வியாழன், டிசம்பர் 28, 2017

குறள் எண்: 0879 (விழியப்பன் விளக்கவுரை)


{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0879}

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

விழியப்பன் விளக்கம்: பயனற்ற முள்மரத்தை, இளையதாக இருக்கும் போதே வேரறுக்க! வளர்ந்து முதிர்ந்த நிலையில், அதை களைய முற்படுவோரின் கையைக் காயப்படுத்தும்!
(அது போல்...)
அறமற்ற தீக்குணத்தை, வளர ஆரம்பிக்கும் போதே அழிக்க! வளர்ந்து ஆக்கிரமித்த நிலையில், அதை அழிக்க முற்படுவோரின் வாழ்க்கையை அழிக்கும்!

செவ்வாய், டிசம்பர் 26, 2017

குறள் எண்: 0877 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0877}

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

விழியப்பன் விளக்கம்: துன்பம் அடைந்ததை அறியாத நல்லோர்க்கு, அதைத் தெரிவிக்காதீர்! அதுபோல் வலிமையின்மையை அறியாத பகைவர்களுக்கு, அதை வெளிப்படுத்த விரும்பாதீர்!
(அது போல்...)
பணம்பெற்ற குற்றத்தை உணராத வாக்காளர்களை, தூற்றிப் பேசாதீர்! அதுபோல் மக்களாட்சியை உணராத ஊழல்வாதிகளுக்கு, அதைக் கற்பிக்க மறவாதீர்!

திங்கள், டிசம்பர் 25, 2017

குறள் எண்: 0876 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0876}

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்

விழியப்பன் விளக்கம்: பகைவர்களின் திறத்தை அறிந்திருந்தாலும் அறியாதிருப்பினும்; பாதகமான சூழலில், அவர்களுடன் உறவாடாமலும்/பகைகொள்ளாமலும் இடையில் இருக்கவேண்டும்!
(அது போல்...)
தீப்பழக்கங்களின் வீரியத்தை உணர்ந்திருந்தாலும் உணராதிருப்பினும்; வற்புறுத்தலான சூழலில், அவற்றை செய்யாமலும்/மறுக்காமலும் பொறுத்துக் கடக்கவேண்டும்!

ஞாயிறு, டிசம்பர் 24, 2017

குறள் எண்: 0875 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0875}

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று

விழியப்பன் விளக்கம்: இருவேறு பகைகளை எதிர்க்கும்போது, தமக்கு துணை இல்லாது போனால்; ஒருவர், அவ்விரு பகைககளில் சரியான ஒன்றை, இனிய துணையாக்கிட வேண்டும்!
(அது போல்...)
இருவகை தீப்பழக்கங்கள் இருக்கும்போது, தம் உடல்திடம் குறைந்து போனால்; ஒருவர், அவ்விரு தீப்பழக்கங்களில் வீரியமான ஒன்றை, முயன்று நிறுத்திட வேண்டும்!

சனி, டிசம்பர் 23, 2017

குறள் எண்: 0874 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0874}

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு

விழியப்பன் விளக்கம்: பகையையும் நட்பாக்கிக் கொண்டு செயல்படும், தகைமைப் பண்புடையோரின்; ஆளுமையின் கீழ், உலகம் நிம்மதியாய் இயங்கும்.
(அது போல்...)
தோல்வியையும் அனுபவமாய் ஏற்று வழிநடத்தும், உயர்வானக் குணமுடையோரின்; தலைமையின் கீழ், குடும்பம் நேர்மையாய் வளரும்.

வெள்ளி, டிசம்பர் 22, 2017

குறள் எண்: 0873 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0873}

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

விழியப்பன் விளக்கம்: தனியொருவனாய், பலரின் மேலும் பகையை மேற்கொள்பவர்; மனச்சீர்மை இல்லாதவரை விட, தாழ்ந்தவர் ஆவர்!
(அது போல்...)
சுயேச்சையாய், பலரை எதிர்த்துத் தேர்தலைச் சந்திப்போர்; கட்சி மாறுவோரை விட, உயர்ந்தவர் ஆவர்!

வியாழன், டிசம்பர் 21, 2017

குறள் எண்: 0872 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0872}

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

விழியப்பன் விளக்கம்: வில்லை ஏராகக் கொண்ட உழவராம், படைவீரரோடு பகை கொண்டாலும்; சொல்லை ஏராகக் கொண்ட உழவராம், படைப்பாளியோடு பகை கொள்ளக்கூடாது!.
(அது போல்...)
அன்பை சிறகாய் கொண்ட பறவையாம், செயலில் குறை இருப்பினும்; அறத்தை சிறகாய் கொண்ட பறவையாம், சிந்தனையில் குறை இருக்கக்கூடாது!

புதன், டிசம்பர் 20, 2017

குறள் எண்: 0871 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0871}

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

விழியப்பன் விளக்கம்: பகை என்னும் பண்பற்ற ஒன்றை; ஒருவர், கேலிக்கை சார்ந்தும், விரும்புவது முறையானது அல்ல!
(அது போல்...)
கையூட்டு என்னும் அறமற்ற ஒன்றை; ஒருவர், குடும்பத்தை முன்னிறுத்தியும், கையாள்வது மனிதமானது அல்ல! {குறிப்பு: "கையாள்வது" - கொடுப்பது/பெறுவது என்ற இரு பொருளிலும்!}

செவ்வாய், டிசம்பர் 19, 2017

அதிகாரம் 087: பகைமாட்சி (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி

0861.  வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
           மெலியார்மேல் மேக பகை

           விழியப்பன் விளக்கம்: வலிமையான எதிரிகளுக்கு எதிரான பகையை, தவிர்க்க வேண்டும்! 
           வலிமையற்ற எதிரிகளை பகைக்க, தவறாமல் விருப்பம் கொள்ள வேண்டும்!
(அது போல்...)
           அராஜகமான ஆட்சியை சீராக்கப் போராடுவதை, கைவிட வேண்டும்! அரஜாக்கமற்ற 
           ஆட்சியை சீராக்க, மறவாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்!
      
0862.  அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
           என்பரியும் ஏதிலான் துப்பு

           விழியப்பன் விளக்கம்: சுற்றத்திடம் அன்பின்றி/வலிமையான துணையின்றி/தானும் 
           வலிமையின்றி - இருக்கும் ஒருவன்; எதிர்த்து வரும் பகைவரின் வலிமையை, எவ்வாறு    
           எதிர்கொள்வான்?
(அது போல்...)
           சிந்தனையில் நாட்டமின்றி/பகுத்தறியும் குருவின்றி/தானும் பகுத்தறிவின்றி - இருக்கும் 
           ஒருவன்; வாழ்வில் வரும் சவால்களின் பாதிப்பை, எப்படி சமாளிப்பான்?
           
0863.  அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
           தஞ்சம் எளியன் பகைக்கு

           விழியப்பன் விளக்கம்: அனைத்திலும் அச்சமும்/எதிலும் அறியாமையும்/எல்லோரிடமும் 
           முரணும்/எதையும் ஈயாமலும் - இருக்கும் ஒருவன்; பகைவர்கள் வெல்வதற்கு, எளியவனாய் 
           இருப்பான்!
(அது போல்...)
           அனைவரையும் ஜாதியால்/எதையும் இலவசத்தால்/எவற்றையும் ஊழலால்/யாதையும் 
           வன்முறையால் - சிதைக்கும் தலைவன்; மக்களாட்சி தோற்பதற்கு, காரணமாய் அமைவான்!

0864.  நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
           யாங்கணும் யார்க்கும் எளிது

           விழியப்பன் விளக்கம்: “கோபத்தை ஒழிக்காமல்/நிறைவான தன்மையின்றி” இருக்கும் 
           ஒருவனை வெல்வது; எந்நாளும்/எவ்விடத்திலும்/எவருக்கும் எளிதானது ஆகும்!
(அது போல்...)
           “ஊழலை ஒழிக்காமல்/பொதுமையான எண்ணமின்றி” இருக்கும் தலைவனை ஆதரிப்பது; 
           எக்காலமும்/எவ்வகையிலும்/எந்நாட்டுக்கும் தீமையானது ஆகும்!

0865.  வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
           பண்பிலன் பற்றார்க்கு இனிது

           விழியப்பன் விளக்கம்: "அறவழியை ஆராயாத/வாய்ப்புகளைப் பயன்படுத்தாத/படுபழியை 
           ஆராயாத/பண்பும் இல்லாத" ஒருவன்; பகைவர்களுக்கு இனிமையான எதிரியாய் இருப்பான்!
(அது போல்...)
           "நற்கூட்டணியை நாடாத/மக்களைப் பேணாத/ஊழல்பழியை அழிக்காத/அரசியல் 
           அறமில்லாத" கட்சி; மக்களுக்குக் கொடியத் தண்டனையாய் இருக்கும்!

0866.  காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
           பேணாமை பேணப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஆராய்ந்து அறியாத சினமும்/எப்போதும் குறையாத பேராசை - 
           இவற்றைக் கொண்டவனின் பகைமை, பகைவரால் விரும்பிப் பேணப்படும்!
(அது போல்...)
           ஆழ்ந்து உணராத கூட்டணி/எவற்றிலும் நீங்காத ஊழல் - இவற்றை செய்வோரின் எதிர்ப்பு, 
           எதிர்க்கட்சியால் போற்றி ஏற்கப்படும்!

0867.  கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
           மாணாத செய்வான் பகை

           விழியப்பன் விளக்கம்: நம்முடன் இருந்துகொண்டே, நாம் செய்யும் செயல்களுக்கு; 
           எதிர்வினை ஆற்றுவோரின் பகையை, எதுவொன்றையும் விலையாகக் கொடுத்தும் 
           பெறவேண்டும்!
(அது போல்...)
           மக்களுடன் இருந்துகொண்டே, மக்கள் விரும்பும் மாற்றத்திற்கு; எதிராகச் 
           செயல்படுவோரின் தோல்வியை; எதையும் இழப்பீடாகக் கொடுத்தும் நிர்ணயிக்கவேண்டும்!

0868.  குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
           இனனிலனாம் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: நற்குணம் ஏதுமின்றி/பல்வேறு குற்றங்களைச் செய்யும் ஒருவன், 
           அனைத்து துணைகளையும் இழப்பான்; அதுவே, பகைவர்களின் வெற்றிக்கு துணை புரியும்!
(அது போல்...)
           நீர்ப்பாசனம் ஏதுமின்றி/பல்வகைக் குறைகளுடன் இருக்கும் நிலம், எல்லா வளங்களையும் 
           அழிக்கும்; அதுவே,  தொழிற்சாலைகளைப் பெருக்கி விவசாயத்தை அழிக்கும்!

0869.  செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
           அஞ்சும் பகைவர்ப் பெறின்

            விழியப்பன் விளக்கம்: அறம்சார் அறிவின்றி, அனைத்துக்கும் அச்சப்படும் பகைவர்கள் 
            வாய்ப்பின்; அவர்களை எதிர்ப்போர்க்கு, எல்லாவகை இன்பங்களும் விலகாமல்
            நிலைத்திருக்கும்!
(அது போல்...)
            தேர்தல் நெறியின்றி, அனைவருக்கும் பணமளிக்கும் வேட்பாளர்கள் இருப்பின்; தேர்தலை 
            நடத்துவோர்க்கு, அனைத்து குழப்பங்களும் தொடர்ந்து நிறைந்திருக்கும்!

0870.  கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
           ஒல்லானை ஒல்லா தொளி

           விழியப்பன் விளக்கம்: கல்லாதவனாய்/கோபமுடையவனாய்/முயற்சியின்றி பொருள் 
           சேர்ப்பவனாய்/எந்நாளும் பகையுணர்வு உடையவனாய் - இருக்கும் ஒருவனை, புகழ் 
           சேர்ந்திடாது!
(அது போல்...)
           திறமற்றதாய்/அராஜகமாய்/அன்பின்றி மக்களை வதைப்பதாய்/எல்லாவற்றிலும் ஊழல் 
           உடையதாய் - இருக்கும் ஓர்க்கட்சி, வரலாற்றில் நிலைத்திடாது!

குறள் எண்: 0870 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0870}

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி

விழியப்பன் விளக்கம்: கல்லாதவனாய்/கோபமுடையவனாய்/முயற்சியின்றி பொருள் சேர்ப்பவனாய்/எந்நாளும் பகையுணர்வு உடையவனாய் - இருக்கும் ஒருவனை, புகழ் சேர்ந்திடாது!
(அது போல்...)
திறமற்றதாய்/அராஜகமாய்/அன்பின்றி மக்களை வதைப்பதாய்/எல்லாவற்றிலும் ஊழல் உடையதாய் - இருக்கும் ஓர்க்கட்சி, வரலாற்றில் நிலைத்திடாது!

திங்கள், டிசம்பர் 18, 2017

குறள் எண்: 0869 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0869}

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

விழியப்பன் விளக்கம்: அறம்சார் அறிவின்றி, அனைத்துக்கும் அச்சப்படும் பகைவர்கள் வாய்ப்பின்; அவர்களை எதிர்ப்போர்க்கு, எல்லாவகை இன்பங்களும் விலகாமல் நிலைத்திருக்கும்!
(அது போல்...)
தேர்தல் நெறியின்றி, அனைவருக்கும் பணமளிக்கும் வேட்பாளர்கள் இருப்பின்; தேர்தலை நடத்துவோர்க்கு, அனைத்து குழப்பங்களும் தொடர்ந்து நிறைந்திருக்கும்!

ஞாயிறு, டிசம்பர் 17, 2017

குறள் எண்: 0868 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0868}

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து

விழியப்பன் விளக்கம்: நற்குணம் ஏதுமின்றி/பல்வேறு குற்றங்களைச் செய்யும் ஒருவன், அனைத்து துணைகளையும் இழப்பான்; அதுவே, பகைவர்களின் வெற்றிக்கு துணை புரியும்!
(அது போல்...)
நீர்ப்பாசனம் ஏதுமின்றி/பல்வகைக் குறைகளுடன் இருக்கும் நிலம், எல்லா வளங்களையும் அழிக்கும்; அதுவே,  தொழிற்சாலைகளைப் பெருக்கி விவசாயத்தை அழிக்கும்!

சனி, டிசம்பர் 16, 2017

குறள் எண்: 0867 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0867}

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை

விழியப்பன் விளக்கம்: நம்முடன் இருந்துகொண்டே, நாம் செய்யும் செயல்களுக்கு; எதிர்வினை ஆற்றுவோரின் பகையை, எதுவொன்றையும் விலையாகக் கொடுத்தும் பெறவேண்டும்!
(அது போல்...)
மக்களுடன் இருந்துகொண்டே, மக்கள் விரும்பும் மாற்றத்திற்கு; எதிராகச் செயல்படுவோரின் தோல்வியை; எதையும் இழப்பீடாகக் கொடுத்தும் நிர்ணயிக்கவேண்டும்!

வெள்ளி, டிசம்பர் 15, 2017

குறள் எண்: 0866 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0866}

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்

விழியப்பன் விளக்கம்: ஆராய்ந்து அறியாத சினமும்/எப்போதும் குறையாத பேராசை - இவற்றைக் கொண்டவனின் பகைமை, பகைவரால் விரும்பிப் பேணப்படும்!
(அது போல்...)
ஆழ்ந்து உணராத கூட்டணி/எவற்றிலும் நீங்காத ஊழல் - இவற்றை செய்வோரின் எதிர்ப்பு, எதிர்க்கட்சியால் போற்றி ஏற்கப்படும்!

வியாழன், டிசம்பர் 14, 2017

குறள் எண்: 0865 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0865}

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது

விழியப்பன் விளக்கம்: "அறவழியை ஆராயாத/வாய்ப்புகளைப் பயன்படுத்தாத/படுபழியை ஆராயாத/பண்பும் இல்லாத" ஒருவன்; பகைவர்களுக்கு இனிமையான எதிரியாய் இருப்பான்!
(அது போல்...)
"நற்கூட்டணியை நாடாத/மக்களைப் பேணாத/ஊழல்பழியை அழிக்காத/அரசியல் அறமில்லாத" கட்சி; மக்களுக்குக் கொடியத் தண்டனையாய் இருக்கும்!

புதன், டிசம்பர் 13, 2017

குறள் எண்: 0864 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0864}

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

விழியப்பன் விளக்கம்: “கோபத்தை ஒழிக்காமல்/நிறைவான தன்மையின்றி” இருக்கும் ஒருவனை வெல்வது; எந்நாளும்/எவ்விடத்திலும்/எவருக்கும் எளிதானது ஆகும்!
(அது போல்...)
“ஊழலை ஒழிக்காமல்/பொதுமையான எண்ணமின்றி” இருக்கும் தலைவனை ஆதரிப்பது; எக்காலமும்/எவ்வகையிலும்/எந்நாட்டுக்கும் தீமையானது ஆகும்!

செவ்வாய், டிசம்பர் 12, 2017

குறள் எண்: 0863 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0863}

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு

விழியப்பன் விளக்கம்: அனைத்திலும் அச்சமும்/எதிலும் அறியாமையும்/எல்லோரிடமும் முரணும்/எதையும் ஈயாமலும் - இருக்கும் ஒருவன்; பகைவர்கள் வெல்வதற்கு, எளியவனாய் இருப்பான்!
(அது போல்...)
அனைவரையும் ஜாதியால்/எதையும் இலவசத்தால்/எவற்றையும் ஊழலால்/யாதையும் வன்முறையால் - சிதைக்கும் தலைவன்; மக்களாட்சி தோற்பதற்கு, காரணமாய் அமைவான்!

திங்கள், டிசம்பர் 11, 2017

கண்ணகிக்குப் பஞ்சமா? கோர்ட்டுக்குப் பங்கமா??


கற்புடையாள் ஊரையே
கரித்துகளாய் எரிப்பாளெனில்;
கலியுகத்தில் ஏனின்னும்...
குழந்தைகள் தம்மையும்
கற்பழித்துக் கொன்றிட்டக்
கயவர்கள் கரியவில்லை?!

கண்ணகிக்குப் பஞ்சமா?
"கோர்ட்"டுக்குப் பங்கமா??

குறள் எண்: 0862 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0862}

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

விழியப்பன் விளக்கம்: சுற்றத்திடம் அன்பின்றி/வலிமையான துணையின்றி/தானும் வலிமையின்றி - இருக்கும் ஒருவன்; எதிர்த்து வரும் பகைவரின் வலிமையை, எவ்வாறு எதிர்கொள்வான்?
(அது போல்...)
சிந்தனையில் நாட்டமின்றி/பகுத்தறியும் குருவின்றி/தானும் பகுத்தறிவின்றி - இருக்கும் ஒருவன்; வாழ்வில் வரும் சவால்களின் பாதிப்பை, எப்படி சமாளிப்பான்?

ஞாயிறு, டிசம்பர் 10, 2017

குறள் எண்: 0861 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0861}

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை

விழியப்பன் விளக்கம்: வலிமையான எதிரிகளுக்கு எதிரான பகையை, தவிர்க்க வேண்டும்! வலிமையற்ற எதிரிகளை பகைக்க, தவறாமல் விருப்பம் கொள்ள வேண்டும்!
(அது போல்...)
அராஜகமான ஆட்சியை சீராக்கப் போராடுவதை, கைவிட வேண்டும்! அரஜாக்கமற்ற ஆட்சியை சீராக்க, மறவாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்!

சனி, டிசம்பர் 09, 2017

அதிகாரம் 086: இகல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்

0851.  இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
           பண்பின்மை பாரிக்கும் நோய்

           விழியப்பன் விளக்கம்: அனைத்து விதமான உயிரினங்கள் இடையே இருக்கும், பிரிவினை 
           என்பது; இணையாமை என்னும் பண்பற்ற எண்ணத்தை வளர்க்கும், நோயே ஆகும்!
(அது போல்...)
           எல்லா வகையான கட்சிகளும் இறுதியில் அடையும், சாபம் என்பது; பொதுமை என்னும் 
           மக்களாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும், விரோதமே ஆகும்!
      
0852.  பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
           இன்னாசெய் யாமை தலை

           விழியப்பன் விளக்கம்: இணையாமையை முன்னிறுத்தி, ஒருவர் பற்றற்ற செயல்களைச் 
           செய்தாலும்; பிரிவினையை முன்னிறுத்தி, தீமையானவற்றை செய்யாமல் இருப்பது 
           சிறந்ததாகும்!
(அது போல்...)
           சுயத்தை முன்னிறுத்தி, ஓர்கட்சி முறையற்ற செல்வங்களைச் சேர்த்தாலும்; குடும்பத்தை 
           முன்னிறுத்தி, பதவிகளைப் பங்கிடாமல் இருப்பது நன்மையாகும்!
           
0853.  இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
           தாவில் விளக்கம் தரும்

           விழியப்பன் விளக்கம்: பிரிவினை என்னும் இன்னலளிக்கும் நோயை நீக்கினால்; அது, 
           என்றுமழியாத நிலைத்த புகழை அளிக்கும்.
(அது போல்...)
           போதை எனும் செயலழிக்கும் நஞ்சைக் களைந்தால்; அது, எந்நிலையிலும் சிதையாத 
           அமைதியை அளிக்கும்.

0854.  இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
           துன்பத்துள் துன்பங் கெடின்

           விழியப்பன் விளக்கம்: துன்பங்கள் அனைத்திலும் கொடிய துன்பமான, பிரிவினை எண்ணம் 
           அழிந்து விட்டால்; இன்பங்கள் அனைத்திலும், இனிமையான இன்பத்தை அளிக்கும்!
(அது போல்...)
           ஊழல்கள் அனைத்திலும் பயங்கர ஊழலான, "கல்வி ஊழலை" அழித்து விட்டால்; 
           வளர்ச்சிகள் அனைத்திலும், வீரியமான வளர்ச்சிக்கு வித்திடும்!

0855.  இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
           மிகலூக்கும் தன்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: பிரிவினை எனும் எண்ணத்திற்கு எதிராக, எதிர்த்து பயணிக்கும் 
           வல்லவரை; வெல்ல நினைக்கும் இயல்புடையவர் எவர் இருக்கமுடியும்?
(அது போல்...)
           ஊழ்வினை எனும் விளைவிற்கு மாற்றாக, மாற்றை உருவாக்கும் மதியுடையோரை; அழிக்க 
           முயலும் விதியென்று யாது இருக்கமுடியும்?

0856.  இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
           தவலும் கெடலும் நணித்து

           விழியப்பன் விளக்கம்: பிரிவினையை முன்னிறுத்திப் பிறரை வெல்வது, இனிமையானது 
           என்பவரது வாழ்க்கை; நிலைப்பதும் குறுகிய காலமே! கெட்டழிவதற்குத் தேவையும் 
           குறுகிய காலமே!
(அது போல்...)
           பணத்தைக் கொடுத்து தேர்தலை வெல்வது, எளிதானது என்போரது அரசியல்; மக்களைச் 
           சேர்வதும் துரிதமே! மக்களால் ஒதுக்கி அழிக்கப்படுவதும் துரிதமே!

0857.  மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
           இன்னா அறிவி னவர்

           விழியப்பன் விளக்கம்: பிரிவினையைத் தழுவும், தீமையான அறிவை உடையவர்; 
           வெற்றியைத் தழுவும், அறம்சார் அறிவுடைமையை அறியமாட்டார்கள்.
(அது போல்...)
           போதையை அளிக்கும், தவறானப் பழக்கம் உடையோர்; பேரின்பத்தை அளிக்கும், 
           சிந்தனைசார் செயல்களை விரும்பமாட்டார்கள்.

0858.  இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
           மிகலூக்கின் ஊக்குமாம் கேடு

           விழியப்பன் விளக்கம்: பிரிவினை எண்ணத்திற்கு எதிராகச் செயலைச் செலுத்துவது, 
           செல்வத்தைச் சேர்க்கும்! பிரிவினையை வெற்றிக்கான காரணமாய் வளர்த்தால், கெடுதல் 
           வளரும்!
(அது போல்...)
           ஊழல் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது, மக்களாட்சியை நிலைநாட்டும்! ஊழலை 
           இலவசத்துக்கான மூலமாய் மாற்றினால், வாழ்வியல் மாறும்!

0859.  இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
           மிகல்காணும் கேடு தரற்கு

           விழியப்பன் விளக்கம்: செல்வத்தைச் சேர்க்கும் விடயங்களில், பிரிவினையை ஆராயதோர்; 
           கேடு விளைவிக்கும் விடயங்களில் மட்டும், பிரிவினையை மிகைப்படுத்தி ஆராய்வர்!
(அது போல்...)
           ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில், மக்களுடன் இணையாதோர்; ஊழல் தண்டனை 
           அடைந்தால் மட்டும், மக்களைத் தஞ்சமடைந்து முறையிடுவர்!

0860.  இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
           நன்னயம் என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: பிரிவினை என்னும் தீயெண்ணம், துன்பங்கள் அனைத்தையும் 
           அளிக்கும்! நல்லிணக்கம் என்னும் நல்லெண்ணம், நல்லறம் என்னும் பெருமிதத்தை 
           அளிக்கும்! 
(அது போல்...)
           ஊழல் என்னும் தீயொழுக்கம், குற்றங்கள் அனைத்தையும் நிலைநாட்டும்! சேவை என்னும் 
           நல்லொழுக்கம், மக்களாட்சி என்னும் மகேசன்-தீர்ப்பை நிலைநாட்டும்!

குறள் எண்: 0860 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0860}

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு

விழியப்பன் விளக்கம்: பிரிவினை என்னும் தீயெண்ணம், துன்பங்கள் அனைத்தையும் அளிக்கும்! நல்லிணக்கம் என்னும் நல்லெண்ணம், நல்லறம் என்னும் பெருமிதத்தை அளிக்கும்! 
(அது போல்...)
ஊழல் என்னும் தீயொழுக்கம், குற்றங்கள் அனைத்தையும் நிலைநாட்டும்! சேவை என்னும் நல்லொழுக்கம், மக்களாட்சி என்னும் மகேசன்-தீர்ப்பை நிலைநாட்டும்!

வெள்ளி, டிசம்பர் 08, 2017

குறள் எண்: 0859 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0859}

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு

விழியப்பன் விளக்கம்: செல்வத்தைச் சேர்க்கும் விடயங்களில், பிரிவினையை ஆராயதோர்; கேடு விளைவிக்கும் விடயங்களில் மட்டும், பிரிவினையை மிகைப்படுத்தி ஆராய்வர்!
(அது போல்...)
ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில், மக்களுடன் இணையாதோர்; ஊழல் தண்டனை அடைந்தால் மட்டும், மக்களைத் தஞ்சமடைந்து முறையிடுவர்!

வியாழன், டிசம்பர் 07, 2017

குறள் எண்: 0858 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0858}

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு

விழியப்பன் விளக்கம்: பிரிவினை எண்ணத்திற்கு எதிராகச் செயலைச் செலுத்துவது, செல்வத்தைச் சேர்க்கும்! பிரிவினையை வெற்றிக்கான காரணமாய் வளர்த்தால், கெடுதல் வளரும்!
(அது போல்...)
ஊழல் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது, மக்களாட்சியை நிலைநாட்டும்! ஊழலை இலவசத்துக்கான மூலமாய் மாற்றினால், வாழ்வியல் மாறும்!

புதன், டிசம்பர் 06, 2017

குறள் எண்: 0857 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0857}

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்

விழியப்பன் விளக்கம்: பிரிவினையைத் தழுவும், தீமையான அறிவை உடையவர்; வெற்றியைத் தழுவும், அறம்சார் அறிவுடைமையை அறியமாட்டார்கள்.
(அது போல்...)
போதையை அளிக்கும், தவறானப் பழக்கம் உடையோர்; பேரின்பத்தை அளிக்கும், சிந்தனைசார் செயல்களை விரும்பமாட்டார்கள்.

செவ்வாய், டிசம்பர் 05, 2017

குறள் எண்: 0856 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0856}

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து

விழியப்பன் விளக்கம்: பிரிவினையை முன்னிறுத்திப் பிறரை வெல்வது, இனிமையானது என்பவரது வாழ்க்கை; நிலைப்பதும் குறுகிய காலமே! கெட்டழிவதற்குத் தேவையும் குறுகிய காலமே!
(அது போல்...)
பணத்தைக் கொடுத்து தேர்தலை வெல்வது, எளிதானது என்போரது அரசியல்; மக்களைச் சேர்வதும் துரிதமே! மக்களால் ஒதுக்கி அழிக்கப்படுவதும் துரிதமே!

திங்கள், டிசம்பர் 04, 2017

குறள் எண்: 0855 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0855}

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்

விழியப்பன் விளக்கம்: பிரிவினை எனும் எண்ணத்திற்கு எதிராக, எதிர்த்து பயணிக்கும் வல்லவரை; வெல்ல நினைக்கும் இயல்புடையவர் எவர் இருக்கமுடியும்?
(அது போல்...)
ஊழ்வினை எனும் விளைவிற்கு மாற்றாக, மாற்றை உருவாக்கும் மதியுடையோரை; அழிக்க முயலும் விதியென்று யாது இருக்கமுடியும்?

ஞாயிறு, டிசம்பர் 03, 2017

குறள் எண்: 0854 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0854}

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்

விழியப்பன் விளக்கம்: துன்பங்கள் அனைத்திலும் கொடிய துன்பமான, பிரிவினை எண்ணம் அழிந்து விட்டால்; இன்பங்கள் அனைத்திலும், இனிமையான இன்பத்தை அளிக்கும்!
(அது போல்...)
ஊழல்கள் அனைத்திலும் பயங்கர ஊழலான, "கல்வி ஊழலை" அழித்து விட்டால்; வளர்ச்சிகள் அனைத்திலும், வீரியமான வளர்ச்சிக்கு வித்திடும்!

சனி, டிசம்பர் 02, 2017

குறள் எண்: 0853 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0853}

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்

விழியப்பன் விளக்கம்: பிரிவினை என்னும் இன்னலளிக்கும் நோயை நீக்கினால்; அது, என்றுமழியாத  நிலைத்த புகழை அளிக்கும்.
(அது போல்...)
போதை எனும் செயலழிக்கும் நஞ்சைக் களைந்தால்; அது, எந்நிலையிலும் சிதையாத அமைதியை அளிக்கும்.

வெள்ளி, டிசம்பர் 01, 2017

அண்ணாதுரை (2017)


       அண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கான முன்னோட்டத்தில்  குறிப்பிட்டு இருந்ததுபோல்; இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இது படத்தின் விமர்சனம் எழுதும் தருணம்; என்முன் இருப்பவை இரண்டு சவால்கள்:
  1. சில நேரங்களில், அலுவல் சார்ந்த பரிந்துரைக் கடிதத்தை சிலரிடம் கேட்கும்போது; நம்மையே "ஓர் வடிவமாய் எழுதி" கொடுக்க சொல்லிவிடுவார்கள். பிறரைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதமுடிந்த நமக்கு, நம்மைப் பற்றி எழுதுவது எத்தனை சிரமானது என்பது; மேற்குறிப்பிட்ட நிலை வாய்ப்பின் புரியும். இப்படத்திற்கு விமர்சனம் எழுதுவதும் அதே நிலைதான் - அவனைப் பற்றி எழுதுவது, என்னைப்பற்றி எழுதுவதைப் போலத்தான்.
  2. ஸ்கிரிப்டைப் படிக்கும்போது, என்னுள் எழுந்த கற்பனைகளை; படத்தின் காட்சிகளுடன் ஒப்பிடாமல் இருப்பது சாத்தியமே இல்லை! ஆனால், என் திருப்தியின்மை; எக்காரணம் கொண்டும் விமர்சனத்தில் வெளிப்படக்கூடாது.
   இவ்விரண்டு சவால்களையும், மிகக்கவனமாய்/மிகச்சரியாய் எதிர்கொண்டு; நேர்மையான விமர்சனத்தை இங்கே கொடுத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். 😊🙏


நிறைகள்:
  • கந்துவட்டிக் கொடுமையால், திரைத்துறையைச் சார்ந்த ஒருவர் தன்னுயிரை இழந்திருக்கும் வேளையில்; ஓர் "சராசரியான முதலீட்டில்" படத்தைத் தயாரிக்கும் வண்ணம்; கதையை, ஓர் அறிமுக இயக்குனர் கையாண்டிருப்பது சிறப்பு. முதல்படத்தில் தன்னை நிரூபிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் "பிரம்மாண்டம் என்னும் மாயையில் சிக்காமல்"; சிக்கனமாய் படத்தை முடித்திருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள். இதுபோன்ற திரைக்கதைகள் பெருகி, இயல்பான தயாரிப்பாளர்கள் பெருகட்டும்/வளரட்டும்! "வளமும்/பலமும்" இருப்போர் மட்டும் பிரம்மாண்டத்தின் பின்னே செல்லட்டும்!
  • சிக்கனத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் - படத்தின் ஆரம்பக் காட்சிகள்! சமீபத்திய படங்கள் பலவற்றில், டைட்டிலின் "கிராஃபிக்ஸ்" மாயாஜாலங்களில் பணத்தை செலவிடுகிறார்கள். சில படங்களில், கதையின் சாராம்சத்தை விளக்குவதாய் அமைந்தாலும் - அவை தேவையா? என்ற கேள்வி எழும். அப்படியேதும் இல்லாமல்; படத்தின் காட்சிகளைப் பின்னணியில் வைத்திருப்பது சிறப்பு. இதை ஏதோ "தமிழ்த்திரை வரலாற்றிலேயே, முதன் முதலாக" என்பதாகச் சித்தரிக்கவில்லை! ஆனால், அப்படியிருந்த எதார்த்தத்தை; மீண்டும் கொண்டு வந்திருப்பதும்/செலவைக் குறைத்திருப்பதும் - குறிப்பிடப் படவேண்டியவை!
  • "டைட்டில்" காட்சியின் போது; மதுக்கடைக்கு மதுவருந்த செல்லும் கதாநாயகன், அங்கு மதுவருந்தும் மாணவர்களை விரட்டியடிப்பார். அதுபோன்ற காட்சிகளை, நிஜவாழ்வில் பார்த்துவிட்டு  வெறுமனே கடப்போர் பலரும்; அதைக் காணொளியாய் எடுத்து "காமெடி கருத்து" சொல்லும் சிலரும் சேர்ந்ததாய் - இச்சமூகம் இருக்கும்போது - மதுவருந்த செல்லும் ஒருவர், அங்கேயே/அப்போதே கண்டிக்கும் காட்சி(யி/யா)ல்; மதுவின் விளைவை உணர்த்தும் - கதாநாயகப் பாத்திரப் படைப்பில் வெளிப்படுகிறது, இயக்குனரின் அக்கறை! ஆரம்பக்கட்ட காட்சிகள் (10/15 நிமிடங்கள் வரை) - இயக்குனராய், அவனின் திறமையை - அழுத்தமாய்/ஆழமாய் உணர்த்தி இருக்கிறது.
  • முதல் காட்சியில் துவங்கி, இறுதிவரை - எதார்த்தமான காட்சிகளுடன்; எந்த "செட்"டிங்கும் இல்லாமல்; இன்னமும் இயற்கையோடும்/இயல்போடும் என் கிரமாத்தின் அருகிலிருக்கும் "திருக்கோவிலூர்" நகரை - அப்படியே காட்டியிருப்பது - அவனின் படமாக்கும் திறமையை கூர்மையாய் விவரிக்கிறது. கிராமமோ/நகரமோ/பெருநகரோமோ - இவ்வித இயல்புதான் நிலைத்து எஞ்சும். அதில், நிலையாய் இருந்திருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள். இம்மாதிரி, இயல்போடு வெளிவரும் படங்கள் மிகவும் குறைவு. ஓர் உதாரணம்: ஓர் காட்சிக்கு, திரு. ஜனார்த்தனன் என்ற எங்கள் நண்பனொருவனின் வீடு பயன்படுத்தப் பட்டிருக்கும்  - நேரில் காணும் அதே இயல்பு/அழகு!
  • தமிழ்த் திரையுலகமே "பேய்" மற்றும் "(எரிச்சலூட்டும்)ஹீரோயிசத்தை" நம்பி படங்களை எடுக்கும் வேளையில்; என்றும் பசுமையான "உறவுகளையும்/உணர்வுகளையும்" முன்வைத்து, ஓர் திரைக்கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
  • "இந்த உலகத்துக்கு... பழி சொல்லத்  தெரியுமே தவிர; வழி சொல்லத் தெரியாது!" - படத்தின் துவக்கத்தில் வரும் வசனத்தின் கூர்மை; படம் தொடரத் தொடர மென்மேலும் கூர்மை அடைகிறது. வெறும் "பன்ச் டையாக்குகளாய்" கேட்டு சலித்த நம்மில் பலருக்கும்; இவ்வித "வசனங்களின் உண்மையான வாசம்" ஓர் புது அனுபவத்தை அளிக்கும். "வசனம் எழுதுவது ஓர் கலை!" என்பதை முதல் படத்திலேயே நிலைநாட்டி இருப்பது இயக்குனருக்கு கிடைத்திருக்கும் வரம்; அவ்வரம் தொடரட்டும்!
  • பல காட்சிகளிலும், வழக்கமான திரைப்படங்கள் போல், அடுத்த காட்சியை நம்மை யோசிக்க வைத்து; அதுபோலவே தொடரவும் செய்து, ஆனால் அடுத்தக் காட்சியிலேயே அதைத் தகர்த்து; வேறொரு கோணத்தில் நகர்த்துவது அருமை. படம் முழுவதும், இம்மாதிரியான காட்சிகள் நிறைந்திருக்கின்றன. "சுவராஸ்யமான திரைக்கதையை" இப்படியும் அமைக்கலாம் என்பதற்கு இப்படமோர் உவமை!
  • தொடர்ந்து "செண்டிமெண்ட்" படங்களில் நடித்திருந்தாலும், திரு. விஜய் ஆண்டனிக்கு இந்தப் படம் மிகப்பெரிய சவாலாய் இருந்திருக்கும்! அவருடைய நடிப்புத்திறன் பல இடங்களில், மேம்பட்டு வெளிப்படுகிறது. இயக்குனரும்/நடிகரும் ஒருங்கிணைந்து இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் - இருவருக்கும் வாழ்த்துகள்.
  • "கதாநாயகியின் அப்பாவின்" கதாபாத்திரம் மிக அருமை! "மனிதமும்/அன்பும்/எதார்த்தமும்" நிறைந்த; அவற்றை உணர்ந்த சராசரி மனிதனின் சாயல். ஒரு சராசரி மனிதன் இப்படித்தான் இருப்பான்! அவனுள், வெளியுலக உணர்வுகளும்/உணர்ச்சிகளும் திணிக்கப்படும்போது தான், அவனின் செயல்பாடுகள் - உறவு/உணர்வு/உணர்ச்சி - இவைகளைக் கடந்து செல்லும். அந்த கதாபாத்திரத்தைக் கூர்ந்து கவனியுங்கள் - நம்மில் பலரும், வெளியுலகத் தாக்கத்தால் தான்; இயல்பில் இருந்து மாறி நிற்கிறோம் என்பதை உணர்த்தும்.
  • "கதாநாயகனின் தாயின்" கதாபாத்திரமும் - எதார்த்தமும்/தாய்மையும்/மனிதமும்/கண்டிப்பும் - நிறைந்த கதாபாத்திரம்! "கிளீஷேவான" திரை-அம்மாக்களையே பார்த்த நமக்கு; இந்தப் படம் - நம் ஒவ்வொருவரின் தாயையும் நினைவுக்கு கொண்டுவரும். நிஜவாழ்வில் ஒரு தாய் இப்படியே இருப்பாள். அன்பை - அலையாய்/கடலாய், பரந்து/விரிந்து காட்டும் அவளேதான்; கண்டிப்பை - நெருப்பாய்/எரிமலையாய் உமிழ்ந்து/பொழிந்து கொட்டுவாள்! திரையிலும், நம் நிஜவாழ்வு அம்மாக்களை - மீண்டும் கொண்டு வர, இப்படம் அடிக்கல் இட்டிருக்கிறது என நிச்சயமாய் சொல்லலாம். உடையில் கூட - சீரியல் சாயலோ/சினிமா சாயலோ இல்லை. சபாஷ் டா சீனுவாசா!
  • தயவுசெய்து, இந்த விமர்சனத்தைப் படித்த பின்னர் படம் பார்ப்போர்; இவ்விரண்டு கதாபாத்திரங்களை - மனதில் இருத்தி, ஆழ்ந்து கவனியுங்கள். இதைக் குறிப்பிட காரணம் - ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும்; அவனுடைய தாயும்/மருதந்தையும்(மாமனார்) இரண்டு அதிமுக்கியமான உறவுகள். இவையிரண்டும் - இல்லற வாழ்வில் இணையும்; ஓர் ஆண்/பெண் இருவரின் முக்கியமான வழிநடத்தும் உறவுகள். இவ்விரண்டு உறவுகளின் அன்பும்/அரவணைப்பும்/அடித்தளமும் - கிடைக்கும் மனிதனின் வாழ்வியல் சிரமங்கள், பெருமளவில் குறையும்!
  • சண்டைக் காட்சிகள் அனைத்தும், பெரும்பான்மையில், மிகவும் யதார்த்தமாய்/சுருக்கமாய்/சிறப்பாய் இருக்கின்றன! இவ்விதமான இயல்பான சண்டைக் காட்சிகளைப் பார்ப்பது - இப்போது அபூர்வமாய் ஆகிவிட்டது. இன்னமும் சிறப்பாய் அமைந்திருக்க ஓர் பரிந்துரை உண்டு; அதை இயக்குனருக்கு தனியே தெரிவிக்கிறேன்.
  • முதல் அனுபவம் எனினும், திரு. விஜய் ஆண்டனி "எடிட்டிங்கை" சிறப்பாய் செய்திருக்கிறார் என்பது என் புரிதல். என்னறிவுக்கு எட்டிய வகையில், எப்பிழையும் இல்லை; இசையிலும், குறிப்பிட்டு சொல்ல எப்பிசகும் இல்லை - அவருக்கும் என் வாழ்த்துகள்.
  • ஒவ்வொரு காட்சியும், இயக்குனரின் படமாக்கும் திறத்தை பளிச்செனப் பறைசாற்றுகிறது. ஒளிப்பதவி இயக்குனர், திரைக்கதை இயக்குனரின் மனதை/தேவையை ஆழப் புரிந்திருப்பது விளங்குகிறது. அவர்கள் இருவரும், காட்சிகளை இருகண்களாய் பார்த்து செதுக்கி இருப்பது புரிகிறது. அவருக்கும் வாழ்த்துகள்.
  • பாடல்வரிகள் அருமை! படத்தின் கதையோடு ஒத்துப்போகும் வண்ணம், பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைப்பதும் ஓர் வரம்! ஒரு பாடலைத் தவிர (விளக்கம் கீழே), மற்றனைத்தும் படத்தோடு இணைந்து பயணிப்பவை. பாடலாசிரியருக்கு என் அன்பும்/வாழ்த்துகளும்.

குறைகள்:
  • இதைச் சொல்லாமல் தவிர்த்துவிடலாம் என ஆழ்ந்து யோசித்தும்; என் மனம் ஒப்பவில்லை.  அண்ணாதுரையின் மிகப்பெரிய பலம் - ஸ்கிரிப்ட்டின் தரம்! திரு. விஜய் ஆண்டனி சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால், ஸ்கிரிப்டின் உயிர்ப்பு, பார்வையாளனுக்குக் கடத்தப்படவில்லை என்பதை பின்வரும் உதாரணத்தால் விளக்க விரும்புகிறேன்: மகாநதி திரைப்படத்தில், கதாநாயகன் சிறையில் இருப்பார்; "கைதிகளைச் சந்திக்கும் தினம்" ஒன்றில் கதாநாயகனின் மகள் "தாவணி" அணிந்து, தன் பாட்டியின் பின்னே ஒளிந்திறந்து - பின், மெதுவாய் கதாநாயகனுக்கு தெரியும் வண்ணம் நகர்வாள். தன் மகளை "முதன்முதலாய், தாவணியில் பார்க்கும் தகப்பனின் சந்தோசத்தை" மிகச்சிறப்பாய் வெளிப்படுத்தும் அதே நேரத்தில்; மகள் பருவமடைந்து விட்டதை உணர்ந்த ஆதங்கமும் வெளிப்படும். தன் மருதாயை(மாமியார்) நோக்கி சைகையால் அதை உறுதி செய்துவிட்டு; "எப்போ?!" என வினவுவார்; அழுகையும்/ஆற்றாமையையும் இணைந்து உணர்வும்/உணர்ச்சியும் வெளிப்படும். அது - பார்வையாளனுக்கு, அப்படியே பரிமாற்றப்படும். அந்தக் காட்சியின் பலம் - அந்த ஸ்கிரிப்ட்! அதை, நம்மிடம் கொண்டு சேர்த்தது - அந்த நடிப்பு! அவ்விரண்டும் ஒருபுள்ளியில் மிக அருமையாய் இணைந்திருக்கும்.
  • அதற்காக, அதையே எதிர்பார்க்கிறேன் என்பதல்ல இங்கே பொருள்: அண்ணாதுரையில் - "மிகக்கூரிய வசனத்தால், அண்ணனின் ஒட்டுமொத்த ஒழுக்கத்தையும்" - சந்தேகத்தால் தம்பி கலங்கப் படுத்தும் காட்சியொன்று இருக்கிறது! எத்தனை வாய்ப்புகள் அந்த காட்சியில்? அந்த காட்சி ஆரம்பிக்கும் போது, வீட்டினுள் நுழையும் தம்பி "வழியில் இருக்கும் வாலியை, எட்டி உதைக்கும்" அந்த உணர்ச்சி கூட - அக்கேள்வியைக் கேட்கும் போது, தம்பியின் முகத்தில் இல்லை! கேள்வியை எதிர்கொண்ட அண்ணனின் உணர்ச்சியும்/உணர்வும் எப்படி வெளிப்பட்டு இருக்கவேண்டும்?! - இரண்டுமே தவறியிருக்கிறது. அவ்விரண்டு உணர்வுகளும்/உணர்ச்சிகளும் நமக்கு சரியாய் பரிமாற்றப்பட்டு இருந்தால் - நம்மைக் கட்டிப்போட்டு இருக்கும்! படம் முழுவதிலும், இம்மாதிரியான நிறையக் காட்சிகள் இருந்தும்; தவறி இருக்கிறது.
  • "கதாநாயகியின் நடிப்பு" மேலும் ஏமாற்றம் அளிக்கிறது. மேற்குறிப்பிட்ட முன்னோட்டத்தில் "அழகான குறும்பு செய்யும் பெண்களால் கவரப்படாத - பெண்களோ/ஆண்களோ இருக்கமுடியாது! இப்படத்தின், கதாநாயகி, அனைவரையும் நிச்சயம் கவர்வார்!" - என எழுதி இருந்தேன்! ஆனால், பெருத்த ஏமாற்றம்; நிச்சயமாய், முன்பே அறிமுகத்தில் இருக்கும் "இந்த குறும்புள்ள" மற்றும் அதிக சம்பளம் எதிர்பார்க்காத ஒரு கதாநாயகியைத் தேர்வு செய்திருக்கலாம் என்பது என் புரிதல். ஆனால், மேற்குறிப்பிட்டது போல்; கதாநாயாகியின் அப்பா & கதாநாயகனின் அம்மா துவங்கி, மற்ற கதாப்பாத்திரங்கள் அனைத்தும் மிகச்சிறப்பாய் உணர்வுகளை/உணர்ச்சிகளைப் பரிமாற்றி இருக்கிறார்கள். கதாநாயகனும்/கதாநாயகியும் சளைத்தவர்கள் அல்ல எனினும்; அவை இன்னும் மேம்பாட்டு இருக்கலாம்.
  • "EMI ஆய் மாறிப்போன, GST பாடல்" - தேவையற்ற இடைச்செருகல்! என்னதான் "பாடல் காட்சியிலும், ஓர் இயக்குனரின் தரத்தை சிறப்பாய் உணர்த்துவதாய் இருப்பினும்" அப்பாடல், நிச்சயமாய் தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும். மற்ற அனைத்துப் பாடல்களும், கதையின் உயிர்ப்பைக் குலைக்காமல்; நம்மோடும்/கதையோடும் இனிதே/இணைந்து பயணிக்கும் போது - இப்பாடல் மட்டும் திருஷ்ட்டி!
  • அண்ணனும்/தம்பியும் ஒரேமாதிரியாய் இருப்பதான "தோற்ற மாற்றங்கள்" இருவேறு இடங்களில், இருவேறு விதங்களில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன! "அண்ணாதுரை என்பதை உறுதி செய்யும்" அடையாளத்தை, ஒரு காட்சியில்; நண்பனிடம், அண்ணாதுரையே குறிப்பால் உணர்த்துகிறான். வேறு காட்சியில், அதை அண்ணாதுரையை ஒருதலையாய் காதலிக்கும் பெண்ணொருவள் அறிகிறாள். எல்லோருக்கும் தெரியும்படி, அந்த அடையாளம் இருப்பதால்; முடிவுக்காட்சி மனதில் நெருடலை உருவாக்குகிறது! 
  • இந்த குறைகள் எல்லாம், எளிதில் தெரிபவை; படம் முடிந்து "முதல் வடிவத்தை" பார்க்கும்போதே, இவை உணரப்பட்டு; களையப்பட்டு இருக்க வேண்டும்! எப்படி தவற விட்டார்கள் என்பது வியப்பாய் இருக்கிறது; பல படங்களிலும், இந்த வியப்பு இருக்கவே செய்கிறது. "நம் பிள்ளை" என்ற சார்பைக் கடந்து; அதே வேளையில் "நம் பிள்ளை" என்ற அன்போடு அணுகும் பெற்றோர்களை போல்; நம்முடைய படைப்புகளையும் நாம் அணுகுதல் மிக முக்கியம். வெகு நிச்சயமாய், இதை அடுத்த படத்தில்; என் நண்பன் மிகச் சிறப்பாய் கையாள்வான், கையாள வேண்டும்! அதற்கு என், முற்கூட்டிய வாழ்த்துகள்.
  • முதல்படம் என்பதால், மேற்குறிப்பிட்ட குறைகளை எளிதில் மறக்கலாம்! இயக்குனருக்கு இருந்த நெருக்கடியால் கூட, இவை நிகழ்ந்திருக்கும். அடுத்தப் படத்தில் இம்மாதிரியான குறைகள் நிச்சயம் களையப்படவேண்டும். "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" மட்டுமல்ல; நண்பனும் கெடுவான். எனவே, நண்பனாய் மட்டுமல்லாது, ஓர் பார்வையாளனாய் ஆகவும் இவற்றைக் குறிப்பிடுவது என் கடமையாகிறது.

தீர்ப்பு:
  • படம் முடிந்தபின், பின்வரிசையில் அமர்ந்திருந்தோரில் ஒருவர் உரத்த குரலில் "இந்தப் படத்தால், சமுதாயத்துக்கு என்ன கருத்து சொல்ல வருகிறார்கள்?" என்ற விமர்சனம் வைத்தார். அதே கேள்வியை, நேற்று காலை படம் பார்க்கும் முன் என்னையே கேட்டுக் கொண்டதால், என்னிடம் பதில் தயாராய் இருந்தது! திரும்பி அவருக்குப் பதில் சொல்லும் ஆவல் எழுந்தது; இங்கே விமர்சனத்தில் சொன்னால் போதுமானது எனத் தவிர்த்து விட்டேன்.
  • இந்தப்படம் சொல்லும் கருத்து என்ன? - முதலில், இல்லற/சமூக வாழ்வில்; நாம் இழந்து கொண்டிருக்கும் உறவுகளை/உணர்ச்சிகளை/உணர்வுகளை - நமக்கு நினைவூட்டும். வாழ்க்கை ஓட்டத்தில், எதற்கு ஓடுகிறோம் என்ற தெளிவு கூட இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் நமக்கு; இந்த நினைவூட்டல் மிக அவசியமாகிறது! "உறவுகளை எப்படி அணுகவேண்டும்?" என்பதைப் பல கட்சிகளின் மூலம் நமக்கு, நினைவூட்டி இருக்கிறார் இயக்குனர்! அவற்றை உணர்ந்து, நாம் இழந்தவற்றை நாமே மீட்டெடுக்க முயல்வோம். இதுதான், இந்தப்படம் நமக்கு சொல்லும் கருத்து.
  • தயவுசெய்து, வாய்ப்புக் கிடைப்போர் இப்படத்தைத் திரைப்படத்தில் "உறவுகளோடும்/ஊரோடும்" சேர்ந்து பாருங்கள்! அப்படி இணைந்து பார்ப்பதில், நம்முடைய மீட்டெடுத்துதல் துவங்கட்டும். மேலும், படத்தில் இருக்கும் "உணர்வு/உணர்ச்சி" பரிமாறப்படும் காட்சிகள்; நமக்கு அருகில் இருப்போர் வெளிப்படுத்தும் பல்வித உணர்ச்சிகளும்/உணர்வுகளும் நமக்கும் பரிமாறப்படும். வெகு நாட்களுக்குப் பின், ஒரு திரைப்படம் முழுவதிலும் "எவ்வித சலசலப்பும்; காமெண்ட்டும்" இல்லாமல்; ஒட்டுமொத்த பார்வையாளருக்கு அமைதியாய் படம் பார்த்ததை உணர்ந்தேன். அதுவோர் மிகப்பெரிய சாதனை! அந்த அமைதி, பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றியிருந்ததை உணர்த்தியது.
  • மேலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியது கூட; சில காட்சிகள் "உணர்வு/உணர்ச்சி" பரிமாற்றங்களை அளிக்க தவறினாலும், ஸ்கிரிப்டில் இருந்தது எனக்குப் பரிமாற்றப்பட்டது போல்; உங்களுக்கும் பரிமாறப்படவேண்டும் என்ற அக்கறையில் தான்! எனவே, காட்சிகளின் அடிப்படையை ஆழ உள்வாங்கிப் பாருங்கள். ஆம்... உங்களைப் போலவே; நானும், இந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, இன்னுமோர் முறைப் பார்த்து அனுபவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.
தவறாமல் படத்தைப் உறவோடும்/ஊரோடும் இணைந்து 
திரையரங்கில் பார்ப்போம்... 
இழந்த உணர்வு/உணர்ச்சி இன்னபிறவற்றை மீட்டெடுப்போம்!!!