புதன், டிசம்பர் 24, 2014

உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா...




       என்மகளுக்கு நேற்று (திசம்பர் 23) முதல் அரையாண்டு விடுமுறை. வழக்கம்போல், நேற்று மாலை ஆவலுடன் அலைபேசியில் அலவலாவிக்கொண்டு இருந்தபோது அவள் "நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்றாள். எனக்கு மிகப்பெரிய ஆனந்த-அதிர்ச்சி. 5-வயது மகளா இவள்? என்ற கேள்வி (மீண்டும்) எழுந்தது. இந்த தலைமுறை குழந்தைகள் இம்மாதிரியான முதிர்ச்சியான கேள்விகளால்/பார்வைகளால் நம்மை திகைக்க வைப்பதை பலரும் அறிந்ததே! நானும், அம்மாதிரியான பதிவுகள் பலவும் இட்டிருக்கிறேன். இத்தனை நாள் அவள் பள்ளி/படிப்பு என்ற தன் கடமையை சரிவர செய்து வந்தாள்; என்னைப்பற்றிய நினைப்பு அதிகம் இருப்பதாய் கூட அவள் காட்டியதில்லை! ஏன்... பல நேரங்களில் அலைபேசியில் உரையாடக் கூட அவள் மறுத்ததுண்டு. ஆனால்... நேற்று?! பின்னர் தான் அவளின் நியாயம் புரிந்தது. நான் என் கடமையை சரியாய்  செய்திருக்கிறேன். இப்போது, நான் அவளுடன் இருப்பது என் கடமையல்லவா?!

      ஒருவேளை "டே! அப்பா!!" உன் கடமையை தவறி விட்டாயே! என்பதைத்தான் அப்படி நாகரீகமாய் சுட்டிக்காட்டி இருப்பாளோ?! என்று யோசித்தேன். ஆம்... நான் நேற்றைய முன்தினமே அவளை சென்று சேர்ந்திருக்க வேண்டும்; இனியொரு முறை இத்தவறை செய்யக்கூடாது என்ற உறுதி கொண்டேன். மன்னித்து விடு... மகளே! இனியொரு முறை, இத்தவறு நிகழாது; நானும் என் கடமையை சரிவர செய்வேன். "ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்ற அந்த வார்த்தைகள் என்னுள் மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன! ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு புரிதலை விதைக்கிறது. கண்டிப்பாக... அவை அவளின் அடிமனதில் இருந்து வந்தவை! இன்று காலை பேசும்போது கூட மீண்டும், மீண்டும் "இன்னைக்கே வாங்கப்பா!" என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள்; என்னால், மீண்டும், மீண்டும் அவளுக்கு ஏமாற்றும் தரும் அந்த பதிலைக் கூற தயங்கியபோது, நல்லவேளையாய் அலைபேசியை துண்டித்துவிட்டது; நானும் அப்படியே விட்டுவிட்டேன்.

நானும் "உன்னை ரொம்ப மிஸ் பண்ட்றேன், மகளே!"   

வெள்ளி, டிசம்பர் 12, 2014

லிங்கா - சிங்கமும்; சிங்கிள்-உம்...


{லிங்கா படம் பார்க்கும் முன்னேயே; விமர்சனம் கேட்டே, என்னுள் எழுந்த பஞ்ச்!!!}

சிங்கிளா வர்றது எல்லாம் சிங்கமும் இல்லை!
சிங்கம் சிங்கிளாத்தான் வர்றனம்னு அவசியமும் இல்லை!!

ஏன்னா... 

"லிங்கா"வுல சிங்கம் "டபுளா(வும்)" வந்திருக்கு!!!


திங்கள், டிசம்பர் 08, 2014

நானும்; என் கைக்கடிகாரமும்...



      திசம்பர் 2-ஆம் தேதி முதன்முதலாய் நானே, எனக்கென ஒரு கைக்கடிகாரத்தை வாங்கினேன். அதுதான் புகைப்படத்தில் உள்ளது; நீண்ட நாட்களாய் திட்டமாய் இருந்தது அன்று தான் செயலாய் ஆனது. மிகவும் மகிழ்ச்சி தந்த செயல்களில் ஒன்று. இதுவரை, என் உறவுகளும்; நட்புகளும் தான் எனக்கான கைக்கடிகாரத்தை வாங்கி கொடுத்தனர். எனக்கும்; என் கைக்கடிகாரத்துக்கும் நிறைய உணர்வுகளும்/தொடர்புகளும் உள்ளன. கண்டிப்பாக, இம்மாதிரியான எண்ணங்கள் உங்களுக்குள்ளும் இருக்கும்; எனவே, என் கைக்கடிகாரத்தின் மீதான என் பார்வையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இத்தலையங்கம். இளவயதில் என்னுள் ஒரு அர்த்தமற்ற கர்வமும்/எண்ணமும் இருந்தது; அது கைக்கடிகாரம் அணியக்கூடாது என்பது. காரணம்; நான் நேரம் பார்த்து உழைக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை! அதனால் வேண்டாம் என்பதே என் அன்றைய புரிதல். ஆனால், இன்று கைக்கடிகாரத்தின் மேல் எனக்கிருக்கும் புரிதலும்/உறவும் வேறு விதமானது.

         1997-இல் முதன்முதலாய் என் சக-ஊழியரான நட்பொருவர் ஒரு கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.  அவரின் அன்பை நிராகரிக்க விரும்பாததால்; என்னுடைய கொள்கையை??!! விட்டு கொடுத்து அதை அணிந்தேன். அதன் பின்னர், என் முக்கிய உறவுகள் எனக்கு சில கடிகாரங்களை கொடுத்தனர். திடீரென 2008-இல் என் உறவுகள் ஒரே நேரத்தில் 4 கைக்கடிகாரங்களைப் பரிசளித்தனர். எவ்வளவு முயன்றும்; ஒன்றுக்கு மேற்பட்டு கொடுப்பதை தடுக்க முடியவில்லை. மீண்டும், அன்புக்காய் அவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியாதாயிற்று. இந்த கைக்கடிகாரத்தை வாங்கும் முன் 5 ஆண்டுகளுக்கும் மேலாய் நான் அணிந்திருந்த கைக்கடிகாரம் என் "மிக முக்கிய" உறவு பரிசளித்தது. ஆம்! அது என்னவள் எனக்கு வாங்கி கொடுத்தது. அதை முடிந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டியே இத்தனை ஆண்டுகள் காத்திருந்து இதை வாங்கினேன். அந்த திட்டம் கிட்டத்திட்ட 4 ஆண்டுகள் கால திட்டம். இப்போது தான் அது நடந்தேறியது.

          எனக்கு என் கைக்கடிகாரமே ஒரு தனிப்பட்ட உறவு. ஆம்! நான் கைக்கடிகாரத்தை ஒரு உறவாய் பார்க்கிறேன். அதனால், ஒரே நேரத்தில் பல கைக்கடிகாரங்களை வைத்திருப்பது என் மனதுக்கு ஒவ்வாத ஒன்று! அது தேவையற்றதும் கூட, என்பது வேறு விசயம். ஆனால், எனக்கு அதில் விருப்பமே இல்லை. ஆனாலும், என் உறவுகளுக்காய் அதை செய்தேன். கண்டிப்பாக, எனக்காக இத்தனை கைக்கடிகாரங்கள் வாங்கிக் கொடுக்க இத்தனை உறவுகள் இருக்கின்றன! என்பது மகிழ்வான விசயம் தான். ஒரு கைக்கடிகாரம் கூட கிடைக்கப்பெறாதவர்கள் ஏராளம்! அதனால், ஒரு விதத்தில் பலவற்றை உபயோகித்த போது இருந்த; அந்த வலி ஒரு விதமான "இன்ப"வலி தான் என்பதை மறுக்கவில்லை! ஆனால், நான் போதுமான அளவிற்கு அந்த "இன்ப"வலியை அனுபவித்து விட்டேன். எனவே, இந்த நேரத்தில் எனக்கிருக்கும் ஒரேயொரு விருப்பம்; இன்னொரு முறை எனக்கு எவரும் ஒரு கைக்கடிகாரத்தை கொடுக்கக்கூடாது என்பதே!

     இந்த விருப்பத்திற்கு காரணம், நான் கைக்கடிகாரத்தை மேற்கூறிய வண்ணம் ஒரு உறவாய் பார்ப்பது தான். ஆம்! நம் உள்ளங்கை பிடித்து நடந்து; அன்பு காட்டும் உறவுகள் இருக்கின்றன! நம் தோல் தட்டி/அணைத்து அன்பு காட்டும் உறவுகள் இருக்கின்றன. கட்டியணைத்து அன்பு காட்டும் உறவுகளும் உள்ளன; இம்மாதிரி பலவகைகளில் அன்பு காட்டும் பல உறவுகள் உள்ளன. ஆனால், நம் மணிக்கட்டை தொட்டு/தழுவும் உறவுகள் இருப்பதாய் தெரியவில்லை. மருத்துவர் கூட ஒருவரின் உயிரை சோதிக்கும் போது அல்லது நோயை சோதிக்கும் போது; ஒருவரின் மணிக்கட்டை தொட்டு தான் உறுதி செய்கிறார். அப்படிப்பட்ட அந்த உன்னதமான மணிக்கட்டை ஒட்டி உறவாடும் எந்த உறவும் இல்லை என்பதே என் பார்வை. ஆனால், அதை நம் கைக்கடிகாரம் உன்னதமாய் செய்து வருகிறது! அதனால் தான், எனக்கு கைக்கடிகாரம் என்பதே ஒரு உறவு! என்பதாய் படும். அந்த உறவு ஒரு நேரத்திற்கு ஒன்றாய் தான் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

      அதை இழந்த பின் அல்லது வேண்டுமளவு உபயோகித்த பின்னர் வேண்டுமானால்; வேறொன்றை வாங்கலாம்! ஒரு நேரத்தில் ஒன்றாய் தான் இருக்கவேண்டும். அதை உறவாய் பார்ப்பதாலோ?! என்னவோ; நான் கைக்கடிகாரத்தை இறுக்கமாகத்தான் அணிவேன். பலரும் அப்படி அணியக்கூடாது! என்று அறிவுறுத்தியும், இன்றுவரை அதை மாற்றியதில்லை! என் உறவை இருக்க அணைப்பது போலவே, என் கைக்கடிகாரத்தையும் அணிய விரும்புகிறேன். அந்த தடம் எப்போதும், என் கையில் இருக்கும். முதன் முதலாய் கிடைத்த கைக்கடிகாரத்தில் விழுந்த கீறலால்; நான் கைக்கடிகாரத்தை என் உடலோடு ஒட்டி இருக்கும் வண்ணம் உட்புறமாய் தான் அணிவேன். அது, மணி பார்க்கவும் வசதியாய் இருக்கும். குளிக்கும் நேரம்/கணினியில் பணிபுரியும் நேரம் (கீரலை தவிர்க்க!)/கடின வேலை செய்யும் நேரம் - போன்ற நேரங்கள் தவிர; என் கைக்கடிகாரம் எப்போதும் என் மணிக்கட்டோடு இருக்கும். இன்னும் பல விசயங்கள் உள்ளன - கைக்கடிகாரம் பற்றி எழுத! எனவே, என்னளவில்...

கைக்கடிகாரம் என்பது; என் இன்னுமோர் உறவு!!!  

மகிழ்வுந்து; மகிழ்வு-தந்ததா???



        நான் முன்பொரு முறை கூறியிருந்த வண்ணம், அபுதாபி வந்ததும் ஒரு மகிழ்வுந்து வாங்கினேன். கண்டிப்பாக என்னுடைய வசதிக்காய் அல்ல! என்மகளும், என்னவளும் இங்கு வந்து இருப்பதாய் ஒரு திட்டம் இருந்தது; அதுதான் முதற்காரணம். இருப்பினும், விடுமுறையில் வரும்போது அவர்களை வசதியாய் அழைத்து செல்லவேண்டும் என்ற ஓர் எண்ணம். இவை தவிர; நான் இதை ஒரு சேமிப்பாய் பார்த்ததும் ஒரு காரணம். ஆம்! மாதந்தோறும் வங்கிக்கு சிறு தொகை தான் கட்டி வருகிறேன். இன்னும் சில மாதங்களில் அக்கடன் முழுதும் அடைந்து; வண்டி என்னுடையதாகும். பின்னர், என்ன விலைக்கு அது விற்கப்பட்டாலும் அது ஒரு சேமிப்பே! ஆனால், உண்மையில் மகிழ்வுந்து எனக்கு மகிழ்வு தந்ததா?! என்று யோசிக்க ஆரம்பித்தேன். என்னதான் நான் சௌகர்யமாய் சென்று வந்திடினும்; என்மகளும்/என்னவளும் இங்கு வரும்போது அவர்களை அதில் அழைத்து சென்று மகிழ்ந்தினும் - மகிழ்வுந்து எனக்கு பெரிய மகிழ்வு-தந்திருக்கிறதா என்பதில் ஐயம் இருக்கிறது!

       அதற்கு காரணம் - என்மகளும்/என்னவளும்; இந்தியாவில் வெய்யிலில் இருசக்கர வாகனத்தில் செல்வதே! என்மருதந்தை மகிழ்வுந்து வைத்திருப்பினும்; என்னவள் அதை உபயோகிப்பதில்லை. வேறொன்று வாங்கவும் ஒப்புக்கொள்ளவில்லை. இருசக்கர வாகனத்தில் செல்வதே; நடைமுறையில் எளிதென்பதால் மறுத்து விட்டாள். ஆனாலும், அவர்கள் வெய்யிலில் செல்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அதுபோலவே, இன்னமும் எங்கு சென்றாலும் பேருந்தில் பயணிக்கும் என் பெற்றோர்! அதிலும், விசேட நாட்களில் கூட்டத்தினூடே பயணிக்கும் கொடுமை. அதிக செலவு என்பதால்; வாடகை-மகிழ்வுந்திலும் பயணிப்பதில்லை. அவர்களுக்கு ஒரு மகிழ்வுந்து வாங்கிக் கொடுக்கும் வசதியும் வாய்க்கவில்லை; மேலும், எவர் அதை பராமரிப்பது என்ற கவலை. இந்த வெய்யில் தன்மையில்; எவரேனும், பேருந்து நிறுத்தத்தில் நிற்பதை/அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வதைப் பார்த்தால் - எனக்கு, இவர்கள் நால்வரின் நினைவுதான் வரும். என்  கலங்கும்; எனவே...

மனதளவில்; மகிழ்வுந்து எனக்கு மகிழ்வு தரவில்லை!!!

டையாப்பர்-உம் பேட்-உம்...



     குழந்தைகளுக்கான "டையாப்பர்"-ஐ எந்த தயக்கமும் இல்லாமல் வாங்கும், ஆண்; பெண்களுக்கான மாதவிடாய் காலத்து "பேட்"-ஐ வாங்க தயங்குவதேன்?!

      அடப்பாவிகளா... இரண்டுமே "உடற்கழிவை" சேகரிப்பதுதான்!   

களவாடிய பொழுதுகள்...



      களவாடிய பொழுதுகள் திரைப்படத்தில் "தேடித் தேடிப் பார்க்கிறேன்! அவன் ஓடி, ஓடி ஒளியிறான்!!" என்ற பாடலை இதுவரைக் கேட்காதவர்கள்; ஒருமுறை(யேனும்) கேளுங்கள்!! அதில் வரும் அனைத்து வரிகளும்  மிகப்பிரம்மாதம் எனினும்...

"ஒருவனுக்கு ஒருத்தியின்னா; அதுவும் இங்கே காவியம்!
அஞ்சு பேருக்கொருத்தியின்னா; அதுவும் இங்கே காவியம்!!"

என்ற வரி எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை! புரிதல்களை!! தேடல்களை!!! உருவாக்கியது; இன்னமும் அதைப்பற்றி ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறேன். கிராமிய மனம் மிதக்கும் இன்னிசை-குரல்! இயல்பான பேச்சு தமிழ்!! ஆழ்ந்த சொற்களும்; கருத்துகளும்!!! "வியப்பானவை" என்ற என் பாடல் தொகுப்பில் சமீபத்தில் இடம் பெற்ற பாடல். இதுவரை எத்தனை முறைகள் அப்பாடலை கேட்டிருக்கிறேன் என்று தெரியவில்லை! 

        தங்கர்பச்சான் எனும் கலைஞனின் எல்லாப் படங்களும் நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை! இந்த படமும் அதற்கு விதிவிலக்காய் இருக்காது என்று திடமாய் நம்புகிறேன். வாய்ப்பு கிடைப்போர், இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுகிறேன், நட்புகளே! இம்மாதிரியான கலைஞன் மென்மேலும் பல படைப்புகள் படைத்திட அது கண்டிப்பாய் உதவிடும்!!  

ஜெய்ஹிந்த் 2...



        ஜெய்ஹிந்த் 2 - அருமையான கதைக்களம்! அர்ஜூனின் சமுதாய அக்கறையை உணர்த்தும் இன்னுமொரு படம். இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே பாடல்களை கேட்டு வந்ததாலும்; கதையின் கரு நான் நிறைய-எழுதிய "கல்வி"யை மையப்படுத்தியது என்பதாலும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. முதல் 1 மணி நேரம் வரை; எதிர்பார்ப்புக்கு எந்த குறைவும் இல்லாமல் இருந்தது! நானும், இத்திரைப்படம் பற்றி என் பார்வையை பதியவேண்டும் என்று குறிப்பும் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், திரைக்கதையை அதிரடியாய் துவக்க வேண்டிய இடத்தில் "அதீத மசாலா"நெடியை தூவ ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர், சமூக அக்கறையுள்ள ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அருமையான கதையை திரைக்கதையால் சிதைத்துவிட்டார் அர்ஜூன்.

       படம் பார்த்த பின்னர், அது பற்றிய என் பார்வையை எழுதினால் - படத்தின் வியாபாரத்திற்கு நன்றாக இருக்காது என்பதால் எழுதவில்லை!

செவ்வாய், டிசம்பர் 02, 2014

காவியத்தலைவன் (2014)



        காவியத்தலைவன்! - பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு காவியத்தை தலைமையேற்று நடத்தும் ஒருவனின் கதை. தமிழ் திரைப்பட சூழலில், பெரும்பான்மையில் இப்போது வந்துகொண்டிருக்கும் "காதல்"கருமங்களின் மத்தியில் "மிகவும்"மாறுபட்ட கதைக்களம் (புதிய களமல்ல! ஆனால், இப்போதைய சூழலில் மாறுபட்ட களம்!) கொண்ட ஒரு திரைப்படம். இந்த ஒன்று மட்டுமே போதும்! இந்த படத்தை பார்க்கும் எண்ணம் எழ; எனவே, இந்த படத்தை கண்டிப்பாய் பார்க்கலாம். ஆனால், பெரிய-எதிர்பார்ப்பு வேண்டாம்; ஏனெனில், பெரிய எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரக்கூடும்.
  • மேடை நாடகத்தை அடிப்படையாக கொண்ட படம்! என்னளவில், இந்த படத்தை ஆதரிப்பதற்கு காரணம்; நாடகம் எனும் கலை இப்போது எனக்கு கொடுத்திருக்கும் புரிதல். ஆம்! நாடகம் என்பது மனித இயல்புனூடே பயனிப்பது; அங்கே, மனிதனால் இயலாத காட்சிகள் எதுவும் இடம்பெற வாய்ப்பே இல்லை; சராசரி மனிதானால் இயலாத காட்சிகள் இருக்கலாம்! அதில் தவறேதும் இல்லை. மிகச்சிறந்த உதாரணம்: திரைப்படங்களில் நாயகன் "அசாத்திய ஸ்டைலில்" ஒருவரை உதைக்க, அந்த இன்னொருவர் 10/15 அடிகள் அப்படியே பறந்து அல்லது பூமியில் சரிந்து கொண்டே செல்வது!!
  • திரைப்படத்தில் கற்பனையையும் தாண்டிய அளவில் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் நம்முள் இருக்கும் இயல்பு தன்மையை நம்மிலிருந்து அகற்றிவிட்டது! என்றே தோன்றியது. காதல், சண்டை, உறவுச்சிக்கல் - இப்படி எதை எடுத்துக்கொண்டாலும், திரைப்படங்கள் நம் இயல்பை மாற்றி விட்டது என்றே தோன்றியது. அதனால், நம் எதிர்பார்ப்பும் பன்மடங்கு பெருகி எல்லாவற்றிலும், பெருத்த சிக்கலை உருவாக்கிவிட்டது என்று தோன்றியது. 
  • திரைப்படங்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று சொல்ல வரவில்லை! ஆனால், திரைப்படங்கள் "உணர்ச்சியின்"அடிப்படையில் நம்மை பெரிதும் பாதிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை!  "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்..." என்ற வள்ளுவன்  வாக்கு போல்; நாம் தான் அவற்றில் இருக்கும் மெய்ப்பொருளை காணுதல் வேண்டும்.
  • இந்த படத்தை பார்த்ததும் என்னுள் ஒரு குற்ற-உணர்வு எழுந்தது. ஆம்! 1990-களின் ஆரம்பத்தில், எங்கள் ஊரில் திருவிழா/பண்டிகை காலங்களின் போது, ஆட்சி செய்து கொண்டிருந்த "தெருக்கூத்து" எனும் கலையை "வீடியோ"மூலம் திரைப்படங்களை பார்க்க வைத்த செயலில் எனக்கு (மற்றும் என் குடும்பத்தார்க்கு) முக்கிய பங்கு உண்டு. நான் செய்யவில்லை எனினும்; அது நடந்திருக்கக்கூடும் என்று சொல்லி நியாயப்படுத்த விரும்பவில்லை! உண்மையில், அப்படித்தான் அது நடந்திருக்கும். இருப்பினும், எனக்கு அந்த குற்ற உணர்வு இப்போது இருக்கிறது. எங்கள் கிராமத்தில் இருந்த கலைஞர்கள் எல்லோருமே இன்று சென்னை போன்ற இடங்களில் என்னென்ன வேலைகளோ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 
சரி... என்னுடைய புரிதல் தாண்டி; திரைப்படத்திற்கு வருவோம்!
  • இதுபோன்ற படங்களில் ப்ரித்விராஜ் முன்பே நடித்து நிரூபித்து இருக்கிறார் எனினும், சித்தார்த்திற்கு இந்த படம் கண்டிப்பாய் "ஒரு மையில்"கல்லாய் இருக்கும்; அவரும், தெலுங்கில் சரித்திரப் படங்களில் நடித்திருப்பினும், தமிழில் கண்டிப்பாய் இப்படம் அவருக்கு ஒரு மையில் கல் என்பதை மறுப்பதற்கில்லை.
  • நல்ல கதையை; நல்ல திரைக்கதையோடு கலந்து கொடுத்திருப்பது படத்திற்கு பெரிய பலம். சிறிதும், தொய்வில்லாமல் நகரும் கதை! இயல்பான வகையில் இருக்கும் கதாப்பாத்திரங்கள்.
  • நான் 2 மாதங்களுக்கு முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருப்பதால் மட்டுமல்ல!... உண்மையில், பாடல்கள் அனைத்தும் - முதல் முறை கேட்கும் போதே அனைவரையும் கவரும். நல்ல பாடல்கள்! திருப்புகழ் பாடல் கூட இருக்கிறது.
  • மேடை நாடகங்கள் விடுதலைப் போராட்ட காலத்தில்; தங்களின் எதிர்ப்பை காட்டி தங்களின் கருத்தை பரிமாறிக்கொள்ள நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் போராடி இருக்கிறார்கள் என்பதை காட்டும் இன்னொரு படம். விருப்பம் இருப்பின், நம் கற்பனை சிறகுகளையும் அதன்பால் பறக்கவிட்டு பார்க்கலாம்; நான் பார்த்தேன்!
  • இதற்கு மேலும் எழுதலாம்! ஆனால், அது கதையைப் பற்றி சொல்வதில் முடியக்கூடும். கதையைப் பற்றி என்னுடைய எந்த விமர்சனத்திலும் இருக்கப்போவதில்லை! அதற்கு, எனக்கு உரிமை இல்லை; குறைந்த பட்சம் திரைப்படம் வெளியான புதிதில். 
கீழ்க்கண்டவைகளில் சிறிது கவனம் செலுத்தி இருப்பின், இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
  • படத்தில் முக்கிய பாத்திரத்தில் வரும் இரண்டு பெண்களும்; தமிழ் சூழலில் இருந்து வந்திருப்பின் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. தமிழ் நாட்டில் "அழகான பெண் நடிகைகளே இல்லையே?!" என்ற குமுறல் மீண்டும் ஒரு முறை வந்தது.
  • நடிகர்களின் உடையில், இன்னும் சிறிது கவனம் கொண்டிருக்கவேண்டும். கதை விடுதலைக்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் பயணிப்பதால்; இதில் கூடுதல் கவனம் இருந்திருக்கவேண்டும்.
  • உடை போலவே, பேச்சு-வழக்கையும் கவனமாய் கையாண்டிருக்கவேண்டும் என்று தோன்றியது. பெரிய மாற்றம் வேண்டும் என்று சொல்லவில்லை. எனக்கு தெரிந்தே 1990-களில் சென்னையில் பேசப்பட்ட வழக்கு இப்போதில்லை. அப்படியெனில், விடுதலைக்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் பேச்சு-வழக்கு வேறுபட்டு அல்லவா இருந்திருக்க வேண்டும்?!
  • நாசரின் முடிவு அப்படி இருப்பது சரியே! ஆனால், அதற்கான திரைக்கதையில் இன்னும் சிறிது மெனெக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றியது.
  • பிரித்விராஜுக்கு சித்தார்த் மேல் வரும் கோபத்தை/ஆற்றாமையை புரிந்து கொள்ள முடிந்தாலும்; அதை நியாப்படுத்தும் காட்சிகள் போதவில்லை; அவைகளில் நியாயமும் இல்லை. அதிலும், அந்த எல்லை வரை செல்வதை கண்டிப்பாய் ஒப்புக்கொள்ள (என்)மனம் மறுக்கிறது.
சிறப்பு: நம் கவனம் மேடை-நாடகங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்று இந்த திரைப்படம் உணர்த்தியதாய் எனக்கு தோன்றியது. அதைப்பற்றிய சில புரிதல்கள் எனக்கு கிடைத்தது; அதை, இப்படத்தின் சிறப்பாய் இங்கே குறிப்பிட விரும்பினேன்:
  • திரைப்படங்களில் வருவது போல், நாடகங்களில் "ஆக்க்ஷன்" என்ற போர்வையில் "கோமாளித்"தனங்கள் செய்யமுடியாது. விமர்சனம் உடனடியாய் கிடைக்கும். "கல்லடி"கிடைக்கும் என்ற பயம் கூட நாடகத்தை நடத்துபவர்களுக்கு இருக்கும். 
  • இயல்பான நாடகத்தை பார்க்கும்போது, மேற்கூறிய வண்ணம் அல்லாமல்; நாமும் நம் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையின் நிதர்சனம், நாடகங்கள்/தெருக்கூத்துகள் பார்ப்பதால் தான் புரியும் என்று தோன்றியது. அப்படி இருந்தவர்கள் தானே நாம் அனைவரும்?!
  • அருள்கூர்ந்து, இந்த படத்தை பார்த்த பின்; வாய்ப்பு கிடைப்பவர்கள் நாடகங்கள் (தெருக்கூத்துகள்) பார்க்கும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முக்கியமாய், குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்! "நம்மால் சொல்லிக்கொடுக்க(முடியாத/தவறிய) வாழ்வியலின் யதார்த்தத்தை; நம் இளைய தலைமுறைக்கு அவை சொல்லிக் கொடுக்கும்" என்று திடமாய் நம்புகிறேன்.
  • கண்டிப்பாக, நம் இயல்புகள் நிறைய நாடகங்கள்/தெருக்கூத்துகள் பார்ப்பதன் மூலம் திரும்ப கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அவை சாத்தியப்படுமா??!!... சாத்தியப்படுத்த தேவையான முயற்சியையாவது செய்யலாமே???!!!   

ஞாயிறு, நவம்பர் 09, 2014

மூட-நம்பிக்கை என்பது என்ன???



   சென்ற வாரம் நண்பனொருவன் "வாட்ஸ்-ஆப்"பில் பற்பசை-குழாயின் மேல் இருக்கும் நிறப்பிரிகைக்கும்; பசையிலுள்ள பொருட்களின் குனாதிசியங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாய் கூறும் ஒரு புகைப்பத்தை அனுப்பினான். அது தவறான தகவல் என்று முன்பே தெரியும்; இன்னொரு நண்பன் அதை தவறென்று சுட்டிக்காட்டினான். என்னைத்தவிர, அந்த குழுவில் அனைவரும் மருத்துவம்/உயிரியல் சார்ந்து ஆராய்ச்சி செய்திருந்ததால், அவர்கள் அதை மையப்படுத்தி அலசினார்கள். எனவே, என்னால் அங்கே அதிகம் பங்கேற்க முடியவில்லை. அது சார்ந்த தொடர்ந்த உரையாடலின் போது, இரண்டாவது நண்பன் - இணையத்தில் இது போன்ற பல வதந்திகள் உள்ளன. அதை பலரும் "மூட-நம்பிக்கை" போன்றே நம்புகின்றனர் என்றான். உண்மை தான்! இங்கே, ஆயிரம் பொய்களும்/வதந்திகளும்/இது போன்ற மூட-நம்பிக்கைகளும் - இணையத்தில் நிறைந்துள்ளன. உடனே, எனக்கு "மூட-நம்பிக்கை என்பது என்ன???" என்ற தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

       வெகு சமீபத்தில், தில்லி மிருகக்காட்சி சாலையில் நடந்த விபத்தை பற்றி, தவறான தடயவியல் அறிக்கை ஒன்றை உண்மையென்று நம்பி முக-நூலில் பகிர்ந்திருந்தேன். பின்னர், வேறொரு நட்பு அதை தவறென்று சுட்டிக் காட்டியதும், மன்னிப்பு கோரியிருந்தேன். தொடர்ந்து யோசிக்கையில், 1992-இல் இளங்கலை நட்புகளோடு திருமலை சென்றிருந்த போது; நானும், இரமேசு என்ற என் நண்பனும் சேர்ந்து ஒரு விளையாட்டு-குரும்பை செய்தோம். இன்று, அது ஒரு "மூட-நம்பிக்கை"! ஆம்; பெரிய-உண்டி அருகே உள்ள மண்டபத்தின் ஒரு தூணில், ஒரு சிலை இருந்தது. அது எவரென்று, எங்களுக்கு (இன்னமும்)தெரியாது. நாங்கள் இருவரும், அந்த சிலையின் காலை தொட்டு வணங்கி ஒரு கும்பிடு போட்டோம். நாங்கள் மொத்தம் 19 பேர் சென்றிருந்தோம். அனைவரையும், அவ்வாறு செய்ய சொன்னோம்; மீண்டும், மீண்டும் செய்து பலரின் கவனமும் எங்கள் மேல் படும்படி செய்தோம். இன்று, அவ்வாறு செய்யாதவர்களை விரல்-விட்டு எண்ணிவிடலாம்!

         நாங்கள் செய்தது பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன். அவ்வப்போது, சிலையின் அந்த பகுதி மட்டும் தேய்வதால், அதை மாற்றியும் வருகிறார்கள். அதை இனிமேல் தடுப்பது/நிறுத்துவது சிரமம்! இன்று, அது வரலாறு ஆகிவிட்டது. அதற்கு, பலரும் - பலவாறாய் விளக்கம் கொடுத்திருக்கக் கூடும்! பல கதைகள் புனையப்பட்டு இருக்கும்; ஒவ்வொரு கதையும் பலத்த நம்பிக்கையை உருவாக்கி இருக்கும். ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லை; அது, வெறும் "மூட-நம்பிக்கை"! ஆனால், இதை தெரிந்த எனக்கும்; இனிமேல், இதை படித்து தெரிந்துகொள்ள போவோர்க்கும் தான் அது "மூட-நம்பிக்கை". மற்றவர்களுக்கு அது நம்பிக்கையாய் தான் தொடர்ந்து கொண்டு இருக்கும். இதுபோல், பல நம்பிக்கைகள் "மூட-நம்பிக்கை"களாய் இருப்பதை நான் எதைக்கொண்டும் "மூடி"மறைக்க விரும்பவில்லை. "மூட-நம்பிக்கை" என்றால் என்ன? என்பதை தொடர்ந்து உண(ர/ர்த்த) தான் முயன்று வருகிறேன். எல்லா நம்பிக்கைகளிலும், இப்படிப்பட்ட மூட-நம்பிக்கைகள் இருக்கும்.

      ஆனால், காரணமே தெரியாமல் எல்லாவற்றையும் "மூட-நம்பிக்கை" என்பது பகுத்தறிவல்ல என்பதை நான் சமீபத்தில் கூட ஒரு தலையங்கத்தில் வலியுறுத்தி இருந்தேன். உலகெங்கும் விவாதத்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கையையே உதாரணமாய் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு! எனக்கு கடவுள் நம்பிக்கை வந்ததே; "உபவாசம்" என்ற விரதத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையால் தான். 1983-இல் என் அண்ணன் ஒருவரைப் பார்த்து, வியாயக்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்தேன். விரதம் இருப்பது; உடல் உறுப்பு ஒய்வு பெற என்ற நம்பிக்கையே காரணம். ஆனால், அதை "ஒழுக்கமாய்" கடைப்பிடிப்பதில் சிரமம் இருந்தது! விரதத்தை, கடவுளை நினைத்து செய்தால் எளிது என்பதால்; அந்த நம்பிக்கையை நம்ப ஆரம்பித்தேன். இன்றும், அந்த விரதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம், 48 நாட்களும் ஒருமுறை மட்டுமே உண்பது வழக்கம் என்பதை ஐயப்பன் பற்றிய தலையங்கத்தில் கூறியிருக்கிறேன்.

         கடவுளை மையப்படுத்தலை தவிர்த்து, நான் பலமுறை விரதம் இருக்க முயன்று என் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறேன்; முடியவில்லை! எனவே, விரதத்தின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை நிலை நாட்ட நான் கடவுளை நம்ப ஆரம்பித்தேன். என்னுடைய தெளிந்த பகுத்தறிவால், கடவுள் வழிபாட்டில் நா(ன்/ம்) செய்யும் தவறை கூட உணர முடிந்தது. அதனால் தான், கடவுள் என்ற பெயரில் "மூட-நம்பிக்கைகள்" இருக்கின்றன என்பதை "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்திலேயே ஒப்புக்கொள்ள முடிந்தது. கடவுள் நம்பிக்கையும்; அந்த பயமும் தான் என்னைப்போன்ற பலரையும் பல தவறுகளையும் செய்ய விடாமல் தடுக்கிறது என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அப்படி, ஒரு மனிதனை "நல்ல மனிதத்துடன்" இருக்க "ஒரு நம்பிக்கை" உதவுமேயானால்; அந்த நம்பிக்கையை எதற்காய் மற்றவர் எதிர்க்கவேண்டும்? அவர்களுக்கு நம்பிக்கை "இல்லை" என்றால், இருந்துவிட்டு போகட்டும். பிறர் நம்பிக்கையை ஏன் காரணமே-தெரியாமல் தொடர்ந்து தூற்ற வேண்டும்?!

   ஒரு "தவறான நம்பிக்கை" சரியான விதத்தில் நிரூபிக்கப் பட்டால் மட்டுமே வேரரும்! மேற்குறிப்பிட்டது விளையாட்டென்று எனக்கும், என் நட்புகளுக்கு மட்டும் தான் தெரியும்! இதைப் படித்தும் கூட, எல்லோரும் அதை நம்பி மாற்றிக்கொள்வரா என்பது பெருத்த சந்தேகமே; அதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும்! இதை நாங்கள்தான் செய்தோம் என்பதற்கு என்னிடமே ஆதாரம் இல்லையே! ஆனால், நான் சொல்வது சத்தியம்!! ஒன்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். நம்புவதற்கு எந்த நிரூபணமும் தேவையில்லை! ஒரு நம்பிக்கையை பொய்யென்று நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் வேண்டும்!! எல்லா நம்பிக்கைகளும் தவறானவை அல்ல என்பதையும் உணரவேண்டும். "இவர்தான் உன் தந்தை!" தாய் சொல்வதை பிள்ளைகள் நம்புவது போல்; சில நம்பிக்கைகளை "அப்படியே" நம்பவேண்டும். இன்று வேண்டுமானால், தந்தையை உறுதி செய்யும் விஞ்ஞானமும்/அவநம்பிக்கையும் வந்திருக்கலாம். ஆனால், அது காலங்காலமாய் தொடர்ந்து வந்த/வரும் நம்பிக்கை!!!

        கெடுதல் செய்யாமல், நல்லது மட்டுமே செய்யும் ஒரு நம்பிக்கை எப்படி "மூட-நம்பிக்கை ஆகும்??? கடவுள் நம்பிக்கையில்; சில மூட நம்பிக்கைகள் இருக்கலாம்! ஆனால், கடவுள் நம்பிக்கையே "மூட-நம்பிக்கை" என்பது அர்த்தமற்ற பகுத்தறிவு!! "பூனை குறுக்கே சொல்லுதல்" போன்ற பல அர்த்தமற்ற நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கிறது. நம் "தெளிவான-சுய" பகுத்தறிவு முக்கியம்! அதனால் தான், பெரியார்; அன்றிருந்த சூழலில் எதிர்த்த இரண்டு கொள்கைகள் இன்று தேவையில்லை! என்றேன். பெரியார் போன்றோர்க்கு மனிதமும்/மனிதனும் வஞ்சிக்கப்படுவதை தாங்கமுடியாத துயரமே அடிப்படையாய் இருந்தது. அதுதான் முக்கியம்! பெரியாரின் பெயரில் "கொடி"பிடிக்கப்படும் "கண்மூடித்தனமான" கொள்கைகளை; இன்று, பெரியார் இருந்தால், அவரே எதிர்ப்பார். அவர் இல்லை என்பதால் தான், என்போன்ற "சிறியார்" அதை உண(ர/ர்த்த) முயல்கிறோம். எனவே, என்னுடைய மேற்கூறிய அனுபவம் மற்றும் என் புரிதலின் அடிப்படையில் எது பற்றியும்/எவர் கூறுவதையும்... 

கண்மூடித்தனமாய் நம்புவதே; "உண்மையான" மூட-நம்பிக்கை!!!

முத்தத்தை வட்டிக்கு விடும் கற்பனை...



         ஆலமரம் என்ற திரைப்படத்தில் "தேரேறி வர்றாரு சாமியாடி; தேருக்கு முன்னால கும்மியடி" என்ற பாடலில் "முத்தத்தை வட்டிக்கு தந்தவள! முந்தானை காசாக்கி கொண்டவளே!!" வரும் வரியைக் குறிப்பிட்டு, அந்த கவிஞனின் "கற்பனை வளத்திற்கு" என் வாழ்த்துகளை துணுக்குகள் பகுதியில் பதிந்திருக்கிறேன். அங்கே, குறிப்பிட்டபடி இதனை அக்கவிஞன் நடைமுறையில் சந்தித்து கூட இருக்கக்கூடும். இன்று பல தம்பதியருக்குள் இயல்பாய் கூட "முத்தமிடுதல்" நடப்பதில் பல பிரச்சனைகள் உள்ளன. அவர்களின் உறவுகளுக்குள் இருக்கும் விரிசல் காரணமாய், இம்மாதிரியான செயல்களைப் பற்றி கற்பனையாய் எண்ணிப்பார்ப்பது கூட அவர்களுக்கு இயலாமல் போகிறது. இருப்பினும், வெகுசிலருக்கு அம்மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை; அதற்கு உதாரணம்தான் இந்த வரி! அந்த கவிஞன் ற்பனையாய் கூறி இருப்பினும்; இதை கூர்ந்து கவனித்து பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அதனால், இந்த மனதங்கமும்!

     இந்நிகழ்வை என்னுடைய கற்பனையில் "உன்னுடைய சக்திக்கும் மீறிய அளவில், அசல் இருக்கட்டும்! எவ்வளவு வட்டி ஆனாலும், அசல் அதிகமாய் இருக்கட்டும்; அப்போது தான் உனக்கு வட்டியே அதிகம் கிடைக்கும்!!" என்று காதலன்/கணவன் தன் காதலி/மனைவி இடம் கூறுவதாய் ஒரு கற்பனை செய்தேன். அதற்கு அப்பெண் "டீலக்ஸ் வட்டி" என்று பதில் சொல்வதாய் கற்பனை நீண்டது. அதன் பின், அவன் "சரி! டவுன்-பேமெண்ட் எவ்வளவு?" என்று கேட்பதாயும்; அதற்கு அவள் "100 முத்தங்கள்" என்பதாயும்; பின்னர், அவ்வளவு தானா? என்று அவன் மீண்டும் கேட்பதாயும் என் கற்பனை தொடர்ந்தது. என்னுடைய கற்பனைக்கு முக்கிய காரணம் அக்கவிஞனின் கற்பனையே! இம்மாதிரியான கற்பனைகளை தொடர்ந்து அவ்வப்போது நம் தமிழ் திரைப்பாடல்களில் கேட்டு வருகிறோம். மிக அபூர்வம் எனினும், அவைகளை நாம் தவறாமல் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது. அட... அட... அட... "முத்தத்தை வட்டிக்கு தருதல்!" - என்னவொரு கற்பனை?!     

குறையொன்றுமில்லை (2014)...


     
     கடந்த வெள்ளியன்று வழக்கம் போல் இணையத்தில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருந்தபோது, குறையொன்றுமில்லை என்ற படம் கண்ணில் பட்டது. எவர் நடித்தது என்று தெரியவில்லை; பெரும்பாலும் புதுமுகங்கள்! இந்த நிமிடம் வரை கூட தெரியாது. தெரிந்துகொள்ளவும் தோன்றவில்லை; எவர் என்று தெரியாமலேயே அந்த படத்தைப் பற்றிய உயர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. என்னுடைய பார்வை கீழே:
  • முதலில் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. படத்தின் ஆரம்பத்தில், பார்வையாளர்கள் தான் "தயாரிப்பாளர்கள்" என்பது மிகவும் பொருத்தம். ஆனால், தொடர்ந்து சொன்னது போல் என்னால் திரையரங்கில் அல்லது முறையான-குறுந்தட்டில் பார்க்க இயலவில்லை! இங்கே அந்த படம்  வெளியாகவில்லை. அதற்காய், அவர்கள் பொறுத்தருளவும்! வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படத்தை திரையரங்கில் காணுங்கள்.
  • இம்மாதிரி புதுமுகங்கள் கொண்டு; குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்கள் சொல்ல வந்த விசயத்தை விட்டு விலகாமல் அந்த கருத்தில் மையம் கொண்டிருக்கும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சாட்சி. சமீபத்திய, கத்தி திரைப்படமும் இம்மாதிரி ஒரு கருத்தை மையப்படுத்தியது எனினும், அதில் சில சறுக்கல்கள் இருப்பதை குறிப்பிட்டிருந்தேன். தேவையற்ற கதாநாயகி; அதனால், வலுக்கட்டாயமாய் திணிக்கப்பட்ட பாடல்கள்; தேவையற்ற இன்னொரு கதாபாத்திரம் என்று?! இந்தியன், அந்நியன் போன்ற படங்கள் வேண்டுமானால் - இந்த வகையில் விதிவிலக்குகளாய் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையில் குறைந்த தயாரிப்பில் வரும் படங்கள் அதிக தரம் வாய்ந்தே இருக்கின்றன என்பது என் கணிப்பு.
  • படம் ஆரம்பித்து 10 நிமிடம் கூட இல்லை! படத்தின் மையக்கரு ஆரம்பித்து விட்டது. எந்த "பில்ட்-அப்"பும் இல்லை; மையக்கரு வரவேண்டும் என்ற நோக்கத்தில் எந்த "ஃபிளாஷ் பேக்"கும் இல்லை. கதை இயல்பாய், மையக்கருவிற்குள் செல்கிறது. கதாநாயகனும், அவ்வாறே!
  • கார்ப்பரேட் நிர்வாகம் என்றால் என்ன? என்பதை மிக எளிமையான திரைக்கதை/காட்சிகள் கொண்டு விளக்கி இருப்பது மிகமுக்கியமாய் பாராட்டப் படவேண்டும்.
  • எடுத்துக்கொண்டிருக்கும் சவாலான விசயத்தை கதையின் நாயகன், வழக்கமான திரைப்பட-பிரம்மாண்டத்தில் இருந்து பெருமளவில் விலகி "மிக எதார்த்தமாய்" நிகழ்த்துவதாய் காண்பித்து இருப்பது தனி சிறப்பு!
  • வள்ளியூர் என்றொரு கிராமத்தை சுற்றி படம் நகர்கிறது. அது உண்மைப் பெயரா என்று தெரியவில்லை. ஆனால், அந்த ஊர் அவ்வளவு இயற்கையாய்/அழகாய் இருக்கிறது. பச்சைப்-பசேல் என்ற வயல்கள், அருமையான மலை சூழ்ந்த பகுதி, உண்மையான கிராம மக்களின் தோற்றம் - அனைத்தும் அருமை. வழக்கமாய் திரைப்படங்களில் இருப்பது போல், கதையின் நாயகன் வீடு மட்டும் "அரண்மனை"போன்ற அழகுடன் தனித்து தெரியவில்லை!
  • படத்தில் "அனல் பறக்கும் பஞ்ச்" வசனங்கள் இல்லை. கதாநாயகன் ஒரேயொரு இடத்தில் "நான் அமைதியா இருக்கறதுனால; என்கிட்ட பதில் இல்லைன்னு அர்த்தம் இல்லை! சொன்னால், உங்களுக்கு புரியாது!!" என்பது போல் ஒரு வசனம் இயல்பாய் பேசுவார். அடுத்த காட்சியில், தானே "கதையின்"நாயகியிடம் "இப்போ தான் ஒரு பஞ்ச் டையலாக்" பேசினேன் என்று இயல்பாய் கூறுவார். உண்மையில், அது ஆர்ப்பாட்டமில்லாத அருமையான பஞ்ச்!
  • கதாநாயகனின் நண்பனாய் வரும் கதாபாத்திரம் அருமை! இயல்பான தோற்றம்; அமைதியான நடிப்பு! அவரின் நண்பனாய் வருபவர் கூட "இயல்பான வசனங்களால்" நகைச்சுவை உண்டாக்குகிறார். தேர்ந்த நடிகர்கள் போல் நடித்திருக்கின்றனர்.
  • இந்த படத்திலும் கதாநாயகி உண்டு. ஆனால், ச்சுமா கதாநாயகனை சுற்றி வரும் அழகுப்பதுமையோ?! "சதைப்பிண்டாமோ"! அல்ல; கதையில் ஒரு பாத்திரமாய் வருகிறாள். அவளும், கதையின் மையக்கருவான விவசாயம் மற்றும் கிராமங்களுக்கு உதவுவது என்று கதியினூடே வருகிறாள்.
  • இயல்பான விதத்தில் வரும் காதல்(கள்)! வெகு இயல்பாய் வரும் காதலர் சண்டைகள்/ஊடல்கள். திரைப்படம் என்பதற்காய் பல அபத்தங்கள் இல்லை! ஆபாசங்கள் இல்லை. ஆனால், காதல் இருக்கிறது. கதையின் நாயகனும்/நாயகியும் தங்களின் வேலை/சமுதாயக்கடமை - இதில் இருந்து எள்ளளவும் மாறாமல் காதலிக்கின்றனர். மிகமுக்கியமாய் "வாழ்வை ஒட்டிய காதல்" என்ற அளவிலேயே காண்பிக்கப் பட்டு இருக்கிறது.
  • இந்த படத்திலும் பாடல்கள் வருகின்றன. ஆனால், திணிக்கப்பட்ட பாடல்கள் அல்ல! கதாநாயகியின் ஆடை குறைக்கப்படவேயில்லை! ஏன், ஆடையே மாற்றப்படவில்லை! காட்சிகளின் பின்னணியில் தான் பாடல்கள் வருகின்றன. குறுகிய நேரத்தில்; அழகிய உணர்வில் - வரும் பாடல்கள். பாடல்களுக்காய் எவரும் விமானம் ஏறி; வேறு நாடுகளுக்கு செல்லவில்லை! ஏன், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கூட சுற்றித் திரியவில்லை. இருக்கும் இடத்தில்;  இருக்கும் வண்ணமே உள்ள பாடல்கள்.
  • படத்தில் ஒருவர் கூட மற்றொருவரை "ச்சும்மா" கூட அடிக்கவில்லை! பூஜை/கத்தி படங்களில் மற்றும் பல படங்களில் வருவது போல், எவரும் இன்னொருவரிடம் "அவனை; செதில், செதிலாய் வெட்டனும்!" என்று இரைச்சல் இடுவதில்லை!  ஒருவரும், இன்னொருவரை பார்த்து "முஷ்ட்டி" மடக்குவதில்லை. இவ்வளவு ஏன்? படத்தில் வில்லன் என்று யாருமே இல்லை! ஆம்; இங்கே நாம் எல்லோருமே "விவாசியிக்கும்/கிராமத்திற்கும்" வில்லன்! என்பது தெளிவாய் இருக்கும்போது, தனியே எதற்கு வில்லன்?!  
  • இப்போது, எனக்கு மிகப்பெரிய குழப்பம் வருகிறது! இம்மாதிரி பாடல்கள், ஆடைக்குறைப்பு, அடிதடி என்பனவற்றை "திரைப்படத் துறையினர்" தொடர்ந்து சொல்லி வருவது போல்; நாமா எதிர்பார்க்கிறோம்?! இல்லையென்றே தோன்றுகிறது; குறைந்த பட்சம், இந்த சூழலில் இல்லை. ஒரு காலத்தில் "நாக்கை தொங்கப்போட்டு" பார்த்து; ஒரு-கூட்டம் ஏங்கி இருக்கக்கூடும். ஆனால் அது(வும்) "இலைமறை; காய்மறை"ஆய் இருந்தபோது, இருந்திருக்கவேண்டும். இப்போது "இலையே" இல்லையே அய்யா! பின் எப்படி, அதில் நம் விருப்பம் இருக்கும்? கலைத்துறையினர் இந்த விசயத்திற்கு செவி-சாய்க்க வேண்டும்!!
  • என்னளவில், அந்த படத்தில் "வேலைக்காரியாய்" வரும் நடிகையை வேறேதோ படத்தில் பார்த்ததாய் நினைவு! அதே வேலைக்காரி போன்ற கதாபாத்திரம் என்று நினைக்கிறேன். "வேலைக்காரி"வேடத்திற்கு மட்டும் "படத்தின் பட்ஜெட்"உடன் எந்த சம்பந்தமும் இல்லை போலும்!
  • சில குறைகள் இருந்தாலும்; மேற்குறிப்பிட்ட போல் இன்னும் இருக்கும் பல நிறைகளினால் - அவைகள் நமக்கு பெருசாய் தெரிவதில்லை! உண்மையில், அவைகளை குறைகளாய் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை என்பதால்; அவைகளைக் குறிப்பிடவில்லை!
குறிப்பு: இம்மாதிரியான படங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன! ஆனால், இம்மாதிரியான படங்களை நாம் தான் கொடுக்கவேண்டிய "அங்கீகாரம்"கொடுத்து வரவேற்காமல் போய்விடுகிறோம். அதனால் தான் "பல குப்பைகள்" இங்கே வந்துகொண்டிருக்கின்றன. அந்த குப்பைகளை நாம் மறுக்க/தடுக்க முடியவில்லை என்பதால் தான் "ஆடைக்குறைப்பு" போன்ற பல அசிங்கங்களை நாம் தான் எதிர்பார்க்கிறோம் என்ற "பொதுவான குற்றச்சாட்டு" இருக்கிறது. ஏதேனும் ஒரு "ஈனக்கும்பல்" வேண்டுமானால், அம்மாதிரி(மட்டும்) எதிர்ப்பார்க்கலாம். தொடர்ந்து நாம் அமைதியாய் இருப்பாதால் தான் அது "பொதுக் குற்றச்சாட்டாய்" வைக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.

இம்மாதிரியான படங்களை ஆதரிப்போம்! தவறான படங்களை எதிர்ப்போம்!!