ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

மகள்-தந்தை உறவு...



       நண்பர் "திரு. சுடர் பாலா" மகள்-தந்தை உறவை வெளிப்படுத்தும் ஓர் காணொளியை "முக-நூலில்" பகிர்ந்திருந்தார். அருமையான பதிவு! "மகள்-தந்தை உறவு" எப்போதும் தனி(த்தது)-தான்!! ஓர் 2 ஆண்டுகளுக்கு முன்பு, அக்காணொளியின் ஆரம்பத்தில் வரும் "சொற்றொடரை" என்-அனுபவம் மூலமே உணர்ந்தேன்; ஆம், அன்றொரு நாள் என்மகளை முத்தமிட்டபோது, என்னவளை முத்தமிடும் உணர்வை பெற்றேன். அப்போது, தான் எனக்கு புரிந்தது; முத்தத்தில் காமம் இல்லையென்று; இன்றேல், என்மகளை முத்தமிட்டபோது அந்த உணர்வு வந்திருக்காது. மிக-அழகாய் இருக்கிறது - அந்த சொற்றொடரை பின்தொடரும் காணொளியும்; ஓர்முறையேனும்  பாருங்கள்! இதைப்பார்த்தவுடன், நான் வெகுநாட்களாய் தள்ளிவைத்த "மகள்-தந்தை உறவு" தலையங்கத்தை எழுதவேண்டும் என்று தோன்றியது. ஏற்கனவே, நான் அதிகமாய் என்மகளை பற்றி என்னுடைய வலைப்பதிவில் எழுதுகிறேனோ என்ற அச்சம் இருந்தது! ஆனால், அவளைப்பற்றிய எந்த விசயத்தையும் நான் வலுக்காட்டாயமாய் திணித்ததில்லை!! அது, இயல்பாய் நான் சொல்லவருவதோடு கலந்துவிடுகிறது. இந்த தலையங்கம் வெறும் "மகள்-தந்தை" உறவின் பெருமை-கூறுதலல்ல! இந்த பேருறவை பல்வேறு கோணங்களில் இருந்து வழக்கம்போல் "பொதுநலத்தோடு" விளக்கி இருக்கிறேன். திருமணத்திற்கு பின் "மகள்-தந்தை" உறவு எப்படி மற்ற உறவுகளை பாதிக்கிறது என்பதையும் அலசி இருக்கிறேன். நம்மகளின் திருமண வாழ்க்கையின் வெற்றிதானே ஓர் தந்தையாய்; நம்மை நிறைவுறச் செய்யும்??? 

   என்னுடைய முதல்-தலையங்கத்தை "எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை..." என்று தலைப்பிட்டு எழுதியபோது, ஏன் சொந்த விசயத்தை எல்லாம் இப்படி எழுதுகிறீர்கள் என்று பதறியது சில நட்புகள்! அவர்களுக்கு - அதில் இருந்த பொதுநலம் தெரியவில்லை!! மற்றவர்களைப் போல - தம்மகளுடன் தாம் கொண்ட உறவு  மூலமாய் பார்க்கத் தவறியவர் அவர்கள். அதனால்தான் இதை வலியுறுத்துகிறேன்! அந்த பொதுநலம் இருந்ததால் தான், எங்கோ ஓர்மகள் அவள் தகப்பனாலேயே கொல்லப்பட்டபோது "என்ன மனுசன்டா நீ???..." என்று கோபம் கொள்ளமுடிந்தது. அவனை, மரணம்வரை கொண்டு சென்று - உயிர்பிக்கவேண்டும்; அதையே மீண்டும், மீண்டும் செய்யவேண்டும் என்ற ஓர் கொடுமையான தண்டனையை முன்மொழிய முடிந்தது. அதற்கு அடுத்த வாரமே, ஆத்திரத்தில் தன்-மனைவியை கொன்றுவிட்ட கணவனின் மனநிலையை ஆராய்ந்து "குழந்தை யாரிடம் வளரவேண்டும்???..." என்றும் எழுதமுடிந்தது. நான் என்மகள் மேல் கொண்டிருக்கும் அன்பினால் "தந்தை-மகள் உறவு" என்ற புதுக்கவிதை விளைந்தது; அந்த அன்பு பலருக்கும் புரியவேண்டும் என்ற பொதுநலமே அடிக்கடி அவளை சம்பந்தப்படுத்தி எழுத தூண்டுகிறது. என்மகள்தான் நான் ஓர் சிறந்த கணவனும்-கூட என்பதை, உணரவைத்தாள்; அதுசார்ந்து என்னுள் இருந்த தீயவைகளுக்கு தீயிட்டவளும் அவளே! அதனால் தான், "சிறந்த கணவன் ⇔ சிறந்த தந்தை" எழுத முடிந்தது. என்மகளை சுமக்க எனக்கு வாய்ப்பில்லையே என்ற ஆதங்கத்தால் "தாயுமானவன்" என்ற புதுக்கவிதை பிறந்தது.

           என்மகளின் நினைவுகள் என்னை வாட்டுவதால் "என்ன வாழ்க்கை இது?..." என்று எழுதியபோது, என்னை விட அதிகமான வலிகளுடன் இருக்கும் தந்தைகளையும் என்னால் விவரிக்கமுடிந்தது. ஏன் இந்த உறவு மட்டும் மிகப்பலமானதாய் படுகிறது? இந்த உறவினுள் நாம் எதை தேடுகிறோம் என்ற கேள்வி பலமுறை என்னுள் எழுந்ததுண்டு! எனக்கு உறுதியாய் தெரிந்திட்ட ஒன்று "நாம், நம்மகளுள்; நம் அம்மாவை" தேடுகிறோம் என்பதே! அந்த புரிதல்தான் "மகளான என்-தாய்" என்று எழுத வைத்தது! இந்த உறவை, விவரமாய் கூறவேண்டிய தருணம் வந்துவிட்டதாய் உணர்கிறேன்! முதலில் கவனிக்க வேண்டிய ஒன்று, வாழ்நாளின் பெரும்பகுதியில் (சுமார் 25 ஆண்டுகள்) நம்-தாயின் கவலைகளை சரியாய் புரிந்து அவளுக்கு "பக்கபலமாய் இருக்கும்" வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை. நம் அம்மா அதை வெளிக்காட்டுவதில்லை அல்லது (அந்த வயதில்)நமக்கு புரிவதில்லை; வெகுசிலருக்கே அந்த பாக்கியம் கிடைக்கிறது. நம் தாயின் கவலை எல்லாம் தெரியவரும்போது, அவளுக்கு நம் உதவி தேவைப்படுவதில்லை! ஒன்று அவள் அதற்கு அவள் பழகி இருப்பாள் அல்லது அந்த கவலை தீர்ந்திருக்கும். இது தெரிந்தவுடன் - நாம் முதலில் செய்ய முனைவது, நம் அன்பு அனைத்தையும் நம் தங்கை அல்லது தமக்கை போன்ற உறவுகளிடம் காண்பிக்க எண்ணுவதே!! அதிலும், குறிப்பாய் நம் தங்கையிடம்!!! அதனால்தான் பல-சில்மிஷங்களை, பல சண்டைகளை செய்துவந்த ஒருவன் - 25 வயதை நெருங்கும்போது "தமையனாய்(அண்ணனாய்)" உருவெடுக்கிறான்.

      தமையன், தமக்கை, தங்கை, தம்பி போன்ற உணர்வுகளின் உன்னதம் தெரியாத பலர், ஒரு குழந்தைக்கு-மேலிருந்தால் பிரச்சனைகள் வரும் என்று சிறுபிள்ளைத்தனமாய் முடிவெடுப்பதை  "எத்தனை குழந்தைகள் வேண்டும்???" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டேன். எனக்கு தங்கை இல்லை என்பதால், என் பெரியம்மா-மகளிடம் எனக்கு அளவுகடந்த அன்பு எழுந்தது! அவள் தான், உண்மையில் என்-தமக்கையை(யே) புரிந்துகொள்ள செய்தாள்!! ஏனெனில், அம்மாவுக்கு செய்யமுடியாததை எல்லாம் செய்ய முதலில் நாம் நாடுவது நம்மை விட இளையவரை!! அதனால்தான் "தமையன்-தங்கை" எப்போதும் "தமக்கை-தம்பி" உறவைவிட உயர்வாய் பார்க்கப்படுகிறது! நம்மை விட இளையவராயின்-எளிதில் அவர்களை நல்வழிப்படுத்த முடியும்; அம்மாவை போல் வருந்தவிடமாட்டேன் என்பது போன்ற உள்ளுணர்வு. எது எப்படியோ, நாம் முதலில் நம் அம்மாவை புரிந்தவுடன் - அவளுக்கு செய்ய முடியாததை எல்லாம் - தங்கை, தமக்கை போன்ற உறவுகளுக்கு அவ்வாறு செய்திட ஆசைப்படுகிறோம். இப்படியாய் செல்லும் வாழ்க்கையில், நம் கண்முன்னே ஓர் பெண் பிறக்கும் போது; அந்த-பெண் எனும் உறவின் மேல் ஓர் அளவுகடந்த பாசம் பெருக்கெடுக்கிறது. அந்த பெண் - நம் தங்கை அல்லது தமக்கையின் மகளாய் கூட இருக்கலாம்; தமையன் அல்லது தம்பி மகளாய் கூட இருக்கலாம். அதனால் தான், என் தமையனுக்கு என்மகள் மேல் ஓர் அலாதிப்பிரியம்; ஆனால், அவருக்கு என்மகளை அருகிருந்து அவ்வப்போது பார்த்துப்பழக வாய்ப்பற்று போனது துரதிஷ்டம்!! 

       அதே பெண் - நமக்(கு/கே) "மகளாய்" பிறக்கும்போது அந்த பாசம்  எல்லையற்று-விரிகிறது! எனவே, "மகள்-தந்தை" உறவின் ஆணி-வேர்; அந்த தந்தை தன் தாய்க்கு செய்யவேண்டியதை எல்லாம் தன்-தாயாக எண்ணி தன்-மகளுக்கு செய்ய முனைவதே என்பதை என்னால் ஆணித்தரமாய் கூறமுடியும்! இதை மேலும், விவரமாய்; "வேறொரு கோணத்தில்" இப்போது பார்ப்போம்!! தன்-தாயை மதித்து அவள் மூலம் தன்-மகளை பார்க்கும்/பார்த்த ஓர் தகப்பன் வளர்க்கும் ஓர் பெண், "குடும்ப விளக்கு"ஆய் இருப்பாள். அப்படித்தான், என்-நண்பி ஒருவள் "இரண்டு மகள்களை" வைத்துக்கொண்டு - எல்லா பிரச்சனைகளுக்கு இடையிலும் அவளின் கணவன் மற்றும் அவன் குடும்பத்தாருடன் வாழ்கிறாள். அவளின் தந்தை, இதுபோன்ற காரணங்களுக்காய் அவளை "வாழா-வெட்டியாய்" பார்க்க-விரும்பமாட்டார் என்பது அவளுக்கு தெரியும். இதுமாதிரி, பல-பெண்களை நான் பார்த்திருக்கிறேன்; மருப்பேதுமின்று, நீங்களும் பார்த்திருப்பீர்கள்!   ஆனால், இம்மாதிரி எந்த எண்ணமும் இல்லாது "தன்-மகள்" என்பதை மட்டும் பார்க்கும் தந்தைகள் பலர் உள்ளனர்; அவர்களால், பல உறவுகளும் கெடுகின்றன! அவர்களை, அருகிருந்து கவனியுங்கள்; கண்டிப்பாக, அவர்களுக்கு; அவர்களின் தாய்-மேல் எந்த அக்கறையும் இருப்பதில்லை; அதே போல், அவரின் தமக்கை/தங்கை போன்ற உறவிடமும் எந்த-அன்பும் இருப்பதில்லை. அதனால்தானோ என்னவோ, அவர்கள் தம் சொந்த மகள் "வாழாவெட்டியாய்" பல-ஆண்டுகளாய் தன்னுடனே இருப்பதை(யும்) புரிந்து கொள்வதில்லை.

       அப்படி இருப்பது உறவுப்(பா/ப)லமில்லாத "மகள்-தந்தை" உறவாய் எனக்கு படுகிறது; "அறியாத வயதில் வரும் காதல்" போன்றதாய் எனக்கு படுகிறது! அங்கே, உணர்வு/உறவை விட "உணர்ச்சி" தான் அதிகம் இருக்கும்! அதனால் தான், அவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படக் கூடியவராய் இருப்பர். பகல் நேரத்தை கூட விட்டுவிடுவோம்; அது எப்படி, தன் இளைய-மகள் கணவனை விட்டு  பிரிந்திருக்கும் போது; இரவானதும், தன்-மனைவியுடன் ஓர் தகப்பனால், நிம்மதியாய் உறங்கமுடிகிறது?? "அவ்வை ஷண்முகி" திரைப்படத்தில் "இந்த 65 வயசுல, உங்களுக்கு ஓர் துணை தேவைப்படும்போது... உங்க மகள் வாழாவெட்டியாய் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா?" என்றோர் வசனம் வரும். அந்த வசனம் மட்டுமல்ல - அந்த படம் முழுதுமே ஓர் பொக்கிஷம்! "திருமணமாகாத (ஓர்)மகள்-தந்தை" உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதையும், "திருமணமான (ஓர்)மகள்-தந்தை" உறவு எப்படி இருக்கக்கூடாது என்ற இரண்டையும் உணர்த்தும் படம்.  ஆனால், நான் இந்த விசயத்தில் மிகத்தெளிவாய் இருக்கிறேன்; என்னைப்போன்று "இன்னுமோர் தந்தை இல்லை" என்ற கர்வத்திற்கு நிகராய், என்-மகளின் திருமண வாழ்க்கையும் நன்றாக அமை(ந்/த்)திடுதல் வேண்டும் என்ற வேட்கையும் இருக்கிறது"வெறும், வாதத்திற்காய் சொல்லவில்லை; இறையருளால், நானும்-நீங்களும் அத்தனை காலம் வாழ்ந்தால், நான் சொல்லியவண்ணம் வாழ்தலை" எல்லோரும் காணவும் முடியும்; அதையும், என்னால் ஓர் தலையங்கமாய் அந்த-நேரத்தில் எழுதவும் முடியும்.  

       அதனால் தான், நான் ஓர் நல்ல "மருதந்தை"யையாயும் இருக்க ஆசைப்படுகிறேன். என்மகள், மேற்கூறிய என்-நண்பியை போல் இல்லாமல் என்னுடன் வந்து இருப்பாள் எனில் - அதிகபட்சமாய் 2 மாதங்கள் பொறுத்துக்கொள்வேன். பின், முதலில் என்மகள் மற்றும் மருமகனிடம் பேசி இருவரையும் சமாதானப்படுத்த முயல்வேன்; என்மகள் கூறுவதை-மட்டும் கேட்டால் "எங்கள் உறவு; தெளிவற்றது" என்று அர்த்தம்! அடுத்து, இருவரையும் மிகச்சிறந்த மனோதத்துவ நிபுணர்கள் 3 பேர்களிடமாவது கலந்தாலோசித்து - அதற்கோர் தீர்வு காண முயல்வேன்; 1 நிபுணர் மட்டும் என்றால் - தவறு நேரக்கூடும்!! இது இரண்டும் கைகொடுக்கவில்லை எனில், கண்டிப்பாய் என்மகளுக்கு "விவாகரத்து" பெற்றுத்தருவேன்!!! என் மகளின்-சந்தோசம் அல்லது அவள் என்னுடன் இருப்பது மட்டும் முக்கியமல்ல; "என் மருமகன்" சந்தோசத்தையும் நான் கவனிக்கவேண்டும்!! என் மருமகன் அவன்-குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் வந்து-பார்க்க/ அழைத்துக்கொண்டு செல்ல சட்ட-ரீதியாய் வழிசெய்து கொடுப்பேன்! கண்டிப்பாக, இந்த 3-ஐயும் செய்யாது; என்மகளைப் போல நானும் "வெட்டியாய்; வாழ்ந்து" கொண்டிருக்காமாட்டேன். இந்த "தெளிவான புரிதல்" இருப்பதால்தான் "தாய்க்கு பின் தாரம்; தந்தைக்கு பின் யாராம்???" என்று என்னால் கேள்வி கேட்க முடிந்தது! அதில், என்மகளுக்கு கணவனிடம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அவளுக்கு தகுந்த வயதுவந்தவுடன் (அவளின், திருமணத்திற்கு முன்) விளங்கவைப்பேன் என்று கூற(வும்)முடிந்தது!! "மகள்-தந்தை" உறவு...

திருமணத்திற்கு பின்னும், சிறந்திருக்க வேண்டுமானால்; 
"நம் மகளும், நம் மருமகனும்" சந்தோசமாய் வாழ்தல் மிகமுக்கியம்!!!

2 கருத்துகள்:

  1. மகள் பெற்ற தந்தைக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று என்ற தங்க மீன்கள் படத்தின் பாடல் என்னை மிக மிக சந்தோஷ படுத்தும்.பலமுறை அந்த பாடலையும். தெய்வ திருமகள் படத்தின் ஆரிரோ அராரிரோ இது தந்தையின் தாலாட்டு என்ற பாடலும் என்னை உற்சாக படுத்தும்,இதை என்னுடன் சேர்ந்து கேட்க என் மகள் இல்லையே என்று மிக என் மனது வலிக்கும். என் இதயத்தை பிள்ளைக்கும் எப்படி புரிய வைப்பேன் என்று புரியாமல் பரிதவிப்பேன். என் மகள்களே என்னிடம் வந்து விடுங்கள் என்று கரம் குவித்து கடவுளை தொழுவேன்,பின் அழுது ஏன் நான் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் உள்ளேன் என்று வருந்துவேன். என் பிள்ளைகள் என்னிடம் வாழ்வதே எனக்கு ஆரோக்கியம். ஆனால் விதி என்ன முடிவு செய்து இருக்கிறது.சதி என்ன முடிவு எடுத்து என்னை சதி செய்கிறாள் என்பது புரியாமல் முடங்கி கிடக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் சொல்கிறேன்! தற்கொலை செய்து கொள்வதால், நீங்கள் மட்டுமே இந்த உலகில் இருந்து விடுபடக்கூடும். உங்கள் உறவுகள் அப்படியே தான் இருக்கப்போகின்றன. எனவே, உங்கள் பிள்ளைகள் வளரும் வரை பொறுமை காத்து; அவர்களின் எதிர்காலத்தை மனக்கண்ணில் பார்த்து கற்பனையில் இப்போது வாழுங்கள்.

    மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு