வெள்ளி, மார்ச் 16, 2012

என்ன வாழ்க்கை இது?...




        என்ன வாழ்க்கை இது? - நான் அடிக்கடி குறிப்பிடும்படி என்னவளும், என் மகளும் கடந்த ஓராண்டு காலமாய் இந்தியாவில் இருக்கிறார்கள்; அவர்கள் என்னுடன் இல்லாததிலிருந்தே என்னுள் அடிக்கடி எழும் கேள்வி தான் இது - என்ன வாழ்க்கை இது? சேமிப்பு என்பதை பற்றி நான் யோசிக்க கூட தவறியதன் காரணமாய், பொருளாதாரத்தை மையமாய் கொண்டு இங்கே தனியே சிறிது காலம் இருக்கவேண்டிய கட்டாயம். அதன் அவசியத்தை என்னுடைய சமீபத்திய தலையங்கத்தில் கூட குறிப்பிட்டிருந்தேன். இந்த தனிமை என்னென்ன விளைவுகளை உண்டாக்குகிறது, அதனால் உருவாகும் மன அழுத்தங்கள் மற்றும் பல விசயங்களை என்னுடைய பார்வையில் இங்கே விளக்கியிருக்கிறேன். என்னவள் என்னுடன் இல்லாதது மிகப்பெரிய வலி எனினும், அதை என்னால் உணர்ந்து உள்வாங்கிக்கொள்ள முடிகிறது; இந்த தனிமையின் அவசியத்தை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், என்னுடைய மகள் விசயத்தில் அவ்வாறு எளிதாய் சமாதானம் அடைய முடியவில்லை. அவள் பள்ளி ஆண்டு விழாவுக்காய் "நடனம்" எல்லாம் கற்று ஆடுகிறாளாம், இந்த வயதில்; என்னால் எதையும் உடனிருந்து பார்க்கமுடியவில்லை. உடனே எழுவது தான் - என்ன வாழ்க்கை இது! ஒவ்வொரு வாரக் கடைசியிலும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒரு மணி நேரம் இணையம் மூலமாய் அவளிடம் உரையாட மட்டுமே முடிகிறது. அதுவும் பல நேரங்களில் பல்வேறு காரணங்களால் தடைபடுகிறது. பெரும்பான்மையான குழந்தைகள் போல், அவளும் தொலைபேசியில் பேசுவதை விரும்புவதில்லை; இல்லையேல், தினமும் கூட அவளிடம் சிறிது நேரம் உரையாட முடியும்.

        வருடம் ஒரு முறை இந்திய சென்று வருவது தான் வழக்கம்; சில நேரத்தில் ஒன்றரை வருடம் கழித்து கூட சென்றிருக்கிறேன். ஆனால், இப்போது வருடம் இருமுறை சென்று வருகிறேன்; கடந்த முறை இந்தியா சென்று வந்த பின்பு ஒவ்வொரு முறை அவளிடம் இணையம் மூலம் பேசும் போதும் (அரிதாய் அவள் பேசும் தொலைபேசி உரையாடலின் போதும்) அவள் "அப்பா! இங்கே வா!! இங்கே வா!!!" என்று விடாது அழைத்துக்கொண்டே இருப்பாள். நானும் அப்போதைக்கு ஏதேனும் சமாதானம் சொல்லி சமாளிப்பேன்; ஆனால், அவள் முகம் வாடுவதை கண்கூடாய் பார்க்கமுடியும். அவளும் ஒரு மாதத்திற்கும் மேலாய் அழைத்து ஒரு சமயத்தில் நிறுத்தி விட்டாள். நானும், சரி அவள் என்னால் வர முடியாது என்பதை உணர்ந்து கொண்டாள் என்று எண்ணினேன். ஆனால், அது தவறு என்று ஓர் நாள் புரிந்தது! ஓர் நாள் அவளை பேச அழைக்கும் படி என்னவளிடம் கூறினேன்; என்னவள் அழைத்ததும் என் மகள் "அப்பா மேல் கோபமாய் இருக்கேன்" என்று பதில் சொன்னாள். நான் அப்போதைக்கு அதை விளையாட்டாய் எடுத்துக்கொண்டேன்; ஓர் நாள் இணையத்தில் வந்தவள் எப்போதும் என்னை பார்த்ததும் எப்போதும் "அப்பா! அப்பா!! அப்பா!!!" என்றழைப்பவள் அன்று ஓர் வார்த்தை கூட பேசவில்லை. மாறாய், அன்று எப்போதும் அல்லாது அவள் கணினியில் Tom & Jerry Cartoon பார்க்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்காய், அவள் பிறக்கும் முன்னர் இருந்தே அந்த cartoon-களை நான் தான் சேகரித்தேன் எனினும், அது என்னை மிகவும் பாதித்து விட்டது. அதனால், என்னவளிடம் கூட எதுவும் சொல்லாது இணையத்தை துண்டித்துவிட்டு சென்றுவிட்டேன்.      

             இந்த பாதிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களில் என்னப்பன் எனக்கு விடுபட்ட அழைப்பு (Missed Call) கொடுத்தார். நான் பலமுறை அவருக்கு விடுபட்ட அழைப்பு கொடுத்த பின் சிறிது காத்திருக்க சொல்லியிருக்கிறேன்; கணினி மூலமாய் என் தொலைபேசிக்கு அழைத்து பின்பு அவருக்கு அழைக்கவேண்டும் என்று விளக்கியிருக்கிறேன். ஆனால் அவருக்கு அது புரிந்ததாய் தெரியவில்லை. நான் மீண்டு அழைக்கும் முன் பல முறை விடுபட்ட அழைப்பு கொடுப்பார்; இருவரும் ஒரு சேர உபயோகத்தில் இருப்பதால் என்னால் அவரை தொடர்பில் வரவழைக்க இயலாது. சில முறை அவரை சிறிதாய் கடிந்திருக்கிறேன். அது போல் அன்றும் பலமுறை அழைத்துவிட்டார்; நான் ஏற்கனவே என் மகள் பேசாத அழுத்தத்தில் இருந்ததால் அவரை பெரிதாய் கடிந்து கொண்டேன். அவரின் நீண்ட நாள் கனவான "புதிய இரண்டு சக்கர வாகனம்" வாங்கி அதை கடையில் இருந்து எடுத்து செல்லும் முன் முதலில் எனக்கு தெரிவிக்க (ஓர் குழந்தையின் மனநிலையோடு) அழைத்தவரை இவ்வாறு நோகடித்தது பின்பு தெரிந்தது! அவர் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை எனினும், என்னால் இன்னமும் கூட அந்த நிகழ்வை சீரணிக்க முடியவில்லை. என் மகள் பேசாததால் ஏற்பட்ட அழுத்தம், ஒரு சிறிய விசயத்திற்காய் என் தந்தையின் மனதை காயப்படுத்தும் அளவிற்கு சென்றுவிட்டது - என்ன வாழ்க்கை இது! பிறகு, காரணமே இல்லாமல் பகல் 12:30 மணியளவில் படுத்து உறங்கிவிட்டேன்; அன்றைய பொழுதையே வீணாக்கிவிட்டேன்.

       பின் ஒன்று புரிந்தது! என் மகள் என்னை அழைத்து, அழைத்து பார்த்து நான் வராததால் ஏமாற்றமும், கோபமும் அடைந்திருக்க வேண்டும்!! பாவம்!!! குழந்தை உள்ளம்; என்னாலேயே என்னை - என் உணர்வுகளை, உணர்ச்சிகளை - கட்டுப்படுத்த முடியாத போது மூன்று வயது கூட ஆகாத அந்த குழந்தையால் எப்படி இதை உணர்ந்து அவளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்? என் செய்கை உணர்ந்து கூனி குறுகினேன்; என் தவறு உணர்ந்தேன். பின் ஒரு நாள் என் தாயை அழைத்து பேசினேன்; நடந்தவற்றை விளக்கினேன். என் தாய் மிகவும் வேதனை அடைந்து என்னை கடிந்துகொண்டார்; அவள் ஒரு சிறிய குழந்தை தானே! அவளுக்கு என்ன தெரியும்; அவள் விளையாட்டு பிள்ளை தானே டா!! என்றார். அவரிடம், என் மகள் நான் அவள் அழைத்ததும் வராததால் கோபமாய் இருக்கக் கூடும் என்றேன்! அவர் இருக்காதா பின்னே! உன் மகள் தானடா அவள்? உனக்கு வரும் கோபம் அவளுக்கும் வரும் தானே என்றார். என்னுடைய வேதனையை என்னைப் பெற்றவளுக்கும் கொண்டு சேர்த்துவிட்டேன். அவர் அவன் மகன் வேதனையைக் கண்டு வேதனை அடைந்திருக்கக்கூடும். அப்போது தான் என் தாய், நான் 1989 - லிருந்து வீட்டை விட்டு வெளியே தங்கி வாழ்வதை (அதாவது என் தாயை பிரிந்து வாழ்வதை) தொடர்ந்து மனம் நொந்து சொல்வதை நான் சிறிதும் பொருட்படுத்தாது அவரின் அந்த கருத்தை உதாசீனப்படுத்தியது புரிந்தது! உடனே, என் மகள் என்னைப்போல் தானே என்னைப் பொருட்படுத்தாது இருக்கிறாள் - அதுவும் இந்த சிறிய வயதில் - அதில் என்ன தவறு இருக்கமுடியும் என்ற கேள்வியும் எழுந்தது!

      என் தாயிடம் பேசிய பின் எனக்கும் பெரும் தெளிவு வந்தாதாய் தோன்றிற்று! நான் எழுதிய "குழந்தை வளர்க்க" என்ற புதுக்கவிதையை நானே முழுக்க உள்வாங்காததாய் உணர்ந்தேன். ஆம்! குழந்தை வளர்க்க குழந்தையாய் மாறவேண்டும் என்று கூறிய நானே, என் தனிமை இழைத்த வெறுமை பால் அவளின் மனநிலைக்கு சென்று என் மகளை உணராது தவறினேன். இத்துனை அகவை கடந்தும் நானே, நினைத்தது நடக்கவில்லை எனில் நிலைதடுமாறும் போது, அந்த பிஞ்சு உள்ளம் தானழைத்ததும் தந்தை வரவில்லை என்பதால் எப்படி தன்னிலை மாறாது இருக்க முடியும்? பொருளாதார சூழ்நிலை காரணமாய், என்னுடைய தெளிவில்லாத திட்டமிடுதலால் நான் இங்கு இருக்கவேண்டிய கட்டாயத்தை என் மகள் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இல்லை அவளுக்கு புரியும் வயது தான் வந்துவிட்டதா?? என் மகள் என்னுடன் இல்லாததன் கொடுமையை அதற்கான காரணம் புரிந்தும் என்னால் மீண்டு வர முடியவில்லையே! அவளை மட்டும் அதைத் தாண்டி வரவேண்டும் என நான் எதிர்ப்பார்ப்பது எங்கனம் நியாயமாகும்??? கண்டிப்பாய் இது மாதிரி பல தந்தைகள் மற்றும் தாய்கள் இருக்கிறார்கள்; என் மகளாவது பரவாயில்லை - அவளின் தாயுடனும் மற்றும் அவளின் அம்மம்மா மற்றும் அம்மப்பாவுடன் இருக்கிறாள். எத்துனை பெற்றோர்கள் தனித்தனியே வெவ்வேறு தேசத்தில் (அதாவது தாய்தேசம் தவிர்த்து) இருக்கிறார்கள்? குழந்தை தாயுடன் மட்டும் (அல்லது சில தருணங்களில் தந்தையுடன்) வாழ்ந்து அவதிப் பெறுகிறார்கள்??

        இதை விட கொடுமை, ஒரே தேசத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருப்பது! அதையும் தாண்டிய கொடுமை, திருமணம் நடந்து முடிந்தவுடனேயே கணவனும் மனைவியும் பிரிந்திருப்பது. இதைப் பார்க்கும் போது என்னுடைய நிலை அத்துணை கடினமானதாய் இல்லை என்பது புரிகிறது. மிக நிச்சயமாய் மகளை (குழந்தையை) பிரிந்திருப்பது இம்மாதிரி தனிமைப்பட்டவர்களின் வேதனைகள் பலவற்றில் ஒன்றே!! இது போல் பல பிரச்சனைகள் உள்ளன - வயதான பெற்றோர், வறுமையில் வாடும் பெற்றோர் போன்று பல காரணங்கள் உள்ளன, "என்ன வாழ்க்கை இது" என்று யோசிக்க. ஏனோ, இதை என் மகளின் பிரிவை முன்வைத்து விளக்கவேண்டும் என்று தோன்றியது! உண்மைதானே!! பெற்றோரின் வாழ்க்கை - குறிப்பாய் பிரிந்து இருப்பவர்க்கு - பெரிதும் குழந்தைகளை சார்ந்தே அல்லவா இருக்கிறது!!! அதனால், என் மகளை முன்னிறுத்தி விளக்கியது பொருத்தமானதாய் படுகிறது. சமீபத்தில் வெளிவந்த ஓர் தமிழ் படத்தில் ஐந்து ஆண்டுகள் கழித்து (பிறந்து ஓர் முறை கூட பார்க்காது) மகளைப் பார்க்கப்போகும் ஓர் தந்தையின் மனநிலையை அவர்களுக்குள் நடைபெறும் தொலைபேசி உரையாடலை மட்டும் கொண்டு மிகச்சிறந்த திரைக்கதை அமைத்து ஓர் இயக்குனர் விளக்கி இருந்தார். கண்டிப்பாய் என்னை மட்டுமல்ல! அனைவரையும் (மீண்டும் குறிப்பாய், பிரிந்து வாழும் பெற்றோரை) அந்த காட்சிகள் பாதித்திருக்கும். பொருளாதாரப் பிரச்சனை காரணமாய் நிகழும் இந்த பிரிவை உணர்த்த மிகச் சிறந்த உவமானம் அது! தவறை நம் மீது வைத்துக் கொண்டு குழந்தை மீதோ மற்றவர் மீதோ கோபத்தை வெளியிடுதல் எங்கனம் நியாயமாகும்? கண்டிப்பாய் என்னைப் போன்றவர் எவரும் இருப்பின், இதை சரியாய் உணர்தல் வேண்டும்.

பிரிவை விட இத்துயரங்கள் எவையும் வலிமையானதல்ல!!!
       
பின்குறிப்பு: இத்துனை உணர்ந்தும் கூட இத்தலையங்கம் வெளியிடும் இரண்டு நாட்கள் முன்னர், மீண்டும் மீண்டும் அழைத்தும் என் மகள் தொலைபேசியில் பேசாததால் சிறிது கோபம் வந்தது. ஆனால், வந்த வேகத்திலேயே மறைந்ததும் கூட; நான் இதை இன்னும் பொறுமையாய் சிறிது காலத்திற்கு பழகவேண்டும்; பிறகு தான் இது எனக்கு இயல்பாய் வருதல் சாத்தியம் என்பது புரிந்தது.

2 கருத்துகள்: