வெள்ளி, நவம்பர் 30, 2018

குறள் எண்: 1216 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1216}

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வு என்பது, கனவு வாழ்விலிருந்து மாறுபட்டது இல்லையெனில்; கனவில் என்னுள் கலந்து வாழும் என்னவர், என்னை விட்டு பிரியமாட்டார்!
(அது போல்...)
நிகழ் ஆட்சி என்பது, தேர்தல் களத்திலிருந்து வேறுபட்டது இல்லையெனில்; தேர்தலில் நம்மைக் கும்பிட்டுப் பணியும் அரசியலார், பேரிடரில் நம்மைக் கைவிடமாட்டார்கள்!

வியாழன், நவம்பர் 29, 2018

குறள் எண்: 1215 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1215}

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், காதலரைக் கண்டதும் ஆங்கே அளித்தது போலவே; கனவு வாழ்வு கூட, அவரைக் கண்ட நொடிப்பொழுதே இனிமை அளிக்கிறதே!
(அது போல்...)
நாட்டிற்கு சென்று, குடும்பத்தைக் கண்டதும் உடனே எழுவது போலவே; வெளிநாட்டு வாழ்வு கூட, அவர்களை நினைத்த அப்பொழுதே மகிழ்ச்சி எழுகிறதே!

புதன், நவம்பர் 28, 2018

குறள் எண்: 1214 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1214}

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில் அன்பைப் பகிராத காதலர், அளித்த காம உணர்வுகள்; கனவு வாழ்வில் எழக் காரணம், அவரைத் தேடிப் புரிய வைத்திட தானோ?
(அது போல்...)
நிகழ் ஆட்சியில் மக்களைக் காக்காத அரசியலார், தந்த நம்பிக்கைத் துளிகள்; பேரிடர் காலத்தில் நினைவெழக் காரணம், அவர்களைப் பார்த்து எதிர்ப்பை தெரிவித்திட தானோ?

செவ்வாய், நவம்பர் 27, 2018

குறள் எண்: 1213 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1213}

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பகிராத என்னவரை; கனவு வாழ்விலாவது காண்பதால் தான், என் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ?
(அது போல்...)
ஆட்சி காலத்தில், மக்களைக் காணாத அரசியலாரை; தேர்தல் நேரத்திலாவது காண்பதால் தான், நம் வாழ்க்கை இன்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறதோ?

திங்கள், நவம்பர் 26, 2018

குறள் எண்: 1212 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1212}

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்

விழியப்பன் விளக்கம்: நான் இரந்ததும், துன்பத்தில் உழலும் கண்கள் உறங்குமாயின்; கனவில் வரும் என்னில் கலந்தவர்க்கு, இறப்பின் விளிம்பில் இருக்கும் என் நிலையை எடுத்துரைப்பேன்!
(அது போல்...)
யாம் கேட்டதும், பதவியில் இருக்கும் ஆட்சியர் வருவாரெனின்; நேரில் வரும் எம்மை ஆள்பவர்க்கு, பேரிடரின் பிடியில் வாழ்விழக்கும் எம் நிலையை எடுத்துரைப்போம்!

ஞாயிறு, நவம்பர் 25, 2018

குறள் எண்: 1211 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1211}

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் வாடும் எனக்கு ஆறுதலாக, காதலரின் தூதுச் செய்தியோடு வந்த நல் கனவுக்கு; நன்றி விருந்தாக, எதைச் செய்வேன்?
(அது போல்...)
பேரிடரால் வாடும் எமக்கு உறுதியாக, மீள்வாழ்வின் ஆரம்ப உதவியோடு வந்த புது தலைவருக்கு; உரிய கைம்மாறாக, எதைச் செய்வோம்?