ஞாயிறு, மார்ச் 29, 2015

செல்வ-மகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samridhi Account)


   உங்களில் பலருக்கும் செல்வ-மகள் சேமிப்பு திட்டம் எனும் மத்திய அரசின் Sukanya Samridhi Account பற்றி தெரிந்திருக்கும். இது இந்த ஆண்டு சனவரி 22-ஆம் தேதி துவங்கப்பட்டது. இது தபால்-துறை மூலம் இயக்கப்படும் ஒரு திட்டம். சில தினங்களுக்கு முன்னர் இத்திட்டம் தமிழகம் மற்றும் புதுவையில் இது துவங்கப்பட்டது; இத்திட்டத்தை பற்றிய பல கேள்விகள்/சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது. இது சம்பந்தமாய், மார்ச்சு 28-ஆம் தேதியன்று "தந்தி டி.வி." யில் இந்திய நேரப்படி 15:00 மணியளவில் சென்னை மண்டல "போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்" திரு. மேர்வின் அலெக்சாண்டர் அவர்களுடன் ஒரு நேர்காணல் நடந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் நான் அறிந்த விசயங்களை இப்படியொரு தலையங்கமாய் எழுதினால், பலருக்கும் உதவியாய் இருக்கும் என்று எண்ணினேன். எந்தவொரு தவறான தகவலோ/விளக்கமோ இங்கே கொடுத்துவிடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாய் இருக்கிறேன். இருப்பினும்... அப்படி ஏதேனும் தகவல் அறிந்தால், அது என் புரியாமையால் என்பதை அருள்கூர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள். அப்படி ஏதும் இருப்பின், எனக்கு தெரிவிக்கவும்.     

நிபந்தனைகளும்/ விதிமுறைகளும்:
  • செல்வ-மகள் சேமிப்பு திட்டம் (சுருக்கமாய்: செமசேதி) கண்டிப்பாக பெண் குழந்தைகளுக்கு மட்டுமானது; ஒரு குறிப்பிட்ட குழந்தையின் பெயரில் ஒரேயொரு கணக்கு மட்டுமே துவங்கமுடியும்; ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருப்பது தெரியவந்தால் - சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், எவ்விதமான நடவடிக்கைகள் என்பது பற்றிய அறிதல் எனக்கில்லை.
  • ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். இருப்பினும், 2-ஆவது பிரசவத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண் குழந்கைகள் பிறப்பின், அவர்கள் அனைவரும் முன்பே ஒரு பெண் குழந்தை இருப்பினும், அக்குழந்தையோடு சேர்த்தே தகுதி ஆகிறார்கள். ஆயினும், முதல் பிரசவத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறப்பின்; அதன் பின்னர் பிறக்கும் பெண் குழந்தைகள் இத்திட்டத்திற்கு தகுதியாவதில்லை. 
  • "செமசேதி" கணக்கில் ஆண்டொன்றுக்கு குறைந்தது 1000 இந்திய-உரூபாய்கள் செலுத்தப்படலாம்; அதிகபட்சமாய், 1,50,000 இந்திய-உரூபாய்கள் வரை ஆண்டொன்றுக்கு செலுத்தப்படலாம்.  "செமசேதி"யோடு சம்பந்தப்பட்ட ஆண்டென்பது "நிதி ஆண்டை" குறிக்கிறது; அதாவது ஏப்ரல் மாதம் முதல் மார்ச்சு மாதம் வரை. இன்று மார்ச்சு 29 என்பதால், இந்த நிதியாண்டு முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. ஒருவர் விரும்பினால், அதிக பட்ச தொகையை கூட இந்த 2 நாட்களில் முதலாண்டு தொகையாய் செலுத்திக்கொள்ளலாம். 
  • அதிகபட்ச காலமாய் 14 ஆண்டுகள் வரை வைப்பு தொகை செலுத்தப்படலாம். அதன் பின்னர், 7 ஆண்டுகள் எதுவும் செலுத்தாமல், இந்த கணக்கு நிலுவையில் இருக்கவேண்டும். அதாவது, இந்த "செமசேதி" திட்டத்தின் மொத்த ஆயுட்காலம் 21 ஆண்டுகள். இருப்பினும், தேவையிருப்பின், எந்த ஒரு நிலையிலும், இக்கணக்கை முடித்துக்கொள்ளலாம்; "முதிர்வு" தொகை அந்த காலத்திற்கு ஏற்ப கணக்கிடப்படும்.  
  • ஆண்டொன்றுக்கு இவ்வளவு கட்டவேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை! அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் கட்டப்படும் தொகையும் "நிலையானதாய்" இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. ஒவ்வொரு ஆண்டுக்கும், கட்டப்படும் தொகை வேறுபடலாம்; ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாய் 1,50,000 இந்திய-உரூபாய்கள் தான் செலுத்தப்படவேண்டும் என்பதே ஒரேயொரு நிபந்தனை. வைப்பு தொகை மொத்தமாகவும் கட்டப்படலாம்; 12 தவணைகளிலும் கட்டப்படலாம்.
  • "செமசேதி" கணக்கு துவங்கியதில் இருந்து, வைப்பு தொகை அதிகபட்சமாய் 14 ஆண்டுகள் வரை செலுத்தப்படலாம். அல்லது அந்த பெண் குழந்தை திருமணம் ஆகும் வரை வைப்பு தொகை செலுத்தப்படலாம்; முதலில் எது நிகழ்கிறதோ அது கணக்கில் கொள்ளப்படும். 14 ஆண்டுகள் நிறைவுற்ற பின்னர், மேற்கொண்டு எத்தொகையும் செலுத்த முடியாது.
  • பெண்ணிற்கு திருமணமாகும் பட்சத்தில், மேற்கொண்டு எந்த வைப்பு தொகையும் செலுத்த முடியாது. இருபினும், அந்த கணக்கை முழு ஆயுட்காலம் வரையில் (அதாவது, 21 ஆண்டுகள்) நிலுவையில் வைத்து; கட்டிய தொகைக்கு ஏற்ப "முதிர்வு"தொகை பெறமுடியும்.  
  • ஏதேனும் ஒரு காரணத்திற்காய், ஒன்று அல்லது மேற்பட்ட ஆண்டுகள் வைப்பு தொகை செலுத்த முடியாது போனால், ஆண்டுக்கு 50 இந்திய-உரூபாய்கள் வீதம் விடுபட்ட ஆண்டுகளுக்கு அபராதம் செலுத்தி புதுப்பித்துகொள்ளலாம். ஆனால், இப்படிப்பட்ட குறைவான அபராதம் மக்களை மெத்தனமாய் இருக்க வைக்கும் என்பதால், இந்த வழிமுறையில் எனக்கு உடன்பாடில்லை; இருப்பினும், இது என் கருத்து மட்டுமே. 
தேவையான தகுதி:
  • தற்போது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு ("செமசேதி" கணக்கு துவங்கும் நாளன்று) உட்பட்ட எந்த ஒரு பெண் குழந்தையும் "செமசேதி" திட்டத்திற்கு தகுதியானவர்கள். இருப்பினும், அறிமுக-ஆண்டு என்ற முறையில், ஓராண்டு உச்ச-வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2 திசம்பர் 2015 அன்று அல்லது அதற்கு முன்னர் 11 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது! அப்படி இருக்கும் எந்த பெண் குழந்தையும் தகுதி அடைகிறார்கள். குறைந்தது, இப்போதிருக்கும் நிலையிலாவது, அடுத்த ஆண்டிற்கு இந்த வயது நீட்டிப்பு செல்லாது என்றே தெரிகிறது. 
பயன்களும்/ முதிர்வும்:
  • இத்திட்டத்தில் செலுத்தப்படும் எந்த தொகைக்கும் "வருமான வரி" விலக்கு உண்டு. மேலும் விவரங்கள் "வருமான வரி துறை" மூலம் பெறப்படலாம். 
  • அதிக பட்ச தொகையான 1,50,000 இந்திய-உரூபாய்கள் 14 ஆண்டுகள் செலுத்தப்பட்டு, மேலும் 7 ஆண்டுகளுக்கு அந்த கணக்கு நிலுவையில் வைக்கப்பட்டால் - மொத்த "முதிர்வு"தொகையாய் 79,00,000 இந்திய-உரூபாய்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதாவது, "செமசேதி" கணக்கு துவங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு. 
  • அதிகபட்ச தொகைக்கு கீழே செலுத்தப்படும் தொகைக்கு, செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப "முதிர்வு" தொகை கிடைக்கும். 
  • 21 ஆண்டுகள் நிறைவு பெரும் முன்னர், செலுத்தப்பட்ட தொகையில் 50 விழுக்காடு வரை பெண் குழந்தையின் உயர்கல்வி/திருமணம் இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்திற்காய் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. இருப்பினும், இந்த 50 விழுக்காடு மொத்த "முதிர்வு" தொகையில் சரிபாதியா? என்பது தெளிவாய் விளக்கப்படவில்லை. 
"செமசேதி" கணக்கு துவங்குதலும், பராமரிப்பும்:
  • பெற்றோர்/இயற்கையான பாதுகாப்பாளர்/சட்டபூர்வமான பாதுகாப்பாளர் - இவர்களில் எவரேனும் ஒருவர் சம்பந்தப்பட்ட பெண் குழந்தைக்காய் "செமசேதி" கணக்கை துவங்க முடியும். பெற்றோர்/இயற்கையான பாதுகாப்பாளர்/சட்டபூர்வமான பாதுகாப்பாளர் - இவர்களில் கணக்கை துவங்குவோரது புகைப்படம் மற்றும் முகவரியுடன் கூடிய "ஆதார்" போன்ற ஆவணத்துடன் "செமசேதி" கணக்கை துவங்க முடியும். சில தபால் அலுவலகங்கள் பெண் குழந்தையின் புகைப்படத்தை கேட்பதாய் தெரிகிறது; ஆனால், இது கட்டாயம் அல்ல
  • கணக்கு துவங்கிய பின்னர், எவர் வேண்டுமானாலும் அதில் வைப்பு தொகையை செலுத்தலாம்.
  • 10 வயது நிரம்பிய பெண் குழந்தை, தபால் அலுவலத்திற்கு சென்று தன் கையொப்பத்தை இட்டு தானே வைப்பு தொகையை செலுத்திக் கொள்ள இயலும். 
  • ஆயினும் 18 வயது நிரம்பிய பின்னர், சம்பந்தப்பட்ட பெண் குழந்தையே "செமசேதி" கணக்கை பராமரிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. அதேபோல், 18 வயது நிரம்பிய பின்னர், சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படமும், முகவரியுடன் கூடிய ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. 
எங்கே விண்ணப்பிப்பது?:
  • தற்போதைய நிலையில், "செமசேதி" கணக்குகள் தபால் அலுவலகங்களில் மட்டுமே துவங்குதல் சாத்தியம். இருப்பினும், பிற்காலத்தில் இந்த கணக்குகள் வங்கிகள் அல்லது இணையதளம் மூலம் துவங்கப்படுதல் சாத்தியம் ஆகக்கூடும்.
  • வைப்பு தொகையை கூட்டுதலும் தற்போதைய நிலையில் தபால் அலுவலகங்களில் மட்டுமே செய்தல் சாத்தியம். இருப்பினும், இணையதளம் மூலம் செலுத்துதல் போன்ற பல வழிவகைகள் பிற்காலத்தில் சத்தியமாகக்கூடும் என்று தெரிகிறது. 
தொடர்புகள்:
  • மேலும் பல விபரங்கள் கீழ்க்கண்ட தொடர்பு எண்கள் மூலம் பெறப்படலாம்: +91 44 28594745 and +91 94430 48028. இரண்டு எண்களும் சென்னை மண்டலத்தோடு தொடர்புடையவை; மற்ற தொடர்புகள் என்னிடம் இல்லை. 
  • இந்த http://www.indiapost.gov.in/SukanyaSamriddhi.aspx இணைப்பு மூலம் மேலும் பல தகவல்களை அறியலாம். 
ஆண் குழந்தை:
  • ஆண் குழந்தைகளுக்கு ஏதும் இல்லையா? என்று எவரும் வியப்பின் - ஏற்கனவே "Public Provident Fund (PPF)" என்ற திட்டம் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் இருபாலருக்கும் நடைமுறையில் உள்ளது என்பதை அறிக. "செமசேதி" திட்டம் 9.1 விழுக்காடு வட்டி கொடுக்கிறது; மாறாய், PPF திட்டம் 8.7 விழுக்காடு மட்டுமே வட்டி கொடுக்கிறது. எந்த ஒரு நாட்டுக்கும் பெண் குழந்தைகளே விளைமதிப்பற்றவர்கள் என்பதால் மட்டுமே, இந்த 0.4 விழுக்காடு அதிக வட்டி கொடுக்கப்படுகிறது. 
பின்குறிப்பு: இத்தலையங்கம் பயனுள்ளதாய் நீங்கள் உணர்ந்தால், அருள்கூர்ந்து இதை உங்கள் சுற்றத்தில் பகிரவும். அனைத்து பெண் குழந்தைகளும் இத்திட்டத்தால் பயனடையட்டும்.

ஆங்கில வடிவம்: http://vizhiyappan-en.blogspot.ae/2015/03/sukanya-samridhi-account.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக