ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

வாடகைத் தாய்...



        "எத்தனை குழந்தைகள் வேண்டும்???" என்ற என் முந்தைய தலையங்கத்தை  பலரும் படித்திருக்கக்கூடும். அங்கே கூறியது போல், அது 05.05.2013 அன்று ஒளிபரப்பான "நீயா நானா" நிகழ்ச்சியை அடிப்படையாய் கொண்டது. ஒரு-குழந்தை போதும் என்று சொன்னவர்கள் அனைவரும் பெண்கள் (மனைவிகள்); மறுபக்கம் இரண்டு-குழந்தையாவது வேண்டும் என்றவர்கள் ஆண்கள் (கணவன்கள்). பொருளாதார-நெருக்கடியை தான் பலரும் காரணம் காட்டினர் என்பதை அங்கேயே குறிப்பிட்டு இருந்தேன். உடல்-நிலை சார்ந்த சில நியாயமான காரணங்கள் கூறப்பட்டாலும், பெரும்பான்மையில் கூறப்பட்டது "பொருளாதாரம்" என்ற காரணமே! எனக்கு அது மிகவும் அபத்தமாய் தெரிந்தது. அந்த நிகழ்வு சார்ந்த என்னுடைய பார்வையைத்தான் மேற்குறிப்பிட்ட தலையங்கத்தில் எழுதி இருந்தேன். அதனை தழுவிய பார்வைதான் இந்த தலையங்கமும்! ஆனால், இது எத்தனை குழந்தைகள் வேண்டும் என்ற கேள்வி அல்ல. 

       அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண்கள் எல்லோருக்கும் இன்னுமொரு குழந்தையாவது வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. அதைப்பற்றி எவரும் பெரிதாய் பேசவில்லை; அவர்களின் ஏக்கமும்/வேண்டலும் அங்கே சரியான விதத்தில் விவாதிக்கப்படவில்லை. அவர்கள் - அதே எண்ணத்துடன் ஏங்கிக்கொண்டு இருக்கும் பல்லாயிரக் கணக்கான நபர்களின் பிரதிநிதிகள். ஒரு பெண்ணின் பிரசவ-வேதனை தெரியாத/அதைப் புரிந்து கொள்ளாத கணவனை விரல் விட்டு எண்ணிவிடலாம்! அதைப்புரிந்தும், ஏன் இந்த ஆண்கள் இப்படி "பிடிவாதமாய்" இருக்க வேண்டும்?! ஏனெனில், குழந்தை பிறக்க ஒரு பெண்ணின் பங்கும் முக்கியமாய் தேவைப்படுகிது; அவளின் கருப்பை தேவைப்படுகிறது. நான் அடிக்கடி குறிப்பிடுவது போல் இறைவன்/இயற்கை தானே பெண்களுக்கு அளித்திட்ட வரம் அது; பெண்களாய் வேண்டி பெறவும் இல்லை! ஆண்கள், வெறுத்து மறுக்கவும் இல்லை!! இது இயல்பாய் நிகழ்ந்தது. கருப்பை இல்லாததால் தான், ஒரு ஆணால் கருவை சுமக்க இயலாது என்பதே நிதர்சனம்.

         கர்ப்பப்பை இல்லாததால், ஆண்களுக்கு குழந்தைகளின் எண்ணிக்கையை வரையறுக்கும் உரிமை இல்லை என்பதும் முறையல்ல! அந்தப்பை இருப்பதால், பெண்கள் தான் அதை நிர்ணயிக்கவேண்டும் என்பதும் முறையல்ல!! இது இருவரும் உடன்பட்டு செய்யவேண்டிய ஒன்று; இங்கே இருவருக்கும் சரி-சமமான உரிமை உண்டு. திடீரென பெருகிவிட்ட பொருளாதாரத்தால் - சென்ற தலைமுறைகள் "குழந்தை வளர்ப்பில்" சிறிது தள்ளாடினார் என்பதை மறுப்பதற்கில்லை! ஆனால், இன்று பொருளாதாரத்திற்கு இணையான வருமானம் இருக்கிறது; மேலும், பெரும்பான்மையில் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். அதிக வருமானமும் கிடைக்கிறது; மேலும், சென்ற தலைமுறைகள் சொத்து என்ற ஒன்றை (பணம்/நிலம்/பொன்/வீடு இப்படி பல வகையில்) தன் மகளுக்கும்/மகனுக்கும் கொடுக்கின்றனர். இப்படி எந்த விதத்தில் பார்ப்பினும், சென்ற தலைமுறையை விட இந்த தலைமுறையினருக்கு; பொருளாதாரத்திற்கும் அதிகமான வருமானமும்/பொருளும் இருக்கின்றன.

         அப்படி இருக்கையில், சென்ற தலைமுறையினர் பெரும்பான்மையில் குறைந்தது 3 குழந்தைகள் என்று இருந்த நிலையில்; இன்றைய தலைமுறையினர் அதிகபட்சம் 3 குழந்தைகள் என்றாவது இருக்கவேண்டாமா? நான் முந்தைய தலையங்கத்திலேயே குறிப்பிட்டது போல் உடல்-நிலை கோளாறு போன்ற காரணிகள் கொண்டோரை நான் இங்கே கணக்கில் கொள்ளவில்லை. இன்னுமொரு குழந்தையை வளர்க்கும் திராணி இல்லாத கணவன் அல்லது குடும்பம் வேண்டுமானால்; ஒன்றோடு நிறுத்திக்கொள்ளட்டும். அந்த திராணி இருப்போர் செய்யலாமே? அப்படி இருப்போரையும்; பலதையும் சொல்லி அந்த பெண்ணின் மனதை சிதைக்கும் சமுதாயத்தை என்ன செய்வது? சரி, எல்லாம் இருக்கட்டும்; இன்னுமொரு குழந்தை வேண்டும் என்றே ஏங்கும் அந்த கணவன் என்ன செய்யவேண்டும்?? ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்கு சரியான திறன் இல்லாதபோது "டெஸ்ட்-டியூப்" என்ற மருத்துவ முறையில் கருத்தரிக்கும் செயலுக்கு அந்த பெண்ணும் தானே ஆதரவு தருகிறாள்?

        அதுபோல, இன்னுமொரு குழந்தை வேண்டும் என்று ஏங்கும் ஒரு கணவன்; ஏன் "வாடகை தாய்" மூலம் பெறக்கூடாது?! இதை ஆதரிக்கும் சட்டங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. சட்டங்களை தாண்டி; எனக்கு இங்கே இருக்கும் நிபந்தனை ஒன்றேயொன்று தான். முதல் குழந்தை நன்கு வளர்ந்தவுடன்; அந்த குழந்தையின் முழு சம்பந்தத்துடன் இது நடக்கவேண்டும். அப்போது தான், முதல் குழந்தையின் சகோதரன்/சகோதரி-ஆய் "வாடகைத் தாய்" மூலம் பிறக்கும் குழந்தை வளரும். இதற்கு ஒரு "குழந்தையை தத்தெடுக்கலாமே?!" என்ற தத்துவ-வாதம் எழும்; என்னுள்ளும் எழுந்தது! எனக்கு பிறக்கும் குழந்தை என்-வித்தாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கே இருக்கும்போது; மற்றவரிடம் எவருடையதாய் இருந்தால் என்ன?! என்று எப்படி வாதிட முடியும்? ஒரு குழந்தையை தத்தெடுத்து நாளை; ஒவ்வொரு பிரச்சனைக்கும் இந்த சமுதாயம்... அவன் உங்க அப்பன்தானான்னு?! கேளுன்னு சொல்லுமே! ஏனோ, "யார் தாய்; என்பதை" இந்த சமூகம் பெரிதாய் ஆராய்வதில்லை!!

    ஒருவரின் வித்து "டெஸ்ட்-டியுப்" மூலமாய் கருவாக்கப்பட்டு பின்னர் அவரின் மனைவியின் கருப்பையை அடையும் போது; அது சட்டத்தாலும்/மனோ-தர்மத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதேதான் "வாடகைத் தாய்" எனும் செயலிலும் அல்லவா? இரண்டிலும் ஒருவரின் வித்து நேரடியாய் மனைவியை சென்றடையவில்லை தானே? டெஸ்ட்-டியூப் எனும் முறையில்; ஒரு பெண்ணின் கருப்பை வெறும்-தங்குமிடமாய் தானே?! பார்க்கப்படுகிறது? அங்கே உணர்வும்/உறவும் இல்லை என்பது உண்மையானால்; வாடகைத் தாய் விசயத்திலும் அப்படியே இருக்கவேண்டும். ஏன், இரண்டிலும் மாறுபட்ட கருத்துகள்/உடன்பாடுகள்?. எனக்கென்னவோ?! இரண்டாவது குழந்தைக்கு பொருளாதாரம் மட்டுமே ஒரு பெண் காரணம் என்று கூறும்போது; அங்கே அவள் கணவனின் ஆசையும்/ அவனின் உரிமையும் மறுக்கப்படுகிறது. இது தவறில்லை என்றால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலே குறிப்பிட்ட வண்ணம்...

முதல் குழந்தையின் மனப்பூர்வமான சம்மதம் மட்டுமே முக்கியம் என்று தோன்றுகிறது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக