வியாழன், செப்டம்பர் 05, 2024

ஆசிரியர் தின வணக்கம் (2024)


கற்பவை யாவும் கல்வியே!

கற்பிப்போர் யாவரும் ஆசிரியரே!

செப்டம்பர் ஐந்தின்று,

ஆசிரியர் தினத்தன்று;

கற்பித்தோரை வணங்குதல் முறையே!


சைகை மொழியில் துவங்கி,

மழலை மொழியில் தொடர்ந்து,

கருணை மொழியால் அனுதினமும்;

தந்தை இலக்கணம் கற்பிக்கும்

எம்மகளுக்கு அன்பு வணக்கம்!


கருவறையில் சுவாசம் துவங்கி,

கைமடியில் தாய்ப்பால் தொடர்ந்து,

ஈன்றபொழுது போலவே இக்கணமும்;

உயிரூட்டி வாழ்வியல் கற்பிக்கும்

என்னம்மைக்கு உயிர் வணக்கம்!


உயிரணு தந்து உயிர்ப்பித்து,

தமிழறிவு புகுத்தி புதுப்பித்து,

அவையத்துள் முந்தி இருந்திடவே;

மனதுலகில் இருந்தும் வழிநடத்தும்

என்னப்பனுக்கு தமிழ் வணக்கம்!


பார்த்திட்ட நாள் துவங்கி,

பழகிட்ட நாள் தொடர்ந்து,

உரமிட்டு எனை திடமூட்டும்;

எண்ணிலா உறவுக்கும் நட்புக்கும்

எல்லையிலா நன்றி வணக்கம்!


அகரம் எழுதுவதில் துவங்கி,

ஆயிரம் பயிற்சிகள் அளித்து,

சிகரம் அடையும் வித்தையை;

பயிற்றுவித்த ஆசிரியர் யாவருக்கும்

சிரம்தாழ்ந்த குரு வணக்கம்!