வியாழன், செப்டம்பர் 05, 2024

ஆசிரியர் தின வணக்கம் (2024)


கற்பவை யாவும் கல்வியே!

கற்பிப்போர் யாவரும் ஆசிரியரே!

செப்டம்பர் ஐந்தின்று,

ஆசிரியர் தினத்தன்று;

கற்பித்தோரை வணங்குதல் முறையே!


சைகை மொழியில் துவங்கி,

மழலை மொழியில் தொடர்ந்து,

கருணை மொழியால் அனுதினமும்;

தந்தை இலக்கணம் கற்பிக்கும்

எம்மகளுக்கு அன்பு வணக்கம்!


கருவறையில் சுவாசம் துவங்கி,

கைமடியில் தாய்ப்பால் தொடர்ந்து,

ஈன்றபொழுது போலவே இக்கணமும்;

உயிரூட்டி வாழ்வியல் கற்பிக்கும்

என்னம்மைக்கு உயிர் வணக்கம்!


உயிரணு தந்து உயிர்ப்பித்து,

தமிழறிவு புகுத்தி புதுப்பித்து,

அவையத்துள் முந்தி இருந்திடவே;

மனதுலகில் இருந்தும் வழிநடத்தும்

என்னப்பனுக்கு தமிழ் வணக்கம்!


பார்த்திட்ட நாள் துவங்கி,

பழகிட்ட நாள் தொடர்ந்து,

உரமிட்டு எனை திடமூட்டும்;

எண்ணிலா உறவுக்கும் நட்புக்கும்

எல்லையிலா நன்றி வணக்கம்!


அகரம் எழுதுவதில் துவங்கி,

ஆயிரம் பயிற்சிகள் அளித்து,

சிகரம் அடையும் வித்தையை;

பயிற்றுவித்த ஆசிரியர் யாவருக்கும்

சிரம்தாழ்ந்த குரு வணக்கம்!


ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2024

என் முதல் பிறந்த நாள்...


தந்தை இல்லாத 

முதல் பிறந்த நாள்

மந்தை சேராத

ஆடாய் எனையும்

உணர்ந்த நாள்!


தந்தைகள்

எதிர்பார்ப்பில்லா விந்தைகள்!

எதிர்பாராத ஒன்றையும் 

வரமளிக்க நம்வீட்டில் 

குடிகொண்ட தெய்வங்கள்!


தந்தை இல்லா வீடும் - நல்

சிந்தை இல்லா நாடும் - நம்

வாழ்நாள் சாபங்கள்!

எப்படித்தான் ஆறுமோ - என்

மனதை ஆட்கொண்ட காயங்கள்?


புத்திர சோகத்தை

போதித்த சுற்றங்கள்

பெத்தவர் சோகத்தை

போதிக்க மறந்ததும்

எவரின் குற்றமோ?


இனியொரு பிறவி வரலாம்

என்னரு தந்தையும் வரலாம்

இந்நினைவுகள் யாவும்

உருக்குலையாமல் வருமோ?

விட்டகுறை தொடருமோ?


என் உயிருக்கும்

என் தமிழுக்கும்

விதையிட்ட விந்தையே!

எங்கிருந்தாலும் எனை

வாழ்த்துவாய் தந்தையே!

செவ்வாய், ஜூலை 02, 2024

“விழி”யும் உலகும்


விழியதுவில் உலகம் தெரியுமே!

விழியதுவே உலகாய் மாறுமோ?

மாறித்தான் போனதே எனக்குமே;

என்மகள்விழியும் தானிங்குமே,

என்உலகாய் மாறிப் போனளே!


ஈரேழு உலகையும் மறைத்துமே;

என்மகளும் ஓர்உலகாய் தனித்தளே!

ஏழேழு ஜென்மமதை கடந்துமே,

எம்பந்தமும் உறுதியாய் தொடருமே!

என்உயிராய் என்றுமே தொடர்வளே!


என்உயிர் மகளுக்கு ஜூலை-இரண்டுமே;

இப்புவியில் புகுந்தநாள் ஆகுமே!

எப்படி சொல்லுவேன் வாழ்த்துமே?

சொல்லெலாம் செல்லாமல் போகுதே!

சொல்லெதும் தேவையோ வாழ்த்தவே?…


நானின்னும் உயிர்ப்புடன் இருப்பதே,

என்மகளை அனுதினமும் வாழ்த்தவே!

தனிவாழ்த்து எதற்கிங்கே இன்றுமே?

என்வாழ்வே அவளுக்கு வாழ்த்தாகுமே!

வாழ்வாங்கு வாழ்வாய் விழியமுதினியே!