ஞாயிறு, மே 26, 2013

சில நிகழ்வுகளும், பல புரிதல்களும்...



        நீண்ட இடைவெளிக்கு பின், வலைப்பதிவை தொடர ஆரம்பித்திருக்கிறேன்! இந்தியா அல்லது இந்தியாவுக்கு அருகில் பணியிடத்தை மாற்றவேண்டும் என்ற கனவு நிறைவேறி 2 மாதங்களுக்கு முன் "அபு-தாபியில்" பணிக்கு சேர்ந்திருக்கிறேன். இடையில், விருப்பப்பட்டே எடுத்த இரண்டரை மாத கால இடைவெளியில் "என்-மகளுடனும்", என் குடும்பத்துடனும் இருந்தேன். 4 தினங்களுக்கு முன்பு கூட என்னவளும், என்-மகளும் 2 வார காலம் இங்கு என்னுடன் இருந்துவிட்டு சென்றனர்; எனினும், மேற்கூறியவண்ணம் எப்போது "நீண்ட-காலத்திற்கு" உடனிருக்கப்போகிறேன் என்பது  தெரியவில்லை; ஆனால்/அதனால், அவளுடன் இருந்த ஒவ்வொரு மணித்துளியையும் "முழுமையாய்" அனுபவித்தேன். அவளின் எல்லா (செய்கை/சேட்டை)களையும் பொருத்து, அவளின் குழந்தைத்தனத்தை இரசித்தேன்; என்னுடைய தமையன் மற்றும் தமக்கை பிள்ளைகளை எத்தனையோ சிறு-விசயத்திகாய் அடித்திருக்கிறேன். ஆனால், அதைவிட எத்தனை பெரிய செய்கைகள் செய்தும் என்-மகளை அடிக்கவில்லை - கண்டிப்பாய், இது என் மகள்; என் இரத்தம் என்பதால்(மட்டும்) வந்தது அல்ல! அகவை மட்டுமல்லாது என்னுடைய அனுபவமும், அறிவும் கூடுவதால் வந்த மாற்றம் என்பது தெளிவாய் தெரிகிறது. எந்த தயக்கமும் இல்லாது, என் தமையன் மற்றும் தமக்கையிடம் நான் அவர்களின் பிள்ளைகள அடித்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் என்னை மன்னிக்க வேண்டினேன்; இன்னமும் வேண்டுகிறேன் - ஆம்! அந்த நிகழ்வுகளை அவர்கள் எப்படி பொறுத்தார்கள்???

        இந்த இடைவெளியில் - மீண்டும் ஓர் முறை எனக்கு பிடிக்காத அந்த "பணம் எனும் பொருள்" என்னை பல விதத்தில் சோதனை செய்தது. கண்டிப்பாக ஒருமாதம் "வேலையும், சம்பளமும்" இன்றி இருக்கப்போகிறேன் என்பது எனக்கு தெளிவாய் தெரியும்; அதை அறிந்தே தான் என்னுடைய முந்தைய வேலையை முன்கூட்டியே "இராஜிநாமா" செய்துவிட்டு வந்தேன். அந்த ஒரு மாதத்தை என் மகளுடன் கழிக்கவே அவ்வாறு செய்தேன்; ஆனால், புதிய பணிக்கு சேர்வதற்கான ஆவணங்கள் அனைத்தும் தயாராக மேலும் ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. கையில் இருந்த பணம் அனைத்தும் கரைந்து - இடையில் ஓர் நாள் என்னிடம் சரியாக இருந்தது "ஆயிரத்து ஐந்நூறு" உரூபாய். என் மகள் காலால்-உந்தி தள்ளும் வாகனம் (scooter skatting) வேண்டும் என்றாள்! என்னவளை கேட்டபோது - எப்படியும் ஆயிரம் உருபாய்-க்கு மேல் இருக்கும் என்றாள்!! அப்போது - என்னுடைய இதயம் ஓர்கணம் நின்றவாறு உணர்ந்தேன்; என் மகளுக்கு (அல்லது வேறு எவருக்கும் கூட) எந்த செலவு செய்யவும் தயங்காதவன், அந்த கணம் "தயங்கி, மயங்கி" நின்றேன். என் மகளிடம் பிறகு வாங்கலாம் என்று சமாதானம் செய்யலாம் என்று பார்த்தால் அவள் விடுவதாய் இல்லை; சரி-என்று, என்னவளும் நானும் அவளை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றால் அதன் விலை சரியாய் 1199 உரூபாய். எப்போதும், என் மகளுக்கு வேறென்ன வேண்டும் என்று கேட்டு-கேட்டு செய்யும் நான் அன்று அவசர, அவசரமாய் அவளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினேன்; "வேறெதுவும் கேட்டுவிடுவாளோ" என்ற பயம்!!!

      சரியாய், இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்கள் கழித்து எனக்கு வரவேண்டிய ஓர் கணிசமான தொகை வந்தது! அதன் பின் நிறைய "வட்டிக்கு-பணம்" கூட வாங்கினேன்; என் மகளுக்கு தேவையானது அனைத்தும் செய்தேன். ஆனால், அந்த நிகழ்வு மட்டும் இன்னமும் என்னை விட்டு அகலவில்லை!!! என்னுடைய மறு-தமையன்/மறு-தந்தையின் மகிழ்வுந்தில்தான் பெரும்பாலும் சமீபத்திய ஆண்டுகளில் பயணம் செய்வேன். என்னுடைய செலவுகளை குறைக்கவேண்டும் என்று ஓர் நாள் பேருந்தில் பயணம் செய்ய தயாரானேன்; ஆனால், என் தமையனின் மனம் அதற்கு இடம் தரவில்லை. நான் வேண்டாம் என்று தடுத்தும், எனக்கு தெரியாது நான் புறப்படும் நேரம் "டாக்ஸி"யை அனுப்பிவைத்து விட்டார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், நான் சென்ற தூரத்தை காட்டிலும் - அதிக தூரமான பயணத்தை தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பேருந்தில் பயணம் செய்யும் என் தமையன் - நான் அவ்வாறு செல்லக்கூடாது என்பதற்காய் அப்படி செய்தார் என்பது தான்! அவரின் மேல் எனக்கு இருந்த அன்பின்-எல்லை மேலும் விரிந்தது; எனக்கு "டாக்ஸி" அமைத்துக்கொடுத்தார் என்பதற்காய் (மட்டும்)அல்ல!!! அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் கூட அப்படி செய்துகொள்ளாத அவர் எனக்காய் செய்த அந்த நல்ல எண்ணத்திற்காய். எனினும், மேற்கொண்டு பலமுறை பேருந்தில் தான் பயணம் செய்தேன் - ஒவ்வொரு பயணமும் மிகப்பெரிய அனுபவம் மட்டுமல்ல; பலதும் புரிந்தது! இந்த அனுபத்தை மட்டும்கூட ஓர் தலையங்கமாய் எழுதலாம்.

       இம்மாதிரி, பல நிகழ்வுகள் என்னிடம் பணம் இல்லை என்பதற்காய் நிகழ்ந்தது; ஆனால், ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு "பெருத்த மனவலியை" கொடுப்பினும் - பல புரிதல்கள் எனக்கு தோன்றின. வெகு-நிச்சயமாய், என் மகளுக்கு "ஓர் பொருளை" நான் தயங்கி வாங்கிக்கொடுத்த அந்த கணம் என்னை பலமுறை-என்னுள் புரட்டிப்போட்டது. என் நிலையில் இருக்கும் ஓர் தகப்பன் என் மகளின் வயதுக்கு என்ன சேமித்து வைத்திருக்க எண்ணுவானோ - அதற்கு சற்றும் குறைவில்லாது நான் அவளுக்காய் சேமித்து வைத்திருப்பினும், ஏன் எனக்கு அந்த சூழல் வந்தது? இனி அவ்வாறு வராது இருக்க என்ன செய்யவேண்டும் என்று எண்ணத் துவங்கினேன். "இனியாவது, சற்று சுயநலமாய்" இருக்க பழகவேண்டும் என்பது புரிந்தது; எனக்காய், எனக்கே-எனக்கு மட்டுமாய் என்று நான் சேமிக்க ஆரம்பிக்க/பழக வேண்டும் என்பது புரிந்தது. இதிலென்ன பெரிய விஷயம்? பலரும் அப்படித்தானே செய்கிறார்கள் எனலாம்; அது உண்மையும் தான்! ஆனால், "பணம் எனும் அந்த பொருள்" மேல் எனக்கு எந்த நாட்டமும் இல்லை. பலரும் எனக்கு உதித்த சிந்தனை போல்(தான்) இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எனக்கு அந்த சிந்தனை வந்தது எனக்கு நேர்ந்த நிகழ்வுகளால்! அந்த நிகழ்வுகள் தந்த புரிதல்களால்!! அதற்கு நான் இழந்தது அதிகம்; சந்தித்த அவமானங்களும் அதிகம்; அதனால் தான், இந்த எண்ணத்தை அழுந்த சொல்கிறேன்; இது வெகு நிச்சயமாய், பலருக்கும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாய் நம்புகிறேன்.

      இந்த வயதில், என் மகளுக்கு அந்த நிகழ்வும் - அதன் விளைவுகளும் புரிந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால், அவள் வளர்ந்த பின் - இம்மாதிரி ஓர் சூழல் "மீண்டும்" நேரக்கூடாது என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன். பல மாதங்கள், என்னப்பனின் "சம்பள-உரையை" அப்படியே வாங்கிசென்றிருக்கிறேன்; ஒரு முறை கூட அவர் முகம் சுளித்ததில்லை! என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் விளைவாய் கூட இருக்கலாம்!! அதை இப்போது நான் மகளிடம் காட்டவேண்டும் அல்லவா? அதற்கு நான் அவரைக்காட்டிலும் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் அல்லவா?? அதற்காகத் தான் மேற்கூறிய-வண்ணம், ஓர்-எண்ணம் வந்தது! இதில் விந்தையான விஷயம் என்னவெனில் - என்ன தான் நான் எனக்கே, எனக்கென்று சேமிக்க எண்ணிடினும் - அந்த சேமிப்பும் என் மகளுக்கும்; என் குடும்பத்தார்க்கும் தான் என்பதே பேருண்மை. ஆழ்ந்து நோக்கிடின், இந்த சுயநலத்திலும் ஓர் பொதுநலம் இருப்பது புரியும். இதே எண்ணத்துடன் தான் பெரும்பாலும் அனைத்து தகப்பன்களும் இருக்கிறார்கள்.  என்-மகளுடன் நான் கழித்த அந்த நாட்களை எண்ணிடும்போடு எனக்கு நேர்ந்த நிகழ்வுகளும், அவமானங்களும் "பெரிதில்லை எனினும், நான் முன்பே வீடு வாங்குவது குறித்து எழுதிய தலையங்கத்தில் குறிப்பிட்டது போல், மீண்டும் ஓர் முறை இந்த "பணமெனும் பொருள்" - எனக்கு அதில் விருப்பும், நாட்டமும் இல்லை எனினும் - என்னை "கடின சோதனைக்கு" உள்ளாக்கி இன்னுமொரு பெரிய புரிதலை உருவாக்கியிருப்பதை அழுத்தமுடன் பதிவு-செய்து இத்தலையங்கத்தை முடிக்கிறேன்.

நிகழ்வுகள் எப்படியாயினும், அவைகளின் மூலம் உருவாகும் புரிதல்களே முக்கியம்!!!

பின்குறிப்பு: அபுதாபியில் பணிமாற்றமடைந்து 2 மாதங்கள் ஆகிடினும், 1 மாதத்திற்கு முன்பே இத்தலையங்கத்தை எழுதி முடித்தும், இப்போது தான் வெளியிட முடிந்தது. முக்கிய காரணம், 4 நாட்களுக்கு முன்பு கூட என்-மகள் என்னுடன் இருந்துவிட்டு சென்றிடினும், அவளை பிரிந்திருக்கும் இந்த சூழலில் இருந்து நான் மீளவில்லை என்பதே! கூடவே, இன்னமும் நான் இந்த புதிய இடத்தில் முழுதுமாய் "செட்டில்" ஆகவில்லை என்பதே! என்ன விந்தை? "settle" என்ற வார்த்தைக்கு, சரியான "தமிழ்ச்சொல்" கிடைக்கவில்லையே???!!! என் தந்தையிடம் கூட விவாதித்தேன் - அவரும் அதற்கு நேரிடையான ஓர்சொல் இருப்பதாய் தெரியவில்லை என்றார்! இருப்பினும் நாம் அனைவரும் இந்த சொல்லாய் அடிக்கடி பயன்படுத்துகிறோம் என்பது எவ்வளவு அப்பட்டமான உண்மை??? 

பிரிவும், நினைவும்...



பிரிந்தவரின் நினைவுகள்;
பின்தொடர வில்லையெனின்!
"பிரிவின்" வலி;
பல்கிப் பெருகும்!!!

பழமையும், புரட்சியும்...



பழமையை ஆதரிப்போர்;
"புரட்சியர்" அல்லர்!
புதுமையை ஏற்கத்தெரியாத;
"மிரட்சியர்" அவர்!!!

பாலைவனச்சோலை...



அரபு-நாடுகளை உண்ணிப்பாய்;
அருகிருந்து கவனித்திடின்!
இச்சொல்லின் முழுப்-பொருள்;
இன்னவென்று விளங்கிடும்!!

உழைப்பும், ஊதியமும்...


உழைப்பும், ஊதியமும்;
ஒன்றையொன்று சார்ந்ததா?
இருப்பினேன், வருந்தியுழைப்போர்;
வறுமையின் எல்லையில்???

விளையாட்டில் ஊழல்...



விளையாட்டில், ஊழலால்...
விளையாட்டு-வீரர் வீழலாம்!
விளையாட்டின் வரலாறு...
வீழ்ந்திடுதல் "சாத்தியமில்லை"!!!

திங்கள், டிசம்பர் 03, 2012

விவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன???



    இரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள "விவாகரத்து வழக்குகள்" குறித்தது. அதில், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவகாரத்து வழக்குகள் நிலுவையில்(மட்டும்); உள்ளன என்றும், பெரும்பாலும் "பெண்கள் தான் அதிகம்" விவகாரத்து கோருகின்றனர் என்ற புள்ளிவிவரமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த செய்தியை படித்தவுடன், பல நாட்கள் என்னுள் உரையாடிக்கொண்டிருக்கும் விசயங்களில் ஒன்றான இந்த விவாகரத்து விசயமாய் ஓர் தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. கணவன், மனைவி இருபாலரும் தான் விவகாரத்து வழக்குகளுக்கு காரணம் எனினும் - பெண்கள் தான் அதிகம் விவாகரத்து கோருகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை ஆழ ஊடுருவ வேண்டும் என்று தோன்றியது. பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்/ கொடுமைக்கு ஆட்படுகின்றனர் என்று எண்ண தோன்றினாலும், உண்மை-நிலை அதுவல்ல. வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் தம்பதையர்களுள் வேண்டுமானால் - அதிகமான பெண்கள் அடக்கப்படுகின்றார்கள் என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால், மத்திய மற்றும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த தம்பதியர்க்குள் இந்த உண்மை முற்றிலும் மாறுபடுகிறது. மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோரில் மிகக் குறைந்தோரே - விவகாரத்து வரை செல்கின்றனர் என்பதே பேருண்மை; அவர்கள், சமுதாயம், நியாயம்/தர்மம் இவற்றை "இன்னமும்" நம்பிக்கொண்டிருப்பதால் வாழ்க்கையை சகித்து வாழ்கின்றனர்; அவர்களுக்கு விவாகரத்தை எதிர்கொள்ளும் சக்தியில்லை.

         ஆனால், மத்திய மற்றும் மேல்தட்டு மக்களிடையே இந்த நம்பிக்கைகள் அதிகம் இருப்பதில்லை; அவர்கள் வசதிகள் படைத்தோர் மட்டுமல்ல - பெரும்பான்மையான பெண்கள் "நல்ல" வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர். "பாரதி" போன்றோர் (கணவாய்)வேண்டிட்ட பெண்-விடுதலை "நாட்டின்-சுதந்திரம்" போன்றே சரியாய் புரிந்து கொள்ளாது போனது "துரதிஷ்டமானது". சம்பாதிப்பதும், திருமணமான பின்னும் தந்தை வீட்டில் இருப்பதும்-தான் வாழ்க்கை என்று தவறுதலாய் புரிந்துகொண்டுள்ளனரோ என்ற பயம் வருகிறது. அதனால் தான், எதற்கெடுத்தாலும் "விவாகரத்து" என்கின்றனர்; ஆரம்பத்தில், கணவனை பயமுறுத்த/தன்வழிக்கு-கொண்டுவர "என்று" துவங்கினாலும் - பின் மனதளவில் பெரிய-ஆயுதம் போல் "மாயையாகி" நீதிமன்றம் வரை செல்வதை தான் மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரம் உணர்த்துகிறது. இந்த பெண்கள் அடிப்படையான ஒன்றை மறந்து விடுகின்றனர்; திருமணத்திற்கு (அல்லது பெரும்பாலும் வேலைக்கு செல்லும்) முன்னர் அவர்கள் "தந்தை" எனும் ஆணை சார்ந்திருந்ததை உணருவதே இல்லை. ஆனால், திருமணமான உடனேயே கணவன் தன்னை ஆட்படுத்த முயல்கிறான் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதன் பின், எந்த பிரச்சனை ஆனாலும் - பெற்றோர் வீடு சேர்ந்து மீண்டும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்க சித்தமாகின்றனர். அவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பாகவும், சந்தோசமாகவும் இருப்பர்; ஆனால், கணவனை விடுத்து அனுபவிக்கும் அந்த வாழ்க்கை எத்தனை நாட்கள் நீடிக்க முடியும்? அல்லது நீடிக்கவேண்டும்??

     ஒருவேளை, தன் தந்தையிடம் கிடைக்காத சுதந்திர-உணர்வை "கணவனிடம்" வெளிக்காட்ட நினைக்கின்றனரோ? சிறு விசயத்திற்கு கூட விட்டுக்கொடுக்காது; ஏன், தந்தையின் இல்லம் செல்லவேண்டும்?? நன்றாய் நினைவில் கொள்ளுங்கள்; கணவனை உதறிவிட்டு - தன்னிடம் மீண்டும் வரும் ஓர் பெண்ணின் தந்தையின் பொறுப்பு; பல மடங்குகள் அதிகமாகிறது (அந்த பெண்ணின் தாய்க்கும்; அவளின் மறு-தாய்க்கும் இடையேயும் இதுபோன்ற ஒப்பிடுதல் வேண்டும்!!!). தன் உயிர் என்பதால் "அந்த தந்தை" காண்பிக்காது மறைக்க எண்ணினாலும்; அவர்களின் கவலை "கட்டுப்பாடுகளாய்"தான் வெளிப்படும்! அதையும் அந்த பெண்கள் ஏற்கிறார்கள்! அதில், மிகக்குறைந்த விழுக்காட்டை தன் கணவனிடம் காட்டலாமே? இந்த மாதிரி ஓர் சூழ்நிலையை "திருமதி ஒரு வெகுமதி" திரைப்படத்தில் ஓர் அற்புதமான தந்தை அருமையாய் சமாளிப்பார். அந்த மாதிரி தான் "தந்தை" என்பவர் செயல்படவேண்டும்; அது பல விவாகரத்து வழக்குகளை அடியோடு அழித்துவிடும். திருமணமான பின், என் தமக்கை எப்போது வீட்டிற்கு வரினும் - எனக்கு அது பேரானந்தம்; எப்படியாயினும் விடுப்பில் வீடு சென்றுவிடுவேன். ஆனால், என் மறு-தமையன் கூறிய நேரத்திற்கு ஓர்-நாழிகை அதிகமாயினும் "எப்போது கிளம்புகிறாய்" என்று நான் கேட்கத்தவறியதே இல்லை! என் தமக்கையின் குடும்பம் தான் என் நினைவுக்கு வரும். ஆனால், இன்று வரை - எங்கள் உறவில் சிறு கீறல் கூட விழுந்ததில்லை. என் "மகளிடமும்" கண்டிப்பாய் அதுபோன்றே இருப்பேன்!!! 

        இப்போது பல மனைவிகள் - திருமணமான உடனே கணவன் என்பவன் தன் சொந்தம்; தன்னை தவிர அவன் குடும்ப உறுப்பினர்கள் எவரிடமும் உறவு கொள்ளக்கூடாது; அவர்களுக்கு பொருளுதவி ஏதும் செய்யக்கூடாது என்று விரும்புகின்றனர். "இது மாதிரி நினைக்கும் ஆண்களும் உண்டெனினும்", கண்டிப்பாய் அந்த மாதிரி நினைக்கும் பெண்கள் தான் அதிகம். இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை எனினும், பெரும்பான்மையான ஆண்கள் அதை செய்ய முயல்கின்றனர்; ஆனால், உடனடியாகவோ அல்லது முழுமையாகவோ செய்தல் எல்லோராலும் இயலாது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கிடையில், எதற்கெடுத்தாலும் - பெண்கள் மட்டும் அவர்களின் "தாய்-தந்தை" வீட்டிற்கு செல்வது எந்த விதத்தில் நியாயம்? அவர்களும் - "தான்-தன்" கணவனுக்கு மட்டும் தான்; என்று தானே இருக்கவேண்டும்?? பின் ஏன் புகுந்த வீடு செல்கின்றனர்? மாறாய், ஏதேனும் ஓர் விடுதியை சென்று சேரலாமே! ஆக, பெண்களுக்கு அவர்களின் பெற்றோரிடம் எப்போதும் நல்ல உறவு வேண்டும்; அவர்கள் எப்போது நினைத்தாலும் அவர்களிடம் தஞ்சம் புகலாம்; அவர்களின் பெற்றோரும் அவர்களை நல்வழிப்படுத்தி திருப்பி அனுப்புவதில்லை! அந்த கணவனின் நிலையை உணர்வோரும் எவருமில்லை! இங்கு ஏனோ எனக்கு, ஆண் தான் "மிகுந்த பொறுமைசாலி" மற்றும் "துரதிஷ்டவாதி" என்று பறைசாற்றிட தோன்றுகிறது; அவன் பெற்றோரிடமும் செல்வதில்லை; மனைவியும் உடனில்லை; அவனைப் பற்றி வருத்தப்பட அவனுடைய பெற்றோர் தவிர யாரும் இருப்பதில்லை.

          இப்படி பிரிந்து செல்லும் மனைவிக்கு ஓர் குழந்தை மட்டும் இருந்துவிட்டால், அந்த கணவனுக்கு வாழ்க்கை என்பது வெகுநிச்சயமாய் "நரகம்" - இறக்காமலே நரகத்தை காண்போர் அவர்! அந்த மனைவியும், பெற்றோர் வழிகாட்டுதல் இல்லாது தவறுமேல் தவறு செய்து கொண்டே செல்வாள். மிகச்சமீபத்தில் என் நண்பனின் வாழ்வில் நிகழ்ந்தது, கீழ்வருவது: அவனின் மகள் - ஓர் அற்புதம்! அவளை நான் கடைசியாய் சந்தித்தபோது அவளுக்கு 4 வயதிருந்திருக்கும்; அப்படி ஓர் அருமையான, மரியதையான பேச்சு; நடத்தை! உண்மையில், என் மகளை விட அந்தப்பெண்ணை உயர்த்தி சொல்ல நான் (எப்போதும்)தயங்கமாட்டேன்; அப்படி ஓர் அருமையான பெண்குழந்தை அவள். என்னுடைய, இன்னுமொரு நண்பன் ஓர்-நாள் அந்த குழந்தையை விட்டுவிட்டு அவனால் எப்படி விவாகரத்து செய்ய முடிந்தது? என்று வாதிட்டான்; அவனைப்போல் பல நண்பர்களும் வாதிட்டிருக்கக்கூடும். ஆனால், நான் நினைத்தது வேறு! என் மகளை விட, நானே அந்தக்குழந்தையை உயர்த்தி நினைக்கும்போது; அவளின் தந்தையாகிய என் நண்பன் எப்படியெல்லாம் எண்ணி இருப்பான்! அப்படிப்பட்டவனை - தன் தாயுடன் சேர்ந்துகொண்டு "விவாகரத்து" செய்யும் அளவுக்கும் ஓர் மனைவி செய்திருக்கிறாளே!! என்று தான் விக்கித்த்து போனேன்; 5 ஆண்டுகள் தன் மகளைப் பிரிந்து எத்தனை "வலிகளை" அவன் அனுபவித்து இருப்பான்? அதையெல்லாம் கடந்து - அவன் விவாகரத்து செய்திட "ஓர்முறை இறந்து - இன்னுமொரு முறை அவன் பிறந்து வந்திருப்பான்" என்று நான் உறுதியாய் நம்புகிறேன். 

      மனைவியர்களே! உங்கள் தந்தையிடம் காட்டும் அந்த உறவில் ஓர் பகுதியை உங்களின் கணவனிடம் காட்டுங்கள். இதை விளக்கிடுதல் கடினமாயினும், என்னால் இயன்ற வரை விளக்கி உள்ளேன்; இதை ஏற்றுக்கொள்ளுதல் மேலும் கடினம் எனினும் - கண்டிப்பாய் இது, "இயலாததல்ல"! முயற்சி செய்யுங்கள்; கண்டிப்பாய் "பிரசவ வேதனையை" விட கணவனின் எந்த செயலும் கொடிதாய் இருக்கமுடியாது; இது உங்கள் இருவர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல - உங்களின் "உயிரான மகள் மற்றும் மகன்" சம்பத்தப்பட்ட விசயம் மற்றும் வாழ்க்கை. 
     கனவன்களே! உங்களின் மனைவியின் எந்த செய்கையையும் மன்னிக்க தயாராகுங்கள்!! உங்கள் மகளிடம் காட்டும் உறவின் வலிமையில் ஓர் பகுதியை உங்கள் மனைவியிடன் காட்டுங்கள். இந்த பிரச்சனை காரணமாய் நீங்கள் உங்கள் மகள் (அல்லது மகனை) பிரிந்து அனுபவிக்கும் சங்கடங்கள் "பிரசவ வேதனைக்கு" சற்றும் குறைவில்லாதது என்பது புரிகிறது! ஒன்று "உடல்" சம்பந்தப்பட்டது; இன்னொன்று "மனம்"     சம்பந்தப்பட்டது - வித்தியாசம் அவ்வளவே!! வேதனை ஒன்றிற்கொன்று சற்றும் குறைந்தது அல்ல; எனினும் வாழ்க்கை தான் முக்கியம்!!! எனவே... 

உறவை நமக்குள்ளும் பகிர்ந்து, விவாகரத்துகளை குறைப்போம்!!!         

தந்தையின் வளர்ச்சி...


என்மகள் மட்டுமல்ல!
என்னையும் அறியாது;
வளர்கிறேன் நானும்...
இணையாய், தந்தையாய்!!

ஏனில்லை, இப்போது???



எவரும் கற்றுக்கொடுக்காது!
எல்லோரையும் அனுசரிக்கும்;
எல்லா சூச்சுமங்களையும்!!
"இளமையில்" கொண்டிருந்தோமே?
எங்கேயவை?? இப்போதிருப்பின்;
எத்தனை உதவியாயிருக்கும்???

சத்தியமான சுதந்திரம்...



சுயத்திற்காய், எல்லாவற்றையும்!
செய்திடுதல் மட்டுமன்றி;
எல்லோருக்கும், எண்ணத்தாலும்!!
எல்லையின்றி, வழங்கிடுதலே;
"சத்தியமான" சுதந்திரம்!!!

அன்றும், இன்றும்: பணம்!!!


அன்று…
உறவு, உணர்வு
உண்மை, உவப்பு
எல்லாமும் இருந்தது;
"பணத்தை" தவிர!

இன்று…
எதுவுமே இல்லை;
"பணத்தை" தவிர!!