திங்கள், ஆகஸ்ட் 13, 2012

முதல் பார்வை...


 
விமானப் பயணம்!
விடிந்த நேரம்!!
தூக்கம் கண்கூடாது;
தூரமாய் சென்றது!!! 

அயர்ச்சியும், புத்துணர்ச்சியும்
அளவளாவின தருணம்;
என்ன செய்வது?
எவரிடம் பேசுவது??

சிந்தனை தொடர்ந்தது!
சிறகினை விரித்தது!!
பார்வை படர்ந்தது;
பாரபட்சமின்றி - திசைகளனைத்தும்…

பாவையொருத்தி பார்க்க;
பார்வை(கள்) பரிமாறிற்று!
எனைத்தான் பார்க்கிறாளா?
என்னையேதான் பார்க்கிறாள்!

என்ன பேசுவது?
எப்படி பேசுவது??
சிந்தனை திரும்பியது;
சஞ்சலமும் சேர்ந்து!

அவளே சிரித்தாள்!
அழகாய் சிரித்தாள்!!
அளவிலாது சிரித்தாள்;
அதிசயமாய் தெரிந்தாள்!!!

நாலாபுறமும் பார்த்து;
நானும் சிரித்தேன்!
நானா சிரித்தேன்?
நாணலாயும் வளைந்தேன்!!

சிந்தனை பின்தொடர;
சிரிப்பு தொடர்ந்தது!
சிரிப்பை தாண்டி;
செல்வது எங்கனம்?

செயலில் இறங்கினேன்,
செய்கை மூலம்;
குருகுருவென பார்த்தாள்!
குழப்பமானேன் நான்!!

தவறு செய்துவிட்டதாய்
தெரிந்து தவித்தேன்;
சிறிது நேரம் -
சன்னல்வழியாய் பார்த்தேன்!

காலம் கடத்தி
கடைக்கண் வழியே;
மனதை திடப்படுத்தி
மீண்டும் பார்த்தேன்!

பதில்-செய்கை செய்தாள்;
பயமெலாம் விலகின!
பாய்ந்து எழுந்து;
பாவையருகே சென்றேன்!!

பெண்மணி! என்றழைத்தேன்;
பக்கத்தில் இருந்தவர்,
பதட்டத்துடன் பார்த்தார்!
பாவையவள் வேண்டுமென்றேன்!!

பதட்டம் தணிந்து;
பத்திரம் என்றார்!
மெதுவாய் தொட்டு;
மெல்லமாய் தூக்கினேன்!!

என்மகள் நினைவுகள்,
என்நெஞ்சருப்பதை நிறுத்தின;
எட்டுமாதக் குழந்தையவள் -
என்மகளாய் மாறினாள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக