புதன், செப்டம்பர் 07, 2016

பற்பசையும் பயில்பாடமும்


"எதுக்குப்பா இவ்வளவுக் கஞ்சத்தனம்?"
என்னப்பனைப் பத்துவயதில் கேட்டேன்
அவரின்பதில் புரியவில்லை அன்றெனக்கு
எவரெதுவும் சொல்லாமல் இன்றெனக்குப்

புரிந்ததுபற் பசைக்குழாயைப் பிதுக்கையில்!
பிதுக்கலின் பின்னிருப்பது கஞ்சமில்லை;
பற்பசையோ நம்பிறப்போ யார்யார்க்கும்
பயனற்றுப் போவதில்நியா மில்லையென்றே

கருத்துடன்நம் தந்தைஅவர் செய்ததையும்
காசாக்கும் நோக்கில் நிறுவனங்களும்
இன்றதைசெய் வதைஎன்னென சொல்வது?
இன்புற்றுநம் பெற்றோரிடம் கற்றிடவும்

ஆயிரமுண்டு இயல்பாயும் அனுதினமும்
அன்றன்றே கற்றிடல்நல் வாழ்வைஈனும்
ஆண்டுகள்பல கடந்திடினும் நம்பிறப்பும்
மாண்டுபோம் முன்கற்போம் சீர்பெறுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக