திங்கள், ஏப்ரல் 20, 2026

யாரு குத்தம்?


(ஒரு திரைப்படத்திற்காக எழுதிய பாடல்; படமாக்கல் தாமதம் ஆவதால்... 
இன்றைய தேவை கருதி, வலைப்பதிவில் பதிவிடுகிறேன்!
"ஒரு ஓட்டு, ஒரேயொரு ஓட்டு" விற்பனை தடுக்கப்பட்டால் - அதுவே, இப்பாடலின் வெற்றி!!)

*****

குவாட்டர் கூட பிரியாணிய

கேக்கறது யாரு குத்தம்?

தேர்தலிலே ஓட்ட வித்து

தோக்கறதும் யாரு குத்தம்? (பல்லவி)

                                                  

ஓட்டவித்து வாழ்க்கை ஓடத்த

        ஒடைச்சுப் போட்டுட்ட!

நெலத்தவித்த வெவசாயி போல

நொடிஞ்சுப் போயிட்ட!

கேட்டா… வாழ்வே போராட்டம்ங்கற!


கிராமசபைல ஊர்த் தலைவர

ஏலத்துல விட்டுட்ட!

  ஒன்னை நீயும் அடிச்சுதானே

ஒலையிலப் போட்டுட்ட!

கேட்டா… சிஸ்ட்டம் சரியில்லைங்கற!


கடிவாளம் போட்டு, ரெண்டே

கட்சியப் பாத்து பழகிட்ட!

சைடுல இருக்கற நல்ல

கட்சியப் பாக்க மறந்துட்ட!

கேட்டா… தெரிஞ்ச பிசாசுங்கற! 


ஒருநாள் கூத்துக்கு அஞ்சுவருஷத்த

அடமானம் வைக்கற!

பொன்முட்ட இடும் வாத்தநீயும்

பேராசைக்கு விக்கற!

கேட்டா… சமுதாயம் கெட்டதுங்கற! (சரணம் 1)


குவாட்டர் கூட பிரியாணிய

கேக்கறது யாரு குத்தம்?

தேர்தலிலே ஓட்ட வித்து

தோக்கறதும் யாரு குத்தம்?                             (பல்லவி)


ஓட்டுப்பேப்பர பணப் பேப்பரால

வாங்கிப் பழகிட்டான்!

காப்பருக்கு வித்து, காவலவச்சு

தோட்டாவப் பாய்ச்சிட்டான்!

கேட்டா… வியாபாரத் தந்திரம்ங்கறான்!


சாதிஒழிக்க கட்சி தொடங்கி

சாதிவெதய தூவிட்டான்!

சாதிச் சண்டையத் தூண்டிவிட்டு 

சாதிவெறிய வளத்துட்டான்!

கேட்டா… அரசியல்ல சகஜம்ங்கறான்!


லாக்டவுனுல பெட்ரோல் வெலய

ஏத்தி உட்டுட்டான்!

கொரானோ காலத்துல டாஸ்மாக்குல

கூட்டத்த கூட்டிட்டான்!

கேட்டா… வருவாய் முக்கியம்ங்கறான்!                                                      


ஆளாளுக்கு ஓசிப் பணத்த

கூட்டி கூவுறான்!

வரி கட்டறவன் வயித்துலதான்

ஏறி மிதிக்கிறான்!

கேட்டா… அரசியல் சாணக்கியன்ங்கறான்!                     (சரணம் 2)


குவாட்டர் கூட பிரியாணிய

கேக்கறது யாரு குத்தம்?

தேர்தலிலே ஓட்ட வித்து

தோக்கறதும் யாரு குத்தம்?                                     (பல்லவி)


                    

                                                            - விழியப்பன் (Vizhiyappan)

வியாழன், செப்டம்பர் 05, 2024

ஆசிரியர் தின வணக்கம் (2024)


கற்பவை யாவும் கல்வியே!

கற்பிப்போர் யாவரும் ஆசிரியரே!

செப்டம்பர் ஐந்தின்று,

ஆசிரியர் தினத்தன்று;

கற்பித்தோரை வணங்குதல் முறையே!


சைகை மொழியில் துவங்கி,

மழலை மொழியில் தொடர்ந்து,

கருணை மொழியால் அனுதினமும்;

தந்தை இலக்கணம் கற்பிக்கும்

எம்மகளுக்கு அன்பு வணக்கம்!


கருவறையில் சுவாசம் துவங்கி,

கைமடியில் தாய்ப்பால் தொடர்ந்து,

ஈன்றபொழுது போலவே இக்கணமும்;

உயிரூட்டி வாழ்வியல் கற்பிக்கும்

என்னம்மைக்கு உயிர் வணக்கம்!


உயிரணு தந்து உயிர்ப்பித்து,

தமிழறிவு புகுத்தி புதுப்பித்து,

அவையத்துள் முந்தி இருந்திடவே;

மனதுலகில் இருந்தும் வழிநடத்தும்

என்னப்பனுக்கு தமிழ் வணக்கம்!


பார்த்திட்ட நாள் துவங்கி,

பழகிட்ட நாள் தொடர்ந்து,

உரமிட்டு எனை திடமூட்டும்;

எண்ணிலா உறவுக்கும் நட்புக்கும்

எல்லையிலா நன்றி வணக்கம்!


அகரம் எழுதுவதில் துவங்கி,

ஆயிரம் பயிற்சிகள் அளித்து,

சிகரம் அடையும் வித்தையை;

பயிற்றுவித்த ஆசிரியர் யாவருக்கும்

சிரம்தாழ்ந்த குரு வணக்கம்!


ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2024

என் முதல் பிறந்த நாள்...


தந்தை இல்லாத 

முதல் பிறந்த நாள்

மந்தை சேராத

ஆடாய் எனையும்

உணர்ந்த நாள்!


தந்தைகள்

எதிர்பார்ப்பில்லா விந்தைகள்!

எதிர்பாராத ஒன்றையும் 

வரமளிக்க நம்வீட்டில் 

குடிகொண்ட தெய்வங்கள்!


தந்தை இல்லா வீடும் - நல்

சிந்தை இல்லா நாடும் - நம்

வாழ்நாள் சாபங்கள்!

எப்படித்தான் ஆறுமோ - என்

மனதை ஆட்கொண்ட காயங்கள்?


புத்திர சோகத்தை

போதித்த சுற்றங்கள்

பெத்தவர் சோகத்தை

போதிக்க மறந்ததும்

எவரின் குற்றமோ?


இனியொரு பிறவி வரலாம்

என்னரு தந்தையும் வரலாம்

இந்நினைவுகள் யாவும்

உருக்குலையாமல் வருமோ?

விட்டகுறை தொடருமோ?


என் உயிருக்கும்

என் தமிழுக்கும்

விதையிட்ட விந்தையே!

எங்கிருந்தாலும் எனை

வாழ்த்துவாய் தந்தையே!