ஞாயிறு, மார்ச் 08, 2015

மனித-தொடர்பு (Human Interaction) என்றால் என்ன?



   மேலுள்ள புகைப்படம் Whatsapp-இல் என்னுடைய குழு ஒன்றில் பகிரப்பட்டது. இதைப் பார்த்தவுடன் என்னுள் பல கருத்துகள்/விவாதங்கள். உடனே அதை ஒரு தலையங்கமாய் எழுதவேண்டும் என்று தோன்றியது; அதனால், இதை அங்கே விவாதிக்கவில்லை, பின்னர் இணைப்பை அங்கே கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. உள்-புகைப்படங்களில் சொல்லி இருப்பது போல், இன்று பலரும் உடனிருப்போருடன் உரையாடாமல் தத்தம் நவீன-அலைபேசியில் வேறொருவருடன் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். உண்மையில், நாம் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது அப்படி செய்திருப்போம்! எனவே, அப்படி நடக்கவில்லை என்பதல்ல என் வாதம். ஆனால், மேதகு ஐன்ஸ்டீன் சொன்னதாய் ஊகிக்கப்பட்ட "மனித-தொடர்புகளை ஒருநாள் தொழில்நுட்பம் கடந்து நிற்கும். இவ்வுலகம் அறிவிலிகளை கொண்டிருக்கும்" சொற்றொடருடன் ஒப்பிடுவதைத் தான் மறுக்கிறேன். 

      இத்தலையங்கத்தின் ஆங்கில வடிவத்தை என் நண்பனுக்கு பிழை-திருத்துவதற்காய் அனுப்பிய போது, அவன் ஐன்ஸ்டீனின் கருத்துதானா என்று பரிசோதிக்க சொன்னான். என்ன அதிசயம்?! அப்படி முயன்றபோது, இது உலகின் புகழ்பெற்ற 7 "பொய்யான" சொற்றோடர்களுள் ஒன்றானது என்ற தகவல் கிடைத்தது. மேலும், பல தகவல்களை கூகுளில் தேடுவதன் மூலம் அறியலாம்.  முதலில், என்னால் நம் நட்பு/சுற்றம்/உறவு இப்படி எவருடனும் இணைந்திருப்பதை "மனித-தொடர்பு (Human Interaction)" என்றே அழைக்கமுடிவில்லை. அப்படியெனில், அந்த உள்-புகைப்படங்களில் இருக்கும் ஒவ்வொருவரும் இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்றே அர்த்தம். நவீன-அலைபேசி கொண்டு அவர்கள் Whatsapp/Facebook மூலம் உரையாடுகிறார்கள் என்பதால் மட்டும், அவர்கள் மனித-தொடர்புகளை அறுத்துவிட்டார்கள் என்பதில் எந்த நியாயமும் இல்லை!

  மேலும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பது மட்டுமே "மனித-தொடர்பு" என்றால், மேலுள்ளவர்கள் தொழில்நுட்பம் மூலம் அப்படி செய்வதும் மனித-தொடர்பே, அல்லவா? மேலுள்ள புகைப்படங்களில் இருக்கும் ஒரு குழு ஒரே நிறுவனத்திற்கு/ஒரே துறையில்/ஒரே-நிலையில் பணிபுரிவோர் என்று வைத்துக்கொள்வோம். மனதில் இருந்து சொல்லுங்கள்: அவர்களுள் ஒரு ஆத்மார்த்தமான மனித-தொடர்பு இருக்குமா? நிச்சயமாய், உங்கள் பதில் இல்லையென்றே இருக்கும் அல்லவா?! ஏனெனில், நம்மில் எவரும் அப்படி நாம் சார்ந்த நிறுவனத்திற்காய் ஒன்றுபட்டு செயல்பட விரும்புவதில்லை. அதை நான் தவறென்றும் சொல்லவில்லை; இங்கே, வலியதே எஞ்சும்! எனவே, நாம் கூடியிருக்கும்போது பொழுதுபோக்கு/விளையாட்டு/அரசியல் அல்லது அதுபோன்ற பொதுத்துறை பற்றியே உரையாடல் இருக்கும். நாம் சார்ந்த நிறுவனத்தில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி வேண்டுமானால் ஒன்றுபட்டு பேசுவோம்/போராடுவோம்!

   ஆனால், நிறுவனத்தின் முன்னேற்றம் என்று வந்துவிட்டால், ஒவ்வொருவரும் நம்மால் அது நடக்கவேண்டும் என்றே நினைப்போம். மேலுள்ள புகைப்படங்களில் உள்ளோர் அன்பெனும் உயர்ந்த பண்பை கூட பரிமாறிக் கொண்டிருக்கலாம். எனவே, மேலுள்ள உதாரணங்கள் மனித-தொடர்பே அல்ல. பின், மனித-தொடர்பு என்றால் என்ன? என்ற கேள்வி எழும்; என்னுள்ளும் எழுந்தது. என்னளவில் மனித-தொடர்பு என்பது அறிவு/அனுபவம் இவை போன்றவற்றின் பரிமாற்றமாய்; சமுதாயத்திற்கு பயனுள்ளதாய் இருக்கவேண்டும். தெரியாத மனிதர்களிடையேயும் நடக்கலாம். நிச்சயமாய், கடற்கரையில் அமர்ந்து கூத்தடிப்பது/உணவகங்களில் குடிப்பது/சாப்பிடுவது இதுபோன்ற கேளிக்கைகளில் இல்லை! இந்த உதாரணத்தை கவனியுங்கள்: எங்கள் விவசாய நிலத்தில் பலர் பல்வேறு வேலைகளை செய்வதை கண்டவன் நான்; அவர்களுடன் நானும் தொடர்புகொண்டு சில நுணுக்கமான விசயங்களை கற்றவன்.

      சில மணித்துளிகளே எனினும், அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். அவர்களுக்கு இடையேயும் பல தொடர்புகள் இருந்தன; அவர்கள் எல்லோரும் விவசாய முன்னேற்றம் என்ற ஒன்றை நோக்கி ஒருங்கிணைந்து பணியாற்றினார். பின்னர் தொழில்நுட்பம் "Tractor" என்ற ஒன்றின் மூலம் வந்தது. மெல்ல, மெல்ல அவர்கள் அனைவரும் வேலையற்று; பல்வேறு இடங்களில் பிரிந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். அவர்களுள், ஒரு சிறு-உரையாடல் கூட இல்லாமல் போனது. இன்று பயிரிடுவது துவங்கி அறுவடை வரை அனைத்திற்கும் தொழில்நுட்பம் வழி செய்துவிட்டது; ஆனால், மனித-தொடர்பு? என்னளவில், இது ஒரு சிறந்த உதாரணம். மேலும் சொல்லவேண்டுமானால்: மாணாக்கர்-ஆசிரியர் தொடர்பு அறுபட்டதற்கு முதற்காரணம் தொழில்நுட்பம். இன்று, மேலாண்மைக்கும் - பணியாளர்களுக்கும் நேரடித் தொடர்பு அறவேயில்லை. எல்லாம், மின்னணு-கோப்பைகளில் பரிமாறப்படுகின்றன.

       அந்த கோப்பைகளால் மனித உணர்வு/தொடர்பு போன்றவற்றை பரிமாற்ற முடியாது. சமீபத்தில், அமெரிக்காவின் அலபாமா மாகானத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூருங்கள். அந்த காவலர்க்கு அறிமுகமற்ற ஒரு மனிதருடன் தொடர்பு கொள்ளவே தெரியவில்லை. அது, அவரின் பாதுகாப்பு உணர்வினால் விளைந்தது என்று ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம்; ஆனால், அங்கே மனித-தொடர்பே இல்லை என்பதே அப்பட்டமான உண்மை. அது அந்த காவலரின் தவறில்லை! அல்லது அவரின் தவறு மட்டுமில்லை! தன்னைத்தானே உலகின் வல்லரசு என்று கூறிக்கொள்ளும் ஒரு நாடு அணு/உயிரியல் ஆயுதங்களுக்காய் மிகப்பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்கிறது. என்னவொரு அவலம்? அவர்கள் "போர்க்களத்தில்" கூட நேரடியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை! இம்மாதிரியான அவலமான/அதீதமான மனித-தொடர்பு மீறல்களைப் பற்றி நாம் உணர்வதே இல்லை.  

     ஆனால், மேலுள்ளது போல் நகைச்சுவையான புகைப்படங்களை  மட்டும் வைத்துக்கொண்டு மனித-தொடர்புகள் மீறப்படுகின்றன/அழிக்கப்பட்டுவிட்டன என்று வாதிட்டுக்கொண்டு இருப்போம். உண்மையான மனித-தொடர்பு மீறல்கள்/அழித்தல்கள் ஆயிரமாயிரம் நடந்தேரிக்கொண்டே இருக்கின்றன. இப்புகைப்படங்களில் இருப்பது தான் உண்மையான மனித-தொடர்புகள் எனில், பல காலங்களாய் பேச்சு கூட இல்லாத நம் நட்பு/சுற்றம்/உறவு இவைகளை மீண்டும் நம்முடன் கொண்டு வந்து சேர்த்ததற்கு தொழில்நுட்பத்தை (நவீன அலைபேசி) நாம் பாராட்டிட வேண்டாமா? இருப்பினும், இதை நான் மனித-தொடர்பு என்பதாய் கருதவே இல்லை. அதனால் தான், என்னுடைய வாதங்களில் நான் திடமாய் இருக்கிறேன்; அதனால் தான், மனித-தொடர்பு என்பது இதுவல்ல என்று ஆணித்தரமாய் கூறமுடிகிறது. கண்டிப்பாக என்னுடைய புரிதல்கள், உங்களை உடன்பட செய்திருக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.
 
முதலில் மனித-தொடர்பு என்றால் என்னவென்று நாம் தெளிவாய் உணரவேண்டும்!!!     

பின்குறிப்பு: ஐன்ஸ்டீன் அவர்களின் ஊகிக்கப்பட்ட கருத்தாக இருப்பினும், அவருடன் ஒப்பிடுகையில் "மிகச்சிறு" இயற்பியலாளன் என்ற முறையில், அவருடன் தொடர்பு படுத்தி இத்தலையங்கத்தை எழுதும் வாய்ப்பு கிடைத்ததற்காய் பெருமிதம் கொள்கிறேன்.

ஆங்கில வடிவம்: http://vizhiyappan-en.blogspot.ae/2015/03/what-is-human-interaction.html

1 கருத்து:

  1. For me it has been a real pleasure to read your article, which I liked and moved a lot. Personally, if we talk about technology it is a fairly wide field and it is a complicated subject to discuss. However, based on the topic about "Human interaction", we can honestly show a sudden change that has occurred over time, in other words, the influence that different technological tools are having on our way of life is noticeable and how we have adapted to it. From a positive point of view, frankly in times of crisis such as the pandemic we are currently experiencing, the different electronic media are essential to maintain communication with our families. The concern of all this is that we do not think through, in such a way that the problem is that many people are not responsible enough to evaluate the consequences of our actions (ethics), a clear example is adolescents, who only believe it convenient to enjoy of the advantages that technology offers us and imagining that everything is rosy, browsing any page without prior knowledge of the risks.
    Clearly, technology has made our life easier, but all that glitters is not gold, in this way we must understand that technology also has a smokescreen and human beings are not capable of wrestle with the causes that are breaking ties in relation to direct contact between parent-child and others, which are being replaced by a screen. In addition, I would say that it is up to us to decide to be on the cutting edge to limit technology from pushing us over the cliff.
    In a nutshell, I share my feelings with you and I agree with everything you express. Therefore, we do not expect to be in the middle of the disaster to apply strategies that allow us to sort out the issue that overwhelms us from now on.

    Marisol Esther Huaccha Dávila.

    பதிலளிநீக்கு