புதன், டிசம்பர் 24, 2014

உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா...




       என்மகளுக்கு நேற்று (திசம்பர் 23) முதல் அரையாண்டு விடுமுறை. வழக்கம்போல், நேற்று மாலை ஆவலுடன் அலைபேசியில் அலவலாவிக்கொண்டு இருந்தபோது அவள் "நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்றாள். எனக்கு மிகப்பெரிய ஆனந்த-அதிர்ச்சி. 5-வயது மகளா இவள்? என்ற கேள்வி (மீண்டும்) எழுந்தது. இந்த தலைமுறை குழந்தைகள் இம்மாதிரியான முதிர்ச்சியான கேள்விகளால்/பார்வைகளால் நம்மை திகைக்க வைப்பதை பலரும் அறிந்ததே! நானும், அம்மாதிரியான பதிவுகள் பலவும் இட்டிருக்கிறேன். இத்தனை நாள் அவள் பள்ளி/படிப்பு என்ற தன் கடமையை சரிவர செய்து வந்தாள்; என்னைப்பற்றிய நினைப்பு அதிகம் இருப்பதாய் கூட அவள் காட்டியதில்லை! ஏன்... பல நேரங்களில் அலைபேசியில் உரையாடக் கூட அவள் மறுத்ததுண்டு. ஆனால்... நேற்று?! பின்னர் தான் அவளின் நியாயம் புரிந்தது. நான் என் கடமையை சரியாய்  செய்திருக்கிறேன். இப்போது, நான் அவளுடன் இருப்பது என் கடமையல்லவா?!

      ஒருவேளை "டே! அப்பா!!" உன் கடமையை தவறி விட்டாயே! என்பதைத்தான் அப்படி நாகரீகமாய் சுட்டிக்காட்டி இருப்பாளோ?! என்று யோசித்தேன். ஆம்... நான் நேற்றைய முன்தினமே அவளை சென்று சேர்ந்திருக்க வேண்டும்; இனியொரு முறை இத்தவறை செய்யக்கூடாது என்ற உறுதி கொண்டேன். மன்னித்து விடு... மகளே! இனியொரு முறை, இத்தவறு நிகழாது; நானும் என் கடமையை சரிவர செய்வேன். "ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்ற அந்த வார்த்தைகள் என்னுள் மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன! ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு புரிதலை விதைக்கிறது. கண்டிப்பாக... அவை அவளின் அடிமனதில் இருந்து வந்தவை! இன்று காலை பேசும்போது கூட மீண்டும், மீண்டும் "இன்னைக்கே வாங்கப்பா!" என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள்; என்னால், மீண்டும், மீண்டும் அவளுக்கு ஏமாற்றும் தரும் அந்த பதிலைக் கூற தயங்கியபோது, நல்லவேளையாய் அலைபேசியை துண்டித்துவிட்டது; நானும் அப்படியே விட்டுவிட்டேன்.

நானும் "உன்னை ரொம்ப மிஸ் பண்ட்றேன், மகளே!"   

வெள்ளி, டிசம்பர் 12, 2014

லிங்கா - சிங்கமும்; சிங்கிள்-உம்...


{லிங்கா படம் பார்க்கும் முன்னேயே; விமர்சனம் கேட்டே, என்னுள் எழுந்த பஞ்ச்!!!}

சிங்கிளா வர்றது எல்லாம் சிங்கமும் இல்லை!
சிங்கம் சிங்கிளாத்தான் வர்றனம்னு அவசியமும் இல்லை!!

ஏன்னா... 

"லிங்கா"வுல சிங்கம் "டபுளா(வும்)" வந்திருக்கு!!!


திங்கள், டிசம்பர் 08, 2014

நானும்; என் கைக்கடிகாரமும்...



      திசம்பர் 2-ஆம் தேதி முதன்முதலாய் நானே, எனக்கென ஒரு கைக்கடிகாரத்தை வாங்கினேன். அதுதான் புகைப்படத்தில் உள்ளது; நீண்ட நாட்களாய் திட்டமாய் இருந்தது அன்று தான் செயலாய் ஆனது. மிகவும் மகிழ்ச்சி தந்த செயல்களில் ஒன்று. இதுவரை, என் உறவுகளும்; நட்புகளும் தான் எனக்கான கைக்கடிகாரத்தை வாங்கி கொடுத்தனர். எனக்கும்; என் கைக்கடிகாரத்துக்கும் நிறைய உணர்வுகளும்/தொடர்புகளும் உள்ளன. கண்டிப்பாக, இம்மாதிரியான எண்ணங்கள் உங்களுக்குள்ளும் இருக்கும்; எனவே, என் கைக்கடிகாரத்தின் மீதான என் பார்வையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இத்தலையங்கம். இளவயதில் என்னுள் ஒரு அர்த்தமற்ற கர்வமும்/எண்ணமும் இருந்தது; அது கைக்கடிகாரம் அணியக்கூடாது என்பது. காரணம்; நான் நேரம் பார்த்து உழைக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை! அதனால் வேண்டாம் என்பதே என் அன்றைய புரிதல். ஆனால், இன்று கைக்கடிகாரத்தின் மேல் எனக்கிருக்கும் புரிதலும்/உறவும் வேறு விதமானது.

         1997-இல் முதன்முதலாய் என் சக-ஊழியரான நட்பொருவர் ஒரு கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.  அவரின் அன்பை நிராகரிக்க விரும்பாததால்; என்னுடைய கொள்கையை??!! விட்டு கொடுத்து அதை அணிந்தேன். அதன் பின்னர், என் முக்கிய உறவுகள் எனக்கு சில கடிகாரங்களை கொடுத்தனர். திடீரென 2008-இல் என் உறவுகள் ஒரே நேரத்தில் 4 கைக்கடிகாரங்களைப் பரிசளித்தனர். எவ்வளவு முயன்றும்; ஒன்றுக்கு மேற்பட்டு கொடுப்பதை தடுக்க முடியவில்லை. மீண்டும், அன்புக்காய் அவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியாதாயிற்று. இந்த கைக்கடிகாரத்தை வாங்கும் முன் 5 ஆண்டுகளுக்கும் மேலாய் நான் அணிந்திருந்த கைக்கடிகாரம் என் "மிக முக்கிய" உறவு பரிசளித்தது. ஆம்! அது என்னவள் எனக்கு வாங்கி கொடுத்தது. அதை முடிந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டியே இத்தனை ஆண்டுகள் காத்திருந்து இதை வாங்கினேன். அந்த திட்டம் கிட்டத்திட்ட 4 ஆண்டுகள் கால திட்டம். இப்போது தான் அது நடந்தேறியது.

          எனக்கு என் கைக்கடிகாரமே ஒரு தனிப்பட்ட உறவு. ஆம்! நான் கைக்கடிகாரத்தை ஒரு உறவாய் பார்க்கிறேன். அதனால், ஒரே நேரத்தில் பல கைக்கடிகாரங்களை வைத்திருப்பது என் மனதுக்கு ஒவ்வாத ஒன்று! அது தேவையற்றதும் கூட, என்பது வேறு விசயம். ஆனால், எனக்கு அதில் விருப்பமே இல்லை. ஆனாலும், என் உறவுகளுக்காய் அதை செய்தேன். கண்டிப்பாக, எனக்காக இத்தனை கைக்கடிகாரங்கள் வாங்கிக் கொடுக்க இத்தனை உறவுகள் இருக்கின்றன! என்பது மகிழ்வான விசயம் தான். ஒரு கைக்கடிகாரம் கூட கிடைக்கப்பெறாதவர்கள் ஏராளம்! அதனால், ஒரு விதத்தில் பலவற்றை உபயோகித்த போது இருந்த; அந்த வலி ஒரு விதமான "இன்ப"வலி தான் என்பதை மறுக்கவில்லை! ஆனால், நான் போதுமான அளவிற்கு அந்த "இன்ப"வலியை அனுபவித்து விட்டேன். எனவே, இந்த நேரத்தில் எனக்கிருக்கும் ஒரேயொரு விருப்பம்; இன்னொரு முறை எனக்கு எவரும் ஒரு கைக்கடிகாரத்தை கொடுக்கக்கூடாது என்பதே!

     இந்த விருப்பத்திற்கு காரணம், நான் கைக்கடிகாரத்தை மேற்கூறிய வண்ணம் ஒரு உறவாய் பார்ப்பது தான். ஆம்! நம் உள்ளங்கை பிடித்து நடந்து; அன்பு காட்டும் உறவுகள் இருக்கின்றன! நம் தோல் தட்டி/அணைத்து அன்பு காட்டும் உறவுகள் இருக்கின்றன. கட்டியணைத்து அன்பு காட்டும் உறவுகளும் உள்ளன; இம்மாதிரி பலவகைகளில் அன்பு காட்டும் பல உறவுகள் உள்ளன. ஆனால், நம் மணிக்கட்டை தொட்டு/தழுவும் உறவுகள் இருப்பதாய் தெரியவில்லை. மருத்துவர் கூட ஒருவரின் உயிரை சோதிக்கும் போது அல்லது நோயை சோதிக்கும் போது; ஒருவரின் மணிக்கட்டை தொட்டு தான் உறுதி செய்கிறார். அப்படிப்பட்ட அந்த உன்னதமான மணிக்கட்டை ஒட்டி உறவாடும் எந்த உறவும் இல்லை என்பதே என் பார்வை. ஆனால், அதை நம் கைக்கடிகாரம் உன்னதமாய் செய்து வருகிறது! அதனால் தான், எனக்கு கைக்கடிகாரம் என்பதே ஒரு உறவு! என்பதாய் படும். அந்த உறவு ஒரு நேரத்திற்கு ஒன்றாய் தான் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

      அதை இழந்த பின் அல்லது வேண்டுமளவு உபயோகித்த பின்னர் வேண்டுமானால்; வேறொன்றை வாங்கலாம்! ஒரு நேரத்தில் ஒன்றாய் தான் இருக்கவேண்டும். அதை உறவாய் பார்ப்பதாலோ?! என்னவோ; நான் கைக்கடிகாரத்தை இறுக்கமாகத்தான் அணிவேன். பலரும் அப்படி அணியக்கூடாது! என்று அறிவுறுத்தியும், இன்றுவரை அதை மாற்றியதில்லை! என் உறவை இருக்க அணைப்பது போலவே, என் கைக்கடிகாரத்தையும் அணிய விரும்புகிறேன். அந்த தடம் எப்போதும், என் கையில் இருக்கும். முதன் முதலாய் கிடைத்த கைக்கடிகாரத்தில் விழுந்த கீறலால்; நான் கைக்கடிகாரத்தை என் உடலோடு ஒட்டி இருக்கும் வண்ணம் உட்புறமாய் தான் அணிவேன். அது, மணி பார்க்கவும் வசதியாய் இருக்கும். குளிக்கும் நேரம்/கணினியில் பணிபுரியும் நேரம் (கீரலை தவிர்க்க!)/கடின வேலை செய்யும் நேரம் - போன்ற நேரங்கள் தவிர; என் கைக்கடிகாரம் எப்போதும் என் மணிக்கட்டோடு இருக்கும். இன்னும் பல விசயங்கள் உள்ளன - கைக்கடிகாரம் பற்றி எழுத! எனவே, என்னளவில்...

கைக்கடிகாரம் என்பது; என் இன்னுமோர் உறவு!!!  

மகிழ்வுந்து; மகிழ்வு-தந்ததா???



        நான் முன்பொரு முறை கூறியிருந்த வண்ணம், அபுதாபி வந்ததும் ஒரு மகிழ்வுந்து வாங்கினேன். கண்டிப்பாக என்னுடைய வசதிக்காய் அல்ல! என்மகளும், என்னவளும் இங்கு வந்து இருப்பதாய் ஒரு திட்டம் இருந்தது; அதுதான் முதற்காரணம். இருப்பினும், விடுமுறையில் வரும்போது அவர்களை வசதியாய் அழைத்து செல்லவேண்டும் என்ற ஓர் எண்ணம். இவை தவிர; நான் இதை ஒரு சேமிப்பாய் பார்த்ததும் ஒரு காரணம். ஆம்! மாதந்தோறும் வங்கிக்கு சிறு தொகை தான் கட்டி வருகிறேன். இன்னும் சில மாதங்களில் அக்கடன் முழுதும் அடைந்து; வண்டி என்னுடையதாகும். பின்னர், என்ன விலைக்கு அது விற்கப்பட்டாலும் அது ஒரு சேமிப்பே! ஆனால், உண்மையில் மகிழ்வுந்து எனக்கு மகிழ்வு தந்ததா?! என்று யோசிக்க ஆரம்பித்தேன். என்னதான் நான் சௌகர்யமாய் சென்று வந்திடினும்; என்மகளும்/என்னவளும் இங்கு வரும்போது அவர்களை அதில் அழைத்து சென்று மகிழ்ந்தினும் - மகிழ்வுந்து எனக்கு பெரிய மகிழ்வு-தந்திருக்கிறதா என்பதில் ஐயம் இருக்கிறது!

       அதற்கு காரணம் - என்மகளும்/என்னவளும்; இந்தியாவில் வெய்யிலில் இருசக்கர வாகனத்தில் செல்வதே! என்மருதந்தை மகிழ்வுந்து வைத்திருப்பினும்; என்னவள் அதை உபயோகிப்பதில்லை. வேறொன்று வாங்கவும் ஒப்புக்கொள்ளவில்லை. இருசக்கர வாகனத்தில் செல்வதே; நடைமுறையில் எளிதென்பதால் மறுத்து விட்டாள். ஆனாலும், அவர்கள் வெய்யிலில் செல்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அதுபோலவே, இன்னமும் எங்கு சென்றாலும் பேருந்தில் பயணிக்கும் என் பெற்றோர்! அதிலும், விசேட நாட்களில் கூட்டத்தினூடே பயணிக்கும் கொடுமை. அதிக செலவு என்பதால்; வாடகை-மகிழ்வுந்திலும் பயணிப்பதில்லை. அவர்களுக்கு ஒரு மகிழ்வுந்து வாங்கிக் கொடுக்கும் வசதியும் வாய்க்கவில்லை; மேலும், எவர் அதை பராமரிப்பது என்ற கவலை. இந்த வெய்யில் தன்மையில்; எவரேனும், பேருந்து நிறுத்தத்தில் நிற்பதை/அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வதைப் பார்த்தால் - எனக்கு, இவர்கள் நால்வரின் நினைவுதான் வரும். என்  கலங்கும்; எனவே...

மனதளவில்; மகிழ்வுந்து எனக்கு மகிழ்வு தரவில்லை!!!

டையாப்பர்-உம் பேட்-உம்...



     குழந்தைகளுக்கான "டையாப்பர்"-ஐ எந்த தயக்கமும் இல்லாமல் வாங்கும், ஆண்; பெண்களுக்கான மாதவிடாய் காலத்து "பேட்"-ஐ வாங்க தயங்குவதேன்?!

      அடப்பாவிகளா... இரண்டுமே "உடற்கழிவை" சேகரிப்பதுதான்!   

களவாடிய பொழுதுகள்...



      களவாடிய பொழுதுகள் திரைப்படத்தில் "தேடித் தேடிப் பார்க்கிறேன்! அவன் ஓடி, ஓடி ஒளியிறான்!!" என்ற பாடலை இதுவரைக் கேட்காதவர்கள்; ஒருமுறை(யேனும்) கேளுங்கள்!! அதில் வரும் அனைத்து வரிகளும்  மிகப்பிரம்மாதம் எனினும்...

"ஒருவனுக்கு ஒருத்தியின்னா; அதுவும் இங்கே காவியம்!
அஞ்சு பேருக்கொருத்தியின்னா; அதுவும் இங்கே காவியம்!!"

என்ற வரி எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை! புரிதல்களை!! தேடல்களை!!! உருவாக்கியது; இன்னமும் அதைப்பற்றி ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறேன். கிராமிய மனம் மிதக்கும் இன்னிசை-குரல்! இயல்பான பேச்சு தமிழ்!! ஆழ்ந்த சொற்களும்; கருத்துகளும்!!! "வியப்பானவை" என்ற என் பாடல் தொகுப்பில் சமீபத்தில் இடம் பெற்ற பாடல். இதுவரை எத்தனை முறைகள் அப்பாடலை கேட்டிருக்கிறேன் என்று தெரியவில்லை! 

        தங்கர்பச்சான் எனும் கலைஞனின் எல்லாப் படங்களும் நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை! இந்த படமும் அதற்கு விதிவிலக்காய் இருக்காது என்று திடமாய் நம்புகிறேன். வாய்ப்பு கிடைப்போர், இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுகிறேன், நட்புகளே! இம்மாதிரியான கலைஞன் மென்மேலும் பல படைப்புகள் படைத்திட அது கண்டிப்பாய் உதவிடும்!!  

ஜெய்ஹிந்த் 2...



        ஜெய்ஹிந்த் 2 - அருமையான கதைக்களம்! அர்ஜூனின் சமுதாய அக்கறையை உணர்த்தும் இன்னுமொரு படம். இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே பாடல்களை கேட்டு வந்ததாலும்; கதையின் கரு நான் நிறைய-எழுதிய "கல்வி"யை மையப்படுத்தியது என்பதாலும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. முதல் 1 மணி நேரம் வரை; எதிர்பார்ப்புக்கு எந்த குறைவும் இல்லாமல் இருந்தது! நானும், இத்திரைப்படம் பற்றி என் பார்வையை பதியவேண்டும் என்று குறிப்பும் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், திரைக்கதையை அதிரடியாய் துவக்க வேண்டிய இடத்தில் "அதீத மசாலா"நெடியை தூவ ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர், சமூக அக்கறையுள்ள ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அருமையான கதையை திரைக்கதையால் சிதைத்துவிட்டார் அர்ஜூன்.

       படம் பார்த்த பின்னர், அது பற்றிய என் பார்வையை எழுதினால் - படத்தின் வியாபாரத்திற்கு நன்றாக இருக்காது என்பதால் எழுதவில்லை!

செவ்வாய், டிசம்பர் 02, 2014

காவியத்தலைவன் (2014)



        காவியத்தலைவன்! - பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு காவியத்தை தலைமையேற்று நடத்தும் ஒருவனின் கதை. தமிழ் திரைப்பட சூழலில், பெரும்பான்மையில் இப்போது வந்துகொண்டிருக்கும் "காதல்"கருமங்களின் மத்தியில் "மிகவும்"மாறுபட்ட கதைக்களம் (புதிய களமல்ல! ஆனால், இப்போதைய சூழலில் மாறுபட்ட களம்!) கொண்ட ஒரு திரைப்படம். இந்த ஒன்று மட்டுமே போதும்! இந்த படத்தை பார்க்கும் எண்ணம் எழ; எனவே, இந்த படத்தை கண்டிப்பாய் பார்க்கலாம். ஆனால், பெரிய-எதிர்பார்ப்பு வேண்டாம்; ஏனெனில், பெரிய எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரக்கூடும்.
  • மேடை நாடகத்தை அடிப்படையாக கொண்ட படம்! என்னளவில், இந்த படத்தை ஆதரிப்பதற்கு காரணம்; நாடகம் எனும் கலை இப்போது எனக்கு கொடுத்திருக்கும் புரிதல். ஆம்! நாடகம் என்பது மனித இயல்புனூடே பயனிப்பது; அங்கே, மனிதனால் இயலாத காட்சிகள் எதுவும் இடம்பெற வாய்ப்பே இல்லை; சராசரி மனிதானால் இயலாத காட்சிகள் இருக்கலாம்! அதில் தவறேதும் இல்லை. மிகச்சிறந்த உதாரணம்: திரைப்படங்களில் நாயகன் "அசாத்திய ஸ்டைலில்" ஒருவரை உதைக்க, அந்த இன்னொருவர் 10/15 அடிகள் அப்படியே பறந்து அல்லது பூமியில் சரிந்து கொண்டே செல்வது!!
  • திரைப்படத்தில் கற்பனையையும் தாண்டிய அளவில் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் நம்முள் இருக்கும் இயல்பு தன்மையை நம்மிலிருந்து அகற்றிவிட்டது! என்றே தோன்றியது. காதல், சண்டை, உறவுச்சிக்கல் - இப்படி எதை எடுத்துக்கொண்டாலும், திரைப்படங்கள் நம் இயல்பை மாற்றி விட்டது என்றே தோன்றியது. அதனால், நம் எதிர்பார்ப்பும் பன்மடங்கு பெருகி எல்லாவற்றிலும், பெருத்த சிக்கலை உருவாக்கிவிட்டது என்று தோன்றியது. 
  • திரைப்படங்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று சொல்ல வரவில்லை! ஆனால், திரைப்படங்கள் "உணர்ச்சியின்"அடிப்படையில் நம்மை பெரிதும் பாதிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை!  "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்..." என்ற வள்ளுவன்  வாக்கு போல்; நாம் தான் அவற்றில் இருக்கும் மெய்ப்பொருளை காணுதல் வேண்டும்.
  • இந்த படத்தை பார்த்ததும் என்னுள் ஒரு குற்ற-உணர்வு எழுந்தது. ஆம்! 1990-களின் ஆரம்பத்தில், எங்கள் ஊரில் திருவிழா/பண்டிகை காலங்களின் போது, ஆட்சி செய்து கொண்டிருந்த "தெருக்கூத்து" எனும் கலையை "வீடியோ"மூலம் திரைப்படங்களை பார்க்க வைத்த செயலில் எனக்கு (மற்றும் என் குடும்பத்தார்க்கு) முக்கிய பங்கு உண்டு. நான் செய்யவில்லை எனினும்; அது நடந்திருக்கக்கூடும் என்று சொல்லி நியாயப்படுத்த விரும்பவில்லை! உண்மையில், அப்படித்தான் அது நடந்திருக்கும். இருப்பினும், எனக்கு அந்த குற்ற உணர்வு இப்போது இருக்கிறது. எங்கள் கிராமத்தில் இருந்த கலைஞர்கள் எல்லோருமே இன்று சென்னை போன்ற இடங்களில் என்னென்ன வேலைகளோ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 
சரி... என்னுடைய புரிதல் தாண்டி; திரைப்படத்திற்கு வருவோம்!
  • இதுபோன்ற படங்களில் ப்ரித்விராஜ் முன்பே நடித்து நிரூபித்து இருக்கிறார் எனினும், சித்தார்த்திற்கு இந்த படம் கண்டிப்பாய் "ஒரு மையில்"கல்லாய் இருக்கும்; அவரும், தெலுங்கில் சரித்திரப் படங்களில் நடித்திருப்பினும், தமிழில் கண்டிப்பாய் இப்படம் அவருக்கு ஒரு மையில் கல் என்பதை மறுப்பதற்கில்லை.
  • நல்ல கதையை; நல்ல திரைக்கதையோடு கலந்து கொடுத்திருப்பது படத்திற்கு பெரிய பலம். சிறிதும், தொய்வில்லாமல் நகரும் கதை! இயல்பான வகையில் இருக்கும் கதாப்பாத்திரங்கள்.
  • நான் 2 மாதங்களுக்கு முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருப்பதால் மட்டுமல்ல!... உண்மையில், பாடல்கள் அனைத்தும் - முதல் முறை கேட்கும் போதே அனைவரையும் கவரும். நல்ல பாடல்கள்! திருப்புகழ் பாடல் கூட இருக்கிறது.
  • மேடை நாடகங்கள் விடுதலைப் போராட்ட காலத்தில்; தங்களின் எதிர்ப்பை காட்டி தங்களின் கருத்தை பரிமாறிக்கொள்ள நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் போராடி இருக்கிறார்கள் என்பதை காட்டும் இன்னொரு படம். விருப்பம் இருப்பின், நம் கற்பனை சிறகுகளையும் அதன்பால் பறக்கவிட்டு பார்க்கலாம்; நான் பார்த்தேன்!
  • இதற்கு மேலும் எழுதலாம்! ஆனால், அது கதையைப் பற்றி சொல்வதில் முடியக்கூடும். கதையைப் பற்றி என்னுடைய எந்த விமர்சனத்திலும் இருக்கப்போவதில்லை! அதற்கு, எனக்கு உரிமை இல்லை; குறைந்த பட்சம் திரைப்படம் வெளியான புதிதில். 
கீழ்க்கண்டவைகளில் சிறிது கவனம் செலுத்தி இருப்பின், இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
  • படத்தில் முக்கிய பாத்திரத்தில் வரும் இரண்டு பெண்களும்; தமிழ் சூழலில் இருந்து வந்திருப்பின் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. தமிழ் நாட்டில் "அழகான பெண் நடிகைகளே இல்லையே?!" என்ற குமுறல் மீண்டும் ஒரு முறை வந்தது.
  • நடிகர்களின் உடையில், இன்னும் சிறிது கவனம் கொண்டிருக்கவேண்டும். கதை விடுதலைக்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் பயணிப்பதால்; இதில் கூடுதல் கவனம் இருந்திருக்கவேண்டும்.
  • உடை போலவே, பேச்சு-வழக்கையும் கவனமாய் கையாண்டிருக்கவேண்டும் என்று தோன்றியது. பெரிய மாற்றம் வேண்டும் என்று சொல்லவில்லை. எனக்கு தெரிந்தே 1990-களில் சென்னையில் பேசப்பட்ட வழக்கு இப்போதில்லை. அப்படியெனில், விடுதலைக்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் பேச்சு-வழக்கு வேறுபட்டு அல்லவா இருந்திருக்க வேண்டும்?!
  • நாசரின் முடிவு அப்படி இருப்பது சரியே! ஆனால், அதற்கான திரைக்கதையில் இன்னும் சிறிது மெனெக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றியது.
  • பிரித்விராஜுக்கு சித்தார்த் மேல் வரும் கோபத்தை/ஆற்றாமையை புரிந்து கொள்ள முடிந்தாலும்; அதை நியாப்படுத்தும் காட்சிகள் போதவில்லை; அவைகளில் நியாயமும் இல்லை. அதிலும், அந்த எல்லை வரை செல்வதை கண்டிப்பாய் ஒப்புக்கொள்ள (என்)மனம் மறுக்கிறது.
சிறப்பு: நம் கவனம் மேடை-நாடகங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்று இந்த திரைப்படம் உணர்த்தியதாய் எனக்கு தோன்றியது. அதைப்பற்றிய சில புரிதல்கள் எனக்கு கிடைத்தது; அதை, இப்படத்தின் சிறப்பாய் இங்கே குறிப்பிட விரும்பினேன்:
  • திரைப்படங்களில் வருவது போல், நாடகங்களில் "ஆக்க்ஷன்" என்ற போர்வையில் "கோமாளித்"தனங்கள் செய்யமுடியாது. விமர்சனம் உடனடியாய் கிடைக்கும். "கல்லடி"கிடைக்கும் என்ற பயம் கூட நாடகத்தை நடத்துபவர்களுக்கு இருக்கும். 
  • இயல்பான நாடகத்தை பார்க்கும்போது, மேற்கூறிய வண்ணம் அல்லாமல்; நாமும் நம் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையின் நிதர்சனம், நாடகங்கள்/தெருக்கூத்துகள் பார்ப்பதால் தான் புரியும் என்று தோன்றியது. அப்படி இருந்தவர்கள் தானே நாம் அனைவரும்?!
  • அருள்கூர்ந்து, இந்த படத்தை பார்த்த பின்; வாய்ப்பு கிடைப்பவர்கள் நாடகங்கள் (தெருக்கூத்துகள்) பார்க்கும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முக்கியமாய், குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்! "நம்மால் சொல்லிக்கொடுக்க(முடியாத/தவறிய) வாழ்வியலின் யதார்த்தத்தை; நம் இளைய தலைமுறைக்கு அவை சொல்லிக் கொடுக்கும்" என்று திடமாய் நம்புகிறேன்.
  • கண்டிப்பாக, நம் இயல்புகள் நிறைய நாடகங்கள்/தெருக்கூத்துகள் பார்ப்பதன் மூலம் திரும்ப கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அவை சாத்தியப்படுமா??!!... சாத்தியப்படுத்த தேவையான முயற்சியையாவது செய்யலாமே???!!!   

ஞாயிறு, நவம்பர் 09, 2014

மூட-நம்பிக்கை என்பது என்ன???



   சென்ற வாரம் நண்பனொருவன் "வாட்ஸ்-ஆப்"பில் பற்பசை-குழாயின் மேல் இருக்கும் நிறப்பிரிகைக்கும்; பசையிலுள்ள பொருட்களின் குனாதிசியங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாய் கூறும் ஒரு புகைப்பத்தை அனுப்பினான். அது தவறான தகவல் என்று முன்பே தெரியும்; இன்னொரு நண்பன் அதை தவறென்று சுட்டிக்காட்டினான். என்னைத்தவிர, அந்த குழுவில் அனைவரும் மருத்துவம்/உயிரியல் சார்ந்து ஆராய்ச்சி செய்திருந்ததால், அவர்கள் அதை மையப்படுத்தி அலசினார்கள். எனவே, என்னால் அங்கே அதிகம் பங்கேற்க முடியவில்லை. அது சார்ந்த தொடர்ந்த உரையாடலின் போது, இரண்டாவது நண்பன் - இணையத்தில் இது போன்ற பல வதந்திகள் உள்ளன. அதை பலரும் "மூட-நம்பிக்கை" போன்றே நம்புகின்றனர் என்றான். உண்மை தான்! இங்கே, ஆயிரம் பொய்களும்/வதந்திகளும்/இது போன்ற மூட-நம்பிக்கைகளும் - இணையத்தில் நிறைந்துள்ளன. உடனே, எனக்கு "மூட-நம்பிக்கை என்பது என்ன???" என்ற தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

       வெகு சமீபத்தில், தில்லி மிருகக்காட்சி சாலையில் நடந்த விபத்தை பற்றி, தவறான தடயவியல் அறிக்கை ஒன்றை உண்மையென்று நம்பி முக-நூலில் பகிர்ந்திருந்தேன். பின்னர், வேறொரு நட்பு அதை தவறென்று சுட்டிக் காட்டியதும், மன்னிப்பு கோரியிருந்தேன். தொடர்ந்து யோசிக்கையில், 1992-இல் இளங்கலை நட்புகளோடு திருமலை சென்றிருந்த போது; நானும், இரமேசு என்ற என் நண்பனும் சேர்ந்து ஒரு விளையாட்டு-குரும்பை செய்தோம். இன்று, அது ஒரு "மூட-நம்பிக்கை"! ஆம்; பெரிய-உண்டி அருகே உள்ள மண்டபத்தின் ஒரு தூணில், ஒரு சிலை இருந்தது. அது எவரென்று, எங்களுக்கு (இன்னமும்)தெரியாது. நாங்கள் இருவரும், அந்த சிலையின் காலை தொட்டு வணங்கி ஒரு கும்பிடு போட்டோம். நாங்கள் மொத்தம் 19 பேர் சென்றிருந்தோம். அனைவரையும், அவ்வாறு செய்ய சொன்னோம்; மீண்டும், மீண்டும் செய்து பலரின் கவனமும் எங்கள் மேல் படும்படி செய்தோம். இன்று, அவ்வாறு செய்யாதவர்களை விரல்-விட்டு எண்ணிவிடலாம்!

         நாங்கள் செய்தது பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன். அவ்வப்போது, சிலையின் அந்த பகுதி மட்டும் தேய்வதால், அதை மாற்றியும் வருகிறார்கள். அதை இனிமேல் தடுப்பது/நிறுத்துவது சிரமம்! இன்று, அது வரலாறு ஆகிவிட்டது. அதற்கு, பலரும் - பலவாறாய் விளக்கம் கொடுத்திருக்கக் கூடும்! பல கதைகள் புனையப்பட்டு இருக்கும்; ஒவ்வொரு கதையும் பலத்த நம்பிக்கையை உருவாக்கி இருக்கும். ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லை; அது, வெறும் "மூட-நம்பிக்கை"! ஆனால், இதை தெரிந்த எனக்கும்; இனிமேல், இதை படித்து தெரிந்துகொள்ள போவோர்க்கும் தான் அது "மூட-நம்பிக்கை". மற்றவர்களுக்கு அது நம்பிக்கையாய் தான் தொடர்ந்து கொண்டு இருக்கும். இதுபோல், பல நம்பிக்கைகள் "மூட-நம்பிக்கை"களாய் இருப்பதை நான் எதைக்கொண்டும் "மூடி"மறைக்க விரும்பவில்லை. "மூட-நம்பிக்கை" என்றால் என்ன? என்பதை தொடர்ந்து உண(ர/ர்த்த) தான் முயன்று வருகிறேன். எல்லா நம்பிக்கைகளிலும், இப்படிப்பட்ட மூட-நம்பிக்கைகள் இருக்கும்.

      ஆனால், காரணமே தெரியாமல் எல்லாவற்றையும் "மூட-நம்பிக்கை" என்பது பகுத்தறிவல்ல என்பதை நான் சமீபத்தில் கூட ஒரு தலையங்கத்தில் வலியுறுத்தி இருந்தேன். உலகெங்கும் விவாதத்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கையையே உதாரணமாய் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு! எனக்கு கடவுள் நம்பிக்கை வந்ததே; "உபவாசம்" என்ற விரதத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையால் தான். 1983-இல் என் அண்ணன் ஒருவரைப் பார்த்து, வியாயக்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்தேன். விரதம் இருப்பது; உடல் உறுப்பு ஒய்வு பெற என்ற நம்பிக்கையே காரணம். ஆனால், அதை "ஒழுக்கமாய்" கடைப்பிடிப்பதில் சிரமம் இருந்தது! விரதத்தை, கடவுளை நினைத்து செய்தால் எளிது என்பதால்; அந்த நம்பிக்கையை நம்ப ஆரம்பித்தேன். இன்றும், அந்த விரதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம், 48 நாட்களும் ஒருமுறை மட்டுமே உண்பது வழக்கம் என்பதை ஐயப்பன் பற்றிய தலையங்கத்தில் கூறியிருக்கிறேன்.

         கடவுளை மையப்படுத்தலை தவிர்த்து, நான் பலமுறை விரதம் இருக்க முயன்று என் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறேன்; முடியவில்லை! எனவே, விரதத்தின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை நிலை நாட்ட நான் கடவுளை நம்ப ஆரம்பித்தேன். என்னுடைய தெளிந்த பகுத்தறிவால், கடவுள் வழிபாட்டில் நா(ன்/ம்) செய்யும் தவறை கூட உணர முடிந்தது. அதனால் தான், கடவுள் என்ற பெயரில் "மூட-நம்பிக்கைகள்" இருக்கின்றன என்பதை "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்திலேயே ஒப்புக்கொள்ள முடிந்தது. கடவுள் நம்பிக்கையும்; அந்த பயமும் தான் என்னைப்போன்ற பலரையும் பல தவறுகளையும் செய்ய விடாமல் தடுக்கிறது என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அப்படி, ஒரு மனிதனை "நல்ல மனிதத்துடன்" இருக்க "ஒரு நம்பிக்கை" உதவுமேயானால்; அந்த நம்பிக்கையை எதற்காய் மற்றவர் எதிர்க்கவேண்டும்? அவர்களுக்கு நம்பிக்கை "இல்லை" என்றால், இருந்துவிட்டு போகட்டும். பிறர் நம்பிக்கையை ஏன் காரணமே-தெரியாமல் தொடர்ந்து தூற்ற வேண்டும்?!

   ஒரு "தவறான நம்பிக்கை" சரியான விதத்தில் நிரூபிக்கப் பட்டால் மட்டுமே வேரரும்! மேற்குறிப்பிட்டது விளையாட்டென்று எனக்கும், என் நட்புகளுக்கு மட்டும் தான் தெரியும்! இதைப் படித்தும் கூட, எல்லோரும் அதை நம்பி மாற்றிக்கொள்வரா என்பது பெருத்த சந்தேகமே; அதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும்! இதை நாங்கள்தான் செய்தோம் என்பதற்கு என்னிடமே ஆதாரம் இல்லையே! ஆனால், நான் சொல்வது சத்தியம்!! ஒன்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். நம்புவதற்கு எந்த நிரூபணமும் தேவையில்லை! ஒரு நம்பிக்கையை பொய்யென்று நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் வேண்டும்!! எல்லா நம்பிக்கைகளும் தவறானவை அல்ல என்பதையும் உணரவேண்டும். "இவர்தான் உன் தந்தை!" தாய் சொல்வதை பிள்ளைகள் நம்புவது போல்; சில நம்பிக்கைகளை "அப்படியே" நம்பவேண்டும். இன்று வேண்டுமானால், தந்தையை உறுதி செய்யும் விஞ்ஞானமும்/அவநம்பிக்கையும் வந்திருக்கலாம். ஆனால், அது காலங்காலமாய் தொடர்ந்து வந்த/வரும் நம்பிக்கை!!!

        கெடுதல் செய்யாமல், நல்லது மட்டுமே செய்யும் ஒரு நம்பிக்கை எப்படி "மூட-நம்பிக்கை ஆகும்??? கடவுள் நம்பிக்கையில்; சில மூட நம்பிக்கைகள் இருக்கலாம்! ஆனால், கடவுள் நம்பிக்கையே "மூட-நம்பிக்கை" என்பது அர்த்தமற்ற பகுத்தறிவு!! "பூனை குறுக்கே சொல்லுதல்" போன்ற பல அர்த்தமற்ற நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கிறது. நம் "தெளிவான-சுய" பகுத்தறிவு முக்கியம்! அதனால் தான், பெரியார்; அன்றிருந்த சூழலில் எதிர்த்த இரண்டு கொள்கைகள் இன்று தேவையில்லை! என்றேன். பெரியார் போன்றோர்க்கு மனிதமும்/மனிதனும் வஞ்சிக்கப்படுவதை தாங்கமுடியாத துயரமே அடிப்படையாய் இருந்தது. அதுதான் முக்கியம்! பெரியாரின் பெயரில் "கொடி"பிடிக்கப்படும் "கண்மூடித்தனமான" கொள்கைகளை; இன்று, பெரியார் இருந்தால், அவரே எதிர்ப்பார். அவர் இல்லை என்பதால் தான், என்போன்ற "சிறியார்" அதை உண(ர/ர்த்த) முயல்கிறோம். எனவே, என்னுடைய மேற்கூறிய அனுபவம் மற்றும் என் புரிதலின் அடிப்படையில் எது பற்றியும்/எவர் கூறுவதையும்... 

கண்மூடித்தனமாய் நம்புவதே; "உண்மையான" மூட-நம்பிக்கை!!!

முத்தத்தை வட்டிக்கு விடும் கற்பனை...



         ஆலமரம் என்ற திரைப்படத்தில் "தேரேறி வர்றாரு சாமியாடி; தேருக்கு முன்னால கும்மியடி" என்ற பாடலில் "முத்தத்தை வட்டிக்கு தந்தவள! முந்தானை காசாக்கி கொண்டவளே!!" வரும் வரியைக் குறிப்பிட்டு, அந்த கவிஞனின் "கற்பனை வளத்திற்கு" என் வாழ்த்துகளை துணுக்குகள் பகுதியில் பதிந்திருக்கிறேன். அங்கே, குறிப்பிட்டபடி இதனை அக்கவிஞன் நடைமுறையில் சந்தித்து கூட இருக்கக்கூடும். இன்று பல தம்பதியருக்குள் இயல்பாய் கூட "முத்தமிடுதல்" நடப்பதில் பல பிரச்சனைகள் உள்ளன. அவர்களின் உறவுகளுக்குள் இருக்கும் விரிசல் காரணமாய், இம்மாதிரியான செயல்களைப் பற்றி கற்பனையாய் எண்ணிப்பார்ப்பது கூட அவர்களுக்கு இயலாமல் போகிறது. இருப்பினும், வெகுசிலருக்கு அம்மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை; அதற்கு உதாரணம்தான் இந்த வரி! அந்த கவிஞன் ற்பனையாய் கூறி இருப்பினும்; இதை கூர்ந்து கவனித்து பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அதனால், இந்த மனதங்கமும்!

     இந்நிகழ்வை என்னுடைய கற்பனையில் "உன்னுடைய சக்திக்கும் மீறிய அளவில், அசல் இருக்கட்டும்! எவ்வளவு வட்டி ஆனாலும், அசல் அதிகமாய் இருக்கட்டும்; அப்போது தான் உனக்கு வட்டியே அதிகம் கிடைக்கும்!!" என்று காதலன்/கணவன் தன் காதலி/மனைவி இடம் கூறுவதாய் ஒரு கற்பனை செய்தேன். அதற்கு அப்பெண் "டீலக்ஸ் வட்டி" என்று பதில் சொல்வதாய் கற்பனை நீண்டது. அதன் பின், அவன் "சரி! டவுன்-பேமெண்ட் எவ்வளவு?" என்று கேட்பதாயும்; அதற்கு அவள் "100 முத்தங்கள்" என்பதாயும்; பின்னர், அவ்வளவு தானா? என்று அவன் மீண்டும் கேட்பதாயும் என் கற்பனை தொடர்ந்தது. என்னுடைய கற்பனைக்கு முக்கிய காரணம் அக்கவிஞனின் கற்பனையே! இம்மாதிரியான கற்பனைகளை தொடர்ந்து அவ்வப்போது நம் தமிழ் திரைப்பாடல்களில் கேட்டு வருகிறோம். மிக அபூர்வம் எனினும், அவைகளை நாம் தவறாமல் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது. அட... அட... அட... "முத்தத்தை வட்டிக்கு தருதல்!" - என்னவொரு கற்பனை?!     

குறையொன்றுமில்லை (2014)...


     
     கடந்த வெள்ளியன்று வழக்கம் போல் இணையத்தில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருந்தபோது, குறையொன்றுமில்லை என்ற படம் கண்ணில் பட்டது. எவர் நடித்தது என்று தெரியவில்லை; பெரும்பாலும் புதுமுகங்கள்! இந்த நிமிடம் வரை கூட தெரியாது. தெரிந்துகொள்ளவும் தோன்றவில்லை; எவர் என்று தெரியாமலேயே அந்த படத்தைப் பற்றிய உயர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. என்னுடைய பார்வை கீழே:
  • முதலில் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. படத்தின் ஆரம்பத்தில், பார்வையாளர்கள் தான் "தயாரிப்பாளர்கள்" என்பது மிகவும் பொருத்தம். ஆனால், தொடர்ந்து சொன்னது போல் என்னால் திரையரங்கில் அல்லது முறையான-குறுந்தட்டில் பார்க்க இயலவில்லை! இங்கே அந்த படம்  வெளியாகவில்லை. அதற்காய், அவர்கள் பொறுத்தருளவும்! வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படத்தை திரையரங்கில் காணுங்கள்.
  • இம்மாதிரி புதுமுகங்கள் கொண்டு; குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்கள் சொல்ல வந்த விசயத்தை விட்டு விலகாமல் அந்த கருத்தில் மையம் கொண்டிருக்கும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சாட்சி. சமீபத்திய, கத்தி திரைப்படமும் இம்மாதிரி ஒரு கருத்தை மையப்படுத்தியது எனினும், அதில் சில சறுக்கல்கள் இருப்பதை குறிப்பிட்டிருந்தேன். தேவையற்ற கதாநாயகி; அதனால், வலுக்கட்டாயமாய் திணிக்கப்பட்ட பாடல்கள்; தேவையற்ற இன்னொரு கதாபாத்திரம் என்று?! இந்தியன், அந்நியன் போன்ற படங்கள் வேண்டுமானால் - இந்த வகையில் விதிவிலக்குகளாய் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையில் குறைந்த தயாரிப்பில் வரும் படங்கள் அதிக தரம் வாய்ந்தே இருக்கின்றன என்பது என் கணிப்பு.
  • படம் ஆரம்பித்து 10 நிமிடம் கூட இல்லை! படத்தின் மையக்கரு ஆரம்பித்து விட்டது. எந்த "பில்ட்-அப்"பும் இல்லை; மையக்கரு வரவேண்டும் என்ற நோக்கத்தில் எந்த "ஃபிளாஷ் பேக்"கும் இல்லை. கதை இயல்பாய், மையக்கருவிற்குள் செல்கிறது. கதாநாயகனும், அவ்வாறே!
  • கார்ப்பரேட் நிர்வாகம் என்றால் என்ன? என்பதை மிக எளிமையான திரைக்கதை/காட்சிகள் கொண்டு விளக்கி இருப்பது மிகமுக்கியமாய் பாராட்டப் படவேண்டும்.
  • எடுத்துக்கொண்டிருக்கும் சவாலான விசயத்தை கதையின் நாயகன், வழக்கமான திரைப்பட-பிரம்மாண்டத்தில் இருந்து பெருமளவில் விலகி "மிக எதார்த்தமாய்" நிகழ்த்துவதாய் காண்பித்து இருப்பது தனி சிறப்பு!
  • வள்ளியூர் என்றொரு கிராமத்தை சுற்றி படம் நகர்கிறது. அது உண்மைப் பெயரா என்று தெரியவில்லை. ஆனால், அந்த ஊர் அவ்வளவு இயற்கையாய்/அழகாய் இருக்கிறது. பச்சைப்-பசேல் என்ற வயல்கள், அருமையான மலை சூழ்ந்த பகுதி, உண்மையான கிராம மக்களின் தோற்றம் - அனைத்தும் அருமை. வழக்கமாய் திரைப்படங்களில் இருப்பது போல், கதையின் நாயகன் வீடு மட்டும் "அரண்மனை"போன்ற அழகுடன் தனித்து தெரியவில்லை!
  • படத்தில் "அனல் பறக்கும் பஞ்ச்" வசனங்கள் இல்லை. கதாநாயகன் ஒரேயொரு இடத்தில் "நான் அமைதியா இருக்கறதுனால; என்கிட்ட பதில் இல்லைன்னு அர்த்தம் இல்லை! சொன்னால், உங்களுக்கு புரியாது!!" என்பது போல் ஒரு வசனம் இயல்பாய் பேசுவார். அடுத்த காட்சியில், தானே "கதையின்"நாயகியிடம் "இப்போ தான் ஒரு பஞ்ச் டையலாக்" பேசினேன் என்று இயல்பாய் கூறுவார். உண்மையில், அது ஆர்ப்பாட்டமில்லாத அருமையான பஞ்ச்!
  • கதாநாயகனின் நண்பனாய் வரும் கதாபாத்திரம் அருமை! இயல்பான தோற்றம்; அமைதியான நடிப்பு! அவரின் நண்பனாய் வருபவர் கூட "இயல்பான வசனங்களால்" நகைச்சுவை உண்டாக்குகிறார். தேர்ந்த நடிகர்கள் போல் நடித்திருக்கின்றனர்.
  • இந்த படத்திலும் கதாநாயகி உண்டு. ஆனால், ச்சுமா கதாநாயகனை சுற்றி வரும் அழகுப்பதுமையோ?! "சதைப்பிண்டாமோ"! அல்ல; கதையில் ஒரு பாத்திரமாய் வருகிறாள். அவளும், கதையின் மையக்கருவான விவசாயம் மற்றும் கிராமங்களுக்கு உதவுவது என்று கதியினூடே வருகிறாள்.
  • இயல்பான விதத்தில் வரும் காதல்(கள்)! வெகு இயல்பாய் வரும் காதலர் சண்டைகள்/ஊடல்கள். திரைப்படம் என்பதற்காய் பல அபத்தங்கள் இல்லை! ஆபாசங்கள் இல்லை. ஆனால், காதல் இருக்கிறது. கதையின் நாயகனும்/நாயகியும் தங்களின் வேலை/சமுதாயக்கடமை - இதில் இருந்து எள்ளளவும் மாறாமல் காதலிக்கின்றனர். மிகமுக்கியமாய் "வாழ்வை ஒட்டிய காதல்" என்ற அளவிலேயே காண்பிக்கப் பட்டு இருக்கிறது.
  • இந்த படத்திலும் பாடல்கள் வருகின்றன. ஆனால், திணிக்கப்பட்ட பாடல்கள் அல்ல! கதாநாயகியின் ஆடை குறைக்கப்படவேயில்லை! ஏன், ஆடையே மாற்றப்படவில்லை! காட்சிகளின் பின்னணியில் தான் பாடல்கள் வருகின்றன. குறுகிய நேரத்தில்; அழகிய உணர்வில் - வரும் பாடல்கள். பாடல்களுக்காய் எவரும் விமானம் ஏறி; வேறு நாடுகளுக்கு செல்லவில்லை! ஏன், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கூட சுற்றித் திரியவில்லை. இருக்கும் இடத்தில்;  இருக்கும் வண்ணமே உள்ள பாடல்கள்.
  • படத்தில் ஒருவர் கூட மற்றொருவரை "ச்சும்மா" கூட அடிக்கவில்லை! பூஜை/கத்தி படங்களில் மற்றும் பல படங்களில் வருவது போல், எவரும் இன்னொருவரிடம் "அவனை; செதில், செதிலாய் வெட்டனும்!" என்று இரைச்சல் இடுவதில்லை!  ஒருவரும், இன்னொருவரை பார்த்து "முஷ்ட்டி" மடக்குவதில்லை. இவ்வளவு ஏன்? படத்தில் வில்லன் என்று யாருமே இல்லை! ஆம்; இங்கே நாம் எல்லோருமே "விவாசியிக்கும்/கிராமத்திற்கும்" வில்லன்! என்பது தெளிவாய் இருக்கும்போது, தனியே எதற்கு வில்லன்?!  
  • இப்போது, எனக்கு மிகப்பெரிய குழப்பம் வருகிறது! இம்மாதிரி பாடல்கள், ஆடைக்குறைப்பு, அடிதடி என்பனவற்றை "திரைப்படத் துறையினர்" தொடர்ந்து சொல்லி வருவது போல்; நாமா எதிர்பார்க்கிறோம்?! இல்லையென்றே தோன்றுகிறது; குறைந்த பட்சம், இந்த சூழலில் இல்லை. ஒரு காலத்தில் "நாக்கை தொங்கப்போட்டு" பார்த்து; ஒரு-கூட்டம் ஏங்கி இருக்கக்கூடும். ஆனால் அது(வும்) "இலைமறை; காய்மறை"ஆய் இருந்தபோது, இருந்திருக்கவேண்டும். இப்போது "இலையே" இல்லையே அய்யா! பின் எப்படி, அதில் நம் விருப்பம் இருக்கும்? கலைத்துறையினர் இந்த விசயத்திற்கு செவி-சாய்க்க வேண்டும்!!
  • என்னளவில், அந்த படத்தில் "வேலைக்காரியாய்" வரும் நடிகையை வேறேதோ படத்தில் பார்த்ததாய் நினைவு! அதே வேலைக்காரி போன்ற கதாபாத்திரம் என்று நினைக்கிறேன். "வேலைக்காரி"வேடத்திற்கு மட்டும் "படத்தின் பட்ஜெட்"உடன் எந்த சம்பந்தமும் இல்லை போலும்!
  • சில குறைகள் இருந்தாலும்; மேற்குறிப்பிட்ட போல் இன்னும் இருக்கும் பல நிறைகளினால் - அவைகள் நமக்கு பெருசாய் தெரிவதில்லை! உண்மையில், அவைகளை குறைகளாய் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை என்பதால்; அவைகளைக் குறிப்பிடவில்லை!
குறிப்பு: இம்மாதிரியான படங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன! ஆனால், இம்மாதிரியான படங்களை நாம் தான் கொடுக்கவேண்டிய "அங்கீகாரம்"கொடுத்து வரவேற்காமல் போய்விடுகிறோம். அதனால் தான் "பல குப்பைகள்" இங்கே வந்துகொண்டிருக்கின்றன. அந்த குப்பைகளை நாம் மறுக்க/தடுக்க முடியவில்லை என்பதால் தான் "ஆடைக்குறைப்பு" போன்ற பல அசிங்கங்களை நாம் தான் எதிர்பார்க்கிறோம் என்ற "பொதுவான குற்றச்சாட்டு" இருக்கிறது. ஏதேனும் ஒரு "ஈனக்கும்பல்" வேண்டுமானால், அம்மாதிரி(மட்டும்) எதிர்ப்பார்க்கலாம். தொடர்ந்து நாம் அமைதியாய் இருப்பாதால் தான் அது "பொதுக் குற்றச்சாட்டாய்" வைக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.

இம்மாதிரியான படங்களை ஆதரிப்போம்! தவறான படங்களை எதிர்ப்போம்!!

முத்தத்தை வட்டிக்கு விடுதல்...



      ஆலமரம் என்ற திரைப்படத்தில் "தேரேறி வர்றாரு சாமியாடி; தேருக்கு முன்னால கும்மியடி..." என்ற பாடலில்...

"முத்தத்தை வட்டிக்கு தந்தவள! முந்தானை காசாக்கி கொண்டவளே!!" 

என்றொரு வரி வரும்! முத்தத்தை வாடகை விடுவது! ஆஹா... என்னவொரு கற்பனை வளம்? உண்மையில் அப்படியொன்று நிகழ்ந்திருந்து அந்த கவிஞன் எழுதியிருப்பினும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! 

அந்த கவிஞனின் "கற்பனை வளத்திற்கு" என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

ஞாயிறு, அக்டோபர் 26, 2014

பலரும் உணராத "கர்ப்பப்-பைகள்"!!!



         சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்-ஆப் "குழு உரையாடலில்" நண்பன் ஒருவன் நாமே, நமக்கு துணை என்பதான தன்னம்பிக்கை பற்றிய ஒரு காணொளியை பகிர்ந்து இருந்தான். நல்ல செய்தி தான்! ஆனால், எனக்கு ஒரு விசித்திர எண்ணம் உதித்தது; அதனால், அந்த காணொளியை "இசையை அனைத்து(Mute) விட்டு" பார்த்தேன். என்ன ஒரு ஆச்சர்ய-அதிர்ச்சி! அது ஒரு சாதாரண தகவல் தான். அதில் வந்த வாசகங்கள், என்னைப் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் கூட, அடிக்கடி எழுதுவது தான். ஆனால், அது-போன்ற பின்னணி இசையால் அவை "பூதாகரமாய்" தோன்றுகின்றன! அந்த காணொளியை தொடர்ந்து சென்ற வாரம், அதே போன்று இன்னுமோர் காணொளி பகிரப்பட்டது. அதன் பின்னர் தான், என் 2 நட்பு குழுவில் அந்த காணொளியை "இசை"இல்லாது பார்க்க சொன்னேன். அவர்களுக்கு, சட்டென்று புரியவில்லை; சிறிது விளக்கம் கொடுத்தேன். என்ன அதிசயம்? என் பரபரப்பு அவர்களையும் சூழ்ந்து கொண்டது.

        நீங்களும் முயன்று பாருங்களேன்! ஒரு குழுவில் இருக்கும் நட்பு ஒருவன் "நான் ஒரு பயங்கர பேய் படத்தை, அப்படி பார்த்தேன்! பயங்கர காமெடியாய் இருந்தது!!" என்றான் - அது ஒரு பார்வை. இன்னொரு குழுவில் இருந்து வேறொரு நண்பன் "மேலிருந்து விழும் அருவியைத்தான் நாம் அதிசயித்து பார்ப்போம்! ஆனால், அதை தாங்கி/தூக்கி வந்து கொடுக்கும் மலையைப் பற்றி நாம் நினைப்பதில்லை!!" - நீ சொன்னது போல் அந்த "இசையை"நீக்கிப் பார்த்ததில், இது ஒரு தத்துவம் போல் எனக்கு தோன்றியது என்று இன்னுமோர் பரிமாணத்தை கொடுத்தான். அவனே தொடர்ந்து, தான் ஒரு புத்தகம் எழுதப் போவதாயும்; அதன் கரு இதை மையப்படுத்தி இருக்கும் என்றும் சொன்னான்! எனக்கு பெருத்த மகிழ்ச்சி. என்னுடைய பார்வை, ஒரேயொரு முறை நான் சொன்னதும், என் நட்புகளை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்ற வியப்பு. அது தானே, என் (எழுத்தின்)  நோக்கமும்?! - நான் பார்க்கும் என் பார்வையை பலரையும் கொண்டு சேர்ப்பது!

        என்னுடைய பார்வை, வழக்கம் போல் வாழ்க்கையுடன் இது எப்படி ஒன்றிப்போகிறது என்பதாய் தான் இருந்தது. ஒரு மரத்தை நாம் பிரம்மித்து பார்ப்பது போல், அதை "நெடுங்காலமாய்" தாங்கிக்கொண்டு அதற்கு உயிர் கொடுக்கும் "வெளியே தெரியாத" வேரைப்பற்றி பெரிதாய் ஆவல் கொள்வதில்லை. அதுபோல், "வேராய்" இருந்து நம்மை வளர்த்து விட்டு; இன்று "வேறாய்" நிற்கும் பலரைப் பற்றி நாம் நினைப்பதே இல்லை! என்ற உண்மையே எனக்கு முதலில் உதித்தது! இதை, தத்துவமாய் பலரும் பார்க்கக்கூடும்! நான் இதை தத்துவம் என்ற விதத்தில் சொல்லவில்லை; அப்படி தத்துவமாய் தெரிந்தால், எனக்கு பெருத்த சந்தோசமே! என் பார்வை... பலரையும் சென்று விசாலம் அடையவேண்டும் என்பதே என் தலையான நோக்கம். நமக்கு வேராய் இருந்தவர்களை நீக்கிவிட்டு பார்த்தால், நாம் "ஒன்றுமே இல்லை!" என்பது நிதர்சனமாய் தெரியும். அதைத்தான், என் நண்பன் சொன்ன "இசை நீக்கிய" பயங்கர-பேய் படம் உணர்த்தும் உண்மை.

         அம்மாதிரி அவ்வாப்போது தோன்றியதால் தான் "என் தமிழுக்கு வித்திட்டவர்", "சிறந்த கணவன்  சிறந்த தந்தை", "என் மருதமையன்" போன்ற தலையங்கங்கள் எழுதப்பட்டன. என்னால், என்னை "அவர்களோடு" இணைத்தும்/பிரித்தும் பார்த்து; என் சுயம் எது? என்னில் அவர்களின் பங்கு என்ன?? என்பதை உணர முடிந்ததால் தான் "தன்னம்பிக்கை" பற்றிய ஒரு காணொளியைப் பார்த்தவுடன், என்னால் இசையை-விலக்கி வேறுபடுத்தி பார்க்க முடிந்தது. நமக்கே, நம்மை "வேராய்" இருந்து வளர்த்து விட்டவர்களை நினைத்து பார்க்க முடியவில்லை எனில், நம் சுற்றம் மட்டும் நம்மை வளர்த்து விட்டவர்களை கண்டறிந்து; மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, எப்படி நியாயமாகும்? அவர்கள், நம்மையும் போலவே, நாம் இப்போதிருக்கும் நிலையை மட்டுமே பார்க்கும் நிலையில் இருப்போர். இதற்கெல்லாம் உச்சமாய், என்னை இந்த உலகில் இருந்தே விலக்கி பார்த்ததே "மரணத்திற்கு பிறகு, என்ன?" என்ற தலையங்கம். இப்படிப்பட்டவர்கள் எல்லோரும்; "பலரும் உணராத கர்ப்பப்-பைகள்!".

       எனவே, அந்த கர்ப்பப்-பைகளை கண்டறிந்து; நினைவுகூர்ந்து பாராட்ட வேண்டும். அவர்களுக்கு நம்மால் இயன்றதை மறுக்காமல்/மறக்காமல் செய்யவேண்டும்! அதையும் "நம் கடமையாய் "செய்திடல் மிகவும் அவசியம்! அதில், நம் தற்பெருமைக்கோ?! புகழுக்கோ?! வேலையே இல்லை. அது "செய்நன்றி உணர்தல்"; அது "கடனடைத்தல்"! அதை, நான் முன்பே சொன்ன "கடன் அடைத்தான் - நெஞ்சம் போல்" எண்ணிப் பார்த்தல் அவசியம். அது யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும்! எத்தனை சிறிய வேராய்(உதவியாய்) கூட இருக்கட்டும். அந்த சிறு-வேரும் நம் வளர்ச்சியில் பங்கு வகித்தது என்பதை உணர்தல் வேண்டும். அந்த விதத்தில், நான் என் கடமையை எள்ளளவும் குறைவில்லாது செய்திருக்கிறேன் என்ற நிறைவு எனக்கு எப்போதும் உண்டு. இன்னும் அது போல், சிலருக்கு செய்ய முடியாத "கடனாளியாய்" என் சூழல் கட்டிப் என்னை போட்டிருப்பதும் அறிவேன்! ஆனால், எவரையும் நான் "நினைக்க"மறந்ததில்லை. இப்போதாவது, உங்களை..

"வேராய்" இருந்து வளர்த்தவர்களை நினைத்து; "வேறாய்"உங்களைப் பாருங்கள்!!!

ROAR - ஒரு "நினைவு" முன்னோட்டம்...



     திரு. பத்ரசாமி சின்னசாமி அண்ணாச்சி அவர்களின் "ஆட்கொல்லி புலி வேட்டை" பற்றிய கவிதையை பலரும் படித்திருப்பீர்! 25.10.2014 அன்று இங்கே அபுதாபியில் கத்தி திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த போது; இடைவேளையில் "Roar" என்ற ஹிந்தி திரைப்படத்தின் "முன்னோட்டம்" காண நேர்ந்தது. அது அண்ணாச்சியுடன் தொடர்பு உள்ளதால், அவருக்கு இந்த "திறந்த பதிவை" முக-நூலில் பகிர்ந்தேன்! அது உங்களுக்கே இங்கே...

*******

அண்ணாச்சி!

Roar என்ற ஹிந்தி திரைப்படத்தின் முன்னோட்டத்தை கத்தி திரைப்படத்தின் இடைவேளையின் போது பார்த்தேன். கதைக்களம் - நீங்கள் செய்திட்ட அதே "ஆட்கொல்லி"புலி வேட்டை! உடனே, உங்களிடம் கீழ்வருவனவற்றை பகிரவேண்டும் என்று தோன்றியது:
  • உங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு படத்தில்: அதாவது, புலியை வேட்டையாடுவது தவறென்று வாதிட ஒரு அழகுப் பெண்மணி; ஹீரோவிடம் "அழகாய்"சண்டை செய்கிறார்! உங்கள் அனுபவத்திற்கு, சண்டையையே அழகு என்று சொல்லிவிட்ட பின், அந்த பெண்ணைப் பற்றி விவரிக்க ஏதும் இல்லை! ;) ம்ம்ம்... என்ன செய்வது? நீங்கள் சாதாரண "நிஜ"ஹீரோ!! 
  • என்னைப்பொருத்த அளவில், சமீபத்தில் இப்படி ஒரு வேட்டை நிகழ்த்தியது; நீங்களும் உங்கள் குழுவும் தான். இம்மாதிரி ஒரு படம் எடுக்கப்பட்டு இருப்பது உங்களுக்கோ/அல்லது வேறு வன-இலாக்காவிற்கோ தெரியப் படுத்தப்பட்டு இருக்கிறதா?
  • அதில் ஒரு சீன்! அந்த ஆட்கொல்லி புலி ஒருவரை வாயில் கவ்விக்கொண்டு நெடிய மரத்தின் பாதி அளவிற்கு பாய்ந்து அதில் அந்த நபரை மோதுகிறது. "பாலிவுட்" படமாயிற்றே?! ஹீரோ சும்மா இருப்பாரா??!! ஒரு காட்சியில் "பாய்ந்து வரும் புலியை, முன்னங்கால்கள் இரண்டையும் தன் கைகளால் பிடித்து; ச்சும்மா, ஒரு சுழற்று-சுழற்றி வீசி எறிகிறார்!!!". ம்ம்ம்... நீங்க என்னடான்னா "பொங்கல் பண்டிகையையும் மறந்துவிட்டு; பலரையும் உங்களோடு வைத்துக்கொண்டு" 10 நாட்கள் போராடி இருக்கிறீர்கள்! ;) இருப்பினும், இறுதியில் உங்களுக்கு கெட்ட பெயர்! :(
  • அந்த காடும், காட்டில் சுற்றும் ஹீரோ, மேற்கூறிய பெண்ணும் அபார அழகுடன் (சுற்றிக் கொண்டு) இருக்கிறார்கள்! ம்ம்ம்... நீங்கள் காட்டில் இருந்துகொண்டே அனுப்பிய புகைப்படங்கள் என் மனக்கண்ணில் "உங்கள் விழுப்புண்களோடு" வந்து சென்றன. :(
  • ஒரு 2 நிமிடத்திற்கும் குறைவான முன்னோட்டம் பார்த்தே, எனக்கு இவ்வளவு தோன்றி இருக்கிறதே?! படத்தில் என்ன இருக்கும் என்று ஆவல் எழுந்தது. அக்டோபர் 31-ஆம் தேதி இங்கு வெளியாகிறதாம். 
  • "ஹிந்தி தெரியாததால்" மிகவும் தேர்வு செய்த படங்களை மட்டும் தான் எப்போதாவது பார்ப்பேன்! ஆனால், இந்த கதை தான் உங்கள் மூலம் ஏற்கனவே தெரியுமே?! அதனால்... உங்களுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
முன்குறிப்பு: படம் பார்த்துவிட்டு, இன்னும் பிற கேள்விகளை/கருத்துகளை பதிந்து உங்களை "டேக்" செய்வேன் என்று இப்போதே எச்சரிக்கை செய்கிறேன்!! ;) முடிந்தால், நீங்களும் பாருங்களேன்! நம் விவாதத்திற்கு ஏதுவாய் இருக்கும்! ;)     

திருமண வாழ்க்கை என்பது...



திருமண வாழ்க்கை என்பது...

அடங்க முடிந்தோர்க்கு "அமர்க்களம்"!
புரிய முயல்வோர்க்கு "போர்க்களம்"!!

- இது ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்தும்!!!

வெறிச்சோடி போனடதா வாழ்க்கை!!!



சதுரங்க வேட்டை என்ற படத்தில் வரும் "வெறிச்சோடி போனடதா வாழ்க்கை!" என்ற பாடலை எத்தனை பேர் வியந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை!  எனக்கும், படம் பார்த்த போது, அந்த பாடல் அத்தனை அழுத்தமாய் மனதில் பதியவில்லை.

பின்னர் மீண்டும், மீண்டும் அந்த பாடலைக் கேட்டபோது தான், எத்தனை வியப்பான பாடல் என்று புரிந்தது. குறிப்பிட்டு சொல்ல விரும்புவது பின்வரும் வரிகள்:

"ஒனக்கு மட்டும் சொந்தம் இல்லை ஊரச்சுற்றும் காசு!
அது வேசிப்போல வந்து வந்து வெலகிப்போகும் தூசு!!"

ஒரு சராசரி மனிதனின் ஆசைகளையும், வாழ்க்கை மேல் வரும் சராசரி வெறுப்பையும்; மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டு "சரமாரியாய்" விளக்கி இருக்கும் பாடல். பாடலின் வரிகளுக்கு - சற்றும் குறைவில்லாத குரலும், இராகமும் - பாடலுக்கு பெருத்த வலு சேர்த்திருக்கிறது.

"வியப்பானவை" என்ற என்னுடைய பாடல் தொகுப்பில் சமீபத்தில் இணைந்திருக்கும் பாடல்! 

நம் எண்ணமும் செயலும்...



பெரும்பான்மையில், நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணமும்/ செயலும் தான் நம்முடைய எண்ணங்களையும்/செயல்களையும் தீர்மானிக்கின்றன. நல்லதோ/கெட்டதோ - நம்மளவில் அது சரியென்ற எண்ணத்துடனே நாமும் "தொடர்ந்து" பயணிக்கிறோம். 

தனித்து பயணிக்கும்போது பெரிய பாதிப்பு இருப்பதில்லை!
சேர்ந்து பயணிக்கவேண்டிய உறவுகளில் தான் பல சிக்கல்கள்!!

காகிதக் கப்பல்...



காகிதக் கப்பல், கடலுல கவுந்துடுச்சா?! காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்!! ...

"மெட்ராஸ்" தமிழ் திரைப்படத்தில் வரும் பாடல்!

யோவ் பாலா!
நீர் சாதா கானா இல்லையா!!
"தத்துவ"கானா!!!

கத்தி (2014)



      நேற்று (25.10.2014) அபுதாபியில் உள்ள சஃபீர்-மால் திரையரங்கில் 13:00 மணி காட்சிக்கான  நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டு; அருகே இருக்கும் "சங்கீதா"வில் ஃபுல்-மீல்ஸ் அடித்துவிட்டு திரையரங்கினுள் நுழைந்து அமர்ந்தேன். சரியாய் 13:00 மணிக்கு காட்சி துவங்கியது. மிகச் சிறந்த படம் இல்லை என்றாலும்; விஜய் படங்களில் ஒரு மாறுபட்ட படம். ஆனால், இன்னமும் விஜய் படங்களில் எனக்கு பிடித்த படம் என்றால் அது "துப்பாக்கி" தான்! துப்பாக்கி தான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற என் ஆவலை; அதிலும், திரையரங்கில் பார்க்கவேண்டும் என்ற என்னத்தை உருவாக்கியது. முருகதாஸ் மேலும், அப்படியொரு நம்பிக்கை! நான் மிகவும் எதிர்பார்த்துவிட்டேன் போல?! ஆனால், அவர்கள் அளவில் சரியாய் செய்திருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! 

    என் பார்வையை பகிர்வதற்கு முன், பெரும்பான்மையான விமர்சனங்கள் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு: "கோலா"பற்றி விளம்பரம் செய்த விஜய்-க்கு இந்த படத்தில் நடிக்க தகுதியில்லை என்பது!! விஜய் என்பவர் ஒரு நடிகர். இரண்டிலும், அவர் நடித்திருக்கிறார். "கோலா"விளம்பரம் தவறென்றால் அதை ஒதுக்கி விடுங்கள்! நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். ஏன்... மதுபான விளம்பரங்களில் "எத்தனை கோடி"கொடுத்தாலும், நடிக்க மாட்டேன் என்ற சச்சின் கூட பல வருடங்கள் "பெப்சி"விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதை நாமெல்லாம், கை தட்டி கொண்டாடியவர்... இன்னமும் கொண்டாடுபவர் தானே?! இம்மாதிரி, மற்றும் சில நடிகர்கள் முரணான காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒரு பட்டியலை "ஃபேஸ்புக்"கில் பார்த்தேன். அங்கே கேட்டிருக்கும் கேள்வியையே நானும் இங்கே கேட்கிறேன்: "விஜய்"செய்தால் மட்டும் என் தவறு? எனவே, அதையெல்லாம் விடுத்துவிட்டு படம் சொல்லும் செய்தியைப் பார்ப்போம்.

      மேலும், இவர்களிடம் எம்.ஆர்.ராதா (குறிப்பாய் இரத்தக்கண்ணீர்) ஸ்டைலில்: "ஏண்டாப்பா! நியாயஸ்தன்களா?!... ஒடம்புல துணி இருக்கா? இல்லையாண்ணே?? தெரியாம டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு பல படங்கள்லையும் நடிச்ச பொண்ணுங்க அம்மனா நடிக்கும் போது எங்கடாப்பா போனீங்க?!... அடப்பாவிகளா! கொஞ்சோண்டு ட்ரெஸ் போடறதால-மட்டும், அந்த பொண்ணுங்கள "அம்மாதிரி"ன்னு நெனைக்கறதும் தப்பு! அம்மனா நடிச்சதால, கடவுளா நெனைக்கறதும் தப்புடா! தப்புடாப்பா!... தப்பு!!..." - இப்படித்தான் சொல்ல தோணுது. அவர்களை வெறும் நடிகர்/நடிகையராய் மட்டும் பார்போம். ஏதேனும் ஒரு தவறாவது செய்து, பின்னர் அதை திருத்தி வளர்ந்தவர்கள் தான் நாம் எல்லோரும்! விஜய்யும் அதை உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றாலும்; பரவாயில்லை. அது வெறும் நடிப்பு! தேவையானது/தேவையற்றது என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும்! 

       இடையில், படத்தின் கதை வேறொருவருடையது என்பதே, பலரும் குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கிறார்கள், மேலும், அது சார்ந்த வழக்கும் நடந்து கொண்டிருப்பதை கேள்வி. இப்போதைக்கு, எனக்கு கதை எவருடையது என்பது பற்றி கவலை இல்லை; இது, அவர்களின் பிரச்சனை. மேலும், நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும் ஒன்றைப் பற்றி, நான் கருத்து சொல்ல ஏதுமில்லை! வழக்கம்போல், கதை என்னவென்பது பற்றி எந்த தகவலும் என்னுடைய பார்வையில் இருக்காது. பலரும், முழுக்கதையும் சொல்லி இருக்கலாம்! எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனவே, படத்தை பற்றிய என் நடுநிலையான பார்வை மட்டும் கீழே:
  • "லைக்கா" மொபைல் லோகோவும், விளம்பரமும் தமிழகத்தில் மட்டும் தான் நீக்கப்பட்டு இருக்கிறது போலும்! இங்கே... எந்த "ஆரவாரமும்" இல்லாமல் அந்த விளம்பரத்தோடு தான் படம் ஆரம்பித்தது. அடப்பாவிகளா!... நம் இலங்கைத் தமிழர்கள் அதிகம் இருப்பது, இலங்கையிலும்; வெளிநாடுகளில் தானே?! அவர்கள் எல்லோரும் அமைதியாய் தானே பார்க்கிறார்கள்?! யாருக்காக அய்யா?!... இன்னமும் இந்த அரசியல்? "(தமிழ்/தனி) ஈழம் கனவு, இனியும் வேண்டுமா?!" என்ற என் தலையங்கம் தான் (மீண்டும்)நினைவுக்கு வந்தது.
  • பெருசு/பழசு என்று முதியோர்களை ஒதுக்கி "முதியோர் இல்லங்களை" வளர்த்துவிட்ட இந்த சமுதாயத்தில்; ஒரு முதியோர்-கூட்டத்தை வைத்துக்கொண்டு படத்தின் கருவை நகர்த்தி இருப்பது; அதிலும், அதில் விஜய் போன்ற நடிகர் நடித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. சபாஷ்!
  • "டைட்டில்"எழுத்துக்கள் ஓடும் போது, பின்னணியில் வரும் நிழற்படங்களும்; சிறு-"அனிமேஷன்"களும் படத்தின் கருவோடு சம்பந்தப்பட்டவை! முன்பே, கதையைப் பற்றி சிறிது தெரிந்திருந்ததால் தான் என்னால், அதை இரசிக்க முடிந்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், இதுவரை எவரும் அது பற்றி சொல்லவில்லை; கவனிக்கவில்லையோ என்று கூட தோன்றியது! என்பதால், அதை இனிமேல் படம் பார்க்கும் பலரும் இரசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இதை சொல்கிறேன்.
  • சிறைச்சாலையில் இருந்து விஜய் தப்பிக்கும் அந்த முதற்காட்சியில் "ஒரு லாஜிக்கே... இல்லையேப்பா!" என்று நாம் யோசிக்க சிறிது அவகாசம் கொடுத்து; அதை நாம் மேலும் சிந்திக்கும் முன்னர் அதை "உடைத்திருப்பது" பாராட்டப்படவேண்டிய ஒன்று! படத்தில் இது போல் பல காட்சிகள்.... "லாஜிக்" இல்லாமல் இருக்கறதே?! என்று நாம் யோசிப்பதை இயக்குனரும் யோசித்து அதை காட்சிகளால் விளக்கி இருப்பது அருமை. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு காட்சி: ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று விஜயை பேட்டி எடுப்பது போல் வரும் காட்சி.
  • கம்யூனிசத்தை ஒரேயொரு இட்லியை உதாரணம் கொண்டு விவரித்து இருப்பது சிறப்பு! படத்தில், ஆங்காங்கே, இதுபோல் பல கூறிய-வசனங்கள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல... "நம்மள பட்டினி போட்டவங்களுக்கு; நாம சோறு போடணும்!"; "தற்கொலை செய்துகொள்வது என் மதத்திற்கு எதிரானது; ஆனால், ஒரு ஏழைக்கு துணை போகணும்ங்கற (சரியான வசனம் நினைவில் இல்லை!) செயலை முன்னிறுத்தி இதை செய்கிறேன்!" போன்ற வசனங்கள்.
  • இறந்தவர்களை ஒவ்வொருவராய் பார்த்துவிட்டு; ஒரு முகம்மதியர் சடலத்தின் அருகே அமர்ந்து விஜய் அழும் காட்சி, அருமை! இதற்கு முன் "துள்ளாத மனமும் துள்ளும்" என்ற படத்தில் விஜய் அழுவது எனக்கு பிடித்திருந்த ஒன்று. "அழுவது போல் நடிப்பது" மிகவும் கடினமான ஒன்று! விஜய்யின் நடிப்பு திறன் அதிகரித்து இருப்பதாய் எனக்கு தோன்றியது. "ஸ்டீரியோ டைப்"விஜய் நடிப்பைப் பார்த்து; வெறுப்பானவர்களில் நானும் ஒருவன் என்பதால், இதை அழுந்த சொல்ல நினைக்கிறேன்! விஜயின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது; ஆனால், இன்னும் நெடும்தூரம் போகவேண்டும்!
  • விஜயின் நண்பராய் வரும் சதீஷ் பல இடங்களில் "சபாஷ்" வாங்குகிறார். குறிப்பாய் "I love him"னு; சமந்தா சொன்னதும்; என்னடா?! இது??!! இந்த பொண்ணு, லூசு மாதிரி சொல்லுதேன்னு நாம யோசிச்சுக்கிட்டே... அதிகமா கடுப்பாகறதுக்குள்ள; சதீஷை வைத்து அந்த காட்சியை - குறிப்பாய்... அந்த வசனத்தை நியாப்படுத்தி இருப்பது பாராட்டுக்கு உரியது.
  • சமந்தா அணிந்துவரும் "ச்சுடிதார்கள்" அனைத்தும்; மிக-எளிமையாய்; அதே சமயம் "மிக அழகாய் (அவர் உட்பட!)" காட்டுகிறது. ஆனாலும் "ராஜா ராணி"பட பார்வையில் சொன்னது போல், இவருக்கும் குட்டைப்பாவாடை (என்னளவில்)பொருத்தமாய் இல்லை!
  • சில சண்டைக்காட்சிகள் இரசிக்கும் வண்ணம் இருக்கின்றன. ஆனால், கீழே சொல்லி இருப்பது போல், பல அவலங்களும் உள்ளன.
  • படத்தின்-கரு பெரும் பாராட்டுதலுக்கு உரியது! பன்னாட்டு நிறுவனங்களால், அழிந்து வரும் விவசாய நிலங்கள் பற்றிய விழிப்புணர்வை அருமையாய் விளக்கி இருக்கிறது. அதிலும், கதாநாயகன் முதுகலை "நீரியல் (Hydrology)" படித்திருப்பதாய் காட்டி இருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று! ஏனெனில், இப்போது வரும் பல படங்களில் பல கதாநாயகர்கள் என்ன "வேலை" செய்கிறார்கள் என்றே காட்டுவதில்லை. ஆனால், தண்ணி அடிக்க; தம் அடிக்க; மற்றும் பலதுக்கும் சர்வ-சாதரணமாய் அவர்களிடம் பணம் இருக்கும்! இங்கே அதற்கு விதிவிலக்கு.
  • அதேபோல், இன்னமும் பலராலும் உணரப்படாத "தண்ணீர்"வறட்சியை சாட்டையால் அடித்தது போல் சொல்ல முயன்றிருக்கும் விதம் வெகுவாய் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
  • பெரும்பாலும், இம்மாதிரியான கதைக்களங்கள் கொண்ட படங்கள்; பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும். அப்படி ஏதும் இல்லாமல் (சம்பளம் பற்றி நான் குறிப்பிடவில்லை!!!), மிக-எளிமையாய் படம் எடுக்கப்பட்டு இருப்பதும் சிறப்பு! ஒரு பாடலில் சில செட்டிங்கள், செலவு கண்டிருக்கும். ஆனால், அந்த "கிதார்"உட்பட அந்த செட்டிங்குகள் அனைத்தும் அருமை.
  • போராட்டம் முடிந்து விஜய் நெடிய-வசனம் பேசும்போது பின்னணி இசை ஏதும் அறவே இன்றி காட்சி படுத்தி இருப்பது, மிகவும் அருமை! குறிப்பாய், நம் ஊரில் இரசிகர்களின் விசில்-சத்தத்திற்கு இடையில் வசனங்கள் நன்றாக கேட்கும்.
  • "இம்மாதிரி படத்தில் சொல்லிவிட்டால்" ஆயிற்றா? என்று பலரும் வாதிடலாம்! நாம் ஒப்புக்கொண்டாலும்/ ஒப்புக்கொள்ளா விட்டாலும் திரைப்படம் என்பது ஒரு வலிமை-மிகுந்த ஆயுதம். பல்வேறு தரப்பினரும், "சூரியூர் போராட்டம் போல்" களத்தில் நின்று இதுசார்ந்து போராடுவதை யாரும் மறுக்கவில்லை; மறுக்க முடியாது! அவர்களுக்கான, ஆதரவாய் இதை எடுத்துகொள்வோம். இம்மாதிரி பல தரப்பினரும், களத்தில் பனி செய்துகொண்டிருப்பினும்; இந்த திரைப்படம் தான் அதை பெருமளவிற்கு வெளியுலகிற்கு கொண்டு வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இப்போது, நம்மில் பலருக்கும் இது தெரிந்திருக்கிறது! இப்போது, நாம் என்ன செய்யப்போகிறோம்?! என்று நம்மை நாமே கேள்வி கேட்பது தான் புத்திசாலித்தனம். நம்மிடம் கொண்டு வந்து சேர்த்ததே, அவர்களின் மிகப்பெரிய கடன் என்பதாய் தான் நாம் உணரவேண்டும். 
   
         படத்தில், வழக்கம் போல், பல படங்களிலும் வருவது போல் சில அபத்தங்களும்/லாஜிக்-மீறல்களும் {உதாரணம்: சர்வசாதாரணமாய் ஒரு நீதிபதியை மிரட்டுவது!} இருப்பினும்; சிலவற்றை கண்டிப்பாய் மாற்றவேண்டும் என்ற ஆதங்கத்தில் இங்கே பட்டியல் இட்டுள்ளேன்!
  • முதலில், எதற்கு இரட்டை வேதங்கள் என்பது இன்னமும் எனக்கு விளங்கவே இல்லை! ஒரு வேடத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அந்த வேடத்தை நீக்கி இருந்தால், சில மணித்துளிகள் குறைந்திருக்கும். அது, படத்தை இன்னமும் கருத்தை மையப்படுத்தி/முதன்மை படுத்தி சொல்ல பயன்பட்டிருக்கும். அது, ஒரு சருக்கல்! 
  • நான் "துப்பாக்கி"படத்திலேயே சொன்னது போல், கதையின் நாயகியாய் வருபவருக்கு போதுமான அளவிற்கு காட்சி அமைப்புகள் இல்லை எனில்; அந்த படத்திற்கு கதாநாயகியே தேவை இல்லை! என்ற என் கூற்றில் (இன்னமும்)எந்த மாற்றமும் இல்லை! இந்த படத்திலும் சமந்தாவிற்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை எனினும், பல படங்களிலும் வருவது போல் (ஒரு சில பாடல்கள் தவிர!)அவரை "சதைப்பிண்டமாய்(மட்டும்)" காண்பிக்கவில்லை என்பது ஆறுதல். "ராஜா-ராணி" திரைப்படத்தில் 2 கதாநாயகிகள் இருந்தும்; அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அந்த அளவில் இல்லை எனினும், ஓரளவிற்காவது; வாய்ப்பு இருக்கவேண்டும். இல்லையேல்... கதாநாயகியே தேவை இல்லை என்பது என் பார்வை.
  • இம்மாதிரி வலுக்கட்டாயமாய், கதாநாயகியை ஒரு படத்தில் திணிக்கும் போது, வேறு வழியே இல்லாமல்; பாடல் காட்சிகள் திணிக்கப்படுகின்றன. சாதரணமாகவே, அம்மாதிரியான பாடல்கள் நம்மை வெறுப்பேற்றும்! அதிலும், இம்மாதிரியான ஒரு கதைக்களத்தில் "கதாநாயகன்" சமுதாய நோக்கில் "குழாயில்"அடைந்து போராட்டம் செய்யும் போது "ரிங்கை(மோதிரம்) மாற்றிக்கொண்டு; engaged என்ற வார்த்தையை கொண்டு" ஒரு அபத்தமான வசனம் வைப்பதே எரிச்சலான விசயம்! அதிலும், அங்கே ஒரு பாடலை வைப்பது எரிச்சலிலும், எரிச்சல்.
  • போராட்டத்தின் போது, அந்த சமந்தாப் பொண்ணு "சமத்தா" கதாநாயகன் கூடவே சுத்துது! ஒரு வசனம் இல்லை!! "ஒரு நோட்டீஸ்"கூட யாருக்கும் கொடுக்கலை!! இப்படி பல காட்சிகள்... கடைசில டைரக்டருக்கே போரடிச்சு ஒரு சீன்ல "சென்னையில, மொத்தம் எத்தனை ஏரி இருக்குது?!"ன்னு கேட்டு ஒரு-வசனம் பேச வச்சுட்டாரு போல?! ஆனால், எல்லா சீன்லயும் "நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு" கூடவே சுத்துது!! ;)
  • ஆ... ஊன்னா... விஜய் "ப்ளூ பிரிண்ட்" கேக்கறாரு! உடனே, அதுவும் வந்துடுது!! அவரு, ச்சும்மா அனாவசியமா "அனிமேஷன்" உதவியோட "பூமியைப் பிளந்து"சென்று பார்த்துடுவாரு! "கவுண்டர் ஸ்டையிலுல; அடேங்கப்பா! ரீலு அர்ந்து போயிடாதாப்பா!!"ன்னு தான் கேட்கணும்.
  • அவன "செதில், செதிலா வெட்டனம்!"ங்கறது பல படத்துலயும் வர்ற ஒரு வசனம்! அடப்பாவிகளா! மனுசனுக்கு மீனு மாதிரி செதிலாவா? இருக்குன்னு கேட்கனும்னு தோணுது! ஆனால், யாருக்கிட்ட கேட்பதென்று தான் தெரியவில்லை! 
  • மக்களே! தயவு செஞ்சு "எட்டி உதைத்ததும்"ஒருவர் பறந்து போற மாதிரி சீன்களை இனிமே வைக்காதீங்கய்யா! உங்களுக்கு புண்ணியமா போகும்! ஒன்னும் வேணாம்யா... ஒரு 25-கிலோ (எடைக்)கல்லை, "யாராவது"ஒரு ஹீரோவை எட்டி உதைச்சு பறக்க வைக்க சொல்லிட்டு; அசால்டா நிக்க சொல்லுங்க பார்ப்போம்! நல்ல பாடி-பில்டிங் உள்ளவங்களுக்கே கஷ்டம் அய்யா! என்ன தான் "அவங்க துணை நடிகர்கள்"னாலும் இப்படியாய்யா பந்தாடுவீங்க?! தயவு செஞ்சு இனிமேலயாவது நிறுத்துங்கப்பா!!! 
  • பின்னணி இசை பல இடங்களில் நெருட வைக்கிறது. அனிருத் இன்னமும் "விஜய் படத்திற்கு" இசை அமைக்கும் வாய்ப்பு-அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை போலும்! பெரும்பாலும், பின்னணியில் பாடல்-வரிகளே இசையாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சில சண்டைக் காட்சிகள் போன்று சில இடங்களில் இரசிக்கும் வண்ணம் இருப்பினும், பல இடங்களில் நெருடல்கள் தான்!
  • உணர்ச்சி பொங்கி பேசும் பல காட்சிகள் "விஜய்யின்; வழக்கமான - அதிகப்படியான - உடல்மொழி"யால் எரிச்சல் தருவது மட்டுமன்றி; அந்த காட்சிகளின் அழுத்தத்தை குறைத்து விடுகிறது! இதை விஜய்யை காணும் வாய்ப்பு இருக்கும் யாரும் அவருக்கு எடுத்துக் கூறினால், நமக்கு "நடிப்பில் சிறந்த"இன்னுமோர் நடிகர் கிடைப்பார்! என்பது என் நம்பிக்கை.

என்-எண்ணம்: படத்தின் கரு/சமுதாயப்-பார்வை/விஜய்யின் வித்தியாசப் படம் - இப்படி ஏதேனும் ஒரு அடிப்படையிலாவது; ஒவ்வொருவரும் ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் பார்ப்பது அவரவரின் விருப்பம்; ஆனால், கண்டிப்பாக ஒருமுறையேனும், அதிலும் (பார்க்கும் வாய்ப்பிருப்போர்) திரையங்கில் பார்க்கவேண்டும்! 

செவ்வாய், அக்டோபர் 21, 2014

தீப-ஒளியும் என் வாழ்த்து-ஒலியும்...


மறிக்கும் திரியின் "ஒளி"யின்,
முடிவில்; பிறந்திடும் "ஒலி"யில்,
மலர்வதாம் மனமகிழ் தீபாவளி!
மலரட்டும் உங்கள் இ(தய/ல்ல)த்தில்;
அருள்-தீப ஒளி!!

உடையில் மட்டுமேன் புதியது?
உளத்திலும் கூடட்டுமே! எங்கும்
உறவுகள் பலப்படட்டுமே!! ஆங்கே
உண்மை உயிர்த்தெழட்டும்! அதுவே
குறள்-தீப ஒளி!!

பண்டங்கள் தொண்டை தாண்டிடின்
பல்சுவையும் அழிந்திடும்! ஆயின்,
பண்புகள் அண்டை சேர்ந்திடின்;
பல்வளமும் பொழிந்திடும்!! சேரட்டும்
சீர்-தீப ஒளி!!

குணத்தூய்மை பெருகி, "ஒலி-மாசு"
குறையட்டும்! பண்டிகை ஆட்டத்தில்
கொண்டோர் இலாதோரை சேர்ப்பதே;
"கொண்டு-ஆட்டம்" ஆகும்! பெருகட்டும்
சேர்-தீப ஒளி!!

பட்டாசு புகை குறைந்து;
பயனுள்ள "(ஓசோன்)படலம்" வாழட்டும்!
பங்காளிகள் ஒன்றுடன் கூடியே;
பயனற்ற "(வறட்டு)பகை" அழியட்டும்!!
வள(ர்)-தீப ஒளி!!

        - விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
                 {www.vizhiyappan.blogspot.com}

ஞாயிறு, அக்டோபர் 12, 2014

தங்க குங்குமச் சிமிழ்



      சில வாரங்களுக்கு முன், என்னவள் தங்கத்தில் குங்குமச் சிமிழ் ஒன்று வேண்டும் என்றாள்.  அதுவரை, தங்கத்தில் குங்குமச் சிமிழ் இருக்கும் என்றோ; அதுபற்றிய அறிதலோ எனக்கில்லை. இரண்டு வாரங்களுக்கு முன் என்னைக் காண இங்கே வந்திருந்த நட்பு ஒருவருடன் துபாயில் தங்க  ஆபரணக் கடைகள் பெருமளவில் இருக்கும் "Gold Souq" என்ற பகுதிக்கு சென்றிருந்தேன். அவரும், தங்க நகைகள் வாங்கவேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தார். ஒரு கடையில் முதன்முதலாய் தங்கத்தில் குங்குமச் சிமிழைப் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர், இந்தியாவில் இருக்கும் என்னவளிடம் "வாட்ஸ்ஆப்"பில் அதை புகைப்படமாய் அனுப்பி அவளின் ஒப்பம் கேட்டேன். அவளும், பிடித்திருக்கிறது என்றாள். உடனே, வாங்கி என் நண்பரிடம் கொடுத்தனுப்ப திட்டமிட்டேன். ஆயினும், இன்னும் வேறு இடங்களில் பார்க்கலாம் என்று உள்ளெண்ணம் கூறிற்று. மீண்டும் சென்ற வாரம் "Bur Dubai" என்ற இடத்திற்கு சென்று வேறு சில இடங்களில் பார்த்தேன். 

     என்ன ஒரு ஆச்சர்யம்? மிக அற்புதமான ஒரு சிமிழைக் கண்டேன். உடனே, வாங்கியும் விட்டேன்; அதுதான், மேலுள்ள படத்தில் இருப்பது. இதற்கு முன் எத்தனையோ தங்க நகைகள்/ஆபரணங்கள் வாங்கி இருப்பினும், எனக்கு இன்றுவரை தங்கத்தின் மீது எந்த பற்றுதலும் இல்லை. ஆனால், இந்த குங்குமச் சிமிழை வாங்கியபோது ஒரு பேரானந்தம் பொங்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாய் காலை/மாலை இருவேளையும் குளித்தவுடன் நான் குங்குமம் வைக்கத் தவறியதே இல்லை (குளிக்காத ஒரு சில நாட்கள் தவிர!). இதேமாதிரி அமைப்பில்; துருப்பிடிக்காத-இரும்பில் செய்யப்பட்ட சிமிழ் ஒன்று என்னிடம் பல ஆண்டுகள் இருந்தது. அந்த நினைவுதான் அப்படி என்னை பேரானந்தப்பட செய்தது என்று பின்னால் புரிந்தது. இதை என் தற்பெருமைக்காய் இங்கே எழுதவில்லை. என் குடும்பத்திற்கு நான் செய்யவேண்டிய கடமையில், தற்பெருமைக்கு என்ன வேலை?! இது ஒருவகை சேமிப்பே எனினும், நான் சேமிப்பாகவும் நான் கருதவில்லை! இந்த குங்குமச் சிமிழை வாங்கியதில்...

என்குடும்பத்திற்காய் வாங்கினேன் என்ற நெகிழ்வு தவிர வேறொன்றுமில்லை!!!

பின்குறிப்பு: முதலில் சென்றபோதும், அடுத்த முறை சென்றபோதும் - தன்னுடைய பொன்னான நேரத்தை எனக்காய் செலவிட்ட நண்பர் திரு. பிரசாந்த் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

டெல்லி சம்பவம் உணர்த்துவது...



      சமீபத்தில் டெல்லியில் இருக்கும் உயிரியல் பூங்காவில் இளைஞர் ஒருவர் துரதிஷ்டவசமாய் புலியால் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த காணொளியை மீண்டும், மீண்டும் பார்த்து, பலரையும் போல் என்மனமும் மிகவும் வேதனை அடைந்தது. என்னுடைய ஆதங்கத்தை கேள்விகளாய் என் முக-நூல் அண்ணாச்சி திரு. பத்ரசாமி சின்னசாமி அவர்களிடம் கேட்டிருந்தேன். வன-அதிகாரி என்ற வகையில் அவருடைய அனுபவித்ததை பதில்களாய் கொடுத்ததை இந்த இணைப்பில் காணலாம். என்னளவில், அங்கே கூடியிருந்தவர்கள் தங்களின் உணர்ச்சியை கொஞ்சம் அடக்கி, சிறிது யோசித்திருந்தால்  அந்த இளைஞரை காப்பாற்றி இருக்கலாம் என்றே தோன்றியது. இறந்தது, எவரோ என்று எளிதாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், என்னுடைய ஆற்றாமையை "அடச்சே! ஒரு மிருகத்திடம் அத்தனை பேரும் தோற்று உள்ளார்களே?!" அப்புறம் என்ன "நாம் நம் சக மனிதர்களிடம் வீராப்பு" காட்டுவது?! அடப்போங்கடா! மனுஷப்பசங்களா!! என்று வெளிப்படுத்தி இருந்தேன். 

    ஒருநாள் என் தம்பி திரு. வினோத் முருகன் "வாட்ஸ்ஆப்"பில் தடய-அறிவியல் துறையின் விளக்கத்துடன் கூடிய மேலுள்ள புகைப்படத்தை பகிர்ந்தான். என்போன்ற பலரும் எண்ணியிருந்தது போல், கற்களால் அடித்ததால் "தனக்கு ஏற்பட்ட" பயத்தால் புலி அந்த இளைஞரை கவ்வி செல்லவில்லையாம்! அந்த கற்களால், அந்த இளைஞருக்கு ஆபத்து என்று எண்ணி, பயந்துதான் கவ்வி சென்றதாம். தன் குட்டியையே அப்படி கவ்வி எடுத்து செல்வதுதான் புலியின் இயல்பு. ஆனால், "மனிதனின் சதை தன்னினத்தை போலில்லை; அதனால், கவ்வுதல் அவனைக் கொன்றுவிடும்"! என்று பாவம் அந்த புலிக்கு தெரியவில்லை. அந்த புலியின் நல்லெண்ணம், இறுதியில் அந்த இளைஞனின் உயிரைக் காவு கொடுத்துவிட்டது! என்னுடைய ஆற்றாமை இன்னும் அதிகமானது. அதன் விளைவாய் இன்னொரு பதிவில் இரண்டு குறிப்புகளை கொடுத்தேன்: 1. மனிதர்களுள் பல மிருகங்கள் உள்ளன! 2. மிருகங்களில் சில மனித(ர்கள்/ம்) இருக்கி(றார்கள்/றது) - என்பவையே அவை. சாமான்யர்கள் நமக்கு...

இம்மாதிரியான விலங்குகளின் அடிப்படை குணாதிசயங்களை அறிதல் - மிகமுக்கியம்!!!

வேறு இனத்தவர் யாருமே இல்லையா???




       சென்ற வாரம் ஓர்நாள் "யான்" என்ற தமிழ் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு இளைஞி "கலாச்சாரம்" என்று பலரும் சொல்வதை மீறும் ஒரு விசயத்தை செய்தால் என்ன? என்று தன் தோழியோடு விவாதிப்பது போல் ஒரு காட்சி. அருகில் ஒரு மூத்த தம்பதியரை காண்பித்து, அதில் கணவர் "கலி முத்திடுச்சு... ஷிவ, ஷிவா!" என்று சொல்வதைப்போல் ஒரு காட்சி வரும். இதுபோன்று, முன்பே வேறு சில படங்களிலும் ஒருவர் பேசுவது போல் வந்திருக்கிறது.  


     அது என்ன? இம்மாதிரியான காட்சிகளின் போது "ஒரு குறிப்பிட்ட இன"தம்பதியரை சித்தரித்து, அவர்கள் பேச்சு-மொழியிலேயே வசனங்கள் அமைப்பது? என்ன சொல்ல வருகிறார்கள்? ஆற்றாமையால் என்னுள் எழுந்த கேள்விகள் கீழ்வருவன:  
  1. இம்மாதிரி, கலாச்சார காப்பாற்றுதலை அந்த "இன"த்தவர் மட்டும்தான் கடைபிடிக்கின்றனர்! என்று சொல்ல வருகின்றனரா?
  2. அல்லது, அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான் கலாச்சார-மாற்றத்திற்கு இடையூராய் இருகின்றனர்! என்று சொல்ல வருகின்றனரா?  
   நன்றாய் கவனியுங்கள். அந்த தம்பதியர், பின்னர் "ஒரேயொரு"காட்சியில் கூட எந்த திரைப்படத்திலும் இடம் பெற மாட்டனர். பின்னர், ஏன் அந்த தம்பதியர் "இந்த இனத்தவர்" என்று "அழுந்த"சொல்ல வேண்டும்? யாரென்று-கூட தெரியாமல் "வெறும் ஒலி"வடிவில் (அல்லது எழுத்து வடிவில்) கூட அந்த வசனத்தை இடம் பெற செய்யலாமே??

பெருந்தகையின் "பஞ்ச்"



எனக்கு தெரிந்து திருவள்ளுவர் போல் இத்தனை "பஞ்ச்"களை ஈரடியில் சொல்லிட்டவர் இதுவரை யாரும் இல்லை... இனி(யும்) வரப்போவதில்லை!!!

"ஒலி"யால் உணர்த்திய சொல்லும்/செயலும்...



    "ஜீவா" என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் "ஒவ்வொன்றாய் திருடுகிறாய்" என்ற பாடலில் என்னென்ன திருட்டு என்று சில பட்டியல்கள் வரும். பாடலின் இறுதியில் "ஒரு பட்டியலை" மீண்டும் சொல்லும்போது...

    "மூன்றாவது" என்று சொல்லிவிட்டு ஓரிரு நிமிடத்துளிகள் இடைவெளியில் ஒரு "ஒலி"மட்டும் கேட்கும். அதைக் கேட்டு வியந்திருக்கிறீர்களா?! அந்த வார்த்தையை அப்படியே சொல்லாய் சொல்லாமல்; அந்த செய்கை(யி/யா)ல் விளையும் சத்தத்தை மட்டும் "ஒலி"யாய் கொடுத்திருப்பது மிகப்பிரம்மாதம்.

- அதிலும், அந்த "ஒலி"யே ஒரு "தனிச்சுவை"!!!

"இரட்டை" அர்த்த பாடல்கள்...




         நாடோடி-வம்சம் என்ற தமிழ் படத்தில் "குத்த வரவா? குத்த வரவா??" என்றொரு பாடல் வருகிறது. கேட்டவுடன் அதிலுள்ள "இரட்டை"அர்த்தம் அனைவருக்கும் தெரியும். அநேகமாய், இந்நேரம் அந்த பாடல் இரவுநேரப் பேருந்துகள் நிற்கும் "மோட்டல்"களில் அதிக சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருக்கும். இதை எவர் தவறென்று சுட்டிக்காட்டி தட்டி கேட்பது?!

      இம்மாதிரி பாடல்கள் "இரண்டு மாதிரியாய்" இருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் என்னை, "ஒரு மாதிரியாய்" பார்க்கிறார்கள்.  ஹா... ஹா... ஹா...

ம்ம்ம்... என்ன சொல்வது?!

"யான்" யா எப்போதும் மும்பை???



"யான்" தமிழ் திரைப்படமும் இப்போது மும்பையை-அடிப்படையாய் கொண்ட தமிழ்ப்பட பட்டியலில்! அது என்னாங்கய்யா? டான்/ரெளடி கேரக்டர்னா; உடனே மும்பை?! தீவிரவாதம்/தேசத்துரோக செயல்கள் என்றால்; உடனே மும்பை??!! 


தெரியாமல் தான் கேட்கிறேன்! நம் ஊரில் டான்/ரெளடி(யே) இல்லையா? இல்லை, அவர்களை எல்லாம் டான்/ரெளடி என்று ஒப்புக்கொள்வதில்லையா?? நம் ஊரில் எல்லாம் தீவிரவாத/தேசத்துரோக செயல்கள் நடைபெறவே இல்லையா (சிறிய அளவில்தான் என்றாலும் கூட!)??? 

உங்களால், மும்பை மேல் ஒரு நல்ல எண்ணம் எங்களுக்கு வர மறுக்கிறதய்யா! என்றுதான் இவைகளை எல்லாம் நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள்??!!

ஞாயிறு, செப்டம்பர் 21, 2014

தமிழ்(தனி)-ஈழமும்; வேற்று-நாட்டு "நாட்டுரிமையும்...



    இரண்டு வாரங்களுக்கு முன், நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்தபோது, சமீபத்தில் "சானியா மிர்சா" அமெரிக்க-ஓபன் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் வென்ற பேச்சு வந்தது. ஒருவர், சானியாவை நாங்கள் இந்தியராய் ஏற்பதில்லை என்றார். நான், தெலுங்கான விவகாரத்தில் சானியாவைப் பற்றிய சர்ச்சைகள் வந்தபோது, ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுப்பிய அருமையான கேள்வியை நினைவு கூர்ந்தேன்: "பாகிஸ்தானியரை மணந்த சானியா பாகிஸ்தானி என்றால்; இந்தியரை மணந்த சோனியா யார்?" என்பதே அது. எனக்கு மிகவும் பிடித்த பின்னூட்ட-கேள்வி அது; பின்னர், சிறிது நேரம் சானியா இந்தியரா? இல்லையா? என்பதான விவாதம் இருந்தது. அப்போது தான் எனக்கு ஒரு பொறி தட்டியது: சானியா/சோனியா போன்ற பிரபலங்களைப் பற்றி-மட்டுமே கேள்வி கேட்கும் நாம், பல நாடுகளிலும் "இந்திய பாஸ்போர்டை" சரணடைத்துவிட்டு வேற்று-நாட்டு நாட்டுரிமை பெற்றிருக்கும் இந்தியர்களை ஏன் கேள்வியே கேட்பதில்லை? என்பதே அது.

    சானியா/சோனியா இருவரும் இந்தியாவுக்காக அலுவல்-ரீதியாய் வேலை செய்துகொண்டு இருப்பவர்கள். அவர்களையே கேள்வி கேட்கும் நாம், நம் நாட்டுரிமையை "விருப்புடனே" இழந்த சாமான்யர்களை ஏன் எதுவும் கேட்பதில்லை? அவர்கள் இந்தியாவுக்காக எதையும் செய்வதில்லை; மாறாய், இந்தியாவைப் பற்றி தாழ்வான எண்ணமே அவர்களில் பலருக்கும் இருக்கிறது. இதைப்பற்றி யோசித்து கொண்டிருந்த போது தான், "தமிழ்(தனி) ஈழத்துக்கும்" இம்மாதிரி வேற்று-நாட்டு நாட்டுரிமை பெற்றவர்களுக்கும்; ஒரு ஒற்றுமை இருப்பதை பார்க்க முடிந்தது. மேலும், வருங்காலத்தில் இவர்களும் "தமிழ்(தனி) ஈழம்"போல் ஒரு பிரிவினைவாதத்தை எதிர்கொள்ளவேண்டிய ஆபத்தும்; நிர்ப்பந்தமும் வரக்கூடும் என்பதை உணர முடிந்தது. உடனே, இது பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால், அதுபற்றி என்னுள் ஆழ யோசிக்க ஆரம்பித்தேன்; சரியாய் புரிந்து கொள்ளப்படவில்லை எனின், அது நகைப்புள்ளாகி என் கருத்து நிராகரிக்கப்பட்டு விடும் என்ற ஐயம் இருந்தது. 

         பின்னர், இரண்டு வாரங்கள் வரை என்னுள் யோசித்தவாறே இருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன், ஃபேஸ்புக்கில் இரு நண்பர்களின் கருத்து விவாதத்தில் "என் முன்னோர் பிறந்த ஊரில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லையா... Person of Indian Origin (PIO) என்று இங்கு கொடுத்தனரே... அது ஏனோ? இங்கு இருப்பவர்கள் 100. 150 ஆண்டு முன்பு கூலி வேலைக்கு அங்கிருந்து தானே வந்தோம்...// நாங்கள் ஒன்றும் ஈழத்தமிழர்கள் போல் சிங்கை மண்ணின் சொந்தக்காரகள் என்ற கூறவில்லையே..." என்று கேட்டிருந்தார். அந்த விவாதங்களை இந்த இணைப்பில் காணலாம். உடனே, என்னை நானே சபாஷ் என்று தட்டிக்கொடுத்துக் கொண்டேன். இப்படி, ஒருவர் கோபமாய் கேள்வி கேட்கிறார் எனில், இது போன்ற சூழலை அவரும்/அவர் போன்ற பலரும் சந்திக்கின்றனர் என்று உறுதியாயிற்று. நானும் ஒரு 100/150 ஆண்டுகள் கழித்து நடக்கக்கூடிய ஒன்றைத்தான் என்னுடைய தொலைநோக்கு பார்வையில் பார்த்தேன்; என்னுடைய பார்வை சரியென்றே தோன்றியது.

     அதற்கு முன், அந்த நண்பருக்கு(மற்றும் அவர் போன்றோருக்கும்) PIO என்பதைப் பற்றி தெளிவு வேண்டி இப்படி பின்னூட்டம் இட்டேன்: "PIO-வை இங்கே குறிப்பிடுவது சரியான வாதமாய் தெரியவில்லை. அது "விசா" இல்லாமல், இந்தியாவுக்கு வருவதற்கான வசதி (இன்னும் சில வசதிகளுடன்). மற்றபடி, அதை வைத்துக்கொண்டு எந்த அரசு சார்ந்த அலுவல்களும் (வேலை, படிப்பு போன்றவை) செய்ய இயலாது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். மேலும், இன்று ஈழத்தமிழர்கள் போல் அப்படி கேட்கும் நிலையில்லை! ஆனால், எதிர்காலத்தில் அப்படி கேட்பதற்கான நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது" என்றேன். அவர் என்னுடைய கருத்தை சரியாய் புரிந்துகொள்ளவில்லை என்பது புரிந்தது. எங்கள் வாதங்களை, மேலுள்ள இணைப்பில் படிக்கலாம். அவர், நானும் அங்கே சென்று தெருக்களை கூட்டாமல் இருந்தாலே சாலச் சிறந்தது என்று கூறியிருந்தார். என்னைப்பற்றி, என் பார்வையை பற்றி தெரியாமல் அவர் சொன்ன கூற்று அது.

         நானும், வெளிநாட்டில் வேலை செய்பவன் தான் - கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல். ஆனால், என்னுடைய நாட்டுரிமையை "வேறு நாடு கொடுக்கும், எந்த சலுகைக்காகவும்" நான் மாற்ற முயன்றதே இல்லை; அப்படி ஒரு சந்தர்ப்பம் நேரவும் நான் அனுமதிக்கவில்லை. பாஸ்போர்ட் என்பது ஒருவர் இந்த நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான "உச்சபட்ச"சான்று. அது ஒருவரின் "ஆதியும்; அடையாளமும்!" அதை அழிக்க ஒருவரால் எப்படி முடிகிறது? சரி, அப்படி செய்வது உங்களுக்கு சரி என்றே இருக்கட்டும்; அதன் பின்னர், ஏன் உங்கள் பூர்விகம் பற்றிய ஒரு உறவும்/உரிமையும் வருகிறது? அருள்கூர்ந்து, என் கேள்வியை தவறாய் புரிந்து கொள்ளாதீர்கள்! உங்களின் "இரட்டை நிலையை" எடுத்துரைக்கவே இதைக் கேட்கிறேன். உங்கள் குழந்தைக்கு "முடி காணிக்கை" செலுத்த இந்தியாவில் உள்ள உங்கள் குல-கோவிலுக்கு செல்வது முதற்கொண்டு எல்லா செயல்களும் செய்யவும் ஆசைப்படுகிறீர்கள். ஆனால், நீங்கள் வேற்று-நாட்டு நாட்டுரிமை வைத்திருக்கிறீர்.

       ஏன், அங்கும் கோவில்கள் இருக்கின்றனவே? அங்கேயே செய்யலாமே! உண்மையில், நீங்கள் அந்த நாட்டிற்காவது உண்மையாய் இருக்க முயன்று, அவர்களைப் போல் அனைத்திலும் இருக்க முயலவேண்டும். PIO என்ற ஒன்றை உங்கள் குழந்தைகளுக்காக வாங்கவே கூடாது; இது, நீங்கள் இரண்டும்-கெட்டானாய் இருப்பது மட்டுமல்லாமால், அடுத்த தலைமுறையையும் "இரண்டும்-கெட்டானாய்" ஆக்கும் செயல். அதனால் தான் "Be a Roman, when you are in Rome" என்று சொல்லப்பட்டது. நாட்டுரிமையையே மாற்றத் துணிந்த நீங்கள் அந்தந்த நாட்டு "மத"த்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு/மொழி இரண்டும் அறுபட்டுவிட்டது; பின்னர், ஏன் மதம் மட்டும் வேண்டும்? அதையும், மாற்றி விட்டால் நீங்கள், முடி-காணிக்கை போன்ற விசயங்களில் "ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால்" என்ற நிலைப்பாட்டோடு இருக்க மாட்டீர்கள். உண்மையில், அது உங்களின் அடுத்த தலைமுறைகளை "அந்த(ந்த) நாட்டு"கலாச்சாரத்தோடாவது இருக்க வழிவகுக்கும்.

        அதுதான், நீங்கள் அவர்களுக்கு செய்யும் பேருதவியாய் இருக்கும். இல்லையெனில், தமிழ்(தனி) ஈழம் போல் அந்தந்த நாடுகளில், ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த இந்தியர்களும் போராடக்கூடிய நிலை வரும் அபாயம் இருக்கிறது. அதுதானே, இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது? அங்கே சென்ற தமிழர்கள் அனைவரும் பலதரப்பட்ட வேலைகளுக்காய் சென்றவர்களே! இப்போது, நாமெல்லாம் இங்கே வெளிநாட்டில் இருக்கும் அதே "பணம்" எனும் அடிப்படையில் அங்கு சென்றவர்களே! அந்த சம்பளமும்; அந்த சலுகைகளும் தான் அவர்களை அங்கே நாட்டுரிமை பெறச் செய்தது. அப்படியே, அவர்களின் அடுத்த தலைமுறைகளும் அங்கே வளர ஆரம்பித்தது. விளைவு? அவர்கள் இந்தியர்கள் என்ற உரிமையை முதலில் இழந்தனர். அதனால், பிரச்சனை என்ற போது அவர்களால், இங்கே இந்தியர்களாய் வர இயலவில்லை; "அகதிகள்"என்றே வர முடிகிறது. அப்படி வந்தும், இங்கே எந்த உரிமையும் அனுபவிக்க முடியவில்லை.

    கணவன்/மனைவி/மகன்/மகள்/பெற்றோர் - இப்படி பல உறவுகளின் மேலுள்ள உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் நாம் எப்படி கொந்தளிக்கிறோம்? அதை விட பன்மடங்கு கோபம் கொந்தளிக்கும் ஒருவரின் "ஆதியும்; அடையாளமும்" மறுக்கப்படும்போது! ஒரு ரேஷன்-அட்டை/ஓட்டளிக்கும் அட்டை மறுக்கப்படும்போது நமக்கு எத்தனை கோபம் வருகிறது? அப்படியிருக்க, உச்சபட்ச அடையாளமான நாட்டுரிமையை அழித்துவிட்டு; வேறொரு-நாட்டு நாட்டுரிமை பெற்று தலைமுறைகள் கடந்து வாழ்பவர்களுக்கு, திடீரென்று அவர்கள் பெயர்ந்த-இடத்தில் (அந்த நாட்டில்) நாட்டுரிமை மறுக்கப்பட்டால்???.... என்ன நிகழும்? எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட கோபம் அங்கே கொந்தளிக்கும்? அதுதான் இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த சூழலில், அவர்கள் தம் பூர்விகமான தமிழகம்(இந்தியா) வரும்போது, இங்கே என்ன நடந்தது? (நடந்து கொண்டிருக்கிறது?). இனி, தம் பூர்வீகமே என்று எல்லாம் இழந்து வந்த நம் தமிழ்-இனங்கள்....

       விலங்குகள் போல் ஊருக்கு வெளியே அமர்த்தப்(பட்டனர்/படுகின்றனர்). அகதிகளாய் இருக்க விரும்பாத பலரும் இலங்கைக்கே சென்று அதை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டனர். சிலர், இங்கிருந்து வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இங்கே எவரை குறை கூறுவது? ஒரு நாட்டின் குடிமகனுக்கே இந்தந்த சலுகைகள் என்று எல்லா நாடுகளும், சட்ட-திட்டங்கள் வைத்துள்ளன. அதை எப்படி, நம் இனமேயாயினும் திரும்பி வரும்போது ஒரு அரசால் மாற்றியமைக்க முடியும்? இங்கே வரும் நம் இந்தியர் ஒவ்வொருவரையும் வரவேற்க; ஒவ்வொரு தனி மனிதனும் தயாராய் தான் இருக்கிறோம். ஆனால், தனி மனிதன் சமுதாயம் அல்லவே? தனி மனிதன் அரசாங்கம் அல்லவே?! இது போன்று தான் "நம் நாட்டுரிமை" இழந்து பல்வேறு நாடுகளில் இருக்கும் நம் சக-இந்தியனின் வருங்கால தலைமுறைகள் பற்றி என்னால், யோசிக்க முடிகிறது. அப்படி ஒரு நிலை வராத வரை, எவருக்கும் எந்த பாதகமும் இல்லை. வரும் சூழலும் இப்போதைக்கு இருப்பதாய் தெரியாமல் இருக்கலாம்!

         ஒருவேளை, வந்துவிட்டால்? வரக்கூடாது என்பதே நம் இனத்தார் ஒவ்வொருவரின் ஆசையும்/ஆசியும் கூட. வந்துவிட்டால்? உங்கள் அனைவரையும் நம் ஈழத்தமிழ் மக்கள் போன்றே பாவிக்கும் மனத்திடம் இல்லையே ஐயா! இப்போதே, அமெரிக்கா போன்ற நாடுகளில் "சீனக்"காரர்களை வெளியேற்றும் செயல் ஆரம்பித்தாகி விட்டது. நம் நாட்டவர்களை அப்படி செய்யும் நிலை வரும்போது, என்ன நடக்கும்? என்பதை யோசிக்கவே பயமாய் இருக்கிறது. நம் வசதிக்காய், நம் வருங்கால சந்ததிகளை இப்படி "இரண்டும் கெட்டானாய்"விட்டுவிட நமக்கென்ன உரிமை இருக்கிறது? என் ஈழத்தமிழ் நட்புகளுடன் நான் கேட்ட கேள்வி ஒன்று: இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே "கிரிக்கெட்"போட்டி நடந்தால் எவரை ஆதரிப்பீர்? என்பதே அது. எந்த தயக்கம் இன்றி அவர்கள் சொன்னது "இலங்கை"என்று தான். அவர்களுக்கு, இலங்கை தான் தம் நாடு என்பதில் எந்த தயக்கமும் இல்லை. அவர்களுக்கே, இன்னமும் தமிழ்/தனி ஈழம் என்ற பிரச்சனையில் தெளிவில்லை.

         இப்போது வேற்று-நாட்டு நாட்டுரிமை பெற்றுள்ள உங்களை அதே கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாய் இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். இது என்ன விதமான நாட்டுப்பற்று? இது இரண்டும்-கெட்டான் நிலை இல்லையா? சரி, அப்படி என்றால்... இந்த கணம் முதலாவது உங்கள் குழந்தைகளை அந்தந்த நாட்டு குடிமக்கள் போல்; மதம், மனிதம், கடவுள், கலாச்சாரம் என்ற எல்லா வற்றிலும் அந்த நாட்டு குடிமக்கள் போன்றே வளருங்கள். அதுதான், பிற்காலத்தில் அவர்களுக்கென்று ஒரு தனித்துவத்தை தரும். அப்படி இருந்தாலும், அது நிற-பேத பிரச்சனைகளை உருவாகக்கூடும். ஆனால், அது மேற்குறிப்பிட்ட அவல-நிலை/இன்னலை விட மேலானதே! இப்போதைக்கு அங்கே கிடைக்கும் சுகங்களை மட்டுமே அனுபவித்து கொண்டு உள்ளதால், என்னுடைய இந்த பார்வை, நகைப்புக்குரியதாய் இருக்கலாம். ஒன்றேயோன்றை மனதில் கொள்ளுங்கள்; இந்த கணம் உங்கள் கணவனோ/மனைவியோ இறந்துவிட்டால், உங்கள் வாழ்க்கை ஆட்டம் கண்டுவிடும்.

       மன்னிக்கவும்! எவரும் இறக்கவேண்டும் என்பது என் ஆசையல்ல; அதேபோல், இறப்பில்லாத மனிதர் எவரும் இங்கில்லை;  எவர்க்கும், எப்போதும் நிகழலாம். இல்லை, உங்கள் வேலை போய்விட்டால், உங்கள் வாழ்க்கை ஆட்டம் கண்டுவிடும். அப்படியொரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், நீங்கள் முதலில் போய்ச்சேர விரும்பும் இடம் உங்கள் "ஆதியும்; ஆதாரமுமான" நீங்கள் பிறந்த நாடே! என்பது நினைவிருக்கட்டும். அப்படி நீங்கள், ஆதரவற்று நிற்கும் போது; உங்களை உங்கள் பூர்விக நாடு விலக்கி வைத்தால் எப்படி இருக்கும்? அது தான் இலங்கை பிரச்சனையில் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன். அப்படியொரு அசம்பாவிதம் நடந்து என் சக-இந்தியன் அவதிப்படவேண்டும் என்பது என் விருப்பமல்ல. ஆனால், அப்படி நடந்துவிட்டால்; என் சக-இந்தியன் என்ன செய்வான் என்ற பயமே இது! அப்படியொறு நிலை வந்தால், இப்போது நான் "கையாலாகாதவன்"ஆய் இருப்பது போல் இன்னுமோர் தலைமுறை இங்கே இருக்குமே என்ற ஆற்றாமை.

         இப்படி நாட்டுரிமையை மாற்றும் தனி-நபர்களை விட அப்படி மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் அந்த நாடுகளின் மீது பெருத்த-கோபம் வருகிறது. கண்டிப்பாய், நம்மை வைத்து அவர்கள் வளர்ந்து கொள்ள செய்யப்படும் சூழ்ச்சி இது. இது தெரியாமல், பலருக்கும் சில நாட்டின் குடியுரிமை வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொ(ல்/ள்)வதில் கர்வம் வேறு! அவர்களின் வளர்ச்சிக்கு நாம் தேவையில்லை எனும்போது, நம்மை தூக்கி எரிய அவர்கள் ஒருகணம் கூட தயங்க மாட்டார்கள். அதிலும், அமெரிக்கா போன்ற நாடுகள் மற்ற நாடுகளுக்குள் நுழைந்து, அவர்களை கொன்று-குவித்து; வெளியேற்றவே தயங்குவதில்லை. என்னைப் பொருத்தவரை, அரேபிய நாடுகள்/மற்றும் வளைகுடா நாடுகளின் மேல் - இந்த விசயத்திலும் ஒரு பெருத்த மரியாதை வருகிறது. வேறெந்த நாட்டவரும், இம்மாதிரி நாடுகளில் நாட்டுரிமை பெறமுடியாது. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானால் இருந்துகொள்; எவ்வளவு சம்பளம் வேண்டுமோ பெற்றுகொள்; என்ன சலுகைகள் வேண்டுமோ கொடுக்கிறோம்.

      ஆனால், எங்கள் நாடுகளின் நாட்டுரிமை என்பது எவருக்கும் எந்த நிலையிலும் இல்லை என்று உண்மையாய்/நேரடியாய் கூறுகின்றனர். என் நாடு; என் உரிமை! உனக்கு என் நாட்டுரிமை எதற்கு? என்ற நேர்மை. மற்ற எல்லா விசயங்களைப் போலவும், இதிலும் உண்மையும்/நேர்மையும் இருக்கிறது. இம்மாதிரியான நாடுகளுக்கு - எங்கள் நாட்டை எப்படியாயினும் நாங்கள் காப்பாற்றிக் கொள்வோம்; அதற்காய் எவருக்கும் நாட்டுரிமை கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், மற்ற நாடுகள்? வேற்று-நாட்டு நாட்டுரிமை பெற்றுள்ள என் நண்பர்களிடம் இது பற்றி பல நேரங்களில் மேலோட்டமாய் நான் வாதிட்டதுண்டு. அவர்கள் என்னை தவறாய் புரிந்துகொண்டு; அவர்களை நான் குற்றவாளி போல் பாவிப்பதாய் எண்ணி என்னுடன் கோபத்துடன் விவாதித்து இருக்கிறார்கள். அதைத்தான், மேற்குறிப்பிட்ட என் சக-இந்தியர் ஒருவரும் செய்துள்ளார். அவர்களின் மேலுள்ள அக்கறையால் தான் நான் இங்கே இப்படி விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்த பார்வை எவரின் மனமும் புண்பட அல்ல! மாறாய், பண்படவே!!

பின்குறிப்பு: அமெரிக்காவில் கொடுக்கப்படும் "கிரீன்-கார்டு"என்பதைப் பெற சிபாரிசுக்-கடிதம் வேண்டி இதுவரை என்னை 3 நபர்கள் (2 இந்தியர்கள்; 1 சீனர்) தொடர்பு கொண்டனர். அவர்களில் ஒருவரை பரஸ்பரமும், மற்ற இருவருக்கு என்னையும்; நன்றாக தெரியும் - அதாவது, எங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை ஒருவரை ஒருவர் படிப்பதன் மூலம். கடிதத்தைக் கூட வரைவாய் எழுதி அனுப்பி இருந்தனர். ஆனால், எவருக்கும் இதுவரை அந்த கடிதத்தை நான் கொடுத்ததே இல்லை. எவரும், தன் நாட்டுரிமையை இழக்க நான் எந்த விதத்திலும் உடந்தையாய் இருக்கமாட்டேன்.