திங்கள், ஆகஸ்ட் 27, 2012

தாய்க்குப் பின் தாரம்; தந்தைக்குப் பின் யாராம்???...

(இவ்வலைப்பதிற்காய் எழுதப்பட்ட இரண்டாவது தலையங்கம்) 

     "தாய்க்குப் பின் தாரம்" என நமக்கு நீண்ட நெடுநாட்களாக சுட்டிக்காட்டப்பட்டு வரப்படுகிறது. ஆண்களுக்கு "தாய்க்குப் பின் தாரம்" என்றுரைக்கப் பட்டது போல், ஏன் பெண்களுக்கு "தந்தைக்குப் பின் யார்?" என கற்றுத் தரப் படவில்லை? இந்த எண்ணம் தோன்றியதிலிருந்து நான் அது பற்றி தீர்க்கமாக யோசிக்க ஆரம்பித்தேன். தெளிவான சான்றாக எதுவும் கிடைக்கவில்லை எனினும், எனக்கு சில நியாமான காரணங்கள் தோன்றின. "தாய்க்கு பின் தாரம்" என்பதை(யும்) ஆண்களே வகுத்திருக்க வேண்டும் என தோன்றியது!  அது கூட, ஆணுக்கு (மகனுக்கு மற்றும் கணவனுக்கு), பெண் (குறிப்பாய் தாய் மற்றும் தாரம்) அனைத்து விதத்திலும் உதவியாய், தேவையானதை செய்வதுமாய் இருக்கிறாள்/ இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுவதற்காய் இருக்கவேண்டும். அவனின் பல தேவைகளுக்கு (திருமணத்திற்கு முன்) தன் தாயை (மற்றும் தங்கை - தமக்கை) சார்ந்தே இருந்து பழக்கப் பட்டுவிட்டான். ஆண் சில செயல்களை (குறிப்பாய் வீட்டு வேலைகளை) செய்வது இழுக்கு என சொல்லிப் பழ(க்)கிவிட்டான். உண்மையில் ஒரு பெண் (அதுவும் முதலில் தாய்) இல்லையெனில், அவனால் தன்னிச்சையாய்/ இயல்பாய் இருக்க முடியாது என உணர்ந்தே இவ்வாறெல்லாம் செய்திருக்கவேண்டும். உண்மையில், தாயின் அன்பு (தாயின் மறைவுக்கு பின்) தாரத்தின் "வடிவில்" கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூட இது சொல்ல முற்பட்டிருக்கலாம். அதன் பின் எங்கோ, எப்படியோ இது தடம் புரண்டிருக்க வேண்டும்!

     நிகழ்கால வாழ்க்கை அவ்வாறு இல்லை; தாய், தாரம் இருவரும் கூட வேலைக்கு சென்று பொருளீட்டுகின்றனர். அதன் காரணமாய், நிறைய இல்லங்களில் இன்று ஆண்கள் தன் தாய்க்கும், தாரத்திற்கும் வீட்டு வேலை உட்பட அனைத்து வேலைகளிலும் உதவியாய் இருக்கிறார்கள். இது ஏதோ, மிகப் பெரிய சாதனை என்று நான் கூறவில்லை; ஆனால், முதலில் அப்படி அணுக வேண்டியது அவசியம் என்று படுகிறது! ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து மீண்டு வருவதற்கு பெண்களுக்கு மிகப் பெரிய போராட்டம் (பல சந்ததிகளின் மூலம்) தேவைப்பட்டது; அவர்களின் இழப்பு ஈடு கொடுக்க முடியாதது; அவர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதே கசப்பான உண்மை!! எனவே, இது ஆண் - பெண்ணை புரிய ஆரம்பித்து, அவளின் வலியை உணர ஆரம்பித்து, அவனை மாற்றிக் கொண்டு வருவதன் "ஆதியாய்" உணர வேண்டும். நாம் மிகப்பெரிய "காலச் சுழற்சி" நடக்கும் இடைப்பட்ட சந்ததியில் இருக்கிறோம் என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். சமுதாயம் என்பது எப்போதும் சென்ற தலைமுறை நபர்களாகவே, அதிலும் குறிப்பாய் ஆண்களாகவே, இருந்து வருகிறது. அவர்களே, நல்லது கெட்டதை தீர்மானிப்பவராக இருக்கின்றனர்/ இருக்க விரும்புகின்றனர். இந்த காலச் சுழற்சிக்கு ஆற்பட்டிருக்கும் ஆணினம், இந்த சமுதாயத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அவர்கள் தடம் புரளாமல் இருக்க - இதை அணுகும் முறையில் மாறுபாடு வேண்டும் என்று சொல்கிறேன். இது காலப் போக்கில் சரியாகி விடும்; காலம் தான் இதற்கெல்லாம் சரியான மருந்து!.

    சரி, நம் முக்கிய கருத்தாய்வுக்கு வருவோம். ஏன் "தந்தைக்கு பின் யார்" என்பது கற்பிக்க படவில்லை? ஓர் தந்தையால் (ஆண்), எனக்கு பிறகு உனக்கு "உன் கணவன் தான்" அல்லது என் நிலையில் இருக்கப் போகும் "உன் மாமனார் தான்" என்று ஏன் சொல்லமுடியவில்லை? தந்தையெனும் ஓர் ஆண், தன் மகள் இன்னுமொரு உறவு வளையத்திற்குள் செல்கிறாள்; அந்த உறவு வளர உதவியாய் இருப்பது மட்டுமே "இனி தன் வேலை" என்பதை உணர்ந்திடல் வேண்டும். அது எப்படி, ஆணுக்கு - தாய்க்கு பின், இவர் என ஒருவரை நியமித்த பின், ஒரு பெண்ணுக்கு தந்தைக்கு பின் யார் என நியமிக்க மறுத்தான்/ மறந்தான்/ மறுக்கப்பட்டது? என்னுடைய கண்ணோட்டத்தில் ஒரு பெண்ணுக்கு, அவள் தந்தைக்கு பிறகு அவளது கணவன் என்று கூறப்பட்டு இருக்க வேண்டும்!!! இந்த "தாய்க்கு பின் தாரம்" என்ற கோட்பாடு - ஒரு ஆண், அவன் தாய்க்கு பிறகு (தாய் உயிரோடு இருந்தாலும் அல்லது மறைந்திருந்தாலும்) அவனது திருமணத்திற்கு பின், அவன் தாரத்தால் பாதுகாக்கப் படவேண்டும் என்பதையே அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும்! அப்படியாயின், ஒரு பெண்ணுக்கு (திருமணமான பின்) தந்தைக்கு பிறகு (அவள் தந்தை உயிரோடு இருந்தாலும் அல்லது மறைந்திருந்தாலும்), அவள் கணவனே என்று கூறுவதே சரியாக இருக்க முடியும்!! அவள் கணவன் தானே, தந்தைக்கு பிறகு நல்ல பாதுகாப்பாக இருக்க முடியும்!!! இங்கே நல்ல கணவன் இருந்தால் தானே!; அதனால் தான் ஒரு தந்தை நம்பவில்லை என்று - அடிப்படை இல்லாமல் வாதிக்க கூடாது. பின், மனைவி(யும்) சரியில்லை என்ற (எதிர்)வாதத்தை அது துவக்கி வைக்கும்.

       தன் மனைவி அவளின் தந்தையை பிரிந்து வந்து தனக்கு "தாய்க்கு பின் தாரமாய்" இருக்க விரும்பும் ஓர் தந்தை, அவன் மகள் அவ்வாறு இன்னொரு ஆணுக்கு இருக்க ஏன் விரும்பவில்லை! இங்கு தான் ஆணின் சார்புத்தன்மை ஒளிந்திருப்பதாய் படுகிறது; அதனால் தான் - தாய் மற்றும் தாரம் (மட்டுமல்ல - தங்கை, தமக்கை உட்பட) தொடர்ந்து மகள் வரை - சார்புத்தன்மை நீள்கிறது!! இத்தனையையும் மீறி, பெண்ணை - அவள் எப்போதும் ஆணை சார்ந்து இருக்கவேண்டும்/ இருக்கிறாள் என்று நம்பவைத்த "தந்திரம்" தான் என்னை வியக்க வைக்கிறது!!!  "தந்தைக்கு பின் யார்" என்பதை பின்வருமாறு வரையறுக்க விரும்புகிறேன். "தந்தைக்கு பின் கணவன்" என்பதே அதன் சாரம் என்றாலும், கவித்துவமாய் இருந்தால் நலம் என்பதால்… "தந்தைக்கு பின் தன்னவன்" அல்லது "அப்பனுக்கு பின் அத்தான்"; என வரையறுக்க விரும்புகிறேன். இங்கே, முதலில் எழும் முக்கிய கேள்வி "யார் இதை யாருக்கு எடுத்துரைப்பது?" என்பதே. அதற்கு பதில்; இதை இப்போது இருக்கும் உறவு முறையில் சொல்லி நடைமுறை சிக்கல்களை உண்டு பண்ணுவதை விட, இதை எதிர் வரும் சந்ததியர்க்கு சொல்ல முற்படுவோம். நான், என்னுடைய சுய சிந்தனையின் விளைவாக, என் மகளிடம் இருந்தே இதைத் தொடங்க எண்ணுகிறேன். அவளுக்கு தகுந்த வயது வந்தவுடன் கணவன்/ துணைவன் என்பவன் எவ்வளவு முக்கியம்; அவள் அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுப்பேன்; நான் வேறு - கணவன் வேறு!! என்பதை அவளுக்கு நேர்த்தியாய் உணர்த்துவேன்.

       இந்த சிந்தனை வந்ததற்கு மிக முக்கியமான காரணம், இது சொல்லாது/  உணரப்படாது போனால், "மாமியார் - மருமகள்" பிரச்சனை போன்று "மாமனார் - மருமகன்" பிரச்சனை வந்து விடும் என்ற பயம் வருகிறது; உண்மையில் இந்த பிரச்சனை இப்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாய் உள்ளது; அதற்கு சான்றாய் வந்த ஓர் திரைப்படம் குறித்து கூட முன்பொரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். இது இன்னும் பலப்பட்டுவிடுமோ என்பதே என் அச்சம்! ஆழ்ந்து சிந்தித்தால் "மாமியார் - மருமகள்" பிரச்சனையின் அடிப்படை, "தன் மகன்" தன்னை விட்டு விலகி செல்கிறானே என்ற ஒரு தாயின் ஆதங்கம் என்பது அப்பட்டமாக தெரியும். இது நியாமில்லை எனினும் (பின், திருமணம் எதற்கு?) இதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லை!! "தாய்க்கு பின் தாரம்" என்பது  ஒரு தாயின் ஆலோசனையின்றி சொல்லப்பட்டிருப்பதாய் படுகிறது; அப்படி ஒரு தாயால் சம்மதித்திருக்க முடியுமெனின், அதை இன்னொரு தாய்க்கு புரியச் செய்து இருப்பாள்; அது ஒவ்வொரு தாய்க்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால், இன்று இந்தளவிற்கு "மாமியார் - மருமகள்" பிரச்சனை வந்திருக்காது; இத்தனை காலமாக சொல்லப்பட்ட "தாய்க்கு பின் தாரம்" என்ற தாரகத்தால் "மாமியார் - மருமகள்" பிரச்சனை தீர்க்கப் படவில்லை எனில், "தந்தைக்கு பின் யார்" என்று இன்னமும் சொல்லப் படாமல் இருந்தால் "மாமனார் - மருமகன்" பிரச்சனை எப்படி தலையெடுக்காமல் இருக்கும்? இதை "இளைதுஆக முள்மரம் கொல்க" என்ற 'குறள்' போல் அடிப்படையிலேயே உடைத்தெறிய வேண்டும் என தோன்றிற்று! அதற்காகத் தான் இந்த தலையங்கம்!!

தந்தைக்கு பின் தன்னவன்!!!

பின்குறிப்பு: ஓர் தந்தையாய், என்னை முதல் நிறுத்தியே இதை துவங்கி இருக்கிறேன். இதை ஒவ்வொரு தந்தையும் உணர ஆரம்பித்து விட்டால் இந்த பிரச்னையை வரும் முன்னரே தடுத்து விடலாம் என்பதே இத்தலையங்கத்தின் தலையாய நோக்கம். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை/ ஒரு வலிமையான உறவுப் பாலத்தை உருவாக்க முடியும் என்பது என் திண்ணமான எண்ணம். நாம் ஏன் இந்த மாற்றத்தை இப்போது துவக்கி வைத்து, அதன் பலனை எதிர் வரும் சந்ததியர்க்கு அளிக்கக் கூடாது. இது "தேவர் மகன்" திரைப்படத்தில் வரும் "மரத்திற்கான விதையிடுதல்" குறித்த விளக்கம் போல தான். அங்கே பலனாக "பழம்" குறிப்பிடப் பட்டது; இங்கே கிடைக்கும் பலன் "வலிமையான உறவுப் பாலம்". 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக