வெள்ளி, நவம்பர் 25, 2011

"கும்பிடறேன்பா"...

                
*******

   "கும்பிடறேன்பா" - என் நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டாரத்திற்கு இதன் முழு அர்த்தமும்   தெரியும்; அவர்கள், இந்த தலைப்பை படித்தவுடன் கண்டிப்பாய் சிரி(த்திரு)ப்பார்கள். இதில், நான் செய்த (கண்டிக்கத்தக்க) தவறுகளையும் (சேட்டைகள்), அதனால் என் தந்தை என்னிடம் கடுமையாய் நடந்த தருணங்களையும் "நடுநிலையோடு" விளக்கியிருக்கிறேன். இது என் தந்தை தவறானவர் என்றோ, அல்லது நான் போக்கிரி என்றோ சொல்வதற்காய் அல்ல. ஒரு மகன் (/மகள்) அளவுக்கதிகமான சேட்டை செய்யவும் கூடாது; அதே போல் தந்தையும் (எக்காரணம் கொண்டும்)  தன்னிலை தவறக் கூடாது என்பதை உணர்த்தவே. இப்போது நான் ஒரு தந்தை; என் மகள் அவள் வயதிற்கே உரிய (உரிமையான) சேட்டைகளை செய்து கொண்டிருக்கிறாள். அவளை, நான் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை எனக்கு நானே சொல்லிக்கொள்வதற்கும்(கூட) இந்த முயற்சி. என்னப்பன் என்னை அடிக்கும் போது கைகூப்பி செய்கையால் மட்டுமல்லாது, வாய் திறந்தும் சொல்லும் தாரக மந்திரம் (அழுகை கலந்த அலறல்!!!) தான் "கும்பிடறேன்பா" - மூன்று, நான்கு முறை தொடர்ச்சியாய் சொல்வேன்; எப்படி நம்ம மந்திரம்? நன்றாக இருக்கிறதா?? முதலில், "வலி" பொறுக்க முடியாதாதால் "கும்பிட" ஆரம்பித்து, பிறகு பாதி அடி விழும்போது "கும்பிட" ஆரம்பித்து, முடிவில் அவர் அடிப்பதற்கு முன்பாகவே "கும்பிட" ஆரம்பித்தேன். அவரும், முதலில் "கும்பிட" ஆரம்பித்ததும் விடாமல் அவர் "கை" வலிக்கும் போது அடியை குறைக்க ஆரம்பித்து, பிறகு போனால் போகட்டும் என்று பாதியில் விட்டு, முடிவில் "கும்பிட்டவுடன்" அடிக்காமலே விட்ட நிகழ்ச்சியும் உண்டு.

   நான் முதலில் "கும்பிட" ஆரம்பித்தது கிணற்றில் சென்று குளித்ததற்காய் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். குளிப்பது என்றால், சாதா குளியல் அல்ல; "எருமை குளியல்" என்பார்களே! அது போல் மணிக்கணக்கில் தான் (ஊறிக்)குளிப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும் அடி வாங்கிக் கொண்டு "இனிமேல், போகமாட்டேன்" என்று அவசர வாக்குறுதி கொடுத்து சில முறைகள் சென்றது. பின், என் தந்தையின் பலகீனத்தை உணர்ந்து (எப்படி எல்லாம் அந்த வயதிலேயே யோசித்திருக்கிறேன்!) ஒரு நாள் "அம்மா மேல் சத்தியமா" இனிமேல் போகமாட்டேன் என்றேன்; அடி விழுவது நின்றது. இது சில நாட்கள் தான் பலித்தது. இந்நிலையில், ஒரு வழியாய் நான் கண்டுபிடித்தது (வேறெவரும் செய்திருந்தால், "காப்புரிமையை" பகிர்ந்து கொள்ளலாம்) தான் "கும்பிடறேன்பா". இது ஓரளவுக்கு அல்ல; மிகவும் அதிகமாகவே எனக்கு உதவியது. மிகக் குறைந்த (?!)  நிகழ்வுகளை உங்களுக்கு சொல்கிறேன். ஒரு முறை நானும், என் அம்மாவும் "மாடியில்" வற்றல் வார்த்துக் கொண்டிருக்கும்போது, எதற்கோ அவரை அறைந்துவிட்டேன்; அவரின் தங்க "தோடு" அறுந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் "உதை" தான் நியாபகத்திற்கு வந்தது; உடனே, என் அம்மாவிடம் திருமணமாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது; அதனால் தான் அது மக்கிவிட்டது (என்னுடைய அன்றைய அறிவின் படி "தங்கம்" மக்கும்) என்றேன். அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது! அவரும் சிரித்துக்கொண்டே இந்த நிகழ்ச்சியை என் தந்தையிடம் சொன்னதால், ஒரு "கும்பிடறேன்பா" மீதமாகிவிட்டது. ஆனால், என் அம்மாவை "நான் அறைந்தது தவறு" என்ற கோணத்தில் எவரும் அந்த நிகழ்ச்சியை பார்த்ததாய் தெரியவில்லை!

       ஒரு முறை, என் அம்மாவை ஒரு "அசிங்கமான" சொல், சொல்லி திட்டிவிட்டேன்; அது "பொங்கல்" பண்டிகை நேரம்; என் தந்தை தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு அப்போது தான் வீட்டிற்கு வந்தார். என் அம்மா வாசலில் வைத்தே, நிகழ்ந்ததை சொல்லிவிட்டார்; உடனே, மாட்டிற்கு வாங்கி வந்த "மூக்கணாங் கயிறால்" விழுந்தது அடி. மறுகணம், மூக்கணாங் கயிறு என் "முதுகுக்கயிறாய்"! ஆம் "தடமாய்"; அப்புறம், "கும்பிடறேன்பா" மந்திரம்! - ஒரு வழியாய் விட்டுவிட்டார். அதன் பின், அவர் என் முதுகை தடவி கொடுத்து, "எண்ணெய்"  தடவி, நீவிவிட்டது வேறு விசயம்! ஆனாலும், "மூக்கணாங் கயிறு" அடி மிகவும் கொடியது. பின் ஒரு சமயம், நானும் என் அண்ணனும் "ஏலம் விடப்பட்ட" ஒரு குட்டையில் மீன் பிடிக்க சென்றுவிட்டோம். என் பாட்டனார் (என்னப்பனின் அப்பன்) சுற்றிலும் இருந்த கிராமங்களுக்கு எல்லாம் "மனியக்காரர்"; அதனால், மீன் பிடித்தது தவறு/ அவமானம் என்பதாய் எண்ணி என் தந்தை "பின்னி" எடுத்துவிட்டார். இந்த முறை "கௌரவப்" பிரச்சனையால் கும்பிடவில்லை! ஆம்!! என் அண்ணன் கும்பிடாத போது, நான் ஏன் கும்பிட வேண்டும்?. பிறகு ஒரு நாள், பள்ளியில் (அதை ஏன் கேட்கிறீர்கள்? அங்கும் அவர் தான் வகுப்பாசிரியர்; பாருங்கள் என் சோகத்தை!) நானும், என் நண்பனும் குடத்தில் தண்ணீர் எடுத்து வர சென்றிருந்தோம் (அன்று எங்கள் முறை). நூறடி தூரம் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் கொண்டு வர, ஒரு மணி நேரமாகிவிட்டது; பின்னே? "கோலி-விளையாட்டு" ஆடிவிட்டு வரவேண்டாமா? அவ்வளவு தான், என்னப்பன் "ருத்ர தாண்டவம்" ஆடி விட்டார்; என் நண்பனை, ஒரு அடியோடு விட்டுவிட்டு, என்னை முட்டிப் போடவைத்து அடித்தது மட்டுமல்லாமல், "செங்கல்" எடுத்து அடிக்க வந்துவிட்டார். ஒரு வழியாய், உடனிருந்த ஆசிரியர்கள் "கும்பிடாத" குறையாய் அவரை சமாதானம் செய்துவிட்டனர். நல்லவேளை, செங்கல்(???) சிதறாமல் தப்பித்தது!

    வேறொரு முறை (தவறு என்னவென்று நினைவில்லை), விறகு வெட்டிக்கொண்டிருந்தவர் அதே "கோடறி"யால் என்னை  வெட்ட வந்துவிட்டார்; "மரண" பயத்தில் எங்கே "கும்பிடுவது?". எப்படியோ, அருகிலிருந்த என் தாய் "கும்பிட்டு" (உண்மையாய்) என்னைக் காப்பாற்றி விட்டார். பாருங்கள்! நான் மட்டுமல்லாது எத்தனை பேர் கும்பிட்டு என்னைக் காப்பாற்றி இருக்கிறார்கள்! இவை எல்லாம், நடந்த பின் தான், என்னப்பன் அடிக்கும் முன்னே "கும்பிடு போட்டு" அடிக்காமல் வைத்த நிகழ்ச்சி நடந்தது. நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன், என் தந்தைக்கு பனி மாற்றம் கிடைத்து "செங்கல்பட்டு" நகருக்கு சென்றோம் அனைவரும். அங்கு சென்ற புதிதில், என் அம்மா என்னை கடைக்கு சென்று ஏதோ வாங்கி வரச் சொன்னார்; நான் மிதிவண்டி எடுத்துக்கொண்டு வாங்கி வரப்போனவன், அருகில் இருந்த மைதானத்தில் "கிரிக்கெட்" ஆடுவதை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவு நேரம் ஆனது என்றே தெரியவில்லை; வீடு வந்தால், என் தாயும், தமக்கையும் அழுது கொண்டிருக்கிறார்கள். என்னவென்றால், புதிய ஊரில் நான் தொலைந்துவிட்டதாய் எண்ணி/ நம்பி அழுது கொண்டிருக்கிறார்கள்; எனக்கு அதிர்ச்சி! அதைவிட பேரதிர்ச்சி!! என் தந்தை (மிகக் கோபமாய்) உடன் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருடன் என்னை தேடிச் சென்றிருப்பதாயும், அவர் வந்தால் என்னை தொலைத்துவிடுவார் என்றும் கூறினர். எனக்கு (அவர்களுக்கும் தான்) என்ன செய்வது என்று தெரியாமல் என் தந்தையின் வருகைக்காய் "மிரட்சியோடு" காத்திருந்தோம்.

      என் தந்தை உள்ளே நுழைந்தவுடன் பேரொலியுடன் "கும்பிடறேன்பா" என்று ஆரம்பித்து, கும்பிடுவதை நிறுத்தவே இல்லை!!!. என் தந்தை அடிக்கவில்லை; மாறாய், அழுதுவிட்டார்; என் தந்தை அடிக்காமலேயே நானும் அழுதுவிட்டேன் - என் தாயும், தமக்கையும்  கூட அழுதுவிட்டனர். என் தந்தை, நான் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அழுதிருக்கிறார்; அவர் என் மேல் வைத்திருந்த பாசத்தின் "உச்சபட்ச" வெளிப்பாடு அது. அதன் பின், நான் "கும்பிடறேன்பா" என்பதை சொன்னதே இல்லை!; அது மாதிரி சொல்வதற்கு வாய்ப்பும் வரவில்லை. அதன் பின் பள்ளி இறுதியாண்டு, கல்லூரி என்று நானும் என் வளர்ச்சிக்கான பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டேன். நான், ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல் இதை என் தந்தையைப் பற்றி குறை கூறுவதற்காய் எழுதவில்லை. "தந்தை மகற்காற்றும் உதவி" எனும் "குறள்" போல் நான் இந்த உயரம் அடைவதற்கு அவரே "ஏணியாய்" இருந்தார். நான், முனைவர் பட்டம் பெற எவ்வளவோ ஆண்டுகள்  (வீணாக)ஆனது; நான் எந்த ஒரு "ஊக்கத்தொகையும்" இல்லாமல் தான் அந்த இலக்கை அடைந்தேன்! ஒரு நாள் கூட "இப்படி படித்துக்கொண்டே இருக்கிறாயே, எப்போது வேலைக்கு செல்வாய்?" என்று கேட்டதில்லை. பல மாதங்கள், அவரின் மொத்த சம்பளத்தையும் அதை அவர் வாங்கி வந்த சம்பள "உறை"யுடன் வாங்கி சென்றிருக்கிறேன். அவர், எப்படி குடும்ப செலவை சமாளிப்பார் என்று எப்போதும் யோசித்ததில்லை; அதில், ஒரு பகுதியை தவறான காரியங்களுக்கும் பயன்படுத்தி இருக்கிறேன்!.

   எப்படிப்பட்ட பொருளாதாரப் பிரச்சனை இருந்தும், எங்கள் மூன்று பேரையும் அவர் எந்த குறைவின்றியும் தான் வளர்த்தார். அதனால், அவரை குறை கூறவில்லை/ கூறவும் முடியாது. அது, அவர் நான் "நன்றாக வர வேண்டும்" என்ற அக்கரையில் செய்தது என்று உணர முடிகிறது. நான் சொல்ல முனைவது, அதுதான் அம்மாதிரி செயல்கள் செய்வதற்கு சரியான வயது என்று வாதிட்டால், என் தந்தை ஏன் அத்துணை கோபம் அடைந்தார்? ஏன் அவ்வளவும் மோசமாய் தண்டித்தார்??. அதிலும், ஒரு நாள் கூட "படி" என்று கட்டாயப் படுத்தாத தந்தை; அவர் சொன்னதெல்லாம் "நீ நன்றாக படித்தால், நாளை நன்றாக இருப்பாய்" என்பது மட்டும் தான். இத்தனை முற்போக்கு சிந்தனை கொண்ட அவர், ஏன் அவ்வாறு செய்தார்? என்று எண்ணுகையில் எனக்கு ஒன்று விளங்குகிறது. அவர் என் மேல், மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறார். ஆனால், என்னுடைய செய்கைகளைக் கண்டு எங்கே நான் அந்த நம்பிக்கையை வீனடித்துவிடுவேனோ என்று பயந்திருக்கிறார் என்று புரிகிறது; என்னுடைய சில செயல்கள் என் உயிரை முடித்துவிடும் அளவுக்கு கூட இருந்திருக்கின்றன - அது கூட அவருக்கு பயத்தையும், தன்னிலை தவறும்  சூழ்நிலையையும்    கொடுத்திருக்கக் கூடும். ஒரு போதும் அவர் என்னை அடித்ததற்கு பின், என்னைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்யத் தவறியதே இல்லை; நானும், உடனே சமாதானமாய் சென்றிருக்கிறேன். ஒரு நாள் கூட, கோபத்தால் என் தந்தையிடம் பேசாது இருந்ததில்லை!; அவ்வாறு இருக்கவும் முடியாது!!. இது, எங்களுக்குள் - எங்களுக்கே தெரியாமல் இருந்த ஒரு "உறவு வலிமையை" உணர்த்துவதாய் படுகிறது.

     எனக்கு இப்போது இருக்கும் கவலை எல்லாம், என் மகளை அவளின் வயதில் இருந்து அவளைப் பார்த்து, அவள் செய்யும் சேட்டைகளை பொறுத்தல் வேண்டும் என்பது தான். வேதனையான விசயம் என்னவென்றால், நான் என் மகளை அவளுக்கு "இரண்டு" வயது முடிவதற்குள்ளேயே, "இரண்டு முறை" அவள் கன்னத்தில்  அறைந்திருக்கிறேன் என்பது தான். முதலில், அவள் எப்போதும் "தொலைபேசியின்" இணைப்பை துண்டிக்கிறாள் என்ற அற்ப விசயத்திற்காய் அறைந்தேன்; அதன் பின் அவள் தொலைபேசியின் அருகே சென்றது கூட இல்லை. இரண்டாவது, ஒரு நாள் "குழந்தைகள் பகல் காப்பகத்தில் (creche)" இருந்து அவளை அழைத்து  வரும்போது நடந்தது. ஒரு நாள் அவள் காப்பகத்தில் இருந்த "விளையாட்டு பொருளை" எடுத்துக்கொண்டு வருவேன் என்று அடம்பிடித்தாள்; அவ்வாறு ஏற்கனவே நடந்து, பின் அடுத்த நாள் திரும்ப கொடுத்திருக்கிறோம். ஆனால், அன்றிருந்த நிர்வாகி அதை கோபமுடன் பிடுங்க முயன்றார்; இதைக்கண்டு வெறுப்புற்ற/ பதட்டமடைந்த  நான் செய்வதறியாது, என் மகளை அறைந்துவிட்டேன்! எத்துனை "முட்டாள்-தனமான" செய்கைகள் இவை. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்காய் என்னை "மன்னித்து விடு, மகளே!"; இனி, இத்தவறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன். இக்கட்டுரையை முடிக்கும்போது, அடுத்த முறை என்னப்பனிடம் பேசும்போது "அவரப்பன்" அவரை எப்படி அணுகினார் என்று வினவவேண்டும் என்று தோன்றியது; ஏனோ, இதுவரை அவரிடம் இது பற்றி விவாதித்ததில்லை.

பின்குறிப்பு: இறைவன் அல்லது இயற்கையின் நிந்தனையா என்று தெரியவில்லை!; என் மகள் மழலை-மொழி பேசும்போதே நான் (மட்டுமல்ல; எவரேனும்) கடிந்து கொண்டால் "ச்சாச்சி" என்று சொல்லப் பழகிக் கொண்டாள்; அதாவது, அவளின் மொழியில் "சாரி (SORRY)" என்று சொல்லப் பழகிக்கொண்டாள்; இப்போது, இன்னமும் தெளிவாய் சொல்கிறாள். ஒருவேளை, நான் அவள் "கும்பிட" ஆரம்பிக்கும் முன்பே என்னை சரி செய்து கொள்ள வேண்டும் என எண்ணுவது போல், அவளும் எனக்கு "அடிக்கும்"  எண்ணம் வரும் முன்னே அவளை சரி செய்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறாளோ???                    

தமிழ்த்-தாய்...




அறிவு அளித்-தாய்
ஆர்வம் அளித்-தாய்
இன்பம் இழைத்-தாய்
ஈர்ப்பு ஈந்-தாய்
உள்ளம் உவந்-தாய்
ஊக்கம் உவந்-தாய்
எழுச்சி கொடுத்-தாய்
ஏற்றம்   தந்-தாய்
ஐயம் தவிர்த்-தாய்
ஒழுக்கம் அளித்-தாய்
ஓம்பல் கற்பித்-தாய்
ஔவையும் தந்-தாய்

கல்வி கொடுத்-தாய்
இ'ங்'கிதம் அளித்-தாய்
சக்தி கொடுத்-தாய்
ஞானம் தந்-தாய்
க'ட'மை போதித்-தாய்
கு'ண'ம் கொடுத்-தாய்
தமிழ்(திறன்) தந்-தாய்
நற்பண்பு கொடுத்-தாய்
பகுத்தறிவு பகிர்ந்தளித்-தாய்
மடமை நீத்-தாய்
"யா"வரையும் படைத்-தாய்
'ரௌ'த்திரம் பழக்குவித்-தாய்
ந'ல'ம் காத்-தாய்
வக்கிரம் குறைத்-தாய்
'ழ'கரம் கொடுத்-தாய்
வ'ள'மை தந்-தாய்
கு'ற'ள் கொடுத்-தாய்
ம'ன'ம் நிறைத்-தாய்

அத்துனையும் கொடுத்-தாய்
தமிழ்த் தாய்!
என்னிடம் இல்லாத-தாய்
எதுவும் இருப்ப-தாய்
எவரெதும் உரைப்ப-தாய்
உரைக்க முடிவ-தாய்
உணர்த்தப் போவ-தாய்
முயன்றேனும் பார்ப்ப-தாய்
(முயன்றும்)முடியும் என்ப-தாய்
தோன்றவில்லையே தாய்!!
நவில்கிறேன் முழுமன-தாய்
நன்றியென தாய்!!!      

வி(ள/ல)க்கு...


இருளை, அறவே
"விலக்கு"
வதற்காய் இருப்பதை
விளக்கத் - தான்
"விளக்கு"
எனப் பெயர்பெற்றதோ? 

நம்பிக்கையும் தும்பிக்கையும்...


யானையின் தும்பிக்கைக்கு
இணையானது நம்பிக்கை...
நம்பிக்கையற்ற மனிதனும்
தும்பிக்கையற்ற யானையும்
நிம்மதியாய் வாழ்வதில்லை!

வெள்ளி, நவம்பர் 18, 2011

தமிழை யார் வளர்ப்பது???

     
(என்னை இத்தலையங்கம் எழுத தூண்டிய என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்)

*******

     சென்ற வார இறுதியில் (12.11.2011 அன்று), நண்பர் ஒருவர் "மதிய உணவு" விருந்திற்கு என்னையும் சேர்த்து பல நண்பர்களை அழைத்திருந்தார். அனைவரும் உணவு விருந்து முடிந்தவுடன், வழக்கம் போல் பல்வேறு விசயங்களைப் பற்றி அரட்டையடித்துக் (அலசிக்???) கொண்டிருந்தோம். பேச்சு திடீரென, சமீபத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. நண்பர் ஒருவர், அந்த படத்தின் கதாநாயகி (அவர் ஒரு பெரிய/ பிரபல நடிகரின் மகள்) தமிழ் சரியாக உச்சரிக்கவில்லை என்றார். நான், எனக்கு ஒரு சராசரியான, இந்த கால நாகரீகமான பெண்ணைப் போன்று தான் அவரின் பேச்சு இருந்தது; எனக்கு என்னவோ அது தவறாக படவில்லை என்றேன். அவர் இடைமறித்து, அக்கதாநாயகியின் தந்தை தமிழ் பற்றி நிறைய பேசுபவர், தமிழ் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றார்; தொடர்ந்து, அவ்வாறு இருக்கும் ஒருவர் எப்படி தன் மகளை சரியாக உச்சரிக்க வைக்கவில்லை என்றார். நான், சரி உச்சரிப்பு சரியில்லை எனவே வைத்துக் கொள்வோம்; அதில் கோபப்பட என்ன இருக்கிறது? என்றேன். அவர், மீண்டும் இடைமறித்து, இல்லை அந்த நடிகர் தன் மகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்க கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்! இல்லையேல், அவர் தமிழ் பற்றி பேசுவதையும், தமிழ் மேல் தனக்கு அக்கறை உள்ளது என்பதையும் இனிமேல் வெளியில் சொல்லக்கூடாது; மற்றவருக்கு உபதேசம் செய்யக்கூடாது என்றார்!! அதற்கு நான் மறுப்பு சொல்கையில், அப்படியாயின் அவ்வாறு செயல்படும் அரசியல்வாதி குறித்தும் எவரும் பேசக்கூடாது என்றார்.

      நான் அந்த அரசியல்வாதி குறித்தும் இந்த அடிப்படையில் யோசித்ததில்லை எனினும், விவாதம் வேறு கோணத்தில் செல்வதை உணர்ந்து மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றேன்; அவரும் ஒப்புக்கொண்டார். அத்துடன் எங்கள் விவாதமும் முற்றுப்(???) பெற்றது; அதன் பின் தான், மூன்று வாரங்களுக்கு முன் இன்னுமிரண்டு நண்பர்களும் இதே கருத்தை கூறி விமர்சித்தது நினைவுக்கு வந்தது. இது, நினைவுக்கு வந்தவுடன், நான் இதை ஒரு தலையங்கமாய் எழுதவேண்டும் என்று முடிவெடுத்தேன். இது, அவர்களின் விவாதத்திற்கு பதில் சொல்வது அல்ல; அது அவசியமும் இல்லை! எனக்கு தெரிந்த நட்பு வட்டாரத்திலேயே மூன்று நபர்கள் இவ்வாறு சிந்தித்திருப்பின், இன்னும் எத்துனை பேர் இது பற்றி விவாதித்திருப்பர்? அல்லது சிந்தித்திருப்பர்?? இது முற்றிலும் மாறுபட்ட எதிர்மறை விவாதமாய் தோன்றுகிறது; மேலும், ஒருவரின் தமிழ்ப் பற்றை எந்தவொரு அடிப்படையும் இல்லாமால் தவறாய் பேசுவதாய் படுகிறது. ஒருவர், தமிழ் மீது அதிக பற்று கொண்டு தமிழ் கவிதைகளையோ அல்லது வேறு விதமான படைப்புகளையோ படைப்பின், நாம் அவர்களை பாராட்டுகிறோம். அதன் பின், ஏன் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறு செய்யவேண்டுமென விரும்புகிறோம்? அங்ஙனம் நடக்கவில்லை எனின், ஏன் அவர்களை தூற்றுகிறோம்?? இதையும் தாண்டி, ஒருவரின் தமிழ்ப்பற்று பற்றிப் பாராட்டும் போது, அவர்களின் முன்னோர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று ஆராய்வதில்லை; அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூட முயல்வதில்லை.

      அப்படி இருக்கையில், ஏன் அவர்களின் அடுத்த தலைமுறை பற்றி விமர்சிக்க வேண்டும்? இது எனக்கு மிகவும் தவறாக படுகிறது. நான், என் நபருடனான விவாதத்தை முடிக்கும் முன் "என்ன இது, தமிழ் என்பது அவர்கள் குடும்ப சொத்து போல் கேட்கிறீர்களே?; தமிழ் அனைவருக்கும் பொது தானே?? அவர்கள் குடும்பத்தில் அந்த நடிகர் இருக்கிறார்! அது போல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருவர் இருப்பின் போதும் தானே???" என்று கூறினேன். அதைத்தான் இன்னும் தெளிவாய் இங்கே விளக்க எண்ணுகிறேன். நாம், எத்தனையோ இதிகாசங்களை படித்திருக்கிறோம் அல்லது அவை பற்றி எவரேனும் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், அதை எழுதியவரின் குடும்பத்தார் அவரைப் பின் தொடர்ந்து எழுதினார்களா? அல்லது எழுதுகிறார்களா?? என்று, என்றும் ஆய்வு செய்ததில்லை. குறைந்த பட்சம், அவர்களின் அடுத்த தலைமுறை(கள்) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளக் கூட முயன்றதில்லை.  அப்படி இருக்கையில், ஒரு நடிகர் தமிழின் மீதான, தன் திறனை காண்பித்து தமிழ் பற்றி பேசும்போது மட்டும் ஏன் இப்படி எதிர்பார்க்கிறோம். அவரின் அடுத்த தலைமுறையும் தமிழ் பற்றுடன் இருக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்பில் கூட தப்பில்லை! அது அவ்வாறு இல்லை எனின், ஏன் அவர் கூட தமிழ் பற்றி பேசக்கூடாது என்ற அளவில் யோசிக்கிறோம்? அவர் பொது வாழ்வில் இருப்பதாலா?? இது என்னவோ எனக்கு ஒரு தவறான பார்வையாய் தான் படுகிறது.  இதை இவ்வலைப்பதிவின் மூலம் விவாதிக்கும் போது, என் நண்பர்களையும் சேர்த்து மற்றவர்களையும் சென்றடையும் என்று திடமாய் நம்புகிறேன்.

     நம் வீட்டு குழந்தைகள் இப்படி வரவேண்டும் என முயற்சி செய்கிறோம்; அது நடக்கவில்லை என்றால், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விட்டுவிடுகிறோம். அது போல், அந்த நடிகர் கூட முயற்சித்திருக்கலாம்; வரவில்லை என்றால் அவர் என்ன செய்வார்? அதற்காய், அவர் தமிழ் பற்றி பேசுவது தவறு என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?? தவிரவும், நான் என் நண்பரிடம் மேலும் ஒரு விளக்கத்தையும் கொடுத்தேன்; அது! ஒருவர் பேசும் தமிழுக்கும், அவரின் தமிழ் திறமைக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பது. அதற்கு நிகழ்கால உதாரணம் ஒன்றைக் கூட குறிப்பிட்டேன்; அது போல் நிறைய உதாரணங்கள் உள்ளன. அதே போல், உண்மையில், சம்மந்தப்பட்ட அந்த கதாநாயகி (நடிகரின் பெண்) கூட தமிழ்த் திறமை படைத்தவராக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. தவிரவும், அந்த இயக்குநர் சொன்னது போல் கூட அந்த நாயகி அவ்வாறான எளிமையான (யதார்த்தமான) தமிழில் (அதவாது ஆங்கிலம் சார்ந்து) பேசியிருக்கலாம். இதில், அந்த நாயகியையும், அவர் தந்தையையும் குறை கூறுவது எப்படி நியாயமாகும்? இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்; "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" என்ற ஒரு கூற்று உண்டு. கம்பன் வீட்டுத்தறி (அதாவது அவர் குடும்ப உறுப்பினர்கள் என கொள்வோம்) மட்டும் தான் கவி பாடும்/ பாடவேண்டும் என்றில்லை; அடுத்த வீட்டுத்தறி கூட கவி பாடலாம்; தவிரவும், கம்பன் வீட்டுத்தறி கவி பாடவில்லை எனின், கம்பனை குறை கூறுதல் முறையாகாது. 

      இங்கே, எனக்கு இன்னொன்று தோன்றுகிறது! ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது, அதுவும் ஒரு பொதுப்பணியாய் செய்யும் போது, நாம் அவர்களை தொடர்ந்து அதை செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களை நிர்ப்பந்திக்கவும் செய்வதாய் படுகிறது. இது அவர்களின் "குலத் தொழில்" என்று பாவிப்பதாய் படுகிறது. முதலில், நாம் அவர்களின் பொதுப்பணி கண்டு மெச்சுகிறோம்; பிறகு அவர்களை புகழ்கிறோம்; ஒரு காலக்கட்டத்தில், நாம் அவர்கள் அதற்காகவே தோன்றியதை போல் உருவகப்படுத்திக் கொள்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மீதான தங்கள் திறமையை பலரும் (மேற்கூறிய நடிகர் போல்) தங்கள் முழு-நேரத் தொழிலை முடித்த பின் அல்லது கிடைக்கும் நேரத்தில் தான் செய்கிறார்கள். பெரும்பான்மையான புலவர்களும் அவ்வாறே; தங்களின் பனி நேரம் முடிந்த பின்னரே தமிழ்-சேவை செய்கின்றனர். இத்தனைக்கும் இடையிலும், தங்களுடைய தமிழ்த்திறமையை வளர்த்துக்கொண்டு, அதை பிறருக்கு கொண்டு செல்ல முயலும் தமிழ்ப் புலவர்களையும், பிற தொழில் சார்ந்த தமிழன்பர்களையும் முதலில் மதிக்க கற்றுக்கொள்வோம். இங்கே, தமிழை யார் வளர்ப்பது? என்று எந்த நியதியும் இல்லை! இவர் தான் அல்லது இவர்கள் குடும்பம் தான் செய்ய வேண்டும் என்ற நியதியும் கூட இல்லை!! இது அவர்களின் கடமை மட்டுமல்ல, நம் எல்லோரின் கடமையும் கூட. முடிந்தால், தமிழை வளர்க்க நாமும் நம்மால் முயன்றதை செய்வோம்; அல்லையேல், அவ்வாறு செய்பவர்களை முடிந்தவரை ஊக்குவிப்போம்.

வாழ்க தமிழ்! வளர்க அதை வளர்ப்பவர் எண்ணிக்கை!!  

நன்றி நவிலல்...


(நன்றி "சொல்ல" மறப்பது"ம்" நன்றன்று!!!)
*******

              என்னை ஊக்குவித்தவர்களுக்கும், இன்னும் ஊக்குவிக்கப் போகிறவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என உணர்ந்தேன்; அதனால், "வலைப்பதிவை சார்ந்தது" என்ற இப்பிரிவு உண்டானது.  எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்த சில வாழ்த்து செய்திகளை வாசித்தபோது, மிகவும் ஊக்குவிப்பதாய் இருந்தது. அதில் சில என்னை மிகவும் பாதித்தது (நல்ல விதத்தில் தான்); அது என்ன, எவர் என்பது இங்கு அவசியம் இல்லை என படுகிறது! அவைகளை அறிந்த பின், என்னை இதுவரை ஊக்குவித்தவர்களுக்கும், ஊக்குவிக்க நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும், ஊக்குவிக்க போகிறவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டுமெனப் பட்டது. அது சரியானதும் கூட; என்னுடைய வார்த்தைகளை கவனித்தால் நான் "பாராட்டு அல்லது அங்கீகாரம்" என்ற வார்த்தையை அறவே நீக்கி இருப்பது புரியும். என்னளவில் ஒரு படைப்பாளனும் , அவனது படைப்புகளும் இந்த "பாராட்டு அல்லது அங்கீகாரம்" தரும் இன்ப மயக்கத்தால் பதிக்கப்படும் என திடமாக நம்புகிறேன். உங்களுடைய கருத்துக்களை (எப்படி இருப்பினும்) நான் "என்னை ஊக்குவிக்க" என்ற அடிப்படையிலேயே பார்க்க விரும்புகிறேன்; இதை நான் செய்யவில்லை எனில் என்னுடைய அடிப்படை கோட்பாட்டிலிருந்து நான் விலகிச் செல்லக்கூடும். சரி, இப்போது நன்றி சொல்லவதற்கு வருவோம்; இந்த வலைப்பதிவு வெளியான பின் உங்களிடமிருந்து வந்த ஊக்கக் கருத்துக்களுக்கு நன்றி சொல்லும் முன், இந்த வலைப்பதிவு உருவாகிக் கொண்டிருக்கும் போது (அல்லது உருவாகக் காரணமாய்) என்னை ஊக்குவித்த நபர்கள் பற்றி சொல்ல வேண்டும் என படுகிறது! அதை என் கடமையாகவும் கருதுகிறேன். 

              முதலில், என் மனைவி. எங்கள் மகளின் எதிர்காலத்திற்காய் இந்தியாவில் இப்போது தனியாய் எங்கள் மகளுடன் இருக்கிறாள். அவளின் பெற்றோரும் உதவியாய் இருப்பினும், அவள் மிகுந்த சிரமத்துடன் இந்த சூழ்நிலையை சமாளித்துக் கொண்டிருக்கிறாள்! அவளின் படிப்பையும், உத்தியோகத்தையும் தாற்காலிகமாய் நிறுத்தி வைத்துவிட்டுதான் இதை செய்து கொண்டிருக்கிறாள்!! இந்த நிலையில், என்னுடைய இம்முயற்சியை அவளிடத்தில் சொன்ன போது ஒரு சிறு மனக்குரைவுமின்றி (நான் இங்கே கடினப்படுகிறேன்; உங்களுக்கு இதெல்லாம் தேவையா? என்பது போல் கூட அல்லாமல்) அதை வரவேற்றாள்; என்னை ஊக்கப்படுத்தினாள். ஒருவேளை, நானும் இங்கே அவர்கள் இல்லாமல் கடினப்படுகிறேன் என்ற புரிதலின் அடிப்படையில் கூட இருக்கலாம். மேலும், நான் இவ்வலைப்பதிவை வெளியிடும் முன் என்னவளுக்கு என்னுடைய படைப்புக்களை அனுப்பி கருத்து கேட்டேன். நன்றாய் இருப்பதாய் கூறினாள்; அவள் ஒரு தமிழ்ப் பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதை என் முதல் தலையங்கமான "எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை" என்பதில் குறிப்பிட்டிருக்கிறேன். அவளின் தமிழ் திறமை அசாத்தியமானது; ஆனால் அவ்வளவு எளிதில்  எவரிடத்திலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள். அவளிடம் இருந்து நிறைய கருத்துக்களையும், குறைகளையும் எதிர் பார்த்தேன்; ஆனால் அது கிட்டவில்லை. முதலில், அவளின் வேலைச் சுமை காரணம் என்று எண்ணினேன். பின், அவள் எதற்கோ தயங்குவதை உணர்ந்தது; அவளிடம் மேலும், மேலும் விசாரித்தபோது, அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி என்னுடைய முயற்ச்சியை வீணடிக்கக் கூடாது என்று கருதியிருந்தது விளங்கியது. அதிலும், அந்த குறையை எனக்கு சுட்டிக்காட்டியவர், இன்னொருவர்; அவர் தான் இரண்டாமவர். அதனால் தான், என்னவளின் மனதில் இருந்ததை வெளிக்கொண்டு வர முடிந்தது.

            இரண்டாவது நபர், என் மிக நெருங்கிய நண்பனான முனைவர். சுரேசு பாபு; அமெரிக்காவில் "பிட்சுபர்கு" நகரில் வசிப்பவன். இங்கே, "அவன்" என்று குறிப்பிடுவதற்காய் எவரும் சங்கடப்படவேண்டாம். "அவர்" என்று குறிப்பிடும்போது அவன் அன்னியப்பட்டு போவதாய் தோன்றும்; மாறாய், அவனும் இதைத் தான் விரும்புவான். அவனிடமும், என்னுடைய படைப்புக்களை வெளியிடம் முன் தெரிவித்திருந்தேன். அதில், என்னுடைய முதல் தலையங்கமாய் வைத்திருந்தது வேறு ஒரு பார்வை; எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது கூட. ஆனால், அவன் தீர்க்கமாய், மூர்க்கமாய் மறுத்தான்; அதை என் போன்ற வளரும் எழுத்தாளர்கள் அதுவும் முதல் பதிப்பிலேயே எழுதுவது சரியில்லை என்றான். முதலில் அவனிடம், சமாதானம் சொல்ல முயன்றேன்; அவன் விடாப்பிடியாய் வாதிட்டு (அதாவது, வழக்கம் போல் கடிந்து திட்டி) என்னைப் புரிந்து கொள்ளச் செய்தான். இது தெரிந்த பின் தான் என்னவளிடம், அதைப் பற்றி விளக்கம் கூறி அவள் கருத்தை கேட்டேன். அவள், ஆமாம்! அது ஓர் மிகக் கருத்தாழம் உள்ள விசயம்; அதுவும் அது சரியாய் மற்றவர்களை சென்றடைய, முதலில் மற்றவர்கள் "உங்களுடைய" பார்வையை புரிந்து கொள்ளச் செய்வது அவசியம் எனறாள்! அப்போது தான் எனக்கு புரிந்தது; அவள் என் முயற்சியை குறைத்து விடக்கூடாது என்பதற்காய் அதை மறைத்திருக்கிறாள் என்று. இங்கே, இன்னொரு விசயம் புரிகிறது மனைவி என்பவள் நடுநிலையாய்  இருக்க விரும்பினும் சிலவற்றை வேண்டும் என்றே விட்டுக் கொடுக்கிறாள் என்று (அதிலும், எதையும் தீர்க்கமாய் யோசிக்கும் என்னவளே அப்படி நடந்திருக்கிறாள்). ஆனால், ஒரு நெருங்கிய நண்பன் இதை மறைக்க வேண்டியதில்லை; ஏனெனில், அது வேறொரு உறவு முறை; இதுவே, வேறொருவர் எழுதி அதை என்னவள் படித்திருந்தால், எடுத்தவுடனே "அதிகப்பிரசங்கித்" தனமாய் எழுதுகிறானே! என்று  விமர்சித்திருப்பாள். எப்படியாயினும், அது தடுக்கப்பட்டுவிட்டது; அதன் பின் தான், நான் வேறொரு தருணத்தில் எழுத எண்ணியிருந்த "எங்கள் மகள்" பற்றிய விசயத்தை முதல் தலையங்கமாய் எழுதினேன். அதற்கு முக்கிய காரணம் என் நண்பன்; பிறகு அதை ஆமோதித்து என்னை தீர்க்கமாய் உணரச் செய்த என் மனைவி. அதற்காய் தான் அவர்கள் இருவருக்கும் முதலில் நன்றியை தெரிவிக்க விரும்பினேன்.

       இதனிடையில், எனக்கு இந்த மாதிரி பகிர்தலை செய்யவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாய் இருந்தது எனினும், நான் அதிகம் அதிகமாய் கற்பனை செய்த ஊடகம் "திரைப்படம்". நாம் நிறைய, அதிபலசாளியான நாயகனை (Super Hero) பார்த்துபழக்கப்  பட்டதினால் கூட இருக்கலாம். மேலும், என்னுடைய கற்பனைகள் அந்த "அதிபலசாளியான நாயகனை" போன்று ஒரு வன்முறை கலந்த வடிவத்தில் தான் இருந்து வந்துள்ளது. நான் சொல்ல வந்த விசயத்தை "சாட்டையால் அடித்து" கூறவேண்டும் என்றே கற்பனை செய்து கொண்டிருப்பேன். அவ்வாறு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பின் கூட, வன்முறை கலந்த செயலாக்க எண்ணத்தால், என்னுடைய கருத்துக்கள் திசை தெரியாமல் போயிருக்கக் கூடும்! அதற்கு மாறாய், எனக்கு "வலைப்பதிவை" ஆரம்பிக்கும் சிந்தனை வர காரணமாய் இருந்தவர்கள் முனைவர். பெரியசாமி, முனைவர். ராசா என்ற இரண்டு தமிழ் பேசும் இந்தியர்கள்! (அதிலும் குறிப்பாய், முனைவர். பெரியசாமி). என்னை போல் கடல் கடந்து வந்து இங்கே வாழ்பவர்கள். அவர்களிடம் ஒரு மூன்று வாரங்களுக்கு முன் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, தளம் "தமிழ்" என்பதை வந்தடைந்தது! அப்போது அவர்களிடம் என்னுடைய "தமிழ் வளர" என்ற கவிதையை பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல் வந்தது; அப்போது அவர்கள் தந்த ஊக்கம் தான் என்னை "வலைப்பதிவு" எனும் ஊடகத்தை நோக்கி பயணிக்க வைத்தது. என்னுடன் இருப்பவர்கள் என்னுடைய கருத்தை ஊக்குவிக்கும்போது, நான் ஏன் திரைப்படம் எனும் துறையில் வாய்ப்புக்காக போராட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது! (போராடியும் வெற்றி கிடைக்குமா என்பது இன்னுமொரு கேள்விக்குறி! அதற்கு ஒரு வேள்வியும் கூட வேண்டும் என்ற எண்ணமும் வந்தது; இதையும் தாண்டி அதற்கான முயற்சியை கூட இன்னும் துவக்கவில்லை; பின் எங்கே வாய்ப்பு கிடைப்பது?) உடனே, அதற்கு மாற்றாய் தோன்றியது தான் இந்த எண்ணம். அதற்கு பின், "வங்காள" மொழி பேசும் "முனைவர். சுமன் நந்தி" எனும் இந்திய(நண்ப)ர், எனக்கு வலைத்தளம் பற்றி விளக்கி சொல்லிக் கொடுத்தார். கணினி-அறிவியலில் ஆராய்ச்சி செய்யும் என்னவள், என்னுடன் இருந்திருப்பின் இதை இன்னமும்  கூட சிறப்பாய் அளித்திருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது!! இவர்கள் எல்லோரும் தான் என்னுடைய பார்வையை இவ்வலைப்பதிவின் மூலம் துவக்க வலிமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள்.

          இப்போது, உங்களுக்கு நன்றி சொல்லும் நேரம். நான் "அழைப்பிதழில்" குறிப்பிட்டிருந்தது போல், இந்த வலைப்பதிவை "எழுச்சிப் பெறச்" செய்வது உங்களிடம் தான் உள்ளது. உடனே, கிடைத்த உங்களின் ஊக்கமளிக்கும் செய்திகளுக்காய், என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான், இங்கே "பல பரிமாணங்களின்" மீதான என் பார்வையை  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது சார்ந்த பார்வை உங்களில் பலருக்கும் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். என்னுள் உணர்ந்ததை, உங்களுக்கு தெரிவிக்கும் போது அது விருச்சமாய் வளரும். நான் எனக்குள் உள்ள பலவிதமான தீய-எண்ணங்களுக்கான, தீய-செயல்களுக்கான "வேரை" கண்டறிந்து,  "வேரறுக்கும்" முயற்சியில்/ பயிற்சியில் இருக்கிறேன். அதை உங்களிடம் கொண்டு சேர்த்து, அது உங்களுக்குள் இருக்கும் "வேரை" அறுக்க உதவியாய் இருக்க முயல்கிறேன். இது "புரட்சி" அல்ல; இது "புரிதல்". மேலும், நான் என்னுள் இருக்கும் பல வேர்களை அறுக்க முயன்று கொண்டிருக்கும் போது, எப்படி புரட்சி செய்ய முடியும்? மேலும், புரட்சி என்பதே ஒரு அழிவை அழிக்க, இன்னொரு அழிவை செய்யும் செயலாய் எனக்கு படுகிறது; இதற்கு பல உதாரணங்களை "மேற்கோள்" காட்டி கூற முடியும். என்னுடைய முயற்சி ஒரு அழிவை (நம் தீய-எண்ணம் மற்றும் தீய-செயல் மூலம் உண்டாகும் அழிவை), அதன் ஆதியை அழிப்பதில் இருந்து தொடங்க எண்ணுகிறேன். இது செய்யப்படின் பல அழிவுகள் அறவே தடுக்கப்படும் என்பதற்காய் தான் இந்த முயற்சியை, புரிதலை உங்களையும் சென்று சேர பிரியப்படுகிறேன். என்னுடைய பார்வையில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டுவது உங்களின் கடமை; அது தெரிவிக்கப்படின் என்னுடைய பார்வை குறைவு நீங்கி, பார்வை இன்னும் தெளிவு பெரும். அதற்கு உங்களின் ஆதரவை வேண்டுகிறேன்; இந்த வலைப்பதிவில் உள்ள குறைகளையும், நிறைகளையும் சுட்டிக்காட்டுவதன் மூலம் என்னுடைய பார்வை விசாலமாகும். இந்த வலைப்பதிவை  நீங்கள் விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு தெரிந்த (எனக்கு தெரியாத) உறவு மற்றும் நட்பு வட்டாரத்திற்கு இதைக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் இதுவரை படித்து பாராட்டியதற்காயும், இனி மற்றவர்களை சென்றடைய உதவப் போவதற்காயும், மீண்டும் ஒரு முறை என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

        முயன்ற வரை, புதிய படைப்புக்களை ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவிக்க முயல்கிறேன். நீங்கள் என்னுடைய படைப்புக்களை உடனுக்குடன் அறிய விருப்பமிருப்பின், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள "மின்னஞ்சல் மூலம் தொடர்க (Follow by E-mail)" என்ற பிரிவில் உங்கள் "மின்னஞ்சலை" பதிவதன் மூலமாய் செய்யலாம். முடிக்கும் முன், மீண்டும் ஒரு முறை, இதுவரை என்னை ஊக்கப்படுத்தி கருத்துக்கள் அனுப்பியவருக்கும், அனுப்ப எண்ணிக் கொண்டிருக்கிறவர்களுக்கும், இனிமேல் அனுப்பப் போகிறவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உங்களின் கருத்துக்கள் தான் என்னை, என்னுடைய படைப்பை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல உதவும் என்ற உண்மையை கூறி முடிக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருக்கும் பட்சத்தில், உங்களுடைய கருத்துக்களை வலைப்பதிவில் பொதுப்படியாய் பதிய வேண்டுகிறேன். நீங்கள், எனக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பும் பட்சத்தில் சில கடுமையான கருத்துக்களை நான் மறைக்கக் கூடும்/ அல்லது அது போல் முயற்சிக்க கூடும். மாறாய், பொதுப்படியாய் வெளிப்படும் பட்சத்தில், அது அனைவரையும் சென்று சேரும். அதன், தாக்கம் இன்னும் அதிகமாகும்; அதனால் என்னுடைய சிந்தனை இன்னும் தெளிவும்/ வளமும் பெரும்.

பெண் சமுதாயம்



பெண்களுக்கு யார் எதிரி?
பெண்களே(தான்) பெண்களுக்கு எதிரியோ??
ஆண்களால் அடக்கிவைக்கப்பட்டது அகன்று
பெண்களாலேயே அழிக்கப்படுகிறார்கள் என்றென்னுகிறது!

கணவனை இழந்த பெண்ணை எந்த
கம்பனும் வசைபாடுவதில்லை - ஏன்
கண்ணகிகளே அவர்களைக் காயப்படுத்துகிறீர்?
கணவனைத் தாங்களும் இழக்கலாமென்பதை அறியாரீரோ??
பூவுக்கும் பொட்டுக்கும் தரும் மரியாதையை
அவைகட்கு அப்பெருமையை அளித்த
போற்றுதலுக்கு உரிய உங்கள்
பூவையர்க்கு அளிக்க தயங்குவதேன்??? 

மகளுக்கு மருமகனிடம் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை
மகன் மருமகளுக்கு அளிக்க மறுப்பதேனோ?
மருமகள் என்பவள் மகளின்
மறு அவதாரமென்பதை உணரீரோ??

மாமியாரை தன் தாயாய்
மனமொப்ப மறுத்தலே தவறாயின்
அப்பெரியவள் உன்னை மனந்தவனை
அடைகாத்தவள்  என்பதை மறத்தல் சரியா?

அண்ணனிடம் உரிமை கொள்ளும் தங்கைகளே!
அண்ணியவள் அண்ணனில் பாதியென்பதை எப்போதுணர்வீர்?
தம்பியவன் துணையவளின் தூணாயிருப்பதை விரும்பாத 
தமக்கைகளே தாங்களுமொரு தூண்எதிர்பார்ப்பதை மறுப்பீரோ??

பொன் நகைக்காய் உங்கள்
புன்னகையை இழப்பது இருக்கட்டும்!
உங்கள் இனங்களையும் இழப்பது
எங்ஙனம் விளங்காமல் போயிற்று?

ஆக்கல், அழித்தலுக்கு ஆதாரனமானவரே!
ஆண்களால் அம்மையைர்க்கு ஆபத்தில்லையெனவில்லை!! 
சந்தேகமான தந்தையாய்
சுமையான தமையனாய்
வம்பான தம்பியாய்
மமதையான காமுக மாமனாராய்
கொழுத்திவிட்ட கொழுந்தனாய்
கடடுக்கடங்கா கணவனாய்
ஆண்களாலும் துன்ப அம்புகள்
ஆங்காங்கே துளைத்தெடுப்பதை
இல்லை எனவேயில்லை!
இருந்துமவை குறைவே என்கிறேன்!!

அபூர்வ "குறிஞ்சி"பூ போல் 
அகிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அனைத்து பெண்களையும்
அரவணைத்து செல்லும் பெண்களும்
இருக்கிறார்கள் என்பதையும்
மறுக்க முடியாது
ஆனால் அவர்கள்
அரிதாகவே காண்கிறார்கள்

சமுதாயத்தில் பெண்களின் விடுதலைக்காய்
குமுறி போராடும் பெண் சங்கங்களே
பெண்களே பெண்களுக்கு முட்டுக்கட்டையாய்
பேரிடியாய் இறங்கி அடிமையாக்கும்
செயலை உணர்ந்து அந்நஞ்சு
செடியழிக்கும் தலையாய வேலையை
எங்கிருந்து, எப்போது எழுச்சியுடன்
பொங்கியெழுந்து துவக்கப் போகிறீர்?
உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கலாமே
தங்கள் குடும்பத்திலுள்ள பெண்களை
அங்கீகரிக்க கற்றுக் கொள்ளுதலே!
தடங்கள் பெயர்ந்து முடங்கியிருக்கும்
தங்கத் தாய்மார்களின் துயர் துடைக்குமே!!
எச்சங்கமும் வேண்டா வழி வகுக்குமே!!!


இப்பொன்னான முயற்ச்சியை நீங்கள்
இப்போது துவங்கினாலே போதும்!
உங்கள் சமுதாயத்திலுள்ள அனைத்து
அங்கத்தினரையும் முதலில் துளிர்க்க
வழி வகுத்து தாரீர்!!
வாழ்க்கைத் தானே செழிக்கும் - பிறகு
முப்பத்து மூன்று சதவிகிதத்தை
சொப்பனத்தில் மட்டுமல்லாது - அது
நனவாகினும் அதை அனுபவிக்க யாருமற்று
கனவாகவே வாழ்க்கை கடக்க கூடும்

அருள் கூர்ந்து உண்மைப்
பொருள் உணருங்கள் இல்லத்தரசிகளே
இங்கே உறைத்தவை யாவும்
உங்களின் மனம்
புண்படவல்ல, பண்படவே என்றும்
பண்பாட்டை அடைக் காப்பதும்
பூவையர்க்கு பிறவிப் பெருமையான
பத்துமாதக் கருச்சுமத்தல் போன்றதேயாம்!

தங்கை

{"சப்பானிய"  மொழியில் தங்கை என்பதை குறிக்கும் குறியீடு!}
*****

"தன்-கை"
என்பது தான்
"தங்கை"
என மருவிற்றோ?

(மா/ம)து!...


"மாது"வின்
துணை(க்கால்)
இழப்பில் தான்
"மது" வளர்கிறதோ??? 

கணினி...




வெறும் இயந்திரமது - அது 
சரியாய் இயங்க - அதை
"கணி நீ!"
என்பதாலதன்  பெயர்
"கணினி"
என்றானதோ?

பணம்

உன்னை மனிதனென
உலகுக்கு உறைக்கும்
அடையாள அட்டை!
முகவரி இல்லையாயினும் - உன்
முகம் தெரியுமளவிற்காவது
இருக்கட்டும்
உன் அடையாளம் (பணம்)!!

விழியமுதினியின் முதல் பிறந்த நாளில்...

என்னப்பன் தேதியிட்டது: 21.06.2010
*******

பொன்மகளே! புதுவரவே! இளங்கோ வேனில்
      பெற்றெடுத்த விழியமுதே! கனியே! எங்கள்
கண்ணொளியே! ஓராண்டைக் கடக்கும் நீயும்
      கொண்டிடுக பல்லறிவும்! பண்பும் அன்பும்
மண்ணுலகில் பெறுவதுடன், மகிழ்ச்சி பொங்கும்
      மலர்மனமாய்! பொறுமையுடன் சுற்றம்; நண்பர்; 
உண்மையுடன் போற்றிடவே உறுதி கொள்க!
      உரிமைதரும் சொந்தமுடனே வாழ்க! வாழ்க!

திருமகளே! தென்மொழியே! தெளிந்த ஓடை
      தருகின்ற சலசலப்பாய்! மழலை இன்பம்!
பெருமையுடன் தருபவளே! பொதுமை எண்ணம்
      பூத்திடவே! உலகெங்கும் போற்றும் பண்பாம்!
ஒருவனுக்கு ஒருத்தியென: வாழும் நாட்டில்
      உதித்திட்ட செங்கரும்பே! தமிழர் கொள்கை
கருப்பொருளாய் இருக்கட்டும்! நாடும் ஏதும்
      காதலுடன் வாழ்த்தட்டும் வளர்க நாளும்!

பெரியவளே! முத்தமிழே! விழியே! அந்நாள்
      பிதற்றிட்டார் மேடைதொறும் "கவிஞர்" பாடல்!
பிரியமுடன் தமிழ்வாழ்த்தி அறுபத் தைந்தில்
      படைத்திட்டார் போராட்டம்! பல்லோர் மாண்டார்!
"சிரித்திட்டார்" ஆட்சியினில்! தமிழன் ஏற்றம் 
      சிறிதளவும் சேர்த்தாரா? "குடுமபம் காத்தார்!"
உரிமைக்குரல் நீஉடனே எழுப்பு! நாட்டோர்
      உணர்வுகளைத் திறந்திடுக! தமிழைக் காப்பாய்!

                                                                  {புலவர். இளமுருகு அண்ணாமலை}

விழியமுதினி பிறந்தவுடன்...


என்னப்பன் எனக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தேதி: 31.07.2009
*******


காலைஇளம் பரிதியென; பரந்த வானில்
      காதல்வளர் மேகமென; கண்ணே! போற்றும்
சோலைதரும் வாவியென; பறவைக் கூட்டம்
      செர்ந்தெழுப்பும் பாடலென; பாசம் சேர்க்கும்
பாலைவனச் சோலையென; குமிழ்சி ரிப்பில்
      பனிமலரின் மனம்கண்டேன்! பார்வை பெற்றேன்!
வேலைஎதும் எனக்கில்லை! உனது மூச்சால்
      வெதுவெதுப்பை நான்உணர்ந்தேன்! வெற்றி! வாழ்க!

வேனிலுடன் இளங்கோவன் இணைந்த காதல்
      விளைத்திட்ட ஒளிமுத்தே! நீதான் என்றும்
வானத்தின் பரப்பளவாய்; உலகம் வாழ்த்த
      வளர்நிலவாய்! காவிரியாய்! அன்பின் ஊற்றாய்!
தேனமுதாய்! தென்றலென! நலமாய் சுற்றம்
      சேர்ந்திங்கு போற்றிடவே; நாளும் பண்பாய்
மான்விழியே அமுதமுடன் இனிமை காண்பாய்!
      மாலைவரும் விண்மீனே! மாண்பே வாழி!

என்னவளே! இளந்தளிரே! இதயப் பூவின்
      எழில்கூட்டும் திருமகளே! உண்மை வாழ்வின்
பொன்மகளே! புதுவரவே! உலகம் காணும்
      பெண்ணரசே! செங்காந்தள் பூவே! உந்தன்
புன்னகையால் கோடிமலர் மணத்தைக் கண்டேன்!
      புறப்பாட்டை நீதருக! பொங்கும் இன்பம்!
நின்னடையால் நிமிர்ந்துடுவேன்! குறும்பைப் பார்த்து
      நிம்மதியை நான்கொள்வேன்! நீடு வாழ்க!

சின்னவளே! செந்தமிழே! எனது வாழ்வை
     சிறப்பிக்க வந்தவளே! கண்ணே உந்தன்
பொன்மழலை உதிர்த்திடுக! புரட்சிப் பாட்டால்
     புதுப்பிறவி நான்பெற்றேன்! பெண்ணே! நீதான்
என்வாழ்வின் விடிவெள்ளி! உயிரே! எந்தன்
     இயல்புணர்த்த வேறெவரால் ஆகும்? சுற்றம்
என்றென்றும் நலத்தோடு சிறக்க; நீயும்
     ஏற்றவழி காத்திடுக! ஏனோ வெட்கம்?

"விழியமு தினி"யே! உந்தன்
     விரல்களால் என்னைத் தொட்டே
பழியினைத் துடைப்பாய்! வந்த
     பாசத்தின் விளக்கம் சொல்வாய்!
இழிநிலை துறந்து விட்டேன்;
     இதயத்தால் உணரச் செய்தாய்!
எழில்வழி எந்தன் வாழ்க்கை
     எடுத்துநீ இயம்பக் கேட்பேன்!
                                                       
{புலவர். இளமுருகு அண்ணாமலை}

முன்னுரை...

        என்னுடைய முதல் தலையங்கமான "எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை"-யில் குறிப்பிட்டது போல், என்னப்பன் ஒரு தமிழ்ப் புலவர். அவர் பெயர் திரு. இளமுருகு அண்ணாமலை; அவர் நிறைய கவிதைகளை/ கட்டுரைகளை எழுதி இருக்கிறார். ஏனோ, அவர் அதை ஒரு சேர்க்கையாய், ஒரு பதிவாய் செய்ய முனைய வில்லை. அவருக்கு, என் போன்று ஒரு வாய்ப்பு (வலைப்பதிவு போல்) அமையவில்லை என்பதும் உண்மை. நான் எத்துனையோ முறை அவரிடம் அவரின் படைப்புக்களை ஏதேனும் ஒரு இதழில் வரும்படியாய் (முடிந்தால் தொடர்ச்சியாய்) முயற்சி செய்யுங்கள் என்று மன்றாடியும், வற்புறுத்தியும் வேண்டியிருக்கிறேன்; அவரால், முடியவில்லை. அவரின் அகவை (09.11.1939; சென்ற வாரம் தான் 73-ஐ துவங்கியிருக்கிறார்) மற்றும் குடும்ப சூழல் போன்றவை அவரை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். இன்னமும், எங்கள் ஊரில், சிலர் திருமணம் போன்ற விசேட நிகழ்ச்சிக்களுக்காய் கேட்பின், அவர் எழுதிக் கொண்டுதானிருக்கிறார்.

            எனக்கு இன்னமும், நினைவில் இருக்கிறது; அவரின் சொற்பொழிவை "புதுவை" வானொலி நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பேசக் கேட்டது; தொடர்ந்து பல ஆண்டுகளாய் பேசிக்கொண்டிருந்தார். வானொலியுடன், வீட்டுத் தெருவில் சுற்றமும்/ நட்பும் கூடி காத்திருப்போம்.  அவர் அப்போது புரட்சிக் கவிஞர் "பாரதிதாசன்" அவர்களின் மகனார் "உயர்திரு. மன்னர் மன்னன்" அவர்களுடன் இனைந்து பேசுவார். இருவருக்குள்ளும் ஒரு நட்பு உண்டு; இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. இன்னமும் அவர்களிருவரும், சந்திக்க நேர்ந்திடின் சிறிது நேரம் அந்த நட்புடன் அளவலாவுவர். ஏனோ, அந்த வானொலியில் ஆற்றிய சொற்பொழிவும் கூட ஒரு காலகட்டத்தில் நின்றுவிட்டது. அந்த நேரத்தில், வானொலி என்பது மிகப் பெரிய ஊடகம். அதுவும், எங்கள் ஊர் புதுவைக்கு அருகில் என்பதால், எங்களுக்கு சென்னை வானொலி நிலையத்தை விட, புதுவை வானொலி மிகவும் பரிச்சயம். ஏனோ, அவரின் திறமை ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடங்கி விட்டது.

           என் தந்தை அடிக்கடி உபதேசிக்கும் "நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும்; இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்பதன் அடிப்படையில், இப்போது என்ன செய்ய வேண்டும் என யோசிக்க தொடங்கினேன். அப்போது தான், என்னுடன் இப்போதிருக்கும் அவரின் படைப்புக்களை கொண்டு, என்னுடைய வலைப்பதிவிலேயே அவருக்கென ஒரு பிரிவை "என்னப்பன் பதிவுகள்" என்று உண்டாக்கியிருக்கிறேன். முதலில், என்னுடன் இருப்பவைகளை சேகரித்து பதிய உள்ளேன். இரண்டு பதிவுகளை இப்போதே வெளியிட்டும் இருக்கிறேன். என்னப்பனையும், அவரிடம் உள்ள அவரின் படைப்புகளை சேகரிக்க சொல்லியிருக்கிறேன். அடுத்த முறை இந்தியா செல்லும் போது, அவைகளையும் கொணர்ந்து வந்து பதிய முடிவு செய்துள்ளேன். அவரை இன்னமும் எழுதவும் வலியுறுத்தி இருக்கிறேன். என்னுடைய (தமிழ்)அறிவின் அடிப்படையில் அவரின் தமிழறிவும், தமிழ்த்திறனும் அபாரானமானவை. அவைகளை, என்னால் முடிந்த அளவில் எத்துனை நபர்களுக்கு கொண்டு சேர்க்க முடியுமோ அதை செய்வேன்.

           தமிழை இவர் வளர்க்கவேண்டும்/ வளர்க்கவில்லை; அவர் வளர்க்கவேண்டும்/ வளர்க்கவில்லை என்று புலம்புதலை தவிர்த்து, என்னுடைய மற்றும் என்னப்பன் படைப்புக்களை முடிந்த அளவிற்கு மற்றவரை சென்று சேர்க்கவே இந்த முயற்சி.

வெள்ளி, நவம்பர் 11, 2011

எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை...

("எம்மகள்" என்னவளின் கருவில்)
*******

     என் மகள், எல்லாத் தந்தையையும் போல் என்னையும் ஒரு "ஆனந்தத் திமிருடன்" நடக்கச் செய்தவள்; பிறந்தது முதல் மட்டுமல்ல; என்னவளின் கருப்பையில் கருவுற்றது முதலே. மேலே காணப்படும் புகைப்படங்கள் அவள் கருவாய் என் மனைவி (என்னவள்) "வேனில்"-இன் கருவறையில் இருந்த போது எடுக்கப்பட்டவை. எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது அந்த நாள், 2009 ஆம் ஆண்டு, "பிப்ரவரி" மாதம் 25 ஆம் நாள். எங்களுக்கு பிறக்கப் போகும் உயிர் ஒரு "பெண்" என உணர்ந்த நாள். என்னவள் இன்னுமொரு "தாயை" இந்த உலகுக்கு ஈயப் போகிறாள் என்று உணர்ந்த நாள். இந்திய நேரப் படி சுமார் 17:40 மணி இருக்கும் - நாங்கள் அதை உணர்ந்த நேரம். அந்த கருவின் உறுப்புகள் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க மருத்துவர் "எம்மகளின்" கால்களை ஒரு மருத்துவக் கருவி கொண்டு, மெதுவாய்(தான்!!!) தட்டுகிறார், உணர்ச்சிப் பெறச்செய்து அவைகளின் செயல்பாட்டை சரிபார்க்க! அவள் கால்களை அசைத்த இன்ப-வலி தந்த அனுபவத்தில் என்னவள் மகிழ்ச்சியுடன் சிணுங்குகிறாள்!! நானோ மருத்துவர் எங்கள் மகளின் கால்களை அடிக்கிறாரே என்ற உணர்ச்சி கலந்த மிரட்ச்சியில் கண் கலங்குகிறேன் (அது ஒரு சோதனை என்பது தெளிவாய் தெரிந்திருந்தும்). நம்புங்கள்!!! இதை மீண்டும் நினைவு படுத்தி எழுதும் போது என் கண்கள் இப்போதும் கலங்குகின்றன. வழிந்து வரும் கண்ணீரைத் துடைத்தபடி தான் இதை "தட்டச்சு" செய்கிறேன்.

         மனித-இனம் மிக அதிசயமான உணர்ச்சிகளை தன்னுள் கொண்டிருக்கும் உயிரினம். அதிலும் நான் எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவன் என்பதால், இப்போதும் அந்த நிகழ்வு என்னை கண்கலங்கச் செய்துவிட்டது! இது என்னுடையை மகிழ்ச்சியின் அடையாளமாய், அதன் வெளிப்பாடாய் கூட இருக்கலாம். அது தான் எம்மகளின் "இருதயம்" துடிக்கும் ஓசையை தெளிவாய் கேட்ட தினமும்!! ஓரிரு நிமிடத் துளிகள் என் இருதயத்துடிப்பு நின்றுவிட்டதாய் உணர்ந்த தருணம். என்னவள், ஒரு தாய் என்பதால் அவள் மிகவும் கொடுத்து வைத்தவள்! ஏனெனில் இதை அவள் உடல்-ரீதியாகவும் உணர்ந்தாள்; எனக்கு கிடைத்தது இதை உணர்வு பூர்வமாய் உணர மட்டும் தான். இது இயற்கை தானெனும், சில சமயங்களில் இதன் பால் என்னவள் மீது பொறாமைப்பட்டது கூட உண்டு. பரிசோதனை முடிந்து, பரிசோதனைக் கூடத்தை விட்டு வெளியில் வரும் போது இந்திய நேரப்படி சுமார் 18:00 மணி. வெளியில் வந்தவுடன், நான் எதிர்ப்பார்த்தது போல் ஒரு பெண் குழந்தையை கருவுற்றிருக்கும் என் மனைவியை கட்டியணைத்து  நன்றி சொன்னேன் (வார்த்தையற்று தான்!). உடனே, நாங்கள் இருவும் இந்தியாவில் இருந்த/ இருக்கும் எங்களிருவரின் தாய்-தந்தையர்க்கு இம்மகிழ்ச்சியான செய்தியை சொன்னோம்; அவர்களின் சந்தோசமும் எங்களை சேர்ந்து கொள்ள, நாங்கள் இருவரும் "அதி-மகிழ்ச்சி" யாய் இருந்த தருணங்களில்  ஒன்று அது.


       இதற்கு முன் - கருதரித்த மூன்றாவது மாதத்திலேயே, நானும் என்னவளும் குழந்தைக்கு என்ன  பெயர் வைப்பதென விவாதிக்க ஆரம்பித்து விட்டோம்! நான் கருவிலிருப்பது "மகள்" என்றும், அவள் இல்லை "மகன்" என்ற அடிப்படியிலும் விவாதிக்க ஆரம்பித்தோம். பின், யார் பெயரை தேர்ந்தெடுப்பது என்ற உணர்ச்சிப் (உரிமைப்) போராட்டம் எங்களுக்குள் ஆரம்பித்தது!! ஒரு வழியாய், மகள் பிறந்தால் நான் பெயர் வைப்பது எனவும், மகன் பிறந்தால் அவள் பெயர் வைப்பது எனவும் முடிவு செய்தோம். இது பற்றி, ஒருவருக்கொருவர் எங்களுக்கு பிடித்த புதுமையான பெயர்களை பரிமாறி அடுத்தவரின் ஆலோசனை கேட்க ஆரம்பித்தோம். இவ்வாறு ஓரிரு தினங்கள் கடந்த பின், என்னவள், கருவிலிருப்பது மகள் தான்; நீங்களே முடிவு செய்யுங்கள் என்றாள். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாலும், எனக்கு வியப்பாக (இன்னமும் தான்) இருந்தது. இந்த நிகழ்வு நடந்து இரண்டு மாதம் கழிந்த பின் தான் எங்களுக்கு கருவிலிருப்பது, மகள் என்றே (மேற்கூறியவாறு) உறுதியாயிற்று. அப்படியாயின், எப்படியவள் அவ்வளவு தீர்க்கமாய் சொன்னாள்? ஒரு வேலை சுமந்தது அவளாதலால், அவளுக்கு உணர்த்தப் பட்டிருக்குமோ என்னவோ! இது கண்டிப்பாய் அவள் எனக்கு விட்டுக் கொடுத்த பல செய்கைகளில் தலையாயமானது. உணர்வுப் பூர்வமாய் உணரும் எனக்கே பெயர் வைக்கவேண்டும் என துடிக்கும் போது (பெண்ணோ, ஆணோ! அது பிறகு), அதை உடல்-ரீதியாயும் உணர்ந்த அவள் எப்படி விட்டுக் கொடுத்தாள்?!. 

       இதை நான் எப்படி அவளுக்கு திருப்பி தருவேன்? நன்றி எனும் வார்த்தை மூலமா?? அது அவள் செய்ததற்கு இணையாகி விடுமா??? அல்லது இணையாகத் தான் ஏதும் செய்து விட முடியுமா???? என்னால் முடிந்த ஒரு சிறு பரியுபகாரமாய் ஒன்று செய்தேன்; என்னவென்று பின்னால் சொல்கிறேன். ஆனால், இந்த அனுமதிக்கு பின்னால் ஒரு நிபந்தனையை வைத்தாள்; அது அடுத்து "மகன்" பிறப்பின் (நினைவில் கொள்க; அந்த தருணத்தில் எங்களுக்கு அப்போது கருவிலிருந்தது என்ன பாலினம் என்றே தெரியாது) நான் தான் பெயர் வைப்பேன் என்றனள். சரி என்று முதலில் ஒப்புக் கொண்டு, பின் அவளை சீண்டினேன்; அப்படியாயின், அடுத்ததும் மகளே இருந்தால் மீண்டும் நான் தான் பெயர் வைப்பேன் என்றேன். வெகுந்தெழுந்துவிட்டாள் (விளையாட்டாய் தான்!), பின் தன் கருத்தை திருத்தி சொன்னாள்; அடுத்தது எந்த குழந்தை பிறப்பினும் நான் தான் பெயர் வைப்பேன் என்றாள்; சரி என்று நான் ஒப்புக் கொண்டேன். இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்! அது என்னவள், அவளின் உரிமைகளை எவர்க்கும் விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பது! அது நான் என்றல்ல; எங்கள் மகளே ஆனாலும் கூட!!. ஆனால், இதை காலம் கடந்து தான் உணர ஆரம்பித்து இருக்கிறேன்; இன்னமும் முழுமையாய்  உணர்ந்து என்னுள் வாங்கிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்; ஆனால், அதற்கு எனக்கு சில இழப்புகள் தேவைப்பட்டன. பரவாயில்லை! இனி வரும் இழப்பையாவது தடுக்கலாம் அல்லவா? "உரிமை" என்பதின் முழு அர்த்தத்தையும் எனக்கு உணர்த்தியவள்.   

           தினமும் ஒரு சில பெயர்களை கலந்தாலோசிக்கச் செய்தோம். ஒரு எண்ணம் வந்தது எனக்கு! தீர்க்கமாயும் வந்தது!! அதன் பால், நான் என்னவளிடம் இரண்டு நிபந்தனைகளை சொன்னேன், பெயரை தீர்மானிக்க! முதலில், தமிழின் சிறப்பு எழுத்துக்களாம் "ழ" கரமும், "ய" கரமும் (அல்லது அவைகளின் துணை எழுத்துக்கள்) இருக்க வேண்டும் என்பது. இரண்டாவது, இதுவரை எவர்க்கும் சூட்டப்படாத பெயராய்  இருக்க வேண்டும் என்பது. இருவரும் பொறுப்பின் சுமை அதிகமானதை உணர்ந்தோம்; நான் என்னவளின் உதவியை கோரினேன். அவள் உதவி செய்வதாய் ஒப்புக் கொண்டாள்; எனினும், மீண்டும் அவளை சீண்டினேன்; நானும் அடுத்தக் குழந்தைக்கு பெயர் வைப்பது உதவி செய்வேன் என்றேன். மீண்டும் வெகுந்தெழுந்தாள் (இந்த முறை விளையாட்டாய் தானா? என தெரியவில்லை!!!). இன்னமும் பாலினம் தெரியாத நிலையில், மகள் என்று இருவரும் மனமொப்ப எண்ணி பெண்(பெயராய்) பெயரை சிந்திக்க ஆரம்பித்தோம். அவள் சொன்னவை எனக்கும், நான் சொன்னவை அவளுக்கும் - ஒரு முதலீர்ப்பை அளிக்காததால் மீண்டும், மீண்டும் சிந்திக்கலானோம். ஒரு வாராய், ஒரு நாள் எனக்கு உதித்தது அந்த புதுப்பெயர்; மற்றும் புகழ்ப்பெயர். சிந்தித்ததும், என்னால் முடிந்த அளவிற்கு இணைய தளத்தில் துழாவினேன்; அந்த பெயர் உபயோகத்தில் இருப்பதாய் எந்த சான்றும் எனக்கு கிடைக்கவில்லை; என் அறிவுக்கு எட்டிய வரையில் "அப்பெயர்" எங்கள் மகளுக்கு சூட்டும் வரையில் எவர்க்கும் சூட்டப்படவில்லை; அதன் பின் (இது வரை) எவராவது சூட்டியுள்ளனரா எனவும் தெரியவில்லை!.

           அந்த அற்புதமான, அமிழ்தினும் இனிய பெயர் "விழியமுதினி". அன்றிரவு (வேலை முடித்து வீடு வந்தபின்) என்னவளிடம் இதை தெரிவித்தேன்; அவள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் - பிரமாதம்!  என்றாள். இதனிடையில், இந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது சற்று நீளம் என்பதால், வேறு ஒரு பரிமாணத்தில் அந்த பெயரை யோசித்தேன்; அது "விழியினி"; இதுவும் நன்றாக இருப்பினும், (சரியாக நினைவில்லை) ஏதோ ஒரு பழந்தமிழ் பாடலில் "விழியில் நீர்போல்" எனப்பொருள் படும்படியாய் "விழியிநீ ர்போல்" என்று வருவதை அறிந்தேன். இரண்டும் ஒன்றல்ல என தெளிவு பெரினும், அதை வேண்டாம் என முடிவெடுத்தேன். இப்படிதான் எங்கள் மகளின் அற்புதமான பெயர் தோன்றிற்று. இதை, முதன் முதலில் நான் தமிழில் எழுதிப் பார்த்தபோது அடைந்த சந்தோசம் சொல்லில் விளக்கமுடியாது. உடனடியாய், என் மகளைச் சுமந்து கொண்டிருப்பவள், அவளை சுமந்தவரிடம் கூறினாள்; எங்கள் சந்தோசம் அவர்களையும் சூழ்ந்து கொண்டது. எங்களின் இன்னுமொரு "அதி-மகிழ்ச்சி" யான தருணம் அது. சரி! பெயர் முடிவாயிற்று; பின் வந்து தொற்றிக் கொண்டது அந்த பயம் எங்களை; அதுவும் (வழக்கம் போல்) முதலில் என்னை தான் - அது பிறப்பது பெண் இல்லையெனில் என்னாவது? ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு, நாட்களை கடத்திக் கொண்டு இருந்தோம், இறுதியாண்டு தேர்வெழுதிவிட்டு முடிவுக்காய் காத்திருக்கும் மாணாக்கர்கள் போல்! எங்களின் மனமொத்த கருத்து போல், அந்த முடிவு (மகிழ்ச்சியாய்) வந்ததது,  முதல் பத்தியில் விளக்கியது போல்.

          சரி, பெயரின் சிறப்பு பற்றி இப்போது பார்ப்போம். என் மகளின் பெயரை, உருவாக்கியவன் என்ற முறையில், நான் கொடுத்த விளக்கம் "இனிமையான அமிழ்தைப் போன்ற கண்கள்" என்பது. "விழியமுதினி" என்ற பெயரை உற்று நோக்குங்கள்! அதில் "ய" கரம் தவிர அனைத்து எழுத்துக்களும் "கொம்புடன்" கூடிய துணை எழுத்துக்கள்! எனக்கு தெரிந்து ஒரு பெயரில் இவ்வளவு அதிகமான சதவிகிதத்தில் "கொம்புடன்" கூடிய துணை எழுத்துக்களை நான் கண்டதில்லை; இன்னும் "விழியினி" என்று வைத்திருப்பின், இது நூறு  சதவிகிதமாய் இருந்திருக்கும். இதை, என்னப்பனிடம் (அவர் ஒரு தமிழ் புலவர்) தெரிவித்தேன்; அவரின் விதை தான் நான் எனினும் அவர் அளவளாவிய மகிழ்ச்சியடைந்து என்னை பாராட்டினார். அதைக் கேட்டு "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்..." என்ற குறள் போல், என் மகள் "கருவான பொழுதினும் பெரிதுவந்தேன்"! இப்பெயர் உருவாக்கியதற்காய் எனக்கு கிடைத்த அடுத்த நிலை அங்கீகாரம் இது! இதற்கெல்லாம் உச்சமாய் எனக்கு கிடைத்த அங்கீகாரம், பின் வருவது.  "பாவேந்தர்" பாரதிதாசன் "விழி" என்ற வார்த்தையை மிகவும் நேசித்திருப்பதை(தாய்) அவரின் படைப்புகள் மூலம் உணர்ந்தேன். என்னவள் "பாவேந்தர்" பாரதிதாசனின் "மகள் வயிற்றுப் பெயர்த்தி", அதாவது "கொள்ளுப் பெயர்த்தி". ஆகையால், என் மகள் "பாவேந்தர்" பாரதிதாசனின் "எள்ளுப் பெயர்த்தி". இது எப்படி ஒன்றி வந்தது என தெரியவில்லை! பெயர் வைத்து கிட்டத்திட்ட ஓராண்டு கழித்து என் கவனத்திற்கு வந்தது இது.

         சரி, இறுதியாய் நான் என்னவளுக்கு செய்த அந்த பரியுபகாரம் பற்றி கூறி முடிக்க விரும்புகிறேன். அது! எங்கள் மகளை "பத்து மாதங்கள்" சுமந்த என்னவளின் பெயரை எம்மகள் "வாழ் நாள் முழுதும்" சுமக்கும் ஒரு சிறிய காரியத்தை செய்தேன். என் மகளின் பிறப்புச் சான்றிதழில் அவளின்  முழுப்பெயராய் கொடுத்தது "விழியமுதினி வேனில் இளங்கோவன்". இதை நிறைய கனவான்கள் செய்திருக்கிறார்கள்/ செய்கிறார்கள் எனினும், நான் என்னவளுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு பிரதிபலனாய் (மனப்பூர்வமாய்) எண்ணி செய்தது இது!. சரி! நான் ஏன் எங்கள் மகள் பிறந்த அந்த அற்புத நாளைப் பற்றி ஏன் எழுதவில்லை என வினவத் தோணும்! அது ஓர் தனி சகாப்தம்!! எங்கள் மகளைப் பற்றி ஒரு "தலையங்கத்தோடு" எழுதி முடித்து விட முடியாது. அதை மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில், தனி "தலையங்கமாய்" எழுதுகிறேன். மேலும், அந்த அற்புதமான நாளை சந்தோசம் மட்டும் காட்டி/ கொண்டு விளக்கிடுதல் முடியாது! எங்கள் மகள் பிறந்த நேரத்திற்கு சரியாக "ஒரு மணி, முப்பத்தெட்டு நிமிடங்கள்" முன்னாள், திடமான நெஞ்சுறுதி கொண்ட என்னவள் எழுப்பிய (அதுவும் முதன் முதலாய்) அந்த "அலறல்" இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையும் கண்டிப்பாய் பகிர்ந்திட வேண்டுமாதலால், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அந்த நிகழ்வுகளுடன்/ நினைவுகளுடன் உங்களை சந்திக்கிறேன். என்னுடைய முதல் தலையங்கத்தை "என் மகள்" பற்றிய செய்தியிலிருந்து தொடங்கியது, மிகப் பொருத்தமானதாக படுகிறது. 


விழியமுதினி வேனில் இளங்கோவன்!!!

பின்குறிப்பு: காரணப் பெயராய் வந்தது போல், எங்கள் உயிரான மகளின் "கண்கள்" ஒரு இனிமையான, அமிழ்தைப் போன்ற "விழி"கள் தான். அதை இந்த வலைதளத்தின் முத்திரையாய் (LOGO) கொடுக்கப்பட்ட படத்தில் காணலாம்/ உணரலாம்; ஆம்! அது எங்கள் "விழி"யின் "விழிகள் தான்". 

தமிழ் வளர...

(கீழ்க்கண்ட என் கவிதையை "புரட்சிக் கவிஞர்" திரு. பாரதிதாசன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்)

*****

தமிழ் இனி மெல்லச் சாகும் - இது
தமிழ்ப் பெரியோர் வாக்கு
இல்லை எனவில்லை! தமிழ்
இன்று தொய்ந்து தானிருக்கிறது
என் செய்தால் தகும்
எந்தமிழ் மீண்டும் செழிக்க?

தமிழில்...
திரைப்படத்தைப் பெயரிடுவதாலோ?
துறைப்பாடத்தைப் பயில்வதாலோ??
அலுவலர் கையொப்பமிடுவதலோ???
அரசியலார் முழக்கமிடுவதாலோ????

செழித்துவிடுமா தமிழ்? இல்லை, இல்லை
செவிக் கொடுத்து கேளீர்!

"முப்பது கோடி முகமுடையாள்
எனினும் சிந்தனை ஒன்றுடையாள்"
இது வெறும் கூற்றல்ல! நம்
இந்திய தேசத்தின்
இயல்பு இதுவே!!
எங்கும்,
எதிலும் தமிழ் என்றால்
வேற்றுமையில் ஒற்றுமை காணாது
வேற்றுமையே மிஞ்சும்!!!

எனவே, எனவே
தமிழ் வளர...
தமிழில் படித்திடலாகாது
தமிழைப் படித்திடல் வேண்டும்

சங்க இலக்கியத்தையே போற்றுதல் விடுத்து
தங்க இடமின்றியே தவிக்கும் இளஞ்
சிங்கங்களை, நம் தேசத்து
தங்கங்களை
தமிழைப் பயில வைத்து
தழைத்து வாழ வழி வகுத்து
தாரீர்!
நம்மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு
நல்லதொரு ஊக்கத்தொகையும்
தன்னாலனைத்தும் முடியுமென்ற
தன்னம்பிக்கையும் தாரீர்!!
தனியாய், தமிழே தவமாய்
திடமாய் இருக்கும் தமிழறிஞர்க்கு
தகுதியறிந்து தேவைகளை தாரீர்!!!
அவர்கள்...
தமிழை மட்டுமல்லாது
தாய் தேசத்தையும் முதலில்
துளிர்க்கச் செய்வர்; பின்
தழைக்கச் செய்வர்

இவையாவும் செய்திடின்
இனி வரும் சந்ததியரேனும்
தமிழை கட்டாய பாடமாய்
தமக்கிது உதவாதென்ற
வெறுப்புடன் கற்காது
விருப்புடன் கற்பர்;
தமிழை வளரப்பர்!
தமிழ்...
உணர்வாய் எவருடனும்
உறவாய் இருக்க உதவட்டும்
வெறியாய் எவற்றிலும்
வெறுமை காணுதற்கு வேண்டாம்!!

இது தமிழ் பேசும்
இவ்விந்தியனின் வேண்டுகோள்!!!

தற்கொலை


துச்சமாய் மரணத்தையெண்ணி 
தற்கொலை செய்ய
துணிந்த உன்னால் - ஏனுன்
துன்பங்களை துறக்க முடியவில்லை?
வீரனாய் அப்பெருந்துயர் (மரணம்)
வென்ற கோழை நீ!!!

அச்சம்


அச்சத்தை மடமையென்போர்
துச்சமெனில் சந்திக்கட்டும்
என்னவளின் "விழி"களை

பெருஞ்சத்தம் எழுப்பும் புயல்சீனப்
பெருஞ்சுவராய் உயர்ந்திடும் அலை
விண்ணையே மிரட்டும் விண்கற்கள்
மண்ணையே உலுக்கும் நிலநடுக்கம்
எல்லாமும் புறமுதுகிட்டு திரும்பிடும்
என்னவள் அவளின்விழி நோக்கின்

இத்துனை அறிந்தும்
பித்தானேன் அவள்மேல்
அவளை...
மணக்கவும் வழியில்லை
மறக்கவும் தெரியவில்லை
மரணிக்கவும் துணிவில்லை

எனக்குதவ யாரும் கூறிவிடாதீர்
இதனை அவளிடம்
இருக்கட்டும் இக்காதல்
ஒருதலையாகவே!!!