ஞாயிறு, செப்டம்பர் 21, 2014

திகைக்கவைத்த "பர்த் டே" கேக்...


 
            01.07.2014 அன்று கடலூரில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில், கடலூர் மஞ்சகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் ஏறினேன். பட்டாம்பாக்கத்தில் உள்ள என்தமக்கை வீட்டிற்கு செல்வதற்காய். பேருந்து சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று என் இருக்கைக்கு பக்க-எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருத்தி ஒரு பெட்டியை நீட்டி "எனக்கு பர்த்டே சார்! கேக் எடுத்துக்கோங்க!" என்றாள். எனக்கு சில நிமிடத்துளிகள் ஒரு அதிர்ச்சி; அந்த நிமிடத்துளிகளுள் என்னுள் "அந்த கேக்கில் ஏதாவது இருந்தால் என்ன ஆவது?"; "அந்த கேக்கை எடுப்பது முறையா?"; "ஏன் முன்-பின் தெரியாதவருக்கு கேக் கொடுக்கிறாள்?" என்று பல கேள்விகள். அந்த பெண் எளிமையாய்/வெகுளியாய் இருந்தாள்; பிறந்த-நாள் என்ற மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணில் தெரிந்தது. சரியென்று ஒரு-துண்டை எடுத்துக்கொண்டு "மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் மா!" என்று வாழ்த்தினேன். இப்போது மீண்டும் அந்த கேள்விகளுள் ஒன்று: ஏதேனும் இருந்தால் என்ன ஆவது? 

          பின்னர், அந்த பெண் அவள் அருகில் இருந்த, ஒரு பெண்-காவலுருக்கு கொடுக்க, அவரும் அதை உண்டுகொண்டு இருந்தார். சிறிய தைரியம் வந்தது! பின்னர் என் மனசாட்சி: "ஒரு சக-மனுஷி கொடுத்த தின்பண்டத்தை தின்பதற்கு ஏன் இவ்வளவு யோசனை? இதற்கு எடுக்காமலேயே இருந்திருக்கலாமே?" என்றது. இந்த கேள்வி வந்தவுடன் எல்லா-சிந்தனைகளையும் ஒதுக்கி விட்டு அதை உண்டேன். பேருந்து சென்றுகொண்டிருந்தது; இன்னமும், ஒரு அவநம்பிக்கை என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. பின்னர், ஒருவாறாய் என் என்ன அலைகள் ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பினேன். நான், இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் முன், அந்த பெண்ணை அழைத்து முழுமனதோடு "அவளிடம் ஒரு தொகையை கொடுத்து, உனக்கு பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள்ளம்மா!" என்றேன். அவள் தயங்கினாள்; மீண்டும் வாங்கிக்கொள்ளம்மா என்றேன். அந்த பெண் வாங்கிக்கொண்டாள்; அதன் பின் நான், ஆத்மதிருப்தியோடு அந்த பெண்ணை வாழ்த்தினேன். இயல்பான விசயத்தில் கூட...

நமக்கு சக-மனிதர்கள் மீதான நம் அவநம்பிக்கை அதிகரித்துவிட்டதா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக