ஞாயிறு, மார்ச் 31, 2019

வாட்ஸ்ஆப் வாழ்க்கை...



“அவனுக்கென்ன? வெளிநாட்டு வாழ்க்கை!”
அப்படியென சொல்வோர்க்கு தெரியுமா,
வெளிநாட்டு வாழ்க்கையின் சிரமங்கள்?

இந்தியாவில் மட்டுமல்ல! இங்கேயும்
பணம் மரத்தில் காய்ப்பதில்லை!
பணத்திற்காக இரத்தமே காய்கிறது!

தோசையோ சோறோ, குடும்பத்துடன்
உண்பதே இன்பம்! பீட்ஸாவும்
பாஸ்த்தாவும் தனிமையில் கொடுமையே!

கேட்கமுடியா  சொல்லும்; மகிழ்வில்லா
வேலையும்; கேவலம் இப்பணத்திற்காக
அல்லவா, மனமுவந்து ஏற்கிறோம்?

இதையெல்லாம் தாண்டியேன் இங்கே
இருக்கிறோம் என்கிறீரா? இதுவோர்,
புலிவால் பிடித்த கதையே!

பிடித்த காரணத்தை விடவும்,
விடுக்கும் காரணம் முக்கியமானது!
விடுக்கும் வழிதெரியாது விழிக்கிறோம்!

பணமா வாழ்க்கை? இல்லையே!
பணத்துடன் குடும்பமும் இருப்பதுதானே
வாழ்க்கை? புலிவாலை விடமுடியாமல்;

வாட்ஸ்ஆப்பில் வாழ்கிறோம் இப்பாவிகள்!
குழந்தையுடன் கொஞ்சலும் பேச்சும்;
பொண்டாட்டியுடன் ஊடலும் சாடலும்;

பெற்றோரின் பாசமும் நேசமும்;
பிறந்தாரின் அன்பும் ஆதரவும்;
சுற்றத்தாரின் உறவும் நட்பும்;

எல்லாம் வாட்ஸ்ஆப் வாழ்க்கையே!
வாட்ஸ்ஆப் இல்லாத தருணமெல்லாம்;
வாழ்வை இழந்த தருணங்களே!

“அவனுக்கென்ன? வெளிநாட்டு வாழ்க்கை!”
அப்படியென அடுத்தமுறை சொல்லும்முன்,
இப்பதிவை நினைத்திடுங்கள் மனங்களே!

“அவனுக்கேன் இப்பரிதாப வாழ்க்கை?”
அப்படியென ஒருவர் பேசினாலும்,
அப்படி வாழ்வோர்க்கு அருமருந்தாகும்!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு