ஞாயிறு, ஜூன் 08, 2014

எப்படியெல்லாம் வேதனை வருது?!...



         இன்று காலை என்னுடைய மகிழ்வுந்தின் "வாகன உரிமையை" புதுப்பிக்க சென்றிருந்தேன். நம் ஊரிலும், போர்ச்சுக்கல் நாட்டிலும் ஓட்டுவது போல் "ஆரம்பத்தில்" உச்ச-வேகத்தை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லமால் வெகு-வேகமாய் ஓட்டிக்கொண்டு இருந்தேன். இங்கெல்லாம்... "அபராதம்" விதிப்பார்களாமே? திடீரென்று என் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது; வந்து கப்பம் கட்ட சொல்லி! நம் ஊர் பணத்தில் 5100 உரூபாய் - 3 முறை கட்டினேன். காவலர்கள் தான் "ரேடாரை" வைத்துக்கொண்டு இதை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களைப் பார்த்த பின்னர் மட்டும் ஒழுங்காய் ஓட்ட ஆரம்பித்தேன். அப்படியிருந்தும் இன்னுமொரு முறை ஓலை வந்தது! இங்கே "ஸ்பீட் கேமரா" எல்லாம் இருக்காமே; முன்ன-பின்ன செத்து இருந்தா தானே சுடுகாடு தெரியும்? சிலர் துபாயில் அபராதம் விதித்திருந்தால் உரிமையை புதுப்பிக்கும் போது வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும்; துபாயில் 1 கி.மீ. தூரத்துக்கு ஒரு "கேமரா" உண்டென்றும் பீதியை கிளப்பி இருந்தனர்.

       அதனால் கடந்த சில நாட்களாகவே, துபாயில் எத்தனை ஓலைகளோ?! என்ற திகிலுடனே இருந்தேன். எல்லாம் நல்லபடியாய் முடிந்து வந்தால் எவனோ-ஒரு புண்ணியவான் கதவு-பிடியின் மீது "கீரலை" உண்டாக்கி சென்றிருந்தான் (முதல் படம்). அந்த வண்டியின் கதவில் என் வண்டியின் "பெயிண்ட்" ஒட்டியிருந்தது; ஒரே-நேர்க்கோட்டில் 2 தடங்களும் இருந்தன. கண்ணில் கண்ணீரே வந்துவிடும் அளவுக்கு வேதனை! 20 நிமிடங்கள் அவனுக்காய் காத்திருந்து, புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். நானும் ஒரு முறை இன்னொருவரின் வண்டியில் இதுமாதிரி செய்துள்ளேன்; ஒருவேளை, அதற்கான தண்டனையாய் இருக்கும் என்று எண்ணினேன். என்னவள் ஒருமுறை "என்மகள்" என்மருதந்தையின் வண்டியில் "செங்கல்லை" வைத்து தேய்த்து கீறலை உண்டாக்கினாள் என்று சொன்ன குற்றசாட்டு நினைவுக்கு வந்தது. இது அதற்கான, பிரதிபலனாய் கூட இருக்கலாம்; என்மருதந்தையும் அப்படிதானே துடித்திருப்பார்.

ம்ம்ம்... எப்படியெல்லாம் வேதனை வருது???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக