்களுக்கு கணவனாய் ஆகிவிட்ட "ஒரேயொரு காரனத்தினாலாயே!" - அவனை வளர்த்து ஆளாக்கிய எல்லோரையும் மறந்துவிட்டு/ஒதுக்கிவிட்டு "உங்களோடு மட்டும்" இருத்திக் கொள்ள நினைத்தல் எந்த விதத்தில் நியாயமாகும்?! 
  • ஒரு மரம் கூட தன்னை வளர்த்தவர்களுக்கு - காயாகவோ/கனியாகவோ/இலை-தழைகளின் மூல உரமாகவோ/குறைந்தது-அடுப்பெரிக்க உதவும் விறகாகவோ பயன்படுகிறது. ஆனால், ஆறறிவு கொண்ட மனிதனை இப்படி ஏதுமொரு (பிரதி)உதவியும் செய்யாமல் அவனை "வேறுபடுத்தல்" எங்கனம் நியாயமாகும்?
  • உங்களுக்கு வேண்டியதை உங்கள் கணவனிடம் கேட்டுப் பெற உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. அப்படி செய்ய இயலாத/முயலாத கணவனை நீங்கள் குறைகூறுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், உங்களுக்கு தேவையான அனைத்தையும் "தேவைக்கு மேலேயே" செய்யும் ஒரு கணவனை "அவனை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு" - தன் கடனை திரும்ப செய்யாவண்ணம் தடுத்தல் எந்த விதத்தில் நியாயமாகும்? அதற்கு, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது??
  • மனிதாபிமானம்-அற்ற/மானம்-கெட்ட/சுயநலத்தை-தற்குறியாய் கொண்ட - ஆண் மக்களுக்கு வேண்டுமானால் அது சாத்தியம் ஆகக்கூடும்! ஆனால், உண்மையான ஒரு ஆண்மகனால்/மனிதனால் அப்படி செய்தல் இயலாது. உங்கள் கணவன் ஒரு உண்மையான ஆண்-மகனாய் இருத்தல் பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்லவா???
  • கணவன்-மட்டுமே வேண்டும் என்றால்; "உறவுகள் ஏதுமற்ற" ஒரு அனாதையையோ; அல்லது தன் தந்தை-வழி சொத்தில்/சுகத்தில் சுயமற்று-இருக்கும் ஒரு ஆணையோ; அல்லது எப்படியும் வாழலாம் என்றெண்ணி "ஊரை அடித்து உலையில் போடும்" ஒருவனையோ தேடிக்கண்டு பிடித்து கணவனாய் அடையலாமே?
  • "வீட்டோடு மாப்பிள்ளையாய்" இருக்க சம்மதிக்கும் ஒரு ஆணை தேடிக்கண்டுபிடித்து கணவனாய் மனமுடிக்கலாமே?! பிறகேன் "படித்த/பண்புள்ள" மாப்பிள்ளை வேண்டும் என்று தேடுகிறீர்கள்? தன் குடும்பம் மொத்தத்தையும் உதறிவிட்டு வருவதா பண்பு??

பொதுக்குறிப்பு: இப்படிப்பட்ட காரணிகளால் வளர்ந்ததுதான் "ஆணாதிக்கம்" என்பதை நினைவில் கொள்க! ஆனால், ஆணாதிக்கம் இன்று பெரும்பான்மையில் குறைந்து/அழிந்து "சமத்துவம்" நோக்கி பயணிக்கும் வேளையில் "பெண்ணாதிக்கம்" என்ற ஒன்று தலைதூக்க ஆரம்பித்து இருப்பதை என் பதிவுகளில் அவ்வப்போது எழுதி வருகிறேன். வள்ளுவனின் "இளைதாக முள்மரம் கொல்க!..." என்ற கூற்றுப்படி, இதை இப்போதே கொல்தல் மிக முக்கியம்!!!