ஞாயிறு, அக்டோபர் 28, 2012

தமிழழகனும், "ஸ்ரிவிஷ்வேஷ்"-உம்...



      சமீபத்தில் - "தமிழழகன்" என்ற பெயரை நாளிதழில் வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தது!  தமிழ்ப்பெயர்கள் மேல் எனக்கு உள்ள தாகத்தை பலமுறை எடுத்து கூறியுள்ளேன்; தமிழின் சிறப்பு எழுத்தாம் "ழ"-கரம் பற்றி ஓர் கவிதையில் முன்பே வெளியிட்டிருக்கிறேன். அதிலும், மேற்குறிப்பிட்ட பெயரில் "2 ழ-கரங்கள்"  அடுத்தடுத்து இருந்தததை கண்டபோது - நான் பெருமகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். உண்மையில், இது முன்பே தெரிந்திருப்பின் என் மகளின் பெயரில் கூட அவ்வாறு வர முயற்சித்திருக்கலாமே என்ற ஓர் "சிறு-ஆசையும்" உண்டாயிற்று. இலங்கையைச் சேர்ந்த ஓர் தமிழன்பர் பெயர் கூட எனக்கு மிகவும் பிடிக்கும் - "சிவரூபன்". இது போன்ற பெயர்களை உள்வாங்கி - ஆழ யோசித்துக்கொண்டிருக்கும் போது - நிகழ்கால தமிழர்கள் எவ்வாறெல்லாம் "தமிழ் அல்லாத" பெயர்கள் வைக்கிறார்கள் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது! இது, கண்டிப்பாய் சம்பந்தப்பட்டவர்களின் "உரிமை" என்பது புரிந்திடினும் - அவர்கள் அந்தப் பெயர்களை தமிழில் வைக்கலாமே! என்பதை என்னுடைய பார்வையில் விளக்கியிருக்கிறேன். முழுக்க, முழுக்க "தமிழ் அல்லாத" பெயர்கள் வைத்திருப்பவர்களைப் பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை - அது விடுவிக்கப்படலாம். தமிழும் அல்லாது பிறமொழியும் அல்லாது - கலப்படமான பெயர்களை மட்டுமே நான் விவாதத்துக்கு எடுத்துள்ளேன். கண்டிப்பாய், இது சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்தும் முயற்சி அல்ல; "பெயரில் என்ன இருக்கிறது?" என்று கவனக்குறைவாய் இருக்கவேண்டாம் என்பதை உணர்த்தவே!

      பெரும்பாலும், வடமொழி எழுத்துக்கள் அடங்கிய பெயர்கள் நிறைய தமிழ்ச்சூழலில் காணலாம்! தமிழ் - அம்மாதிரி "வேற்று மொழி" எழுத்துக்களை அனுமதிக்கிறது என்பதை நானுமறிவேன்! எனினும், அது தவிர்க்கமுடியாத காரணத்தினாலும், அல்லது அதை ஏன் தமிழ்ப்படுத்தவேண்டும் என்ற நம்மொழியின் "பெருந்தன்மை"யாலும் என்பதை உணரவேண்டும். கண்டிப்பாக, குறைந்த பட்சம் நம் குழந்தைகளுக்கு பெயரிடும் போதாவது அம்மாதிரி எழுத்துக்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என்று உரைத்திட தோன்றுகிறது. இதில் இரண்டு வகைகள் உண்டு; "இரமேஷ்", "சுரேஷ்" என்று நமக்கு மிகவும் இயல்பாய் ஆகிவிட்ட பெயர்கள் உண்டு (இந்த இரண்டு பெயர்களிலும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் இருப்பதற்காய் சொல்லவில்லை); இம்மாதிரி பெயர்களை தமிழ்ப்படுத்துவது இயல்பு - "இரமேசு", "சுரேசு" என்று எளிதில் எழுதிவிட முடியும்! ஆனால் சில பெயர்கள் பல வேற்றுமொழி எழுத்துக்களை கொண்டிருக்கும்; அதை தமிழ்ப்படுத்தவது எளிதல்ல; மேலும், அதை தமிழ்படுத்தும்போது பெரிய வேறுபாடு கூட வந்துவிடும். அதை, தமிழ்ப்படுத்தாமல் இருப்பதே நல்லது! என்று கூட தோன்றக்கூடும். "ஸ்ரிவிஷ்வேஷ்" என்ற பெயரை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்! உண்மையில், அந்த பெயருக்கு நல்ல அர்த்தம் கூட உண்டு!! இதை எப்படி தமிழ்ப்படுத்துவது? ஏன், தமிழ்ப்படுத்தவேண்டும் என்ற விதண்டாவாதம் வேண்டாம்! தமிழ்ப்படுத்தவேண்டும் எனில், எப்படி வரையறுப்பது?? அது, மிகப்பெரிய அர்த்த-மாற்றத்தை உருவாக்கிடாதா???

      இரண்டாவது - அழகு, "ஸ்டைல்" என்று நினைத்துக்கொண்டு முற்றுப்பெறாத பெயர்களை வைப்பது! அத்தகைய பெயர்கள் வேற்று-மொழியில் "பிரபலமான" பெயர்கள் என்பதை மறுக்கவில்லை; நாம் கவனிக்கவேண்டியது, நம்முடைய தமிழ் சூழலுக்கு உகந்ததா? என்பதைத்தான். என்னுடைய, உறவு மற்றும் நட்பு வட்டத்திற்குள் - மிகவும் பொதுவாய்-போன பெயர் ஒன்று அவ்வாறு உள்ளது. வினோத்! உண்மையில், எனக்கு இது "வினோதமான" பெயர்; உண்மையில், அப்பெயரின் அர்த்தமும் "வினோதம்" என்று பொருள்படும் எனினும், "வினோத்" என்ற சொல்/பெயர் முற்றுப்பெறாதது; மேலும், தமிழில் "த்" என்ற எழுத்தில் முடியும் "வார்த்தைகள்"கூட இருப்பதாய் என்னறிவுக்கு எட்டவில்லை. இந்த மெய்யெழுத்து மட்டுமல்ல; "தமிழ்" என்பதே ஓர் "மெய்யெழுத்தில்" முடியினும், "மெய்யெழுத்தில்" முடியும் உண்மையான "வார்த்தை"கள் தமிழில் மிகவும் குறைவு. இத்தலையங்கத்தில் உள்ள வார்த்தைகளை கூட உற்று கவனியுங்கள்; இந்த உண்மை புரியும். இம்மாதிரி "முற்றுப்பெறாத" தமிழிப்பெயர்கள் நிறைய உள்ளன. சிலர், "அஷ்வின்" போன்ற தமிழல்லாத பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது - "Ashvin" என்ற இயல்புக்கு மாற்றாய் "Ashwin" என்று எழுதுவர். அதாவது எல்லாவற்றிலும், "WIN" செய்வார்களாம் - "nuemerology" எனும் விசயம் படுத்தும் பாடு! அப்படி பொருள்படவேண்டும் எனின் "விக்டர்" என்று பெயரிட வேண்டியது தானே??? முழுப்பொருளும் அடங்குமே! அந்த பெயரும் தமிழில் உண்டாயிற்றே - வெற்றி!

       என்னிடம், என் நண்பன் ஓர் முறை அவனின் தங்கை-மகளுக்காய் ஓர் "தமிழ்" பெயர் வேண்டும் என்று வேண்டினான்! நான் மிகவும் யோசித்து "ரூபமறா" அல்லது "ரூபமறாள்" என்று கூறினேன்; அந்தப்பெயர் வைக்கப்படவில்லை என்பது வேறு விசயம். "உருவம் அற்றவள்" என்ற அர்த்தத்தில் அந்தப்பெயரை உருவாக்கினேன்; அந்தப்பெயர் நடைமுறையில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை! அந்தப்பெயரில் பல தத்துவங்கள் அடங்கியுள்ளன; அந்தப் பெயரில் உள்ள ஆழ்ந்த அர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் தலையங்கமே எழுத முடிவெடுத்து பல வாரங்கள் ஆயிற்று! இன்னும், ஓரிரு வாரங்களில் அத்தலையங்கம் வெளியிடப்படும். என் மகளுக்கு கூட அந்தப்பெயரை வைக்கலாம் என்று யோசித்து - அது முன்பே என்னால் வேறோருவருக்காய் யோசிக்கப்பட்டது என்பதால் - அப்பெயரை வைக்கவில்லை. அதிலிருந்து, எவர் என்னிடம் பெயர் கேட்பினும் - நான் கூறுவதில்லை! ஏன், அந்த நண்பனே - அவன் மகனுக்காய் கேட்டபோது கூட நான் எதுவும் ஆலோசனை கூறவில்லை!! இது அவர்களின் விருப்பம்; மேலும், நம் முயற்சியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் அதை நிறுத்திவிட்டேன்! தோல்வி என்பதாலோ/ கோபத்தாலோ அல்ல; என்னுடைய - கற்பனையும், முனைப்பும்; அந்த அழகியலும் - வீணாகப் போகிறதே என்ற ஆதங்கத்தில்! ஆனால், இப்படி பெயர் வைக்கலாம் என்று பொதுவாய் விளக்கலாம் என்பதால் தான் இத்தலையங்கம் உருவாயிற்று!! பெயர் வைப்பதில் நமக்கு பெரிய "மெனக்கெடல்" தேவை என்று தோன்றுகிறது.

       பெயர் என்பது ஒருவரின் உரிமை; அதை முடிவு செய்வதும் அவரவரின் உரிமை என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை; ஆனால், தமிழில் பெயர் வைப்பது நம் கடமையும் கூட! ஏனோ, பெயர் வைக்கவேண்டும் என்ற காரணத்தினால் அல்லது "ஸ்டைல்" என்ற மோகத்தில் அல்லாது - பெயர் என்பதில் நம் உணர்வும், முனைப்பும் கலந்து இருக்கவேண்டும். உலகில், வேறு எந்த மொழியிலும் வேற்றுமொழி பெயர்கள் அல்லது வார்த்தைகள் கலந்த பெயர்கள் "அதிகம்" இருப்பதாய் எனக்கு தெரியவில்லை! மாறாய், பல நாடுகளில் - அங்கு பிறக்கும் வேற்று நாட்டை சேர்ந்த குழந்தைகளுக்கு கூட உள்ளூர்-பெயர்கள் இடப்படவேண்டும் என்று வற்புறுத்தல்கள் கூட இருக்கின்றன! அவர்களுக்கு "பெயர்" என்பதில் ஓர் ஆழ்ந்த-பிணைப்பு உள்ளது; அங்கே, உணர்வும்-முனைப்பும் பிணைந்திருக்கிறது. நம் மொழியில் மட்டுமே - இந்த கலப்புகள் அதிக அளவில் உள்ளன! இதற்கு, மிகமுக்கிய காரணம் நாம் நம்முடைய பெயர்க்காரணம் குறித்த பெரிய விழிப்புணர்வு இல்லை என்று தோன்றுகிறது!! இதை எண்ணும் போது, இதை இன்னமும் அழுந்தச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது; மேலும், என்னுடைய மகளின் பெயர் பிறந்த காரணத்தைப் பற்றி இன்னுமொரு முறை கூறிட தோன்றுகிறது!!! இது தற்பெருமை அல்ல; பெயருக்கு எப்படி நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த! பெயர் வைப்பதன் மீதான, இந்த எண்ணமும் - முனைப்பும், புரிந்து விடின்; எல்லாத் தமிழ்ப்பெயர்கள் பற்றிய அர்த்தத்தை நாம் அறிய முற்படுவோம்; பின், தமிழ்ப்பெயர்களில் உள்ள…

வசீகரமும், அழகும் தானாய் புரியும்!!!

பின்குறிப்பு: அருள்கூர்ந்து, இனியாவது - பெயர் என்பதில் உள்ள உணர்வை அதன் உண்மைப்பொருளை உணர்வோம்! மொழிக்கும், பெயருக்கும் உண்டான உறவை உணர்வோம்!! ஏதோ, பெயர் வைத்துவிட்டு பின்னால், அப்பெயரை நம்மொழியில் எப்படி எழுதவேண்டும் என்ற குழப்பம் வேண்டாம். நம் குழந்தைகளுக்கு முதலெழுத்தை (initial) மட்டும் கொடுப்பது நம் கடமை அல்ல; அவர்களுக்கு நல்ல தமிழ்(தாய்) மொழியில் பெயரிடுவதும் நம் கடமை என்பதை உணர்வோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக