ஞாயிறு, அக்டோபர் 07, 2012

உள்ளூர் விசயம்னா, இளக்காரமா???

     
        நான் பெரும்பாலும், ஆங்கில திரைப்படங்களை பார்ப்பதில்லை; அதற்கு முழுமுதல் காரணம் - என்னால் அனைத்து உரையாடல்களையும், உணர்வுப்பூர்வமாய் "புரிந்து" உள்வாங்க முடியாது என்பதே! தமிழ்-திரைப்படங்கள் பார்க்கும் போது கூட சில உரையாடல்கள் தெளிவாய் கேட்கவில்லை என்றால், மீண்டும் அதை கேட்கும் வழக்கம் உண்டு. ஆங்கிலப் படங்களில் வலுவான-கதைக்களங்கள் இருந்தும், அவர்கள் நம் திரைப்படங்கள் போல் அதிகம் உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை!! அவர்கள் அதிகம், தொழில்நுட்பத்தை ஒட்டி "பிரம்மாண்டம்" காண்பிப்பர் என்பது என் எண்ணம். பெரும்பாலான ஆங்கில திரைப்படங்கள் வேற்று-கிரகவாசிகள் (Aliens) அல்லது வேற்று-கிரக பொருட்கள் (UFO போன்று), "நம்பமுடியாத கதாநாயகர்கள்" மற்றும் "மாயாஜாலங்கள்" - இவற்றை அடிப்படையாகக் கொண்டது! கண்டிப்பாய், சில தலைசிறந்த படங்கள் உண்டென்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இத்தலையங்கம் எந்த மொழி திரைப்படம் சிறந்தது என்பதை முன்னிறுத்தியும் அல்ல!! நம்மில் பெரும்பாலானோர், ஆங்கிலத் திரைப்படங்களையும் - நம் திரைப்படங்களையும் எவ்வாறு "இரு-நிலை" கொண்டு விமர்சிக்கிறோம் என்பதை உணர்த்தவே. நமக்கு, "உள்ளூர் சரக்கு" எனும் ஓர் இளக்காரம் இருப்பதை மறுக்க முடியாது. சென்ற வாரத்தில், சமீபத்தில் வெளியான 3 தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப்படங்களை பார்த்தேன். இயற்கையாய், 3 திரைப்படங்களும் வேற்றுகிரகம் சார்ந்த கற்பனையை மையம் கொண்டிருந்தது. 

      உண்மையில், அந்த 3 திரைப்படங்களும் அருமையான விதத்தில் எடுக்கப்பட்டுள்ளன என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. என்னுடைய கேள்வி - ஏன் நாம் அதே மாதிரியான படங்கள் தமிழில் (அல்லது வேறு எந்த இந்திய மொழியில்) வந்தால் மட்டும் அதே உணர்வோடும், விருப்புடனும் பார்க்க மறுக்கிறோம்? உதாரணத்திற்கு; பேய் அல்லது சாமி- பிடித்திருக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் என்று வைத்துகொள்வோம்! பேய் மற்றும் சாமி-பிடித்தல் என்பவை "உண்மை" இல்லை என்ற "அதிபுத்திசாலித்தனம்" உடனடியாய் வந்துவிடும். அது எப்படி? எவரும் பார்த்திராத வேற்றுக்கிரக வாசிகள் (அல்லது பொருட்கள்) பற்றி ஓர் ஆங்கிலத் திரைப்படம் சொல்லும்போது வராத "அதிபுத்திசாலித்தனம்" உள்ளூரில் வெளியான தமிழ்த் திரைப்படம் பார்க்கும் போது மட்டும் வருகிறது? நன்றாக, நினைவு கொள்ளுங்கள்: இந்த "பறக்கும்-தட்டு" போன்ற விசயங்களை குறிப்பிட்ட ஓர் சில நாடுகள் மட்டுமே தொடர்ந்து பார்த்ததாய் - அது குறித்த கதைகளை பரப்பி வருகின்றன! எதுவாயினும், அந்த நம்பிக்கை உண்டென்பது ஏற்கப்படின் - நம் கிராமம் மற்றும் சாதாரண மக்கள் கூறும் "பேய் மற்றும் சாமி-பிடித்தல்" உண்டென்பதும் ஏற்கப்படவேண்டும். ஏன் இந்த மாறுபட்ட நிலை? ஒருவேளை, அவர்கள் காண்பிக்கும் "பிரம்மாண்டங்களால்" சிந்திக்கும் திறன் மறு(றை)க்கப்படுகிறதோ? அல்லது "வெள்ளையா, இருப்பவன் பொய் சொல்லமாட்டான்" என்பது போல, வெளிநாட்டவன் சொன்னால் உண்மை என்று கொள்கிறோமா?

        நிலவிற்கு செல்வதாயும், அங்கே வித்தியாசமான மனிதர்கள் (அல்லது ஜந்துக்கள்) இருப்பதாயும் காண்பிப்பதை நம்பும்போது, ஏன் நம் ஊரில் நிலவில் "பாட்டி - வடை சுடுகிறாள்" என்று கூறும்போது "இளக்காரம்" வருகிறது? இரண்டும் கற்பனையே! கற்பனையின் வீரியமும், செயல்படுத்தும் மனிதர்கள் வேண்டுமானால் வேறுபடலாம்!! ஒருவன் "வேற்றுக்கிரக மனிதர்கள்" இருப்பதாய் கூறுகிறான்; இன்னுமொருவன் அங்கே பேய்களும், பிசாசுகளும், தெய்வங்களும் இருப்பதாய் கூறுகிறான்!!! ஒன்று இருவரையும் நம்புங்கள்; அல்லது எவரையும் நம்பாதீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? இரண்டு நம்பிக்கை சார்ந்த விசயங்களுக்கும் எந்த திடமான-ஆதாரமும் இதுவரை இல்லை; பின் எப்படி, ஒன்றை மட்டும் நம்பத் தோன்றுகிறது? மேலும், இன்னொன்றை நம்பாதது மட்டுமல்லாது, "கீழ்த்தரமாய்" விமர்சிக்கவும் முடிகிறது?? "ஆங்கிலம்" பேசுவது தான் புத்திசாலித்தனம் என்ற "style statement" போல "ஆங்கிலத்-திரைப்படம்" தான் சிறந்தது என்ற "நஞ்சை" நம்முள் விதைத்து விட்டோமா/ விட்டார்களா? ஆங்கிலப்படங்கள் பார்க்கவேண்டாம் என்று கூறவில்லை! ஆனால், அதற்கு நிகரனான/ அது போன்ற தமிழ்த்திரைப்படங்களையும் ஆதரியுங்கள் என்றே கூறுகிறேன். ஓர் தமிழ்-கதாநாயகன் "தோட்டாவை" கையால் பிடிப்பதையே "கிண்டலடிக்கும்" இவர்கள், ஆங்கிலப்படங்களில் தன் உடம்பில் புதைந்த தோட்டாக்களை - கதாநாயகன் - "Just like that" தொடைத்தெரிந்து விட்டு போகும்போது மட்டும் ஆரவரிப்பது ஏன்? பெரிய இரும்பு-கதவுகளை பிளந்து செல்லும்போது "வாய்-பிளந்து" பார்ப்பதேன்??

   ஓர் தமிழ்-திரைப்படத்தில் ஒரு காட்சி அல்லது கதைக்கரு வேறொரு ஆங்கிலப்படத்தில் இருந்துவிட்டால் போதும், உடனே - நான் அந்த ஆங்கிலப் படத்தை பார்த்திருக்கிறேன்; அதை அப்படியே எடுத்திருக்கிறார்கள் என்று உடனே தன் "அறிவு-ஜீவி" தனத்தை காண்பிப்பது! அந்த ஆங்கிலப்படம் எந்த மொழியின் தழுவல் என்பதை அவர்கள் ஆய்வதில்லை!! ஆங்கிலம் தான் அவர்களின் எல்லை!!! உண்மையில், ஒரு திரைப்படமோ/ நாவலோ/ கதையோ ஒரு மொழியில் இருந்து மற்ற மொழிக்கு தழுவி செல்லவேண்டும்; அது புலம்-பெயர வேண்டும். "பாரதி" என்ற கவிஞனின் விடுதலை-உணர்வை நேசித்து, தழுவி - தன்னை "பாரதி-தாசனாய்" மாற்றிக்கொண்டவரை எவரும் "தழுவியவர்" என்று வாதிட்டதில்லை; மாறாய், அவர் "புரட்சிக்-கவிஞர்" என்றானார்! ஒரு மொழிக்குள்ளேயே, கருத்து-தழுவல் பெரிய வேறுபாட்டை காட்டுமெனில், இருவேறு மொழிகளில் உருவாகும் இரு-திரைப்படங்களில் தழுவல் இருப்பதில் தவறெதுவும் இல்லை. சொல்லப்படும் இடமும், சென்று சேரும் இடமும் தான் கவனிக்கப்படவேண்டும். தழுவல் கூடாது எனின், Pizza துவங்கி இங்கே பிரபலமாகி இருக்கும், பலவும் தழுவல் தான். இது மாதிரி பல தழுவல்களை நாம் சிறிதும்-கூச்சமின்றி ஏற்கிறோம். ஆனால், ஒரு திரைப்படம் வந்து விட்டால் மட்டும் "அறிவுஜீவித்தனம்" வந்து விடுவது ஏன்??? ஏனெனில், ஆங்கிலப்படங்கள் பார்க்கிறேன் என்பதையே ஓர் "கர்வத்துடனும், திமிருடனும்" சொல்லப் பழகி விட்டோம்! அதுதான் சிறந்தது என்று "போலியாய்" நம்ப ஆரம்பித்துவிட்டோம்!!

         ஆங்கிலப்படங்களில் உலாவந்த பலவேறு "சூப்பர் ஹீரோ"-க்களை கொண்டாடிய நாம், சமீபத்தில் "எதார்த்த-கதையோடு" வெளிவந்த "முதல்-தமிழ் - சூப்பர் ஹீரோ" திரைப்படத்தை நெருங்கி சென்று கவனிக்கக் கூட தவறிவிட்டோம் - உள்ளூர் "சூப்பர் ஹீரோ" என்பதாலா? எத்தனையோ ஆங்கிலப்படங்களில், "மிக அருவருப்பான" உருவம் கொண்ட மனிதர்கள் அல்லது எந்த இனம் என்றே தெரியாத "ஜந்துக்கள்" காண்பிக்கப்படும் போது, மெய்-சிலிர்க்கிறோம்; "ஆஹா" என்ன ஒரு தொழில்நுட்பம் என்று வியக்கிறோம். அது அருவருப்பு என்று உணர்வதே இல்லை! நம் ஊரில் - ஒரு நடிகன் "தசாவதாரம்" என்றொரு திரைப்படம் எடுத்து - பல வேடங்களை காண்பிக்கும் போது - மட்டும், "பாட்டி-வேடம்" அருவருப்பாய் உள்ளது என்ற "விமர்சனம்" (அதுவும் "திருட்டு VCD - ல் பார்த்துவிட்டு). உருவம் முக்கியம் எனில், ஆங்கிலப்படத்தையும் விமர்சிக்க வேண்டும்; மாறாய், அதை பாராட்டக்கூடாது. அவர்களுக்கு ஆங்கிலம் தவிர்த்து மற்ற திரைப்படங்களை குறை-கூறுவதற்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டும் - அவ்வளவே; நியாயம் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. தசாவதாரம் திரைப்படத்தில் "வேடங்கள்" தவிர்த்து பல அபூர்வமான விசயங்கள் உள்ளன; அதை அவர்கள் உணரக்கூட முயற்சிக்கவில்லை! ஆனால், எத்தனையோ ஆங்கிலப்படங்களில் வரும் அருவருப்பான-உருவங்களை தாண்டி சென்று அவர்களால் திரைப்படத்தை பாராட்ட முடிகிறது. ஏன், அது தமிழ்ப்படம் என்று வரும்போது மாறுகிறது? ஏனெனில், அவர்களுக்கு உள்ளூர் விஷயம் எனில்…

மிகவும் இளக்காரமாய் படுகிறது!!!

பின்குறிப்பு: திரைப்படம் என்பது ஓர் வலிமையான ஊடகம் என்பதால் தான், அதைக் கொண்டு இந்த "இளக்கார" எண்ணத்தை விவாதித்துள்ளேன். சென்ற வாரம், "பொறுமை(காத்து), மன்னிக்க(வும்)… நன்றி!!!" என்ற தலையங்கத்தில் மேலைநாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உண்டு என்பதை உணர்த்தியிருந்தேன்! அதே போல் நாம் - உள்ளூரில் உள்ள பல விசயங்களை பாராட்ட, அதை தொடர்ந்து செய்திட தவறக்கூடாது!! சுயத்தை மதிக்க தவறிய எந்த மனிதனும், வளர்வது இல்லை!! ஏனோ முடிக்கும் முன் நான் அடிக்கடி கேட்கும் "நெஞ்சே, நெஞ்சே… மறந்து விடு" என்ற தமிழ்-திரைப்பட பாடல் நினைவுக்கு வந்தது; உடனே அந்த பாடலை கேட்டுக்கொண்டே தான் தான் இந்த "வரியை"  தட்டச்சு செய்து நிறைவு செய்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக