செவ்வாய், ஜனவரி 31, 2017

குறள் எண்: 0548 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0548}

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்

விழியப்பன் விளக்கம்: குடிமக்களால் எளிதில் அணுகமுடியாத, முறையான செங்கோலை செலுத்தாத அரசாள்வோர்; தாழ்மையான நிலையை அடைந்து, தானாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
உறவுகளால் கருணையோடு மதிக்கப்படாத, சரியான மனிதத்தைப் பகிராத மனிதர்கள்; ஆதரவற்ற முதுமையை அடைந்து, சுயத்தை இழப்பர்.
*****

திங்கள், ஜனவரி 30, 2017

குறள் எண்: 0547 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0547}

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், நாடு முழுவதையும் காப்பர்! அந்த அரசாள்வோரையும், நடுநிலையைத் தவறாத அவர்களின் செங்கோலே காக்கும்!
(அது போல்...)
போராளிகள், உரிமை யாவையும் நிலைநாட்டுவர்! அந்தப் போராளிகளையும், அறவழியை மீறாத அவர்களின் ஒழுக்கமே நிலைநாட்டும்!
*****

ஞாயிறு, ஜனவரி 29, 2017

குறள் எண்: 0546 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0546}

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்

விழியப்பன் விளக்கம்: அரசாட்சிக்கு வெற்றியைத் தருவது, வேல் இல்லை! அரசனின் செங்கோலே முதற்காரணம்; மேலும், அச்செங்கோலும் சார்பில்லாமல் இருக்கவேண்டும்!
(அது போல்...)
குடும்பத்திற்கு சிறப்பு சேர்ப்பது, சொத்து இல்லை! உறுப்பினர்களின் தன்னொழுக்கமே முதன்மை; மேலும், அவ்வொழுக்கமும் குறையில்லாமல் இருக்கவேண்டும்!
*****

சனி, ஜனவரி 28, 2017

குறள் எண்: 0545 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0545}

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

விழியப்பன் விளக்கம்: சரியான செங்கோலுடன், அரசாங்கம் நடத்தும் மன்னரின் நாட்டில்; பருவமழையின் அளவும்/பயிர்களின் விளைச்சலும், ஒருசேர அதிகரிக்கும்.
(அது போல்...)
உறவின் அடிப்படையுடன், இல்லறம் நடத்தும் மனிதர்களின் ஊரில்; அறச்செயலின் அளவும்/மனிதத்தின் ஆக்கமும், சரியாய் கலந்திருக்கும்.
*****

வெள்ளி, ஜனவரி 27, 2017

குறள் எண்: 0544 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0544}

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு

விழியப்பன் விளக்கம்: குடிமக்களை அன்பால் தழுவி, செங்கோலை நிலைநாட்டி நாட்டை ஆளும் அரசாள்வோரின்; பாதையைத் தழுவி, மக்களும் நிலைபெறுவர்.
(அது போல்...)
குடும்பத்தை அறத்தால் பழகி, வாய்மையைப் போதித்துக் குடும்பத்தை வழிநடத்தும் பெற்றோரின்; இயல்பை பழகி, குழந்தைகள் வழிநடப்பர்.
*****

பொ(று/ரு)க்கி...


         வசைபாட உபயோகிக்கப்படும் "பொறுக்கி" என்ற சொல்லைப் பற்றி, சில விடயங்களை அலசி ஆராய்ந்து; அவற்றில் தேவையானவற்றைப் "பொருக்கி" எடுத்து - என் புரிதலை விளக்கி இருக்கிறேன். அருள்கூர்ந்து உங்கள் புரிதலைப் பகிருங்கள்.
  1. "பொறுக்கி" என்ற சொல்லுக்கு வல்லின "ற" எழுத்தே சரியென்று அறிகிறேன். அப்படியெனில், இந்த "பொறுக்கி" என்ற சொல் எப்படி வந்திருக்க வேண்டும்? "பொறுமையை இறுக்கி (அல்லது) இருத்தி" வைத்திருப்பவன் என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். பின் ஏன், இந்த சொல் தவறானப் பார்வையில் பார்க்கப்படுகிறது? சரி, ஒரு புரிதலை நோக்கி பயணிப்போம்.
  2. வேலை ஏதும் இல்லாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருப்போரை "பொறுக்கி" என்று அழைப்பது வழக்கமே! இந்த சொல்லாடல் எப்படி வந்திருக்க வேண்டும்? ஒருவேளை... அவசரப்பட்டு எந்த வேலையையும் ஏற்காமல்; (பள்ளி/கல்லூரி) படிப்பை முடித்து, தன் தகுதி/திறனுக்கு ஏற்ற வேலைக்காக "பொறுமையை இறுக்கி" இருப்போர் என்ற பொருளில் உருவாகி இருக்கலாம். 
  3. அதுதான், தன் பிள்ளைகள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை பார்த்து "பொறுமையை இறுக்க" முடியாத பெற்றோர், "இவ்வளவு பொறுமையை இறுக்கிக் கொண்டிருக்கிறாயே?!" என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் "பொறுக்கி" என்று கோபமாய் திட்ட வித்திட்டிருக்க வேண்டும். அதுதான், அப்படி சரியான/முறையான வேலையை செய்யாத சமூக விரோதிகளையும் "பொறுக்கி" என்றழைப்பதற்கு காரணமாய் அமைந்திருக்கும்.
  4. ஒருவேளை...! இந்த "பொறுக்கி" என்ற வசைபாடும் சொல் "பொருக்கி" என்று இடையின "ர" எழுத்தைக் கொண்டு உதயமாகி இருக்கும் என்று வாதத்திற்காய் எடுத்துக் கொண்டால் - அதையும் அருமையான சொல்லாகவே தெரிகிறது. அது தேடலையும்; அதன் மூலமாய் நல்லதை தேர்ந்தெடுக்கும் திறனையும் குறிப்பதாகிறது.
  5. மீண்டும் மேற்குறிப்பிட்ட உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், தன் தகுதி/திறன் இவற்றிற்கு பொருத்தமான ஒரு "நல்ல" வேலையை தேடிக் கொண்டிருப்போர் என்ற அடிப்படையில் பிறந்திருக்க வேண்டும். காய்கறி போன்ற பொருட்கள் வாங்கும்போது "பார்த்து, பொருக்கி எடுங்கள்" என்று சொல்வது நாம் அனைவரும் அறிந்ததே.
  6. இப்படி வல்லினம் (அல்லது) இடையினம் என்று எந்த எழுத்தைக் கொண்டு இந்த சொல் இருப்பினும், நல்ல புரிதல்களைத் தானே கொடுக்கின்றன? பின் ஏன், இந்த சொல் "மெல்லினத்தாரை" காயப்படுத்த/வசைபாட "வல்லினத்தாரால்" பயன்படுத்தப் படுகிறது?
  7. "மயிர்" என்ற அருமையான தமிழ் வார்த்தையைக் கொச்சைப் படுத்தியது போல், "பொறுக்கி" என்ற வார்த்தையையும் கொச்சைப்படுத்தி விட்டோமா? மயிர் போன்றே சில உறுப்புகளையும் கொச்சைப்படுத்தி இருக்கிறோம்!
  8. இவ்வளவு ஏன்... "ஆத்தா" என்ற அன்புமிகு சொல்லக் கூட கொச்சைப்படுத்தி இருக்கிறோம்.
  9. இப்படி, நாம் கொச்சைப்படுத்திய "நல்ல தமிழ்ச்சொற்கள்" பற்பல! அதில், இந்த "பொறுக்கி" என்ற வார்த்தையும் இணைந்துவிட்டதோ?
  10. பெரும்விந்தை என்னவென்றால்... "பொறுக்கி" என்ற இந்த தமிழ்ச்சொல்லை சமீபத்தில் ஒருவர், தமிழர்களை நோக்கி பொதுமையில் சொல்ல; அதை மையப்படுத்தி, தமிழ்ச் சூழலில் பலரும் "பொறுக்கி" என்ற பொருளில் (பதிலுக்கு) திட்டிட, வார்த்தைகளைத் தேடிப் "பொருக்கி'க் கொண்டிருப்பது தான்! 
சிதைந்த நற்சொற்களை "பொருக்கி" எடுப்போமா???

பதிந்தவர்: விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
நாள்:         27.01.2017

வியாழன், ஜனவரி 26, 2017

குறள் எண்: 0543 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0543}

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

விழியப்பன் விளக்கம்: பண்பில் சிறந்தோர் கற்கும் மறைநூல்களுக்கும், அவர்களின் அறத்திற்கும்; அடிப்படையாய் இருப்பது, அரசாள்பவரின் செங்கோல் நிலைநாட்டும் நெறியே ஆகும்.
(அது போல்...)
பொதுவாழ்வில் வென்றோர் கடைப்பிடிக்கும் ஒழுக்கத்திற்கும், அவர்களின் அன்புக்கும்; ஊக்கமாய் இருப்பது, குடும்பத்தின் உறவுகள் விதைக்கும் கருணையே ஆகும்.
*****

புதன், ஜனவரி 25, 2017

குறள் எண்: 0542 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0542}

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி

விழியப்பன் விளக்கம்: மழையின் அளவைச் சார்ந்து, உலக உயிர்களின் வாழ்க்கை இருப்பது போல்; மன்னனின் செங்கோலைச் சார்ந்து, குடிமக்களின் வாழ்க்கை அமையும்.
(அது போல்...)
உயிரணுக்களின் இயல்பை ஒட்டி, உடல் உறுப்புகளின் செயல்பாடு இருப்பது போல்; மனதின் எண்ணங்களை ஒட்டி, மனிதர்களின் செயல் அமையும்.
*****

செவ்வாய், ஜனவரி 24, 2017

காளைப் பிரச்சனையும்; காளையர் எழுச்சியும்...


காடுறையும் விலங்குகளை மக்கள் முன்பு
     காட்டிஅதன் காட்சியினில் வருவாய் ஈட்டும்
பீடுநிறை செயல்தன்னால் உரிமை மாளும்
     பொய்மைமிகு எண்ணத்தால் "ஆர்வ லர்கள்"
தேடிட்டார் தடைச்சட்டம்; அதனால் மூன்று
     தேய்ந்திட்ட ஆண்டுகளில் தமிழர் வீரம்
மாடுபுகழ் "ஜல்லிக்கட்டு" காட்சி மாய்த்தார்!
     முடிந்ததெனில் நடத்துவீர்என கூவல் விட்டார்!

ஐங்கரத்தன் ஆனைமுகன் தெய்வம் தானே!
     ஆனாலும் மனத்தில்ஒரு கலக்கம் இன்றி
இங்கிருக்கும் பாகனவன் யானை தன்னை;
     இருமாப்பாய் நடத்திஅதை தெருக்கள் தோறும்
பங்கமதை இழைக்கின்றான்; பிச்சை தானும்
     பசியுடனே எடுக்கின்ற காட்சி தன்னால்
அங்கத்தை வருத்திஅதன் உரிமை போக்கும்
     அசிங்கத்தை யார்உணர்ந்து தடுப்பார்? கேளீர்!

உரத்தகுரல் எழுப்பிடுவேன்; பலரும் நாட்டில்
     உரிமையுடன் தன்னலத்திற் கென்றே நாளும்
பரந்திட்ட எண்ணமுடன் பண்பில் லாமல்
     பழக்கமென தன்வாழ்வில்; மனதில் ஈவு
இரக்கமின்றி ஆடுமாடு பறவை கோழி
     இரையாக்கும் வன்மனத்தீர்! வதைத்தல் ஏனோ?
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்! உண்மை சொல்வீர்!
     செவ்வியநல் திறமாமோ? பதில்தான் என்ன?

தொடர்ந்துவரும் நாட்களிலே தொல்லை இன்றி
     தூர்வாறும் அரசியலார்; "பீட்டா" போன்ற
இடர்கூட்டும் தொல்லைகள் தொடரா வண்ணம்
     இனக்கவலை தீரட்டும்;  இதுபோல் நாட்டில்
படர்கின்ற பெருந்துன்பம் ஏது மின்றி
     பரவலென ஆட்சிநலம் பெறுதல் வேண்டும்!
சுடர்நாளும் மக்கள்மனம் ஆளும் போக்கால்
     சொந்தமென அனைவருமே சண்டை மாய்ப்போம்!

கற்புநிறை மனத்துடனே உணவுச் சாலை
     கண்டதிரு வள்ளலார் வழியில் செல்வோம்!
எண்ணத்தின் தூய்மைதனில்; உண்மை! நேர்மை!
     எழுவதனால் மாந்தருக்குள் மாண்பு கூடும்!
உண்மையுடன் நான்சொல்வேன்; உறுதி அந்த
     உயர்வாக்கும் புகழுலகம் ஒளிரும்! வாழும்!
கண்ணியத்தில் கடமையுடன் கவிதை சேர்ப்போம்!
     கட்டுப்பா டாய்இணைந்து உரிமை காப்போம்!

எந்தஒரு தூண்டுதலும் இன்றி, இந்நாள்
     எப்படித்தான் நடக்கிறதோ! கட்டுக் கோப்பாய்;
சொந்தமென மனத்திருத்தி மாண வர்கள்
     சுடர்விட்டார் உரிமையுடன்! கட்டுக் கோப்பாய்
இந்நிலத்தில் இருமூன்று நாட்க ளாக
     இளைஞருடன் சிறுவர்களும் தாயும் ஒன்றாய்!
வந்திங்கே ஆயிரமாய் கூடி நின்றார்!
     வார்த்தையிலை; பாராட்டு கூற என்னால்!

ஆயிரத்து தொள்ளாயிரத் தறுபத் தைந்தில்
     ஆர்வமுடன் இந்தியினை எதிர்த்த போரில்
உயிரழந்தோர் ஏராளம்! பள்ளிக் கூடம்
     உருப்படியாய் நாற்பத்தைந் துநாட்கள் மூடி
தயிராக உரைந்துவிட்ட நாளில் அன்று
     தளமாக தூண்டுதலால் வெற்றி கண்டார்!
பயிராகும் இளைஞரின்று தானாய் கூடி
     பண்பழிய கண்ணியத்தால் வாழ்ந்து நின்றார்!

இந்நாளில் அரசியலார் "ஜல்லிக் கட்டு"
     இனிதாக நடப்பதற்கு சட்டம் போட்டார்!
எந்நாளும் இதைஏலோம்! "பீட்டா" என்னும்
     எதிரிக்கு தடைபோட வேண்டும்! எங்கள்
சொந்தத்தை காத்திடவும் சூளு ரைப்போம்!
     சுரண்டவந்த அந்நியரின் வழிஅ டைப்போம்!
எந்தஒரு கருத்துக்கும் இடம்இங் கில்லை
     எல்லார்க்கும் மதிப்பளிப்போம்! இதயம் கொள்வீர்!

இன்றிருக்கும் சூழ்நிலையே வளர வேண்டும்!
     இனிமையுடன் இளைஞர்களின் எண்ணம் சூழல்
குன்றொளிரக் காட்டிடவே; அறிஞர், நல்லோர்!
     குறையாமல் அறம்கூறி வளர்த்தல் வேண்டும்
அன்றந்த காந்திகண்ட "அகிம்சை" முற்றும்
     அழியாமல் மடைமாற்றம் செய்தலே நாட்டில்
குன்றாமல் வெளிநாட்டின் ஆதிக் கத்தை
     குறைத்திடலாம்! தாயகத்தை காப்போம்! வாரீர்!

இன்றிந்த இளைஞருடன் மாண வர்கள்
     இணைந்து வெற்றிபெற்ற செய்கை; அந்நாள்
குன்றமர்ந்த தகப்பனுக்குச் சாமி யான
     குமிழ்சிரிப்பின் முருகன்அவன் அருளோ? அன்றி
"அன்னையிடம் பாலுண்டு" பண்பாய் வாழும்
     "அறிவாலே" விளைந்ததுவோ? எதுவா னாலும்
நின்றொளிரக் காத்திடுவோம்! புகழும் நீண்டு
     நிலைத்திடவே வாழ்த்திடுவோம்! மானம் காப்போம்!

அழிந்தொழிந்த தமிழர்தம் பண்பு; மாண்பு
     அகழ்ந்தெடுக்கும் வாய்ப்புத்தான் இந்த நேரம்
விழித்திட்ட இளைஞர்களின் எழுச்சி தன்னால்
     விலைபோகா ஒருவழியைக் காண்போம்! நம்மில்
இழந்திட்ட புகழ்பாதை காத்தல் நன்றாம்!
     இதுவன்றோ "நல்லநேரம்" நாமும் திட்டம்
செழிப்புடனே தீட்டிடுவோம்! "காம ராசர்!"
     செதுக்கிட்ட பாதையிலே நடத்தல் செய்வோம்!

என்னுடைய இதயத்தில் உறுதி ஆக
     எழிலிடத்தைப் பெற்றிருக்கும் வெற்றி வாகை;
புன்முறுவல் முகத்துடன் கூடி நிற்கும்;
     புதுமைமிகு இளைஞர்களே! முதிர்ந்த நெல்லும்
இன்முகத்தில் வளைந்திடுதல் போல; நீங்கள்
     இதயத்தில் ஏற்றிடுவீர்! முதல்வர் மற்றும்
குன்றொளிரும் பிரதமரும் கொடுக்கும் அந்த
     குணம்நிறைந்த வாக்குறுதி ஏற்றல் நன்றாம்!

"மெரினா"வில் மட்டுமன்று; திருச்சி சேலம்
     மதுரையுடன் மாடுபுகழ் "அலங்கா நல்லூர்"
உரிமையுடன் "ஜல்லிக்கட்டு" நடக்க வில்லை
     உறுதியான உள்ளத்தில் மறுத்து விட்டார்!
செரிந்திட்ட நல்மனத்தில் அரசு இந்நாள்
     சிதறாமல் சட்டத்தை கொடுத்த போதும்
புரியாத புதிரல்ல; நிலையாய் "சட்டம்"
     போடும்வரை ஒய்வில்லை; தொடர்ந்தார் போரை;

இதையேநாம் முதலாய்க் கொள்வோம்! நம்மின்
     இதயத்தின் மகிழ்ச்சிஒலி நிலைத்து நாளும்
சிதையாமல் தமிழகத்தின் வாழ்வு காப்போம்!
     சிறிதளவும் சிதறாமல் சிறப்பு சேர்ப்போம்!
கதையாக இதையாக்கல் வேண்டாம்; போற்றும்
     கவிதையினில் வரலாறாய் போற்றிக் காத்து;
விதையாக "புறத்தோடு" "அகமும்" கூறும்
     விதியாக்கி நூல்படைப்போம்; புனிதம் வாழும்!

எனக்கெந்தன் தந்தைவைத்த பெயரை மாற்றி
     இளமுருகுவாய் வலம்வந்தேன்; தமிழுக் காக
அன்றெனக்கு மொழிப்போர்தான் தூண்டு கோலம்!
     அதுபோன்ற நிலைஎதுவும் இன்றில் லாமல்
தன்மனத்தில் அனைவருக்கும் இனிதாய் தோன்றி
     தழைத்திட்ட ஆலமர விழுதாய் வாழும்
என்றிந்நாள் உணர்வதனால்; இனிதாய் சொல்வேன்
     இனிநம்மின் நாட்டினிலே நேயம் வாழும்!

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

குறள் எண்: 0541 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0541}

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

விழியப்பன் விளக்கம்: நடந்தவற்றை ஆழ ஆராய்ந்து, தெளிவுடன் நீதி வழங்குவதற்காக; எவரிடமும் சார்பின்மையோடு இருந்து, இறைத்தன்மைக் கொண்டிருப்பதே - செங்கோன்மை ஆகும்.
(அது போல்...)
கொள்கையை ஆழ உணர்ந்து, உண்மையுடன் உரிமையை நிலைநாட்ட; இயல்பு வாழ்க்கையைப் பாதுகாத்து, அறவழியில் நடப்பதே - போராட்டம் ஆகும்.
*****

திங்கள், ஜனவரி 23, 2017

அதிகாரம் 054: பொச்சாவாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை

0531.  இறந்த வெகுளியின் தீதே சிறந்த
           உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

           விழியப்பன் விளக்கம்: 
மகிழ்ச்சியான தருணத்தில், மகிழ்ந்து களைத்ததால் விளையும் மறதி; 

           அளவுகடந்த கோபத்தை விட, மிகுந்த தீமையானதாகும்.
(அது போல்...)
           மிகையான சுதந்திரத்தில், முறையற்ற செயல்களால் விளையும் சீர்கேடு; தொடர்ந்த 
           அடிமைத்தனத்தை விட, அதீத ஆபத்தானது.
      
0532.  பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
           நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

           விழியப்பன் விளக்கம்: 
இடைவிடாத வறுமை, அறிவைச் சுருக்கி அழிப்பது போல்; 

           மறதியெனும் குறைபாடு, சிறப்பை அழிக்கும்.
(அது போல்...)
           தீராத குழப்பம், சிந்தனையைச் சிதைத்து சிதறடிப்பது போல்; தானெனும் அகந்தை, 
           மனிதத்தைச் சிதைக்கும்.
           
0533.  பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து 
           எப்பால்நூ லோர்க்கும் துணிவு

           விழியப்பன் விளக்கம்: 
மறதியெனும் குறையுள்ளோர், புகழ் அடைதல் சாத்தியமில்லை! 

           உலகிலுள்ள எவ்வகை கல்வியைப் பயின்றோர்க்கும், இது பொதுவான கருத்தாகும்.
(அது போல்...)
           தானெனும் அகந்தையுள்ளோர், பிறவிப்பயன் பெறுதல் அரிதானது! புவியிலுள்ள எவ்வித 
           சக்தியைக் கொண்டோர்க்கும், இது சமமான விதியாகும்.

0534.  அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
           பொச்சாப்பு உடையார்க்கு நன்கு

           விழியப்பன் விளக்கம்: 
ஐயம் உடையோர்க்கு, எந்த அரணும் பாதுகாப்பை அளிப்பதில்லை. 

           அதுபோல்; மறதி உடையோர்க்கு, எவ்வொன்றும் நன்மையைப் பயப்பதில்லை!
(அது போல்...)
           சந்தேகம் உள்ளோர்க்கு, எந்த உறவும் நம்பிக்கையைத் தருவதில்லை. அதுபோல்; 
           பொறாமை இருப்போர்க்கு, எதுவொன்றும் மகிழ்ச்சியைத் தருவதில்லை!

0535.  முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
           பின்ஊறு இரங்கி விடும்

           விழியப்பன் விளக்கம்: 
மறதியால், எதிர்வரும் துன்பங்களுக்கு முன்பே திட்டமிடத் 

           தவறுவோர்; துன்பங்கள் வந்தபின், தம் மறதியை எண்ணி வருந்திடுவர்.
(அது போல்...)
           சோம்பலால், முதுமைப் பிணிகளுக்கு இளமையில் தயாராக மறுப்போர்; முதுமை வந்தபின், 
           தம் சோம்பலை நினைத்து வருந்துவர்.

0536.  இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
           வாயின் அதுஒப்பது இல்

           விழியப்பன் விளக்கம்: 
எவரிடத்திலும்/எந்நாளும் மறதியில்லாத நிலைப்பாடு, தவறாமல் 

           வாய்க்குமானால்; அதற்கு ஒப்பாக நன்மைப் பயப்பது, வேறெதுவும் இல்லை.
(அது போல்...)
           எப்படைப்பிலும்/எவ்விதத்திலும் குறையில்லாத சமூக-அக்கறை, தொடர்ந்து 
           இருக்குமானால்; அதற்கு ஈடாகப் பிறவிப்பயன் தருவது, வேறேதும் இல்லை.

0537.  அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
           கருவியால் போற்றிச் செயின்

           விழியப்பன் விளக்கம்: 
மறதியைக் களையும் வைராக்கியமான மனதுடன், செயல்களைச் 

           செய்தால்; செய்வதற்கு இயலாத, அரிதான செயலென்று ஏதுமில்லை.
(அது போல்...)
           பின்வாங்குதலை அழிக்கும் உறுதியான துணையுடன், போராட்டங்களை நடத்தினால்; 
           தீர்க்க முடியாத, சவாலான பிரச்சனையென்று ஒன்றுமில்லை.

0538.  புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
           இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

           விழியப்பன் விளக்கம்: 
"திருக்குறள்" போன்ற புகழப்பட்ட விடயங்களை, போற்றிப் பின்பற்ற 

           வேண்டும்; அப்படி செய்யாமல் மறந்தோர்க்கு, ஏழு பிறவியிலும் பயனில்லை.
(அது போல்...)
           "மழலை" போன்ற அற்புதமான விடயங்களை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்; அப்படி 
           செய்யத் தவறியவர்க்கு, ஏழு இசைகளிலும் இன்பமில்லை.


0539.  இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
           மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

           விழியப்பன் விளக்கம்: 
நம் பெருமகிழ்ச்சியால், மனவலிமை பெறும்போது; மறதியால் கெட்டு 

           அழிந்தவர்களை, மனதில் நினைக்கவேண்டும்.
(அது போல்...)
           நம் பெருந்தொழிலால், பொருளாதாரம் வளரும்போது; ஆணவத்தால் வாழ்வியல் 
           இழந்தவர்களை, நினைவு கூறவேண்டும்.

0540.  உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
           உள்ளியது உள்ளப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: 
நம் இலக்கை மறவாமல், உறுதியோடு இருப்பின்; எண்ணிய 

           இலக்கை அடைவது, மிக எளிதாகும்.
(அது போல்...)
           நம் பிறப்பை இகழாமல், நெறியோடு வாழ்ந்தால்; பிறவியின் பயனை அடைவது, மிக 

குறள் எண்: 0540 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0540}

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

விழியப்பன் விளக்கம்: நம் இலக்கை மறவாமல், உறுதியோடு இருப்பின்; எண்ணிய இலக்கை அடைவது, மிக எளிதாகும்.
(அது போல்...)
நம் பிறப்பை இகழாமல், நெறியோடு வாழ்ந்தால்; பிறவியின் பயனை அடைவது, மிக எளிதாகும்.
*****

ஞாயிறு, ஜனவரி 22, 2017

குறள் எண்: 0539 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0539}

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

விழியப்பன் விளக்கம்: நம் பெருமகிழ்ச்சியால், மனவலிமை பெறும்போது; மறதியால் கெட்டு அழிந்தவர்களை, மனதில் நினைக்கவேண்டும்.
(அது போல்...)
நம் பெருந்தொழிலால், பொருளாதாரம் வளரும்போது; ஆணவத்தால் வாழ்வியல் இழந்தவர்களை, நினைவு கூறவேண்டும்.
*****

சனி, ஜனவரி 21, 2017

குறள் எண்: 0538 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0538}

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

விழியப்பன் விளக்கம்: "திருக்குறள்" போன்ற புகழப்பட்ட விடயங்களை, போற்றிப் பின்பற்ற வேண்டும்; அப்படி செய்யாமல் மறந்தோர்க்கு, ஏழு பிறவியிலும் பயனில்லை.
(அது போல்...)
"மழலை" போன்ற அற்புதமான விடயங்களை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்; அப்படி செய்யத் தவறியவர்க்கு, ஏழு இசைகளிலும் இன்பமில்லை.
*****

வெள்ளி, ஜனவரி 20, 2017

குறள் எண்: 0537 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0537}

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்

விழியப்பன் விளக்கம்: மறதியைக் களையும் வைராக்கியமான மனதுடன், செயல்களைச் செய்தால்; செய்வதற்கு இயலாத, அரிதான செயலென்று ஏதுமில்லை.
(அது போல்...)
பின்வாங்குதலை அழிக்கும் உறுதியான துணையுடன், போராட்டங்களை நடத்தினால்; தீர்க்க முடியாத, சவாலான பிரச்சனையென்று ஒன்றுமில்லை.
*****

முதல் முறையாய் ஒரு போராட்டம்

{2017 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி;
தமிழகம் முழுவதும் "ஏறு தழுவுதல்" சார்ந்து நடந்த போராட்டக் காட்சிகள்}

நானறிந்த வகையில்...
  1. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மனதுக்கு எந்த நெருடலையும் அளிக்காமல்; சரியாய்/முறையாய் நடத்தப்படுகிறது.
  2. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மக்களுக்காக, மக்களால் முன்னின்று நடத்தப்படுகிறது.
  3. முதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியலை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.
  4. முதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியல்வாதிகளை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.
  5. முதல் முறையாய் ஒரு போராட்டம் - எல்லா அரசியல் கட்சிகளையும் விலக்கி வைத்து - மக்களால் நடத்தப்படுகிறது.
  6. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மாணவர்களால்/இளைஞர்களால்/பொதுமக்களால்; எவ்விதமான அரசியல் சார்பும் இன்றி முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.
  7. முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எந்தப் பிரிவினையும் இல்லாமல்" - ஒட்டுமொத்த இனத்திற்காய்; ஒட்டுமொத்த இனத்தால் - நடத்தப்படுகிறது.
  8. முதல் முறையாய் ஒரு போராட்டம் - எந்த சுயஇலாபமோ/சுயநலமோ இல்லாமல் நடத்தப்படுகிறது.
  9. "மிக முக்கியமாய்"... முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எந்த தலைமையும் இல்லாமல்/எந்த தலைமையையும் எதிர்பார்க்காமல்" எல்லோரையும் முதன்மைப்படுத்தி நடத்தப்படுகிறது.
  10. முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றம் வந்தே தீரும்!" என்ற நம்பிக்கைப் பெருக்கி இருக்கிறது.
என் சார்பிலும் நடக்கும் இந்தப் போராட்டத்தில், கலந்துகொண்டு கலாச்சாரம் காக்கப் போராடும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் மதித்து, என் தலை வணங்குகிறேன்.

தொடரட்டும்! வளரட்டும்!!

வியாழன், ஜனவரி 19, 2017

குறள் எண்: 0536 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0536}

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல்

விழியப்பன் விளக்கம்: எவரிடத்திலும்/எந்நாளும் மறதியில்லாத நிலைப்பாடு, தவறாமல் வாய்க்குமானால்; அதற்கு ஒப்பாக நன்மைப் பயப்பது, வேறேதுவும் இல்லை.
(அது போல்...)
எப்படைப்பிலும்/எவ்விதத்திலும் குறையில்லாத சமூக-அக்கறை, தொடர்ந்து இருக்குமானால்; அதற்கு ஈடாகப் பிறவிப்பயன் தருவது, வேறேதும் இல்லை.
*****

மனிதம் காப்போம்!

{என்னப்பனைத் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவாய்... 
"77 வயதில்" பல ஆண்டுகளுக்குப் பின் 
மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறார். 
இரண்டு நாட்களுக்கு முன் அவரெழுதிய படைப்பு கீழே}
*******

கவிபாட புதுவையினில் "கவிஞர் தாகூர்"
      கல்லூரி முகப்பினிலே நின்று; நானும்
புவிவாழ்த்தப் பிறந்தகவி, அறிஞர் தம்மை
      பெருமையுடன் மனத்திருத்தி, புகழின் மேன்மை
செவிநிறையச் செய்யவேண்டும் என்றே! எந்தன்
      சிந்தனையில் தமிழ்வாழ்த்தி; சிறப்பு கூறும்
தவவாழ்வுப் பெரியோரின் வழியில் செல்வேன்!
      தமிழே!நீ என்வழியில் பயணம் செய்வாய்!

செந்தமிழே! உன்னால்தான் பெருமை பெற்றேன்!
      செங்கரும்பின் சாறெனவே இனிதாய் வாழ்ந்தேன்!
இந்நிலத்தில் ஒருமொழிதான் உன்போல் உண்டோ?
      இதுஉண்மை; "கால்டுவெல்" "மு.வ." போன்றோர்
விந்தையுடன் எடுத்துரைத்தார்! நாமும் நம்மின்
      விருப்பத்தை வெளிக்கொணர வேண்டும்; போற்றும்
சிந்தையினில் இனியேனும் உறுதி ஏற்போம்!
      சிறப்புடனே தமிழகத்தை வாழச் செய்வோம்!

"தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செய்தல் வேண்டும்!"
      தெளிவாக பாரதியார் சொன்ன தாலே;
உருவான தமிழ்ப்பலகை புதுவை மண்ணில்,
       உயிரோடு மணக்கிறது! எனினும் நம்மின்
ஒருமையிலா உள்ளத்தால்; தமிழ கத்தில்
       உருப்படியாய் அதுபோன்ற வாய்ப்பே காணோம்!
பெருமையுடன் தமிழர்களே ஆண்ட போதும்;
       பெயரளவும் தமிழ்ப்பண்பே மலர வில்லை!

எங்கெங்கு காணினும் பொய்மை வீசும்!
      யாரிடத்தும் மனத்திரையில் உண்மை இல்லை;
பொங்கிவரும் அன்பினிலே ஒளியைக் காணோம்!
      பொறுப்பற்ற பெரும்போக்கு மலர்தல் காண்பீர்!
பங்கம்தான் விளைந்திடுமோ தமிழர் வாழ்வில்?
      பதைத்தெந்தன் மனஓலம் பலமாய் இங்கே
சங்கொலியாய் கேட்கலையோ? காத்தல் யாரோ?
      சத்தியமாய் வேண்டுகிறேன்; மனப்புண் போமோ?

நான்எழுதும் கவிதையினால் நாட்டில் என்ன
     நலம்விளையப் போகிறது? மழையும் இந்நாள்
வான்மணக்க வரவில்லை! புயலால் வீணே
     வளர்மரத்தைச் சாய்த்ததுதான் மிச்சம்! பஞ்சம்
தானாக படிப்படியாய் பெருகி நாளை
     தமிழகத்தை தாக்கவும் கூடும்! இன்றே
மானத்தைக் காப்பதற்கு விரைவாய் நாமும்
     மாற்றுவழி சிந்திப்போம்! வாரீர்! காண்போம்!

தருமத்தை சூதழித்தால் மீண்டும் வெற்றி
     தவறாமல் பாரதியும் கிடைக்கும் என்றார்!
கருமத்தை எண்ணிடுவோம்! விரைந்து நாட்டில்
     கணக்கின்றி புதியவழி காண்போம்! நாளை
உருவாக்கும் அணைகளிலே நீரைச் சேர்ப்போம்!
     உருப்படியாய் திட்டமிட்டு பயிர்தான் காப்போம்!
திருவளர்க்கும் தலைவர்களால்; தேனும் பாலும்
     தெருவெல்லாம் பாயும்வழி காண்போம்! வாரீர்!

எண்ணத்தில் தெளிவுதனை என்றும் காணும்
     ஏற்றத்தை இளம்பிறையாய் வளர்த்தல் வேண்டும்!
திண்ணையில் தினம்கூடி வெற்றுப் பேச்சை
     தீமையுடன் வளர்க்காத பொதுமை வேண்டும்!
பண்ணையினில் கூட்டாக பயிர்வ ளர்க்கும்
     பாசம்தான் தவறாமல் தழைத்தல் வேண்டும்!
கண்ணெனவே விடுதலையைக் காத்து நாட்டில்
     காலமெல்லாம் உரிமைதனைப் பெறுதல் வேண்டும்!

துறைதோறும் பணம்ஒன்றே கொள்கை யாக
     துயர்நெஞ்சில் கொண்டதனால் மக்கள் யாரும்;
சிறைபோட்ட மனத்தினனாய் வாழ்தல் ஆமோ!
     சிரம்தாழ்ந்து கழிவினமாய் ஆதல் நன்றோ?
மறைஒன்றை மறவாமல் வகுத்தல் செய்தால்
     மனம்மீண்டும் உயர்வளத்தைப் பெற்றே; நாளும்
பறைகொட்டி தமிழினத்தின் மானம் காப்போம்!
     பலதிக்கும் உயிரோட்டம் செய்வோம்! வாழ்வோம்!

நான்எழுதும் பாடலினால் தமிழ கத்தில்
     நலம்வளரப் போகிறதா என்ன? இந்நாள்
வான்மழைதான் பொய்த்ததனால் தஞ்சை மண்ணில்
     வாடிவிட்ட உயிர்களினால் ஒன்று சொல்வேன்!
தேன்மணந்த நாட்டிலின்று; எதிலும் எங்கும்
     தெருமணக்கும் அவலம்தான்; இனிமே லேனும்
"மாண்புடைய அரசியலார்" ஒருமை எண்ணம்
     மறவாமல் கொள்வதனால் மனிதம் காப்போம்!


{புலவர். இளமுருகு அண்ணாமலை}

புதன், ஜனவரி 18, 2017

குறள் எண்: 0535 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0535}

முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்

விழியப்பன் விளக்கம்: மறதியால், எதிர்வரும் துன்பங்களுக்கு முன்பே திட்டமிடத் தவறுவோர்; துன்பங்கள் வந்தபின், தம் மறதியை எண்ணி வருந்திடுவர்.
(அது போல்...)
சோம்பலால், முதுமைப் பிணிகளுக்கு இளமையில் தயாராக மறுப்போர்; முதுமை வந்தபின், தம் சோம்பலை நினைத்து வருந்துவர்.
*****

செவ்வாய், ஜனவரி 17, 2017

குறள் எண்: 0534 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0534}

அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு

விழியப்பன் விளக்கம்: ஐயம் உடையோர்க்கு, எந்த அரணும் பாதுகாப்பை அளிப்பதில்லை. அதுபோல்; மறதி உடையோர்க்கு, எவ்வொன்றும் நன்மையைப் பயப்பதில்லை!
(அது போல்...)
சந்தேகம் உள்ளோர்க்கு, எந்த உறவும் நம்பிக்கையைத் தருவதில்லை. அதுபோல்; பொறாமை இருப்போர்க்கு, எதுவொன்றும் மகிழ்ச்சியைத் தருவதில்லை!
*****

திங்கள், ஜனவரி 16, 2017

குறள் எண்: 0533 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0533}

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு

விழியப்பன் விளக்கம்: மறதியெனும் குறையுள்ளோர், புகழ் அடைதல் சாத்தியமில்லை! உலகிலுள்ள எவ்வகை கல்வியைப் பயின்றோர்க்கும், இது பொதுவான கருத்தாகும்.
(அது போல்...)
தானெனும் அகந்தையுள்ளோர், பிறவிப்பயன் பெறுதல் அரிதானது! புவியிலுள்ள எவ்வித சக்தியைக் கொண்டோர்க்கும், இது சமமான விதியாகும்.
*****

ஞாயிறு, ஜனவரி 15, 2017

குறள் எண்: 0532 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0532}

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

விழியப்பன் விளக்கம்: இடைவிடாத வறுமை, அறிவைச் சுருக்கி அழிப்பது போல்; மறதியெனும் குறைபாடு, சிறப்பை அழிக்கும்.
(அது போல்...)
தீராத குழப்பம், சிந்தனையைச் சிதைத்து சிதறடிப்பது போல்; தானெனும் அகந்தை, மனிதத்தைச் சிதைக்கும்.
*****

சனி, ஜனவரி 14, 2017

குறள் எண்: 0531 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0531}

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

விழியப்பன் விளக்கம்: மகிழ்ச்சியான தருணத்தில், மகிழ்ந்து களைத்ததால் விளையும் மறதி; அளவுகடந்த கோபத்தை விட, மிகுந்த தீமையானதாகும்.
(அது போல்...)
மிகையான சுதந்திரத்தில், முறையற்ற செயல்களால் விளையும் சீர்கேடு; தொடர்ந்த அடிமைத்தனத்தை விட, அதீத ஆபத்தானது.
*****

வெள்ளி, ஜனவரி 13, 2017

அதிகாரம் 053: சுற்றந்தழால் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053: சுற்றந்தழால்

0521.  பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
           சுற்றத்தார் கண்ணே உள
           
           விழியப்பன் விளக்கம்: ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னும்; அவரின் முடிந்த 
           வாழ்வியலைப் பாராட்டி வலிமையூட்டும் சிறப்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
(அது போல்...)
           ஓர்தலைவர் உயிரோடு இல்லாத போதும்; அவரின் சிறந்த ஆட்சியை நினைவுகூர்ந்து 
           வியக்கும் இயல்பு, மக்களிடம் இருக்கும்.
      
0522.  விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
           ஆக்கம் பலவும் தரும்

           விழியப்பன் விளக்கம்: குறையாத அன்புடைய சுற்றம், ஒருவருக்கு கிடைத்தால்; அது, 
           குறையாத வளர்ச்சியுடைய செல்வங்கள் பலவற்றையும் அளிக்கும்.
(அது போல்...)
           மாசற்ற வாய்மையுடைய குடும்பத்தலைவர், ஓர்குடும்பத்திற்கு கிடைத்தால்; அக்குடும்பம், 
           குறையற்ற ஒழுக்கமுடைய பண்புகள் பலவற்றையும் கொண்டிருக்கும்.
           
0523.  அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
           கோடின்றி நீர்நிறைந் தற்று

           விழியப்பன் விளக்கம்: 
உறவுகள் மற்றும் நட்புகளுடன் இணைந்து வாழாதோரின் 

           வாழ்க்கை; சுற்றுக்கரை இல்லாத குளத்தில், நீர் நிறைந்திருப்பதைப் போன்றதாகும்.
(அது போல்...)
           எண்ணம் மற்றும் செயலை ஒப்பிட்டு ஆராயாதோரின் செயல்பாடு; உயிர்ப்பு இல்லாத 
           நிலத்தில், விதைகளை விதைப்பதற்கு ஒப்பாகும்.

0524.  சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
           பெற்றத்தால் பெற்ற பயன்

           விழியப்பன் விளக்கம்: 
ஒருவர் பெற்றிருக்கும், செல்வத்தின் உண்மையான பயன்; அவரின் 

           உறவு மற்றும் நட்புகளால், சூழப்பட்டு வாழ்வது ஆகும்.
(அது போல்...)
           ஒருவர் பெற்றிருக்கும், பிறவியின் நிரந்தரமான புகழ்; அவரின் எண்ணம் மற்றும் செயலில், 
           பொதுநலத்தைச் சேர்ப்பது ஆகும். 

0525.  கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
           சுற்றத்தால் சுற்றப் படும்

           விழியப்பன் விளக்கம்: 
இருப்பதைப் பகிர்வது மற்றும் இன்மொழியில் பேசுவது - 

           இரண்டையும் பழகினால்; பெருகிடும் சுற்றம், எப்போதும் சூழ்ந்து இருக்கும்.
(அது போல்...)
           நல்லதைச் செய்வது மற்றும் எளிமையாய் இருப்பது - இரண்டையும் பின்பற்றினால்; சிறந்த 
           தொண்டர்கள், எக்காலமும் தொடர்ந்து வருவர்.

0526.  பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
           மருங்குடையார் மாநிலத்து இல்

           விழியப்பன் விளக்கம்: 
அதீதமாய் கொடையளித்தும்/சினம் இல்லாமலும் இருப்போரை விட; 

           பெருமளவு சுற்றமுடையவர், விரிந்த உலகத்தில் மற்றொருவர் இல்லை.
(அது போல்...)
           ஓயாமல் உழைத்தும்/சந்தேகம் இல்லாமலும் இருப்போரை விட; அதிக நிம்மதியுடையோர், 
           பரந்த சமுதாயத்தில் வேறொருவர் இல்லை.

0527.  காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
           அன்னநீ ரார்க்கே உள

           விழியப்பன் விளக்கம்: 
காக்கையைப் போல், மறைக்காமல் சுற்றத்தை அழைத்துக் 

           கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணும்; குணம் உள்ளவருக்கே, செல்வம் உள்ளதாகும்.
(அது போல்...)
           ஆசிரியரைப் போல், மறுக்காமல் மாணாக்கர்களைச் சேகரித்துக் கற்றத்தைப் கற்பித்து 
           மகிழும்; முனைப்பு உடையவருக்கே, ஞானம் உள்ளதாகும்.

0528.  பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
           அதுநோக்கி வாழ்வார் பலர்

           விழியப்பன் விளக்கம்: 
எல்லோரையும் பொதுவாய் பார்க்காமல், ஒவ்வொருவரின் 

           தனித்திறனையும் மன்னன் ஆய்ந்தறிந்தால்; அவ்வியல்பைப் பார்த்து, பலரும் மன்னனைச் 
           சூழ்ந்து வாழ்வர்.
(அது போல்...)
           அனைவரையும் பணக்காரராய் பாவிக்காமல், ஒவ்வொருவரின் வசதியையும் கல்வி-
           நிறுவனங்கள் உணர்ந்தால்; அதைப் பயன்படுத்தி, பலரும் அந்நிறுவனங்களில் படித்து 
           முன்னேறுவர்.

0529.  தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
           காரணம் இன்றி வரும்

           விழியப்பன் விளக்கம்: 
சுற்றத்தாருள் ஒருவராய் இருந்து, நம்மைப் பிரிந்து சென்றவர்; 

           பிரிந்து சென்றதற்கான காரணம் சரியற்றதென உணரும்போது, மீண்டு(ம்) வருவர்.
(அது போல்...)
           பதவிகளில் ஒன்றைக் கொண்டிருந்து, கட்சியைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதன் 
           விளைவு  பாதகமானதென உணர்ந்தால், மீண்டு(ம்) இணைவர்.

0530.  உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
           இழைத்திருந்து எண்ணிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: 
சுற்றத்திலிருந்து, காரணமின்றி பிரிந்து பின் காரணத்தோடு 

           வருவோரை; அரசாள்பவர், வேண்டியவற்றைச் செய்துப் பின்னர் பொறுமையாய் ஆராய 
           வேண்டும்.
(அது போல்...)
           குடும்பத்திலிருந்து, பணத்துக்காக விலகிப் பின் பணத்துக்காக வருவோரை; குடும்பத்தினர்,  
           மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பின்னர் முழுமையாய் ஆராயவேண்டும்.
*****