வெள்ளி, டிசம்பர் 23, 2011

கலையை எப்படி வளர்ப்பது?

             

("இத்தலையங்கத்தையும்"  எழுத தூண்டிய என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்)

*******

          இத்தலையங்கத்தின் கரு கிடைத்ததும், முந்தைய தலையங்கமான "தமிழை யார் வளர்ப்பது?" -ன் கரு கிடைத்த அன்று தான். மேலும், அந்த விவாதம் நடக்கும் முன்னரே இந்த விவாதம் நடந்தது! ஆனால், இதைப் பற்றி மிகத் தெளிவாய் எழுதவேண்டும் என்பதால் தான், சற்று காலம் கடந்து எழுதுகிறேன். அன்று, பேச்சுக்கிடையில் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் மூலம் வெளியுலகிற்கு நன்கு அடையாளம் காட்டப்பட்ட "போதி தர்மர்" பற்றிய என் ஆதங்கத்தை கூறினேன். நான் கூறியது, நாம் இப்படிப்பட்ட ஒரு மாமனிதனை எப்படி தெரிந்து கொள்ள தவறினோம் என்ற அடிப்படையில் பேசினேன். அவரைப் பற்றியான முழு சரித்திரமும் தெரியவில்லை என்றாலும், ஒரு செய்தியாய் கூட தெரிந்து கொள்ளமுடியாமல் போனது எங்கனம்? என்ற அடிப்படையில் என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். நம்முடைய கலையை, நம் முன்னோர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டு இன்று வேறு ஒரு நாடு தன்னுடையதாய் பறைசாற்றும் "அவல நிலை" எவ்வாறு உருவானது? அந்த கலையை ஏன் நம்மால் தொடர்ந்து பயிற்றுவிக்க முடியவில்லை??  என்ற கேள்விகளை எழுப்பினேன். அந்த கலை ஏன் நம் நாட்டில் பரவலாய் பரவவில்லை என்றும் கேள்வியை எழுப்பினேன். உடனே என் நட்பு வட்டாரங்கள், அதற்கு அளித்த விளக்கம் என்னை திடுக்கிட வைத்தது; நாம் ஏன் நம்மை நாமே தாழ்த்திக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணத் தோன்றியது! அதை, ஒரு சமுதாயப் பார்வையுடன் என் கோபமும் கலந்து இங்கே விளக்கி இருக்கிறேன். 

     என் நண்பர்கள் ஒரு சேர, அந்தக் கலையை வளர்த்தவர்கள் அதை சரியாய் மற்றவருக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்றனர்; ஒப்புக் கொள்ளக் கூடிய காரணம் தான். நான், அவர்களுக்கு வேண்டுமான சன்மானம் கிடைத்திருக்காது; அதனால், அவர்கள் சரிவர சொல்லிக் கொடுக்க முடியாமல் போய் இருக்கலாம் என்றேன். மேலும், அதை ஆர்வமுடன் கற்க ஆட்கள் இல்லாத  காரணத்தால் கூட இருக்கலாம் என்றேன். என்னுடைய சிறுவயதில், எங்கள் கிராமத்தில் பார்த்த "தெருக்கூத்து" கலை இன்னும் என் மனக்கண்ணில் தோன்றுகிறது. அந்த கலை செய்தவர்களின் அடுத்த தலைமுறை இன்னும் கூட எங்கள் கிராமத்தில் இருக்கிறார்கள். நான், இதனை எல்லாம் நினைவு கூர்ந்து, தெருக்கூத்து எனும் கலை "தொலைகாட்சி" பெட்டியில் திரைப்படம் காண்பிக்க ஆரம்பித்ததால் நலிங்க ஆரம்பித்தது என்றேன். எனக்கு, நன்றாய் நினைவிருக்கிறது! இந்த "தொலைகாட்சி" பெட்டி ஆரபமானதும் தான் "தெருக்கூத்து" குறையத் துவங்கியது. இதன் காரணமாய், அவர்களை "அடிமாட்டு" விலைக்கு கூத்து செய்ய அழைத்தார்கள்; இதன் காரணமாய், முதலில் கூத்து குறையத் தொடங்கியது. பின், அவர்களால் குறைந்த வருமானத்தில் பிழைக்க வழியில்லாததால், வேறு வேலை செய்ய சென்னை போன்ற பெருநகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். நான், என் கண் முன்னாள் நிகழ்ந்த இந்த அழிவை மனதில் கொண்டு, "வர்மக்கலை" போன்றதை சொல்லிக்கொடுத்தவர்களுக்கு கூட, இம்மாதிரி பொருளாதாரப் பிரச்சனை வந்திருக்க வாய்ப்புண்டு என்றேன்.

        இங்கே தான் என் மனதை பாதிக்கும் அந்த கருத்து ஒரு சேர வந்த சேர்ந்தது. அது, கலையை வளர்ப்பவர்கள் இலவசமாக சொல்லிக் கொடுக்க வேண்டும்; அப்போது தான், அது வளரும் என்று கூறினர்; அது தான் "போதி தர்மரை" தெரிந்து கொள்ளாததற்கும் காரணம் என்றனர். எனக்கு, கடுங்கோபம் வந்தது; அது எப்படி இலவசமாக ஒருவரால் கலையை கற்றுக் கொடுக்க முடியும்? அது அவர்கள் தொழில் சார்ந்தல்லவா இருக்கிறது?? வாதத்திற்காகவே கூறப்பட்டதாய் இருப்பினும் இது மிகத் தவறான ஒரு பார்வை. ஏனெனில், நான் உட்பட அனைவரும் கடல் கடந்து வந்தவர்கள் தான்; இங்கு வந்ததற்கு பல காரணங்கள் சொல்லிக்கொண்டாலும், முதன்மையான காரணம் "அதிக வருவாய்" வேண்டுமென்று தான். நம்முடைய அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அறிவை/ திறமையை இவ்வுலகிற்கு கொண்டு சேர்க்க, இந்தியாவில் நல்ல வருவாய் இருப்பினும், அதிக வருவாய் வேண்டும் என்பதற்காய் கடல் தாண்டி வந்திருக்கிறோம். நம்மில் எத்தனை பேர், நமக்கு தெரிந்த கணினி-அறிவை இந்தியாவில் உள்ள ஏழை குழைந்தைகளுக்கு இலவசமாய் எடுத்து செல்ல முயன்று இருக்கிறோம் அல்லது அது பற்றி நினைத்து இருக்கிறோம்? மிகப் பெரும்பான்மையோனோர் அதை ஒரு முதலீடாகக் கொண்டு பொருளீட்டவே விரும்புகிறோம். இதே நிலைப்பாடு தானே அவர்களுக்கும் பொருந்தும்; ஒரு வேலை, நாம் ஒரு மாமனிதனைப் பற்றி தெரிந்து கொள்ளாதது தவறு என்று உணர மறுக்கிறோமா? இதற்கு ஏன் சற்றும் நியாயமில்லாத ஒரு வாதம் செய்ய வேண்டும்?

         இதை விட மிக அதிர்ச்சியான இன்னுமொரு விளக்கம் வந்து சேர்ந்தது! அது மேற்கூறியதினும் அபத்தமாய் பட்டது. அது, "போதி தர்மர்" ஒரு குறிப்பிட்ட மதத்தை பரப்புவதற்காய் சென்றவர்!! அதனால் தான், அவரை எவருக்கும் தெரியாமல் போனது என்றனர். எனக்கு செய்வதரியாத கோபம் வந்தது; உடனே, சில நண்பர்கள் எதற்கு இந்த கோபம், இது விளையாட்டான விவாதம் தானே என்றனர். என்னால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. சராசரி, ஆயுளில் பாதியை கடந்துவிட்டேன் - இதே போல் விளையாட்டாய்! இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காய் தான் இந்த வலைப்பதிவை துவக்கியுள்ளேன். நம்முடைய வாதம் தார்மீகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்; நாமும், நம் சக இந்தியர்களும்  இந்தியாவில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அதை வேறு நாடுகளில் பரப்பத்தான் கடல் கடந்து வந்தோம் என்றால், நாம் ஒப்புக் கொள்வோமா? அதனால் நம்மை நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது (இந்தியாவில் வசிக்கும்) இந்தியர்கள் கூறினால் அதை எவ்வாறு எடுத்துக்கொள்வோம்?? அதே தான், "போதி தர்மர்" அக்கலையை அல்லது ஒரு மதத்தை பரப்புவதற்காய் வேறு நாடு சென்றார் என்றால் அது அவருடைய கடமை. மேலும், என்னுடைய பார்வை அவர் கற்றிருந்த கலை மீது தான்; மதத்தை பற்றி கற்றறிந்த நாம் விமர்சிப்பது தவறு. என்னுடைய வாதத்தின் அடிப்படை, இந்த விசயம் தெரியாதது தவறு என்பதைக் குறிப்பிடவும் மற்றும் இப்போதாவது அதை வெளியுலகிற்கு கொண்டு சேர்த்த அந்த இயக்குநரை பாராட்டவும் தான்.

       நம்முடைய கலையை நாம் தொடர்ந்து கற்க/ கற்றுவிக்க தவறியதன் விளைவாய், நாம் அந்த கலையை இழந்தது மட்டுமல்ல அதை இன்னொரு நாடு தனதாய் கொண்டாடும் அவல நிலையும் எழுந்துள்ளது. விருட்சமாய் வேரூன்றி இருக்கவேண்டிய ஒரு கலையை, இப்போது விதையிட நாமே முயன்று கொண்டிருக்கிறோம். இதை மீண்டும் நிலைநாட்ட முயற்சிக்கும் ஒருவரை பற்றி இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். கோவையில் "Sri Ramakrishna Mission Vidyalaya College"-ஐ சார்ந்த தமிழ்ப்-பேராசிரியர் ஒருவர் பழைய தமிழ் வேதங்களை உதவியாய் கொண்டு "வர்மம் சார்ந்த சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். மேலும், அவர் தமிழ்நாடு மற்றும் "கேரளா" மாநிலங்களில் எஞ்சியிருக்கும் குருக்களின் மூலமும் வர்மம் சார்ந்த  தமிழில் மருத்துவத்தை கற்றிருக்கிறார். அவரின் இந்த மகத்தான சேவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விருப்பமெனின் இந்த இணைப்பை அழுத்துவதன் மூலம் அறியலாம். இந்த மாதிரி ஒரு மகத்தான முயற்சி செய்பவரையும், அவர் பணம் வாங்கிக்கொண்டுதான் கற்றுக்கொடுக்கிறார் என்று உதாசீனப்படுத்தாமல் அவரின் உன்னதமான நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவரையும் அவரைப் போன்றவர்களையும் பாராட்ட கற்றுக்கொள்வோம். மேலும், அம்மாதிரி செய்பவர்களைப் பற்றி நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவருக்கு தெரியப்படுத்த முயற்சி செய்வோம். கலையை வளர்ப்பவரை…

பாராட்டி ஊக்குவிக்க கற்றுக்கொள்வோம்! 

பின்குறிப்பு: இலவசம்  கொடுக்கும் அரசாங்கத்தை குறை கூறும் நாமே இன்னொரு புறம் ஒரு கலையை இலவசமாய் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தவறான விமர்சனத்தையும் செய்யாதிருப்போம். இலவசமாய் கொடுக்கப்படும் "உயிரில்லாத" ஒரு பொருளே ஒருவரை சோம்பலாய் ஆக்கும், அதன் மதிப்பு இலவசமாய் பெறுபவருக்கு தெரியாது போய்விடும் எனும் நாமே "உயிரோட்டமுள்ள" ஒரு கலையை இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று எப்படி கூறமுடியும்? கலையின் மதிப்பும் தெரியாது போய் விடாதா??

ஏனிந்த வாழ்க்கை?...


*******

மனிதா! பணமே
முதன்மையாய் எண்ணி
முடிந்தது அத்துனையும்
முயன்று - எண்ணிலடங்கா
சொத்து குவித்து
சொந்தபந்தம் தவிர்த்து

சேர்த்தது போதாதென்று
சேர்த்ததை (கரை)சேர்க்க
போராடி (நடை)தள்ளாடி
போகும்போது ஏதும்
பற்றிசெல்ல லாகாதென்ற
பொருள் புரியாது

வாழவே மறந்து
வாழ்க்கை தொலைத்து
எதற்கும் பயனற்று
என்ன வாழ்க்கையிது?
எவர்க்காய் வாழ்கிறாய்??
எதற்கு(தான்) வாழ்கிறாய்???

குழந்தை வளர்க்க...


*******

முள்ளை முள்ளால்
முறித்தெடுப்பது போல்
குழந்தையாய் மாறி
குழந்தை வளர்ப்பில்
விவேகம் காண்பின்
வெற்றி நிச்சயம்!!!

குழந்தையும் தெய்வமும்


*******

குழந்தையும் தெய்வமும்
ஒன்று! சரி
குழந்தை தெய்மாவதை
கண்டிருக்கிறோம்!! ஆனால்
தெய்வம் குழந்தையாவதை?
ஏனில்லை?? அதனாலேதான்
பலவழிகளில் மனித
உயிர்களுடன் விளையாடுகிறது!!!

வெள்ளி, டிசம்பர் 16, 2011

சாலை (வீ/வி)திகள்...



*******

   நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று,  சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது! இதைக் காணும்போது, எனக்கு கடுங்கோபம் வரும். என்ன இது! என்னவோ அவர்கள் வீடுகள் இருக்கும் "வீதியில்" நடப்பது போன்று எவர் பற்றியும் அக்கறையும்  இல்லாமல் நடக்கிறார்களே என்று தோன்றும்; அதனால் தான் இந்த தலைப்பு. மேற்கத்திய நாட்டில் இருப்பது போல், நம் நாட்டிலும் அனைத்து "சாலை விதிகளும்" உள்ளன. அப்படி இருக்கையில், சாலை விதிகளை மதிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏன் மிகக் குறைந்த அளவில் உள்ளது? ஆரம்ப காலத்தில் நம் நாட்டில் மிக, மிக குறைந்த அளவில் வாகனங்கள் இருந்தது ஒரு காரணமாய் இருக்கலாம்; சாலையில், வாகனங்களே குறைவு எனும்போது அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நிலமை வேறு; மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வாகனங்கள் பெருகி விட்டன. ஆனால், சாலை விதி பற்றிய ஞானம் மட்டும் அப்படியே உள்ளது. இதுமாதிரியான ஒழுக்கக்கேடுகள் பல்வேறு விசயத்தில் இருப்பினும், இந்த சாலை விதிகளை மீறுவது சார்ந்த ஒழுங்கீனம் என்னை மிகவும் பாதிக்கக்கூடியவைகளில் ஒன்று. எதெதெற்கோ (நமக்கு சற்றும் ஒவ்வாத - உணவு, உடை போன்ற தட்பவெப்பநிலை சார்ந்த விசயத்தில் கூட) மேலை நாட்டு மோகம் கொண்டு செயல்படும் நாம் இது போன்ற ஆக்கபூர்வமான செயல்களிலும் அவர்களைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கமுடியும்?

     நம் நாட்டில் சர்வசாதாரணமாய், வாகனம் ஓட்டும் "உரிமம்" எந்தவித கடின சோதனையும் இல்லாமல் கிடைத்து விடுகிறது. இதில் வேதனையான விசயம் "பணம்" கொடுத்தால் எதுவும் செய்யாமலே கூட உரிமம் கிடைக்கக் கூடிய வழிமுறைகள் உள்ளது தான். மேலை நாட்டில் இருப்பது போல் நம் நாட்டிலும் "எழுத்துமுறை" மற்றும் "செய்முறை" தேர்வுகள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலும், அவை ஒரு கண்துடைப்பு போலவே உள்ளன; இதில் அந்த துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பலரின் பங்கு உள்ளது. அப்படி இருக்கையில், அந்த மாதிரி உரிமம் பெற்றவருக்கு எப்படி சாலை விதிகள் பற்றிய அக்கறை/ ஞானம் இருக்கும்? மேலும், சாலை விதி மீறியதற்காய் உண்டான தண்டனையை அனுபவிக்க (அ) அபராதம் செலுத்த நாம் தயாராக இல்லை. மேலை நாடுகளில் முறையான  தேர்வுகள் செய்து பயிற்சி பெறாத வரை, ஓட்டுனர் உரிமம் பெறுவது சாத்தியமே இல்லை; அதுவும், என் போல் ஆங்கிலம் நடைமுறையில் இல்லாத நாட்டில் வாங்குவது கிட்டத்திட்ட சாத்தியமே இல்லை. நான், என்னுடைய இந்திய ஓட்டுனர் உரிமையை இங்கே முறையான விதிப்படி "மாற்றம்" செய்து என் உரிமத்தை பெற்றேன். உரிமம் பெரும் முன் என் விருப்பத்தின் பால் "ஓட்டுனர் பயிற்சி பள்ளியில்" சில நாட்கள் பழகிக்கொண்டேன்.  எனினும், இப்போது தான் ஓரளவு எளிதாய் ஓட்ட பழகி இருக்கிறேன். இங்கே, சாலை விதிகள் மீறப்பட்டால் தண்டனை மிகக் கடினமாய் இருக்கும்; அதனால் தான் இங்கே சாலை விதிகள் கடைபிடிப்பது ஓர் ஒழுக்கமாய் செய்யப்படுகிறது.

       என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாத விதி மீறல், விவசாயிகள் சாலையில் "களப்"பணிகள் செய்வது; நெற்பயிர் போன்றவற்றை சாலையில் போட்டு தங்கள் பனி மேற்கொள்வது. சரியாக ஓட்டத் தெரியாத ஒருவர் "இரு சக்கர" வாகனத்தில் செல்வது மிகக்கடினம் - வாகனம் சறுக்கிக்கொண்டு செல்லும்; சாலையை விட்டு கீழே இறங்கினால் எங்கு பள்ளம் இருக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பிறகு, எப்படி வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்வர்? சமீபத்தில், மிகப் பிரபலமான தொலைகாட்சி தொடர் ஒன்றின் "நடுவராய்" இருப்பவர் இதை நியாயப்படுத்தி (சற்று கோபமாயும்) பேசியதை கண்டு எனக்கு பெரும் அதிர்ச்சி! "களம் இல்லையென்றால்" விவசாயி எங்கே செல்வான்? என்பது தான் அவர் கேள்வி. நான், விவசாயிக்கு எதிராய் பேசவில்லை; "களம்" இல்லையென்றால் அதற்காய் போராடவேண்டிய "தளம்" வேறு. பின் எதற்கு, வாகன ஓட்டிகள் "சாலை வரி" கட்டவேண்டும்? சமீபத்தில் "தேசிய நெடுஞ்சாலையில்" இங்கே உள்ளது போல், வாகனம் பழுதுபார்ப்பதற்காய் "சேவை சாலை" அமைக்கப்பட்டுள்ளது கண்டு பேரானந்தம் அடைந்தேன். ஆனால், அதில் பெரும்பானவை "களப்பணி" செய்யவும், அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர் "வீட்டு விலங்கினங்களை" அங்கே கட்டவும் மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்துவதை கண்டு ஆராத்துயர் அடைந்தேன். இவர்களை யார், எப்படி திருத்துவது? மேலும், என் போன்றவர்கள், இந்த மாதிரி செயல்களைக் கண்டு அடையும், "கோபத்தை" குறைக்கவேண்டும் என்பதும் தெளிவாய் தெரிகிறது.

            இரண்டாவதாய், என்னை மிகவும் சங்கடப்படுத்துவது, எந்த ஒரு "சமிக்ஞை"யும் இல்லாமல், நம் முன்னே செல்பவரும், பின்னால் வருபவரும் சாலையை கடப்பது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் உண்டு; நான் திருமணத்திற்கு பின் தான் முறையாய் "நான்கு சக்கர வாகனம்" ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டுனர் உரிமம் பெற்றேன். உரிமம் பெற்ற புதிதில், நான் என்னுடைய மனைவியுடன் வாகனம் ஓட்டி சென்று கொண்டிருந்தேன்; அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென என்னைத் தாண்டி குறுக்கே வந்துவிட்டார். எனக்கே அதிக பயிற்சி இல்லாத பயத்தில், அருகில் புது-மனைவி உட்கார்ந்திருக்கும் ஒரு வறட்டு-கௌரவத்தில் உரக்க "ஏய்" என்று கத்திவிட்டேன். அவருக்கு, ஐம்பது வயதிருக்கும்; அவர் உடனே, நிறுத்திவிட்டு கோபமாய் என்னவென்று கேட்டார்; நானும், ஒருமையில் "எதற்கு எந்த சமிக்ஞையும் இல்லாமல்" குறுக்கே வந்தாய்? என்றேன்; அவர் நிதானமாய், என் மனைவியை பார்த்துவிட்டு அதற்கு என்ன? தவறுதான், அதற்காய் "ஏய்" என்பாயா! என்றார். என் தவறு உணர்ந்து வெட்கப்பட்டாலும், சரியாக மன்னிப்பு கூட கோராமல், அந்த சூழ்நிலையை சமாளித்து கடந்துவிட்டேன். நான், கோபப்பட்டது  தவறு என்று தீர்க்கமாய் உணர்ந்தேன்; நானும், நிதானமாய் வண்டியின் வேகத்தை குறைத்து "பார்த்து போகக் கூடாதா? ஐயா!" என்று வினவியிருந்தால், அவர் தவறு உணர்ந்து வேறு விதமாய் பேசி இருப்பார்; என் குற்ற உணர்வு அவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

            இது போல் நிறைய தவறுகள் சாலை விதிகளை மீறுவதால் உண்டு எனினும், இறுதியாய் ஒன்று மட்டும் சொல்லி முடிக்க எண்ணுகிறேன். அது, வாகனங்களில் செல்பவர்களில் பெரும்பாலோனோருக்கு  நடந்து செல்பவர்களுக்கு என சந்திப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடு பற்றி தெரியாதது; அது வரி-வரியாய் பட்டையாய் "வெள்ளை" வர்ணம் தீட்டப்பட்டிருக்கும் (அதன் தமிழாக்கம் சரியாய் தெரியவில்லை); நான் இப்போது கூர்ந்து கவனிக்கும் போது சிறிய நகரங்களில் கூட அந்த "சமிக்ஞை" இருப்பது தெரிகிறது. அவ்வாறு இருப்பின், அங்கு சாலையை கடக்க எவராயினும் நின்றிருப்பின் கண்டிப்பாய் வாகன ஓட்டிகள், வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு வழி விடவேண்டும் என்பது பொருள். ஒருமுறை, நான் புதுச்சேரியில் வாகனம் ஓட்டும்போது, ஒரு முக்கிய சாலையில் வாகனத்தை நிறுத்தி "ஒரு தாய் மற்றும் சேய்க்கு" வழி கொடுத்து காத்திருந்தேன். பின்னால் வந்த ஒரு "இரு சக்கர" ஓட்டுனர் என்னை அசிங்கமாய் பார்த்தது மட்டும் அல்லாமல், என்னை ஏதோ திட்டிக்கொண்டே சென்றார்; நான் தொடர்ந்து அது போன்று செய்து கொண்டு தானிருக்கிறேன்; இங்கு ஓட்டும்போது கடைபிடிக்கும் அத்துனை விதிகளையும் கடைப்பிடித்து தான் ஓட்டுகிறேன். இதில் எனக்கு, எந்த சிரமும் இல்லை! ஆனால், நம் நாட்டில் வாகனங்கள் ஓட்டுபவர்களை எப்படி திருத்துவது என்ற என் கவலை மட்டும் குறையவே இல்லை. எப்போது குறையும் என்றும் தெரியவில்லை. இத்தலையங்கம் ஒரு சிலரையாவது பண்படுத்தி ஒரு சில விதிமீறல்களையாவது திருத்திக்கொண்டால் அதுவே இந்த முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாய்க் கருதுவேன்.

சாலை விதிகளை மதிப்போம்! போக்குவரத்து நெரிசலை குறைப்போம்!!            

ஏன் பின்னோக்கிய பயணம்?


அகந்தையால் - (பேர்)அழகால்
ஆணவத்தால் - (அரசு)ஆட்சியால்
இனத்தால் - (சாதி)சனத்தால்
உறவால் - (உள்)உணர்வால்
எழிலால் - (பல)எல்லையால்
நிலத்தால் - (மெய்)நிறத்தால்
பணத்தால் - (படை)பலத்தால்
பெண்ணால் - (பசும்)பொன்னால்
மதத்தால் - (மமதை)மனிதனால்
மொழியால் - (பெரும்)மடமையால்
நடந்தது கடந்து
உப்பாகப் போகும்
"தண்ணீரை"ப் பகிர்வதில்
இன்றைய அரசியல்!


இதுதானா வேற்றுமையில்
இந்தியா கண்டிட்ட
பொதுமை? பயணிப்பது
பின்னோக்கிய பாதையிலோ?

உணர்வு(ம்) பந்து(ம்)...



*******

"பந்து" போன்றதே
மனித "உணர்வுகள்"!
வெளிப்படும் விதத்திற்கும்
அதன் தன்மைக்கும்
எதிர்கொள்வதன் திறனுக்குமேற்ப
திரும்ப தாக்கும்!!

சமாதானம்...


எங்கெங்கோ எவரெவரிடமோ
எத்தயக்கமும் இன்றிசெய்யும்
"சமாதான"த்தை நம்மை
சார்ந்த சுற்றத்திடமும்
உறவுகளிடமும் செய்வதற்கேன்
உறுதியாய் மறுக்கிறோம்???

"உயிர்-பொய்" உயிரனம்...


பொய்யே மெய்யாய்
பொதுவாய் தன்னியல்பாய்
மாற்றிவிட்ட மானிடரின்
"மெய்"யதுவும்  பொய்தானோ?
பொய்யர்அவரில் உலவிடும்
"உயிர்"கூட பொய்யோ?அவர்
"உயிர்-பொய்" உயிரினமோ?

விடுகதை...


"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை"
உணர்வோமா நாமும்;
உண்மையில் இரண்டுமின்று
விடையறிய முடியா
"விடுகதை" ஆனதை?

"வள்ளுவன்-வாசுகி" போல்...


தமிழ்த் திருமணம்
தன்மரியாதைத் திருமணம் -
இவற்றில்நான் கேட்டவகையில்;
இதுவரைப்பல ரும்வாழ்த்தியது
"வள்ளுவன்-வாசுகி" போல்
வாழவேண்டும் என்பதே!
வாழ்த்துவோரையும் சேர்த்து;
வேறெவரும் அவர்போல்
வாழவில்லையா? ஏனப்படி??