ஞாயிறு, நவம்பர் 24, 2013

"பேய்-பயம்" சரியா? தவறா??




     கடந்த வார "நீயா? நானா?" பேய் பற்றிய ஓர் அலசல் என்பது தெரிந்தவுடன், எப்போதும் ஓரிரு நாட்களில் "நீயா? நானா?"-வைப் பார்த்துவிடும் நான் நேற்று வரை தள்ளிபோட்டேன். இறுதியில், நேற்று மதியம் அதைப் பார்த்துவிட்டேன்; பின்னர் இரவு 8 மணி வரை இயல்பாய் வேலைகளை செய்துகொண்டு இருந்த எனக்கு, இரவு வந்ததும் ஓர் பயம் கலந்த பரவசம் வந்துவிட்டது. "அப்பார்ட்மெண்டில்" தான் வசிக்கிறேன் எனினும், (என்னுடைய ஃபிளாட்டில்)தனியாய் இருப்பதால் ஒருவித பயம். "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்தில் கூறியது போன்றே பேய் இருக்கிறதா? இல்லையா?? என்பதும் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை. எனக்கு பேய் இருக்கிறதா? இல்லையா?? என்பது பற்றி ஏதும் சான்றுகள் இல்லை; ஆனால், எனக்கு பேய் பற்றிய பயம் இருக்கிறது. இந்த பயத்தை ஒப்புக்கொள்ள எனக்கு எந்த பயமும் இல்லை!! இது சார்ந்த பயத்தால், நான் கொடுத்த தொல்லைகள் குறித்து என்-தாயும், தமக்கையும் நன்கு அறிவர்.

        பேய்-பயம் பெரும்பாலும், பெரும்பாலோருக்கு இரவில் தான் வருகிறது! இருளில் இருக்கும் மர்மம் தான் - இதற்கெல்லாம் காரணம் என்று தோன்றுகிறது. இருட்டில் மறைந்து இருந்து நம்மைப்போன்ற ஒரு மனிதன் "திருடனாய்" நம்மைத் தாக்கும்போதே?! நிலை குலைந்து விடுகிறோம். ஆனால், உருவமே இல்லாது அல்லது தெரியாது, பலரும் பார்த்திராத "பேய் என்ற ஒன்று" தாக்கினால்??!! எனவே, பேய் இருக்கிறதா? இல்லையா?? என்பதை தாண்டி - என்னுடைய பார்வை பேய்-பயம் சரியா? தவறா?? என்பதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. பேய் வேண்டுமானால், இல்லாமல் இருக்கலாம்! ஆனால், மரணம் நிச்சயம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்! இருப்பினும், மரணம் உறுதியானது என்றும்; அது எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்பதையும், நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை!! மேலும், "எதிர்காலத்தில் வரப்போகும் 3-ஆம் தலைமுறையையும் தாண்டி" சொத்து-சேர்க்க நாம் ஆசைப்படுகிறோம். அதனால் தான், மரணிக்கமாட்டோம் என்று திடமாய் நம்புகிறோம். 

     மரணம் வெகு-நிச்சயம் என்று நான் திடமாய் நம்புவதால் தான் "மரணத்திற்கு பிறகு, என்ன...???" என்று யோசித்து என்னால் - வாழ்க்கை குறித்த புரிதலை பார்க்க முடிந்தது. "மரண-நம்பிக்கை" மற்றும் "பேய்-நம்பிக்கை" - இவை இரண்டிற்கும் ஓர் தொடர்பு இருப்பதாய் படுகிறது. ஒரு சிறிய குட்டையில் இறங்க, குறைந்த-அளவு மின்சாரம் தேவைப்படும் ஓர் உபகரணத்தை தொட - இப்படி சிறுசெயல்கள் துவங்கி - "அணு-உலை" எதிர்ப்பு வரையிலான அனைத்து பயத்திற்கும் காரணம் - நாம் உயிர்த்திருக்க வேண்டும் என்ற ஆசைதான். அதே ஆசைதான் - பேய் என்ற ஒன்று நம்மை கொன்றுவிடுமோ?! என்ற பயம் வரவும் காரணம்! அதனால் தான், இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றேன். அதே சமயம், இங்கே - சுனாமியை எதிர்த்து நீந்துபவர்கள், அதிகபட்ச மின்சாரம் பயன்படுத்தும் உபகரணத்தை அனாவசியமாய் கையாளுவோர் - துவங்கி "அணு-உலையால்" எந்த ஆபத்தும் இல்லை என்று வெகு-நிச்சயமாய் நம்புவோர் வரை - அனைவரையும் பார்க்கிறோம்.

        இப்படி இருக்க, பேய் பற்றிய பயம் மட்டும் ஏன் அதிக அளவில் இருக்கிறது? அல்லது அது சார்ந்து மட்டும் ஏன் அதிகம் விவாதிக்கப்படுகிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். மரணத்தை பார்த்து வந்தேன்; மரணம் இப்படித்தான் இருந்தது என்றோ?! அல்லது இப்படி, இப்படியாய் - மரணத்தில் இருந்து தப்பி வந்தேன் என்றோ??!! கூறிட எவரும் இல்லை! மிகப்பெரிய நோயில் இருந்து தப்பியோரை நமக்கு தெரியும்; ஆனால், அது மரணத்தை வென்றதாய் அர்த்தம் அல்ல; மரணத்தை தள்ளி வைத்த செயல்; அவ்வளவே!! மேலும், மரணம் பற்றிய எந்த நிதர்சனமும் அதன் மூலம் கிடைப்பதில்லை. ஆனால், பேய் பற்றி நிறையக் கதைகள் உண்டு; பார்த்ததாய்/கேட்டதாய்/தப்பித்ததாய் பலரும் கூறுகின்றனர். பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன! ஆனால், இதுதான் மரணம் என்று கூறிட எதுவும்/எவரும் இல்லை! அதனால் தானோ என்னவோ, மரணம் உறுதி என்ற நம்பிக்கையும் நேரடியாய் வரவில்லை! ஆனால், உயிர்-பயம் அனைவருக்கும் இருக்கிறது! அது தான் மரணத்திற்கும், பேய்க்கும் உள்ள தொடர்பு.

     மரணம் உறுதி என்று நம்ப மறுப்போர் பலருக்கும் - மேற்குறிப்பிட்ட பல காரணங்கள் மூலம் உயிர்-போய்விடுமோ?! என்ற பயம் மட்டும் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்! பேய்-பற்றிய உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை எனினும், அது சார்ந்த கற்பனைகளும்/ கதைகளும் அதிகம். அதனால்தான், மற்ற காரணிகளைப் போல் அல்லாமல், பேய் பற்றிய பயம் மட்டும் தனியாய் பார்க்கப்படுகிறது. பேய் - நேரடியாய் உயிரோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாய் தெரிகிறது. இதை எளிதாய் விளக்க வேண்டுமெனில் "எந்த சண்டை வந்தாலும், உறவில் இருக்கும் ஒருவர் - இன்னுமொருவர் உண்ணும் உணவில் நஞ்சை கலக்கமாட்டார்கள்" என்ற நம்பிக்கை மட்டும் இல்லை எனில் உணவு-விடுதியில் கூட உணவு-உண்ண பயப்படுவோம்! இல்லையேல், தினமும் குறைந்தது 3 முறையாவது நாம் செத்து-பிழைக்கவேண்டும் அல்லவா? எனவே, பேய் என்பது இருக்கிறதா? இல்லையா?? என்பதைக்காட்டிலும், அதில் நம்பிக்கை இருக்கிறதா என்பதே முக்கியம்; மேலும்...

அது சார்ந்த உயிர்-பயத்தில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது!!!

பின்குறிப்பு: இதை அனைத்தையும் தாண்டி, மரணம் என்பது வெகு-நிச்சயம் என்பதை முழுமையாய் பெரும்பான்மையில் நம்புவதில்லை எனினும், மரணிக்கக்கூடாது என்ற ஆசை இல்லாத எவரும் இருப்பதில்லை! அதனால் தான், மரணம் என்பது நிகழாவண்ணம் தடுக்க - எது குறித்தும் ஓர் பயம் இருக்கிறது. பேயை விடுங்கள்! சிறு குட்டையில் இறங்க பயப்படுவோர் பலரை நான் பார்த்திருக்கிறேன்; நீங்களும் வெகு-நிச்சயமாய் பார்த்திருப்பீர்கள். எனக்கு நன்றாய் நீந்த தெரியும் என்பதால் - கடல் குறித்து கூட எனக்கு "ஓர் துளி" பயமும் இல்லை! பேய் என்பது என்னவென்றே தெரியாததால், அது குறித்து எனக்கு பயம் இருக்கிறது; சிறு-குட்டையில் இறங்கக்கூட பயப்பட பலர் இருக்கும்போது "பேய் "பற்றி பயப்பட?!" நான் ஏன் பயப்படவேண்டும்???!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக