ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

வீடு மாற்றுதல்...



          வீடு-மாற்றுதலில் உள்ள சிக்கல்களை/ சிரமங்களை - அதை மாற்றியோருக்கு தெரிந்திருக்கும்! நம் ஊரில், மாற்றுவதே பெருஞ்சிரமம்!! அதிலும், அபு-தாபி போன்ற நாடுகளில் மாற்றுவது என்பது?! அதிலும், நான் தன்னந்தனியாய் மாற்றுவது என்பது??!!... அப்பப்பப்பா! கடந்த 10 நாட்களுக்கும் மேலாய் நான் பட்ட சிரமம்... இன்னுமும், புதிய வீட்டில் முழுதுமாய் "செட்டில்" ஆகவில்லை! எனினும், ஒருவழியாய் வீட்டை மாற்றிவிட்டேன். இந்த பதிவை வெளியிட்ட சில மணி-நேரங்களில் சென்னையை நோக்கிய என் விமானப்பயணம் துவங்கும். ஆம்! 3-மாதங்கள்; 3-நாட்கள் கழித்து என்மகளை பார்க்கப்போகிறேன். அந்த ஒரு-உந்துதலால் தான், கடந்த 10 நாட்கள் எப்படியோ கடந்துவிட்டேன்! இல்லையெனில், நான் மனதளவில் மேலும் பெரும்-உளைச்சலுக்கு ஆளாகி இருப்பேன். நான் பட்ட சிரமங்களை; நான் உணர்ந்த விசயங்களை - என்னுடைய பார்வையில் இப்படியொரு தலையங்கமாய் எழுதவேண்டும் என்று தோன்றியது.

            இந்த காரணத்தினால் தான் சென்ற-வாரம் பதிவுகள் ஏதும் வெளியிடமுடியவில்லை! இன்றாவது,    வெளியிட வேண்டும் என்று தோன்றியது; ஏனெனில், அடுத்து 2 வாராங்களும் என்மகளுடன் இருக்கப்போவதால் ஏதும் வெளியிடமுடியாது! என்னுடைய பழைய வீட்டின் "ஒப்பந்தம்" ஏப்ரல்-20 வரை இருந்தது! அதனால், புதிய வீடு தேடுவதை கொஞ்சம் ஒத்திவைத்து; "அதிகம் மெனக்கெடாது" தேடிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏப்ரல்-1 அன்று மாலை, என்னவள் அலைபேசியில் "ஏப்ரல்-15" அன்று என்மகளுக்கு ஆரம்பப்பள்ளி "சேர்க்கை" இருக்கிறது என்றாள்; 2-பெற்றோரும் இருக்கவேண்டும் என்பது அப்பள்ளியின் விதி! அதற்காய், நான் செல்லவேண்டும் என்று தெரிந்திருப்பினும், சரியான-தேதி தெரியாததால் கொஞ்சம் மெத்தனமாய் இருந்துவிட்டேன். சரியென்று, அன்றிரவு முடிவு செய்து; அடுத்தநாளே; ஏப்ரல்-13(இன்று) -க்கான விமானப்பயணச் சீட்டு வாங்கிவிட்டேன். சரியாய், 11 நாட்கள் இருந்தன!

        நான் புதிதாய், வீடு பார்த்து - பழைய வீட்டை காலி செய்து; பழைய-வீட்டில் அனைத்தையும் "செட்டில்" செய்து, புதிய வீட்டில் எல்லாவற்றையும் கொண்டு சேர்த்து - இன்று(ஏப்ரல் 13) புறப்படவேண்டும். முதலில், வீடு எதுவும் சரியாய் கிடைக்கவில்லை! சரியென்று, பழைய வீட்டை காலி-செய்வதற்கான விதிமுறைகளை - கேட்டால் எனக்கு மயக்கமே வந்துவிட்டது! எனக்கு, இந்த நாடும் - இந்த விதிமுறைகளும் புதிது! நான், ஏதோ - பொருட்களை எடுத்துக்கொண்டு; அவர்கள் கொடுத்த படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு, சாவியை கொடுத்து விட்டு சென்றுவிடலாம் என்றிருந்தேன். ஆனால், பொருட்களை எடுப்பதற்கே முதலில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், அவர்கள் 2 நாட்கள் கழித்து அதை மேலதிகாரிகள் கையொப்பமுடன் கொடுப்பார்களாம்! பின்னர் தான், நான் பொருட்களையே எடுக்கமுடியுமாம்! சரி, அதை 2-நாள் தானே என்றிருந்தால்; பொருட்களை எடுத்த பின், அவர்கள் ஆய்வுக்கு வருவார்களாம்!

         அதற்கு 1-வாரம் கூட ஆகுமாம்; அதன் பின்னர், நான் அவர்கள் கொடுக்கும் "தடையில்லா சான்று"     வாங்கி, அதை "மின்சாரம்/தண்ணீர்"துறையில் சமர்ப்பித்து நான் காலி-செய்கிறேன் என்று கூறி என்னுடைய பெயரில் இருக்கும் பதிவை இரத்து-செய்யவேண்டுமாம் (அதற்கு 3 நாட்கள் ஆகுமாம்!). இதையெல்லாம் செய்தால் தான், நான் முறைப்படியாய் வீட்டை காலி செய்ததாய் அர்த்தமாம்! இல்லையெனில், நான் அது முடியும் நாள் வரை வாடகைக்கு இருப்பதாய் கணக்காகுமாம்! "இந்தியன் தாத்தா"மருத்துவ மனையில் அல்லாடும் நிலை-போல் உணர்ந்தேன். பின்னர், என்வீட்டை வாடகைக்கு விடும் அலுவலகத்தில் ஒருவரை அணுகி-என்னுடைய நிலையை சொன்னேன். அவர், முடிந்த அளவில் போராடி என்னுடைய வேலைகளை மிக துரிதமாய் செய்ய பெரிதும் உதவினார். எப்படியோ, ஒரு வீட்டை பார்த்து "ஒப்பந்தம்"செய்து ஏப்ரல்-7 ஆம் தேதி முதல் துவங்குவதாய் ஏற்பாடானது! ஒருவழியாய், அந்த வீட்டிற்கு பொருட்களை எல்லாம் கொண்டு சேர்த்தால்...

     அங்கே "சமையலறை"கூட தயாராகவில்லை! எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். மாலை வந்து பார்த்தால், தண்ணீர் வரவில்லை; குளிரூட்டும் சாதனம் வேலை செய்யவில்லை! ஒருவழியாய், அதை சரி செய்து கொடுத்தனர்!! பின்னர் தான், அந்த அரண்மனை போன்ற வளாகத்தில் நான் தான் முதல்-ஆளாய் நுழைந்திருந்த உண்மை (எனக்கு முன்பே தெரியும் எனினும்) நினைவில் வந்தது! மற்ற வீடுகள் எல்லாம் இன்னமும் தயாராகிக் கொண்டிருக்கின்றன! அன்று முதல் 4 நாட்கள் "தன்னந்தனியே"(இல்லையில்லை; என் "ஹோம்-தியேட்டர்"துணையுடன்...) இருந்தேன். நேற்றுதான் இன்னும் 2-தமிழ் பேசும் நபர்கள் அங்கே குடிபெயர்ந்தனர்! இன்று, நிம்மதியாய் பயணம் மேற்கொள்வேன்; என் பொருட்களுக்கு சிலர் பாதுகாப்புக்கு உள்ளனர் என்ற நம்பிக்கையுடன்! ஒரு-சாவியை "ஏஜென்டிடம்" கொடுத்து நான் வருவதற்குள் என்னென்ன செய்யவேண்டுமோ செய்துவிடப்பா என்று சொல்லி இருக்கிறேன்.

    இந்த 3-ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் - முதன்முதலாய், என்னவள் என்னுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது! அது மனதளவில் ஒரு பெரிய-வலிமையை கொடுத்திருக்கும். மேலும், அவளிருந்திருந்தால் - பல பொருட்களை அப்புறப்படுத்தி இருப்பாள். நானே, பல பொருட்களை அப்புறப்படுத்தினேன்; அப்படி எனின், அவளிருந்திருந்தால் - இன்னும் பல பொருட்கள் குறைந்திருக்கும். அடிக்கடி வீடு-மாற்றுவதில் இந்த நலன் இருப்பதாய் படுகிறது; வீடு-மாற்றுதல் என்பது சிரமமான காரியம் எனினும், கண்டிப்பாய் - நம் வீட்டில் உள்ள அனாவசியமான பொருட்கள் என்னவென்று தெரியவரும். அதற்காகவது, அடிக்கடி (வாடகைக்கு இருப்பின்) வீடு மாற்றுதல் நல்லது என்று படுகிறது. நான் இயல்பாகவே, அதிகம் பொருள் சேர்ப்பவன்; அதிலும், என்மகளுக்கு வேண்டுமென்று எதையெதை எல்லாமோ சேர்க்கும் வழக்கம் உண்டு. ஆனால், வீடு மாற்றுதல் என்பது அத்தனை சந்தோசமான விசயமாய் இருப்பதில்லை.

          நான் உணர்ந்த இன்னுமொன்று: வீடு மாற்றி "இணைய இணைப்பிற்கான"மாற்றுதலுக்கு எழுதிக் கொடுத்து இருக்கிறேன்; ஆனால், வரவில்லை! இணையம் இல்லாதிருப்பது எத்தனை கடினம், என்பதை உணர்ந்த, அதே வேளையில் இணையம் என்னை எத்தனை பாழடித்திருக்கிறது என்பதும் தெரியவந்தது! வீட்டில் இணையம் இல்லாத இந்த 6 நாட்களில் நிலுவையில் இருந்த பல வேலைகளை முடித்திருக்கிறேன்! நின்றுபோயிருந்த படிக்கும்-வழக்கம் மீண்டும் வந்தது! என்னுடைய மகளுடன் இணையத்தில் பேசமுடியாதது பேர்-குறையே!! இருப்பினும், பல நன்மைகள் விளைந்தன; இனிமேல், இணையத்தில் தேவையற்று பல-மணி நேரம் உட்கார்ந்திருக்கக்கூடாது என்ற உண்மை புரிந்தது! ஒருவேளை, அதற்காகத்தான் இணையம் மாற்றலாகி வருவது காலதாமதமானதோ என்று தெரியவில்லை?! இன்றிரவு, இங்கிருந்து கிளம்புகிறேன்; இன்னமும், வரவில்லை! ஆயினும், முதல் ஓரிரு நாட்கள் இருந்த அந்த படபடப்பு இல்லை...மனம் இலகுவாக ஆகியிருக்கிறது...

வீடு மாற்றுதல் எத்தனை சிரமம் எனினும்; அதிலும் பல நன்மைகள் இருக்கின்றன!!!        

என்மகளுக்காக...



    ஒரு-மாதத்திற்கு முன் என்னுடைய நட்பு ஒருவர் "கொரிய"நாட்டிற்கு சென்று வந்து "சாக்லெட்டுகள்" கொடுத்தார்! அதில் ஒன்றை சாப்பிட்டதும், சுவை மிகவும்-வித்தியாசமாய் இருந்ததால்;  என்னவென்று பார்த்தேன்! அது "மாதுளம்-பழத்தில்" செய்திருந்தது தெரிந்தது; மிகவும் நொந்துகொண்டேன். ஆம்! என்மகளுக்கு "மாதுளம்-பழம்" என்றால் உயிர்! "பாம்மி; பாம்மி..." என்று என்னவள் சொல்லிக்கொடுத்த-வண்ணம் அழகாய் சொல்வாள். சரியென்று, மீதியிருந்த 2-ஐயும் எடுத்து வைத்திருக்கிறேன். நாளை, இந்தியா சென்றதும் அவளுக்கு கொடுக்கவேண்டும். நான், இப்படித்தான்; சிலர், என்னை "கிறுக்குத்தனமாய்" இருப்பதை விமர்சிப்பர்! எனக்கு இதுபற்றி, எந்த கவலையும் இல்லை. எனக்கு, இவ்விதம் செய்வது பிடித்திருக்கிறது; மாதுளம்-பழத்தில் செய்த சாக்லெட் இங்கு கிடைக்குமா?! என்று தெரியவில்லை! இந்தவார தலையங்கத்தில் சொல்லி இருப்பது போல் "வீடு மாற்றும் அலைச்சலில் - அதை தேடிப்பார்க்க இயலவில்லை.

       முதல் படத்தில் இருப்பது அந்த சாக்லெட் தான்! இடையில் இருப்பது, அரேபிய-நண்பன் கொடுத்த இன்னுமொரு சுவையான சாக்லேட் கவர்!! அதையும், தேடி வாங்க இயலவில்லை. இரண்டாம் படத்தில் இருப்பது, உணவகத்தில் கொடுத்த சிறு-பிளாஸ்டிக் கப்புகள்! என்மகள் விளையாட உதவும் என்று கழுவி வைத்திருக்கிறேன். போர்ச்சுக்கல் நாட்டிலிருந்தபோது "பிஸ்ஸா"டெலிவரியில் இருக்கும் சிறு-பிளாஸ்டிக் முக்காலியை, பின்பு என்மகள் பொம்மைகள் வைத்து விளையாடுவாள் என்று சேர்த்து வைத்திருக்கிறேன். என்னவள் கூட "அவ, இதையெல்லாம் வச்சு விளையாடறாளோ? என்னவோ?; அதை ஏன் இப்படி சேக்கறீங்க?!" என்பாள். அதுபோன்றே, இருவரும் பின்பு இந்தியாவிலேயே இருப்பது என்று முடிவானதால், என்மகள் அவைகளை வைத்து விளையாடவில்லை! ஆனால், கிளம்பும் வரை அவைகளை வைத்திருந்தேன். இப்போதும், அப்படியே!! அவளுக்கு உதவும் என்று நம்புகிறேன்; இல்லாவிட்டாலும், பரவாய் இல்லை! இது, ஒரு திருப்தியான விஷயம்...

எத்தனை வயதானாலும், என்மகளுக்காய் இப்படி செய்வது நிற்காது என்றே நம்புகிறேன்!!! 

அய்யோத்(தி/தீ)யா?!...


"அய்யோத் தியா" வில்
அமைதியாய்...
அமர்ந்திருந்த கடவுள்களை(யே)

"அய்யோத் தீயா?!" வென
அலறவிட்டோர்...
அரைகுறை மனிதர்களே!!!

ஞாயிறு, மார்ச் 30, 2014

விஜயகாந்த் எனும் அரசியல்வாதி...



        சமீபத்தில் முகநூல்-நட்பு ஒருவர் விஜயகாந்த்தைப் பற்றி என் "மானசீக குரு"திரு. பாலகுமாரன் அவர்கள் சொன்னதாய் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்! அது எத்தனை உண்மையான தகவல் என்பது எனக்கு தெரியாது! எனினும், அந்த புகைப்படத்தை வெளியிட்டு நானும் ஒரு பதிவிட்டிருந்தேன்; அதை இங்கே துணுக்குகள் பகுதியிலும் வெளியிட்டு இருக்கிறேன். வழக்கமான, திரு. பாலகுமாரனின், எழுத்தாதிக்கம் அதிலும் இருந்து. நான் முன்பே "என்ன விதமான அரசியல் இது???" என்ற தலையங்கத்தில் விஜயகாந்த் பற்றி பலரும் "தவறாய்"விமர்சிப்பவற்றை சுட்டி காட்டியிருக்கிறேன். அங்கே, விஜயகாந்தின் செயலை கண்டித்ததோடு - அந்த நிகழ்வு சார்ந்த என் பார்வையை பதிந்திருந்தேன். நான் வெளிப்படையாய் சொன்னதில்லை எனினும், விஜயகாந்த் மீது எப்போதும் ஒரு சிறு-அபிமானம் உண்டு. என்னுடைய பதிவை பார்த்துவிட்டு என்னுடைய நட்புகள் இருவர் - விஜயகாந்தின் செய்கைகள் பற்றி என்னுடன் முகநூலில் விவாதித்தனர்.

          என்னுடைய பதிவையும், எங்கள் விவாதங்களையும் இந்த இணைப்பில் காணலாம்!  ஒரு நண்பர் அவர் குடித்துவிட்டு வருகிறார் என்று கூறினார்! நான் "அவரு, குடிச்சுட்டு வர்றாருங்கறதே ஒரு "அரசியல் குற்றச்சாட்டு"! உனக்கும் எனக்கும் உண்மை தெரிய வாய்ப்பில்லைன்னு"  சொன்னேன். அப்படியே, ஒருமுறை நடந்திருந்தாலும் - எப்போதும் அப்படி வரும் அளவுக்கு மோசமான ஆளா எனக்கு தெரியல! கண்ணு-செவப்பா இருக்குங்கறதுக்காக ஒருத்தர குடிகாரன்னு சொல்ட்றது நியாயமில்லை! என்றேன். அதுபோன்றே, அவர் தன்  மனைவி/மச்சான் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதான குற்றச்சாட்டு! நான் "பலரும்; தன் பிள்ளைகள்? மருமகன்கள்? மருமகன்களின் பிள்ளைகள்?..." என்று முக்கியத்துவம் கொடுப்பதை சுட்டிக்காட்டினேன்.  மேலும், "என்னால, உனக்கு ஏதாவது ஒரு வேலை/பதவி வாங்கித்தர முடியும்னா நான் கண்டிப்பா செய்வேன்! அப்படித்தான் நீயும்..." நமக்கு நட்பு அடிப்படைன்னா?! அவர்களுக்கு உறவுகள் அடிப்படை... என்றேன்!

          இன்னுமொரு நட்பு, தலைவர் என்பவர் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார்! உண்மை தான்; அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! ஆனால், விமர்சனம் என்பது "தனி நபர்" சார்ந்தோ; பொய்யாகவோ இருக்கக்கூடாது!! அப்படிப்பட்ட விமர்சனங்களைப் பொருத்துக்கொள்ளும் தலைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் - எல்லா வரலாற்றையும் சேர்த்தே! எனவே, திரு. விஜயகாந்த் என்னவோ "ஒற்றை ஆள்" என்பதாய் பிரதிபலிக்கவேண்டாம் என்பதே என் கருத்து! அதே போல், தருமபுரி சம்பவம் எனக்கும் சிறிது அதிர்ச்சி தான்! ஆனால், அங்கே 2 விசயங்கள் உள்ளன: 1. (எனக்கு தெரிந்து)அந்த வேட்பாளர் அந்த நிகழ்ச்சியை பெரிது-படுத்தி பேசவில்லை: 2. பின் ஏன் இந்த ஊடகங்கள் அதை அத்தனை பெரிதுபடுத்தின?! - இது ஒரு அரசியல்! விஜயகாந்த் போன்ற ஒருவர் எந்த முன்னனுபவும், எந்த அடிப்படையும் இல்லாது ஒரு புதுக்கட்சியை ஆரம்பித்து நடத்தும்போது "தருமபுரி சம்பவம்" போன்று நடப்பவை தவிர்க்க முடியாதவை!

      ஆனால், அது ஆரம்ப காலம்; அவரிடம் படிப்படையான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன!  இங்கே இருக்கும் 2 "பாரம்பரியமான"கட்சிகள்  - இதை விட கேவலமான விசயங்கள் எல்லாம் செய்தவர்கள்/ செய்து வருபவர்கள்! ஒரு முன்னாள்-முதலமைச்சரை "பெண்மணி என்றும் "பாராமல் இத்தனை ஜோடி செருப்புகள்"வைத்திருந்தார் என்பதை "மீண்டும், மீண்டும்"வீடியோவாய் காண்பித்தது எத்தனை "தரம்-தாழ்ந்த விமர்சனம்"?! நான் பலரிடமும், இப்படித்தான் விளக்கம் கொடுப்பேன்: என்மகளுக்கு 8-மாத வயதிருந்தபோது (நடக்க கூட தெரியாத அவளுக்கு) 18-ஜோடிக்கும் மேல் செருப்புகள் இருந்தன! என்னைப்போன்ற சாதாரணமான ஒருவனே அத்தனை ஜோடி-செருப்புகள் வாங்கும்போது; முதலமைச்சராய் இருந்த பெண்மணியிடம் இருந்ததில் என்ன ஆச்சர்யம்?! அதே போல் அந்த பெண்மணி மீண்டும் முதலமைச்சராய் வந்தபோது, பதிலுக்கு அந்த முன்னாள்-முதல்வரை நள்ளிரவில் கைது-செய்த அநாகரிகம்!

         அந்த அநாகரிக செயலையும்; "கொல்றாங்க! கொல்றாங்க!!" என்று டப்பிங் கொடுத்து நடந்த நாடகம் அதை-விட-அநாகரிகம்! இவையெல்லாம், பொதுவாழ்வில் இருக்கும் அந்த பாரம்பரிய-தலைவர்களின் பொறுமையின்மையை காட்டவில்லையா?! விஜயகாந்த் மிகவும் நல்லவர் என்பது என் வாதம் அல்ல; நான் இங்கே அவருக்காய் பிரச்சாரமும் செய்யவில்லை! நேற்று முகநூலில் "விஜயகாந்தின் காமெடி கலாட்டா! பாகம்-2" என்ற காணொளியை பார்க்க நேர்ந்தது; இந்த தலையங்கத்திற்காய் எனக்கேதும் உருப்படியான தகவல் கிடைக்கும் என்று பார்த்தேன். ஆனால், அந்த அசிங்கத்தை என்னால் பாதி கூட பார்க்கமுடியவில்லை! அதில், விஜயகாந்தின் செய்கைகளை மட்டும் காண்பித்து; அதற்கு அவரை சென்ற தேர்தலில் எதிர்த்த அந்த நகைச்சுவை-நடிகரின் "திரைப்பட டையலாக்கை" வைத்துள்ளனர்! இதில் என்ன காமெடி இருக்கிறது? உண்மையாய் அவர் என்ன பேசினார் என்பதை காண்பிப்பது தானே நியாயம்?!

        இன்னொரு காட்சியில், திரு. வைகோ அவர்களின் பக்கத்தில் அமர்ந்து விஜயகாந்த் ஏதோ அவரின் கட்சிக்காரரிடம் பேசும் செய்கையை மட்டும் காண்பித்து மீண்டும் அந்த நகைச்சுவை நடிகரின் டையலாக்கை தவறான விதத்தில் சித்தரித்துள்ளனர். திரு. வைகோ அவர்களின் முகபாவனையில்; அவர் விஜயகாந்த் பேசியதை வெகுவாய் இரசிப்பது அப்பட்டமாய் தெரிகிறது! பின், ஏன் அம்மாதிரி தவறாய் சித்தரிக்க வேண்டும்?! என்ன பேசினார் என்பதை அப்படியே காண்பிப்பது தானே நியாயம்?! பெரும்பான்மையில், இதுபோன்ற தவறான விமர்சனங்கள் தான் விஜயகாந்த் பற்றி இருக்கிறது என்பதே என் எண்ணம்! அதைத்தான், மேற்கூறிய திரு. பாலகுமாரன் அவர்களின் விளக்கமும் உணர்த்துகிறது! இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நன்கு படித்தவர்கள் தான் இப்படிப்பட்ட தவறான-விமர்சனங்களை உருவாக்குகின்றனர்! அதை, பகிர்பவர்களும் நன்கு படித்தவர்களே!! இதைத்தான் என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை!!

           திரு. பாலகுமாரன் அவர்கள் சொல்லி இருப்பது போல், விஜயகாந்தின் கோபத்தில் ஒரு உண்மை இருக்கிறது. தவறென்றால், என் கட்சிக்காரர் செய்தாலும், உடனே கண்டிப்பேன் என்ற நியதி இருக்கிறது! ஓட்டுக்காய் எதையும் பொறுத்துக்கொள்ளும் "மற்ற தலைவர்களின்" நாடகத்தன்மையும்/ நடிப்பும் அவரிடம் இல்லை! அதனால் தான், அவரின் செயல்களில் உண்மையான/ நியாயமான கோபம் நிதர்சனமாய் தெரிகிறது!! இவர்களைப் போன்றோர்களை "நாம் தலை மீது வைத்து கொண்டாடவில்லை எனினும்; தவறுதலாய்-தலையில் கொட்டாமலாவது" இருக்கலாமே?!" கூட்டணியில் இருந்துகொண்டே, நியாயமான எதிர்க்கட்சி தலைவராய்; அதிலும், அந்த வீரப்பென்மணியை எதிர்த்து செயல்படும் அவரின் பயமின்மையை நாம் கண்டுகொள்ள தவறக்கூடாது. மீண்டும் சொல்கிறேன்... இது விஜயகாந்துக்கு ஆதரவானதும் அல்ல; நான் இங்கே ஓட்டும் சேகரிக்கவில்லை! ஆனால், நான் ஓட்டளித்தால்...

அது "விஜயகாந்திற்கே" என்பதில் என்ற மாற்றமும் இல்லை!!!

பின்குறிப்பு: எடுத்துக்கொண்ட தலைப்பின் காரணமாய்/அதை தெளிவாய் விளக்கவேண்டிய கட்டாயத்தால்; வெகுநாட்களுக்கு பிறகு நீளமான-தலையங்கம் எழுத நேர்ந்துவிட்டது! முடிந்த அளவில்; அதை மென்மேலும் படித்துபார்த்து சுருக்கி இருக்கிறேன். எனினும், நீளமாய் எழுத நேர்ந்ததற்கு பொறுத்தருளவும்!!

"சபர்ணா" எனும் அழகி...



       முந்தைய மனதங்கத்தில் அமுதவாணன் பற்றி எழுதியிருந்ததை பலரும் படித்திருக்கக்கூடும்! அப்படி "ஜலபுல ஜங்"நிகழ்ச்சிகளை பார்க்கும்போது தான் "சபர்ணா எனும் நடிகையை" பார்க்க நேர்ந்தது. ஆரம்பத்தில் பெரிதாய் அவர் மேல் கவனம் ஏதும் இல்லை எனினும், நாட்கள் செல்ல செல்ல அவர் மிகவும் வசீகரமாய் தெரிய ஆரம்பித்தார். ஆம், எந்த வகையான உடை எனினும்; அவருக்கு கன-கச்சிதமாய் பொருந்துகிறது. தாவணியில் ஆரம்பித்து - லெக்கின்ஸ் வரை எந்த உடையானாலும், அவருக்கு மிகப்பொருத்தமாய் தோன்றுகிறது. உண்மையில் அவர் ஒரு அழகி...அதனால் தான் "சபர்ணா எனும் அழகி" என்று தலைப்பிட்டேன். அதேபோன்று, எந்த பாத்திரத்தில் நடித்தாலும்; அதிக ஆர்ப்பாட்டமில்லாத அளவனான நடிப்பு! எந்தவிதமான அலட்டலும் இல்லை; அவரின் சிரிப்பும் அழகு! இவர் போன்றோரின் திறமைகள் பல்கிபெருகி பலரையும் சென்று சேரவேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் இவரைப் போன்றோர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை?! என்று யோசித்தேன். 

    அமுதவாணன் போன்றே; சபர்ணாவும் எந்த திரைப்படத்திலும் நடித்திருப்பதாய் எனக்கு தெரியவில்லை! அழகும், நடிப்புத்திறமையும் இல்லாமல் "வெறும் கவர்ச்சி"என்ற ஒன்றிற்காய் பல நடிகைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள்; சபர்ணா போன்ற நடிகைகளுக்கு ஏன் கிடைப்பதில்லை?! என்ற ஆதங்கம் எழுந்தது. எவரேனும் சபர்ணா, அமுதவாணன் போன்றவர்களுக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் என்று தோன்றியது. எனக்கு, திரைப்படத்துறையில் சில ஆண்டுகள் கழித்து எப்படியேனும் நுழைந்து ஏதேனும் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது எந்த அளவுக்கு சாத்தியமாகப்போகிறது என்று தெரியவில்லை! எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பின்; இவர்கள் போன்றவர்களை கண்டிப்பாய் தேர்ந்தெடுத்து வாய்ப்புகள் கொடுப்பேன். ஆனால், அதற்கு முன் இவர்கள் வெள்ளித்திரையில் நுழைந்து சாதிக்கவேண்டும். தமிழ் பேசும் நடிகைகள் கிடைப்பதில்லை என்று சில இயக்குனர்கள் சொல்வது வியப்பாய்?! இருக்கிறது. கண்டிப்பாய்....

"சபர்ணா" போன்ற அழகிகள் வெள்ளித்திரையில் பிராகாசிக்கவேண்டும்!!!

"அமுதவாணன்" எனும் கலைஞன்...



         "அது-இது-எது" நிகழ்ச்சியின் "சிரிச்சா, போச்சு!" பிரிவை பார்ப்பவர்களுக்கு அமுதவாணன் எனும் கலைஞனை தெரிந்திருக்கும். எனக்கு மிகவும் பிடித்த சின்னத்திரை கலைஞர்களில் ஒருவர்; தொடர்ந்து "சிரிச்சா, போச்சு!" பிரிவில் வரும் நகைச்சுவைகளை பார்த்ததால் மட்டும் அவரை வெகுவாய் இரசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரின் ஒவ்வொரு ஒப்பனையும், அவரின் மாறுபட்ட நடிப்புத்திறனும், அவரின் "டைமிங்"சென்சும் என்னை வெகுவாய் கவர ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் அவர் வேறேதேனும் நிகழ்ச்சிகள் செய்கிறாரா?! என்று தேட ஆரம்பித்தபோது "காமெடியில் கலக்குவது எப்படி?" என்ற நிகழ்ச்சி கண்ணில் பட்டது. பின்னர், அந்த நிகழ்ச்சிகள் பலதையும் அவருக்காகவே பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின்னர், அவரின் "ஜலபுல ஜங்"டீம் செய்யும் நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன். இப்படியாய், அவரின் நிகழ்ச்சிகள் பலதையும் பார்த்துக்கொண்டிருந்த போது அவரின் தொகுப்புகள் என்று தனியே "யூ-டியூபில்" இருப்பதை பார்த்தேன். 

       அவரின் அந்த தொகுப்புகளை பார்க்க ஆரம்பித்தபோது தான், அவர் நகைச்சுவை மட்டுமல்ல; நடனம் மற்றும் பல மாறுபட்ட நடிப்பு பரிமாணங்களிலும் அருமையாய் செய்திருப்பது தெரியவந்தது! அதன் பின்னர் தான், அவர் பல ஆண்டுகள் சின்னத்திரையில் இருந்துகொண்டிருப்பது தெரிய வந்தது! எனக்கு தெரிந்து அவர் எந்த திரைப்படத்திலும் நடித்திருப்பதாய் தெரியவில்லை; அதை உணர்ந்ததும், ஏன் அவருக்கு இன்னும் அப்படி வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது! ஒருவேளை, சிவகார்த்திகேயன் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காததால் பெரிதாய் கவனிக்கப் படவில்லையா?! என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இணையதளங்களில் அவரின் தொகுப்புகளை பார்க்கும் போது பெரிதாய் பிரபலம் அடைந்திருப்பதாய்-தான் தோன்றுகிறது! என்னவோ, அந்த கலைஞனுக்கு வெள்ளித்திரையிலும் பல-வாய்ப்புகள் கிடைத்து; அவரின் திறமைகள் இன்னும் மென்மேலும் வளர்ந்து பலரையும் சென்று சேரவேண்டும் என்ற ஆசை வருகிறது. 

என்னுடைய மனமுவந்த வாழ்த்துக்கள்... அமுதவாணன்!!!    

"பிலிப்ஸ்" ஷேவிங் செட்...



       சென்ற வாரம் என்னுடைய நீண்ட-நாள் கனவான; மின்னியங்கி "சவரம் செய்யும் கருவி"யை வாங்கினேன். மிக புதுமையானது இல்லையெனினும், நல்ல தரமான ஒன்று! இத்தனை காலம் அவ்வளவு தொகையை, எனக்காய் செலவு செய்வதில் ஒருதயக்கம் இருந்தது. என் குடும்பத்திற்கு தேவையான பணத்தை சேர்த்திருப்பதால், இப்போது எனக்காகவும் செலவு செய்யத் துவங்கி இருக்கிறேன். 

          இது என்னுடைய முதல் கருவி என்பதால், இணையத்தில் பல காணொளிகளைப் பார்த்து பின்னர் தான், முதலில் உபயோகித்தேன். அப்படியிருந்தும், என் விருப்பப்படி அல்லாமல் தாடியை மிகவும் குறுகியதாய் நறுக்கி விட்டேன். அடுத்தமுறை, சரியான முறையில் உபயோகிப்பேன் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது! 

          நான் எதிர்பார்த்ததை விட அக்கருவியை உபயோகிப்பது மிகவும்-பாதுக்காப்பாய் உணர்தேன்!!!

விஜயகாந்த் பற்றி திரு. பாலகுமாரன்...




என் மரியாதைக்குரிய; என் தியான பயிற்சியின்-குரு, திரு. பாலகுமாரன் அவர்கள் கூறியதாய் இதை பார்க்க நேர்ந்தது!

அருமையான விளக்கம் - தனக்கே உரித்தான பாணியில்!! 

மேகம் கொட்டட்டும்! மின்னல் வெட்டட்டும்!!



விழியப்பன் நினைப்பது (27032014):

"மேகம் கொட்டட்டும்; ஆட்டம் உண்டு!...மின்னல் வெட்டட்டும்; பாட்டும் உண்டு!!" என்ற பாடல் எப்போதும்-கவர்ந்தவை "என்ற பெயரிட்ட என் கணினி ஃபோல்டரில்" இருக்கும் "முன்னூற்று சொச்சம்"பாடல்களில் ஒன்று!  எந்த மன-நிலையில் இருப்பினும், அந்த பாட்டை கேட்கும்போது என்னையறியாமல் நான் குதூகலம் ஆகிவிடுவேன்.

சென்றவாரம் ஓர்மாலை - இங்கே அபுதாபியில் என் வீட்டில் அந்த பாடல் ஒலித்தது! உடனே, குதூகலமாகி மிகுந்த சத்தத்துடன் பாடிக்கொண்டே/ஆடவும் செய்தேன்!! எப்போதும் போல் மீண்டும், மீண்டும் அந்த பாடலை கேட்டேன். "ஹோம்-தியேட்டரின்"சத்தம் வெளியில் எவருக்கும் கேட்டிருக்குமா?! பற்றி என்ற எந்த கவலையும் இல்லை!!

நேற்று மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், அந்த பாடல் ஒலிக்கும்போது; இங்கே  அபுதாபியில் "மேகம்"கொட்டியதுடன் அல்லாது "மின்னல்"வெட்டவும் செய்தது!!! 

ஞாயிறு, மார்ச் 23, 2014

பென்சில்/இரப்பர் தொலைப்பது(/திருடுவது)...




       பெரும்பாலான குழந்தைகள் "பென்சிலையும்/இரப்பைரையும்" தொலைத்துவிட்டு அடிக்கடி வீட்டில் திட்டுவாங்குவது அல்லது அடிவாங்குவதை பலரும் பார்த்திருக்கக்கூடும். என்மகள் அப்படி அடிக்கடி தொலைத்துவிட்டு; என்னவளிடம் திட்டு வாங்குவாள்! "ஒருநாளைக்காவது; கொண்டு போறப் பொருளை"சரியா எடுத்துக்கிட்டு வர்றியா?! என்று என்னவள் அடிக்கடி என்மகளை கண்டிப்பாள்! "உங்க அப்பாவுக்கு வசதி இருக்குதுன்னு உனக்கு தேவைக்கு அதிகமா வாங்கிக் கொடுக்கறார், இல்ல?! நீ அப்படித்தான் பண்ணுவ!" என்று எனக்கும் கொஞ்சம் கிடைக்கும். "அவ கேக்கறதெல்லாம் வாங்கிக் கொடுக்காதீங்க; அவளுக்கு பொறுப்பே வராது!" என்று என்னவள் சொல்வாள். நான் அதைப்பற்றி எல்லாம் பெரிதாய் கவலைப்பட்டதில்லை! அதற்கு என்மகள் மேலிருக்கும் "பாசம்; மட்டுமே!" காரணம் அல்ல!! இதற்கு பின்னால் இருக்கும் நானறிந்த உண்மையே அதற்கு முக்கிய காரணம். அதை பலருக்கும் பயன்பட(வே) இங்கே பகிர்ந்துள்ளேன்.

    ஒரு குழந்தை பென்சிலையோ/இரப்பரையோ தொலைத்துவிட்டு வந்தால்; அதற்கு அந்த குழந்தையின் பொறுப்பின்மை(மட்டுமே) காரணமல்ல! அதை, அதே வயதில் இருக்கும் ஒரு குழந்தை "சாமர்த்தியமாய்??!!" திருடுகிறது என்பதையும் நாம் உணரவேண்டும்!! வேண்டுமென்றே எந்த குழந்தையும் தொலைத்துவிட்டு வருவதில்லை! அதை ஒரு குழந்தை திருடுவதால் தான் அப்படியொரு நிகழ்வு நடக்கிறது. அப்படி "திருடும் ஒரு குழந்தையாய்"தான் என் இளம்வயதில் இருந்திருக்கிறேன். நடிகர் வடிவேல் சொல்வது போல் "என்னுடைய திருட்டு; ஒரு நூதன-திருட்டாய்!" இருக்கும். அதாவது, அந்த 4/5 வயதில் ஒரு "கிரிமினல்"எண்ணத்தோடு செயல்பட்டிருக்கிறேன். என்னுடன் பயிலும் சக-குழந்தையின் பென்சில்/இரப்பர் எனக்கு பிடித்துவிட்டது என்றால், அந்த குழந்தையிடம் "எங்க வாங்கின?!" என்பது போன்ற தகவலை கேட்பேன். அதற்கு அடுத்த நாள் "எங்கப்பாவும்; எனக்கு அதே மாதிரி பென்சில்/இரப்பர் வாங்கித்தரன்னு சொல்லி இருக்கார்" என்பேன்.

          அடுத்த நாள் தான், அந்த பென்சில்/இரப்பரை திருடுவேன்! அதற்கடுத்த நாள், ரொம்ப தைரியமாக அதே பென்சில்/இரப்பரை வகுப்புக்கு எடுத்து செல்வதோடு மட்டுமல்லாமல், அதே குழந்தையிடம் காட்டி "பாத்தியா?! எங்கப்பா அதே மாதிரி வாங்கி கொடுத்தார்!" என்பேன். முன்பே, அந்த குழந்தையிடம் இப்படியொன்று நடக்கப்போகிறது என்று சொல்லி இருந்ததால், அந்த குழந்தை என் மேல் எந்த சந்தேகமும் இல்லாமல் "என் பென்சில்/இரப்பர் தொலைஞ்சிடுச்சு!" என்று பரிதாபமாய் சொல்லும். நானும், அப்படியா?! என்று கேட்பேன். இப்படி நான் பென்சில்களையும்/இரப்பர்களையும் திருடி இருக்கிறேன். என்னப்பன் நான்(/நாங்கள்) கேட்டு எதையும் இல்லையென்று சொன்னதில்லை; உண்மையில், நாங்கள் கேட்காமலேயே அவர் வாங்கிக் கொடுப்பதே வழக்கம். அது என்னவென்று தெரியவில்லை! அந்த வயதில் அப்படியொரு சந்தோசம்; அந்த திருட்டு-பழக்கத்தில்!! நான் 3-ஆவது படிக்கும் வரை அப்படி செய்திருக்கிறேன்.

           அதற்கு பின் "எனக்கு தமிழ் வரவில்லை!" என்ற காரணத்திற்காய் என்னை, என்னப்பன் எங்கள் கிராமத்து பள்ளியில் சேர்த்துவிட்டார். அதன் பின், எந்த குழந்தையிடமும் எனக்கு பிடித்தவண்ணம் பென்சிலோ/இரப்பரோ பார்த்ததில்லை! என்னப்பனும்/எங்கள் குடும்பமும் பல பொருட்களை எங்கள் கிராமத்திற்கு அறிமுகம் செய்ததை சமீபத்தில் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனால், என்னைவிட சிறப்பானதாய் எவரிடமும் நான் பார்த்ததில்லை; எல்லா பென்சில்களையும்/இரப்பர்களையும் நான் திருடுவதில்லை! எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அப்படி "நூதனமாய்" திருடுவேன்; அப்படியொரு நியாயமான-கொள்கை??!! எனக்கு. என்னவளிடம் இதை சொல்லி "என்னை மாதிரி ஏதாவது ஒரு குழந்தை திருடி இருக்கும்! ரொம்ப திட்டாத அவளை!" என்பேன். என்மகளுக்கு எண்ணற்ற பென்சில்கள்/இரப்பர்கள் வாங்கி கொடுத்திருக்கிறேன்; அதுவும், எல்லாம் இங்கே வெளிநாடுகளில் வாங்கிய/தரமான பொருட்கள்!

        அதனால், என்னைப்போல் ஏதாவது ஒரு குழந்தை/பல குழந்தைகளை  கவர்ந்திருக்கக் கூடும்! என்மகள் போன்ற குழந்தைகளை கடிந்து கொள்வதில் எந்த நியாயமும் இல்லை! எப்படி கவனமாய் இருந்தாலும், அது களவாடப்படும்! என்மகளிடம் ஓர் உயரிய குணம் உண்டு; அவளுக்கு எவர் எடுத்தது என்பது தெரிந்திருந்தும்; "அவள் என் ஃபிரண்டுப்பா!" என்பாள். அதை கேட்கும்போதெல்லாம் என்னிடம் களவு-கொடுத்தவர்களும்; நான் அவர்களின் ஃபிரண்ட் என்பதால்தான் காட்டிக்கொடுக்காமல் இருந்திருப்பரோ?! என்று என்னுள் எழுவதுண்டு. நான் செய்த தவறுக்காய், என்மகள் இன்று பதிலுக்கு தொலைக்கிறாள் என்று தோன்றும்!! அதுவும், பென்சில்/இரப்பர் மட்டுமில்லாமல் "வாட்டர் பாட்டில், ஸ்கேல்,... என்று" பலதும் தொலைப்பாள். இது என்மகளின் தவறு என்பதைக் காட்டிலும், நான் செய்ததற்கான வினை என்றே நான் எண்ணுவேன். எனவே, உங்களின் குழந்தை ஒரு பொருளை தொலைத்துவிட்டால், அதை கோபத்தோடு அணுகாமல்; அருள்கூர்ந்து, அது உங்கள்...

குழந்தையின் தவறல்ல! மாறாய் என்போன்ற குழந்தைகளின் தவறென்று உணருங்கள்!!!

பின்குறிப்பு: குழந்தைப்பருவம் தாண்டியபின்; 12-ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நண்பனின் "பேனாவை"அதே போல் சொல்லி திருடியிருக்கிறேன். இப்போதும் கூட "கான்ஃபரன்ஸ்" செல்லும் போது; கம்பெனிகள் வைத்திருக்கும் "அன்பளிப்பு" பொருட்களை எடுப்பதில் "அப்படியொரு" ஆனந்தம்! இது, திருட்டு இல்லையெனினும் அங்கே சென்று; தேவையில்லாமல் "சிரிப்பென்ற பெயரில் ஒரு வழி-வழிந்துவிட்டு" எடுப்பது "திருட்டு போலவே!" தோன்றும். கண்டிப்பாய், இதை பலரும் செய்திருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமாய் தெரியும்!! நான் என்னுடைய உயரதிகாரிகள் அப்படி செய்வதைக்கூட பார்த்திருக்கிறேன்.  

ஃபர்ஸ்ட் அடிச்ச "பியர்"...




      கண்டிப்பா எல்லாருக்கும் மொத, மொத "தண்ணி அடிச்சது" நியாபகம் இருக்கும்! எனக்கு ரொம்ப-தெளிவா நியாபகத்துல இருக்குது!! 1991-ல B. Sc., செகண்ட்-இயர் படிக்கும்போது நான் மொத "பியர" அடிச்சேன். நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்ச கதை ரொம்ப வித்தியாசமானது! இதுமாதிரி, யாருக்காவது நடந்திருமாங்கறது சந்தேகம் தான்... ஆனா, எனக்கு அப்படித்தான் நடந்தது.

      நானும், என் ஃபிரண்டும் "கார்ட்ஸ்"ஆடிக்கிட்டு இருந்தோம்! கார்ட்ஸ்-ஆடும்போது "பெட்" இல்லாம ஆடறது நெறைய பேருக்கு புடிக்காது! எனக்கு கண்டிப்பா புடிக்காது; அதனால, "அது-இது"ன்னு யோசிச்சப்போ என் ஃபிரண்ட் "எது"ன்னு சொன்னான்; அவன் சொன்ன பெட் "பியர்"!  அதாவது, தோக்கறவங்க; ஜெயிக்கரவங்களுக்கு "பியர்"வாங்கிக் கொடுக்கனம்னு முடிவானது. எனக்கு,  அந்த பழக்கம் இல்லைன்னாலும்; சரின்னு ஒத்துக்கிட்டேன். அப்புறம், ஒரு வழியா ஆடி கேம்-முடியும்போது பார்த்தா "நான் தோத்துட்டேன்!". நான், என் ஃபிரண்டுக்கு பியர் வாங்கி கொடுக்கணும்.

       சரின்னு "மெட்ராஸ்-டிரிப்லிகேன்ல" அப்போ இருந்த ஒரு "ஒயின் ஷாப்"புக்கு போனோம்! கடைக்குள்ள போனதும் "ஒரு திருட்டு யோசனை?!" வந்துச்சு... சரி, அவனுக்கு மட்டும் ஏன் வாங்கி கொடுக்கணும்?! நாமளும் ஒன்னு வாங்கி அடிச்சா என்னனு தோனுச்சு! சரின்னு, மச்சி "ரெண்டா வாங்கலாம்டா!"; நானும் அடிக்கப்போறேன்னு சொன்னேன். அவன், சரி மச்சி! ஆனா, முடியலைன்னா ஏதும் அசிங்க பண்ணிடாதடா! என்கிட்ட கொடுத்துடுன்னான்; சரி, மச்சி! என்னால முடியலன்னா ஒனக்கு கொடுத்துடறேன்னு சொல்லி 2-பியர் வாங்கிக்கிட்டு உள்ளே போனோம்!

         நான், அன்னைய தேதிக்கு சுமார் 1-வருஷத்துக்கு மேல காலைல எழுந்ததும் 1 அல்லது 1.5 லிட்டர் தண்ணி குடிக்கற பழக்கத்த வச்சிருந்தேன்! இன்னைக்கு வரைக்கும் காலைல எழுந்ததும், மொதல்ல செய்யற வேலை அது தான்! அதனாலேயே என்னவோ, அந்த பியரை (வெறும் 650 மில்லி லிட்டர் தானே??!!​) ரெண்டு மொடக்குல குடிச்சுட்டேன். நல்ல எதமான-கூலிங்ல இருந்ததாலையோ என்னவோ?! எனக்கு ஒண்ணுமே தடங்களா இல்லை! அவன் சரியான காண்டாயிட்டான்... அவன் இன்னும் அரை-பியர் கூட குடிச்சி முடிக்கல! அவன் மெட்ராசுக்கே உரிய அந்த வார்த்தைய சொல்லி..."நெஜமா இதுக்கு முன்னாடி" தண்ணி அடிச்சதுல்ல?! அப்படின்னு கொஞ்சம் கூட நம்பாம கேக்கறான்! இல்லடா... ஒனக்கு தான் தெரியுமே! நான் எப்படா, குடிச்சிருக்கேன்?!-ன்னு கேட்டேன்! அவனுக்கு, இன்னும் ஒரு-அரை பியராவது கிடைக்கும்னு நெனைச்சு ஏமாந்த காண்டு வேற! இல்லடா, நான் தான் காலைல எழுந்ததும் தண்ணி குடிப்பன் இல்ல?! அதனால தான் குடிச்சுட்டன் போல?!ன்னேன்! அவனுக்கு அது "பிரஸ்டிஜ்"இஷ்ஷுவா வேற போயிடுச்சு! அவனைவிட சீக்கிரமா வேற குடிச்சுட்டன் இல்ல?! அப்பறம், ஒரு வழியா ஹாஸ்டலுக்கு போயி சேர்ந்துட்டோம். ஆனாலும், அவனால, தாங்க முடியல; எல்லார்க்கிட்டயும் மீண்டும் அந்த மெட்ராஸ்-ஸ்பெஷல் வார்த்தைய சொல்லி நடந்ததை சொல்லி அவன் மனச தேத்திக்கிட்டான்!

            நான் மொதல்ல அடிச்ச அந்த பியர் "ப்ளாக் & நைட்" வேற! அது, ஸ்ட்ராங்கான பியர் வேறயாம்! அவனுக்கு அந்த காண்டு வேற! ஆனா, அதுக்கப்பறம் நம்ம ஃபேவரைட் "கோல்டன் ஈகிள்"ங்கறது வேற விசயம்!

        அப்படி ஆரம்பிச்ச அந்த "கருமம் பிடிச்ச!!??" பழக்கத்தை இன்னைக்கு வரைக்கும் சுத்தமா-நிறுத்த முடியல! எவ்வளவோ கொறைஞ்சுடுச்சுன்னாலும், இன்னமும் சுத்தமா நிறுத்த முடியல!! கூடிய சீக்கிரம் நிறுத்திடுவேன்; நிறுத்திடனும்! "தம்மடிக்கற" பழக்கத்த நிறுத்தறது தான் ரொம்ப கஷ்ட்டம்னு எல்லாருக்கும் தெரியும்! அதையே, சுத்தமா நிறுத்தி 3.5 வருஷம் ஆவுது! இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை. என்னதான் 3 மாதம், 4 மாதம்-னு அடிக்காம இருந்தாலும், என்னைக்காவது ஒரு-நாளு திரும்ப ஏதாவது பார்ட்டி, அது-இதுன்னு ஏதாவது வந்துடுது! ஏம்-பொண்ணு கூட இல்லைங்கறது கூட காரணமா இருக்கலாம்! தம்மையே-அவளால நிறுத்தியாச்சு!! ஆனா, இத அவ இல்லாதப்பவே சுத்தமா நிறுத்திடம்னு "ட்ரை" பண்ணிக்கிட்டு இருக்கேன்; பார்ப்போம்...

என்ன இருந்தாலும்; அந்த ஃபர்ஸ்ட் பியர் மறக்கமுடியாத அனுபவம்!!!