வெள்ளி, டிசம்பர் 02, 2011

2010 ஆம் ஆண்டின் பிறந்த நாளுக்காய்...

2010

தேவாரப் பாட்டெனவே தமிழின் தாக்கம்
     தேரோடும் வீதியெலாம் ஒலிக்கச் செய்த
பாவேந்தர் குலத்துதித்த பாவாய்! உந்தன்
     பண்பாட்டால் உலகிலுள்ள தமிழர் எல்லாம்
நாவசைத்து புகழ்பெருமை பேச வேண்டும்!
     நானிலமும் மதிக்கின்ற புரட்சிப் பாடல்
மாவலிமை பெற்றிங்கே அனைவ ராலும்
     மதித்தொன்றாய் போற்றட்டும்! அமுதைக் காப்போம்!

காசேதான் கடவுள்எனும் கருத்து கொண்டோர்
     கலங்காமல் ஆட்சியினில் இருப்ப தால்தான்
ஈசலென ஊர்தோறும் பலவாய் "கான்வென்ட்"
     இயங்கிடுதே! தமிழுக்கு தடையே அன்றோ?
பேசுவது தமிழ்வாழ்க! புலவர் சொல்லே
     போயிங்கு வந்ததுபார்! "பி.லிட்" காணீர்!
வீசுபுகழ் கவிக்கோமான் இருந்தி ருந்தால்
     வெளிப்படையாய் கேட்டிருப்பார்! தமிழைக் காக்க!

புன்னகையின் பேரரசி! புதுமைப் பெண்ணே!
     புகழ்"குடும்ப விளக்கு"தந்த கவிஞர் தம்மின்
பொன்னகையே! புறப்பாட்டே! பொதுவாம் எண்ணம்:
     பூத்தவளே! சுறுசுறுப்பாய் மின்னும் கண்கள்
கொண்ட"விழி அமுதினி"யைத் தந்த பேரே!
     குலமகளே! கொள்கையினால் "இளங்கோ" உள்ளம்
மென்மையுடன் ஆட்சிசெய்யும் மலரே! உன்னை
     இதயத்தால் வாழ்த்துகிறோம்! வளர்க! வாழ்க!

                                                            {புலவர். இளமுருகு அண்ணாமலை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக