வெள்ளி, மார்ச் 25, 2016

புலவரைப் போற்றாது புத்தேள் உலகு (குறள் எண் 0234)



    "நிலவரை நீள்புகழ் ஆற்றின்" என்ற குறள் எண் 0234-இற்கான என் விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். அதில் வரும் "புலவரைப்  போற்றாது புத்தேள் உலகு" என்ற சொற்றொடரை அடிப்படையாகக் கொண்டதே இப்பதிவு. அதில் என்னுடைய "நிகர் விளக்கம்" பின்வருமாறு கொடுக்கப்பட்டது:

சுயதர்ம அடிப்படையில், நிலையான செல்வமான கல்வியைக் கற்பித்தால்; 
கற்பவர்-உலகம் பணத்தை வணங்காமல், குருவை வணங்கும்.

        இதைப் படித்து விட்டு என் நண்பன் கதிர் (நான் அடிக்கடி குறிப்பிடும் அவனே தான்!) நானே உணராத வகையில் என் "நிகர் விளக்கத்தை" வேறொரு பரிமாணத்தில் விவரித்தான். அது மிகப்பெரிய ஆச்சர்யம்! ஏனெனில், இங்கு, நான் எழுதிய அடிப்படை வேறு. ஆனால் "நான் இப்படித்தான் யோசிப்பேன் என்றுணர்ந்து அவன் கருத்திட்டது" - எனக்கு பெருத்த சந்தோசத்தைக் கொடுத்தது. இந்த செய்தி, இந்தப் பதிவைப் படிக்கும் வரை, அவனுக்கு(ம்) தெரியாது. அவனை, இப்படியொரு பதிவால் கௌரவிக்க விரும்பினேன். நான் சொல்லியதன் பொருள் "தனக்கு தெரிந்ததை, சரியான விதத்தில் சொல்லி புரிய வைத்தால்; நிலையான செல்வமான, கல்வியின் உண்மையான பயனை கற்பவர் (சிஷ்யர்) உணர்வர். அப்படி உணர்ந்தால், அவர் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்றெண்ணி, பணத்தை வணங்கி அதன் பின் ஓடாமல் - கல்வியை அளித்த ஆசிரியரை (குருவை) நினைத்து வணங்குவர்" என்பதே.

    ஆனால், கதிர் புரிந்து கொண்டது வேறொரு அருமையான பொருள். பின்னர் யோசித்த போதுதான், அவன் ஏன் அப்படி புரிந்து கொண்டான் என்பது(ம்), எனக்குப் புரிந்தது. "கல்வி வியாபாரம்" குறித்த என் ஆதங்கத்தை முன்பே விவாதித்து இருக்கிறோம். எனவே, அவன் கொண்ட பொருள் "நிரந்தரமான கல்வி எனும் செல்வத்தை, சுயமான தர்மத்தோடு - வியாபாரம் எனும் அடிப்படையில் செய்யாமல், சேவையாகச் செய்தால் - கற்பவர்-உலகம் பணத்தை குறிக்கோளாக கொள்ளாமல்; குருவை வணங்குவர்!" என்ற அடிப்படையில். ஆனால், நான் எடுத்துக் கொண்ட அடிப்படை "ஆசிரியர்/குரு" என்பதே. ஆசிரியரோ/குருவோ பணம் கொடுப்பதில்/பெறுவதில் "நேரடியாய்" ஈடுபடுவதில்லை என்பதால், கல்வியால் விளையும் "பொருள்"ஆக்கத்தைப் பற்றியே என் சிந்தனை இருந்தது. ஆனால், அதை அவன் வேறொரு அற்புதமான கோணத்தில் புரிந்து கருத்திட்டது, பெருத்த மனநிறைவைக் கொடுத்தது. அவனின் பின்னூட்டம் இதுதான்:

கல்விக் கொள்ளை கேடு களையும் நன்னிகர் விளக்கம் அருமை - கனவு நனவாகட்டும்.

பின்குறிப்பு: நம் எழுத்தை, நம்மைப் புரிந்தவர் வேறொரு கோணத்தில் புரிந்துகொண்டு, நமக்கே மாறுபட்ட வகையில் பொருள்படுத்துவது ஒரு பெரிய வரம். எனக்கு கிடைத்திருக்கும் வரங்கள் "ஒன்றிரண்டே" எனினும் - வரம், வரம் தான்!

நன்றியடா கதிர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக