சனி, ஆகஸ்ட் 23, 2014

என்னுடைய உணர்வில் - அப்பெருமகள்...

{பாவேந்தர் பாரதிதாசனின் இளைய-மகளும்; என்னவளின்-பாட்டியுமான 
திருமதி. வசந்தா அவர்கள் 13.08.2014 அன்று இயற்கை எய்தினார்.
இன்றும் (23.08.2014), நாளையும் அவரின் இறுதிக் காரியங்கள் நிகழவுள்ளன. 
என்னுடைய உணர்வில் அவர்...
குறிப்பு: இடது புகைப்படம் என் கரங்களால் எடுக்கப்பட்டது;
வலது புகைப்படம் என்-திருமணத்தின் போது எடுக்கப்பட்டது}    

*******

பெருமகளாம்! தமிழ்தனையும் சுவாசம் கொண்ட;
       திருமகளாம்! அகவையின்ஓர் அரசன் என்னும்
பெருமகன்;நம் "பாரதி"தாசனின் மகளும் ஆம்!நாம்
       கருத்தினில்கொள் மறந்தசீர்பெண்; "வசந்தா" என்னும்
திருமகளை இயற்கையும்;தன் வசத்தே ஈர்த்து
       சுருக்கிசேர்த்து கணக்கையும்-நேர் முடித்தும்; இன்னும்
இருக்குமே!பார் மறைந்துதான்போய் விடினும் அத்தாய்
       கருத்துணர்ந்து தமிழ்வளர்த்த செயலும் என்றும்!       

குறள்கொடுத்த பெருந்தகையும், இயம்பும் - அப்பேர்
       சிறப்புகொள்-"ஈன் றபொழுதி"னை அறியேன்! ஆயின்,
அறம்நிறைந்த உனதரும்இன் முகத்தைப் பார்த்தென் 
      பிறப்பினையும் முழுமைசெய்த "பொழுதை" நன்றாய்!
இறப்பெனக்கும், துணை-உனக்காய் நிகழும் வண்ணம்
      பிறந்திடும்;வன் எமனவனின் விதியும் என்றேல்?!...
திறந்துவைத்த மனதுடன்,நல் சிரிப்பும் கூத்தும்;
      சிறப்புசேர்த்தே கரம்இரண்டும் வணங்கி ஏற்பேன்!

தமிழ்பயின்ற சிறியனிவன் கொடுத்த வாக்கும்
     குமிழ்அதுவாய் எனதுதொண்டை இடையில்! ஆம்;உன்
"தமிழச்சியின் கத்தி"உரையை கரங்கள் கொண்டு
     அமிழ்தமாய்-சீர் செதுக்கியேஎன் இடம்ஓர் நன்னாள்
     சிமிழ்விளக்காய் அனுதினமும் எரியும் என்னுள்,
தமிழ்ததும்பும் செயலதுவும் விரைந்தே செய்வேன்;
     தமிழ்எனக்கும் அளித்தஓர்நன் பரிசும் என்பேன்!

இறுதியாம்உன் நிகழ்ச்சியில்நான் இணையும் வாய்ப்பும்;
      உறுதியாய்பல் முயற்சிகளால் இணைத்தே பார்த்தும்,
சிறியனும்நான் கொடுத்துவைக்க இலையே; தாயே!
      மறுப்பெதுவும் இருப்பதுவும் முறையோ?! உந்தன்
பிறப்பதுவும்!; இறப்பதையும் இறக்கக் செய்தே;
      பறப்பதுவும், நடப்பதுவும் - நிலைக்கச் செய்தல்?!
பிறகெதற்காய் இறுதியென்றாய் நினைக்க வேண்டும்?
      பறந்துவிடும் அனைத்துலகில் புகழ்பேர் அன்றோ??

இயற்கையின்மேல் உனக்கிருக்கும் இமயம் ஒத்த
      செயற்கையற்ற சுயஒழுக்கம்; அதன்பால் சேரும்
இயற்கையையும் படைத்தவன்-என் இறையின் அருளும்
      செயற்கறியா வகையிலுமாய் கலந்தே உந்தன்
வியத்தகுப்பேர் புகழ்பரப்பும் செயலும்; யார்க்கும்
      பயத்தகும்ஓர் நெறிவழியால் நடக்கும் ஓர்நாள்
சுயம்எதுவும் கலந்திடாமல் திடமாய் நானும்;
      ஈயத்தையும்போல் - சிறியதாய்ஓர் துளையும் காப்பேன்!!!    


                           -          "விழியப்பன்" எனும் இளங்கோவன் இளமுருகு
                                                       மற்றும் குடும்பத்தினர்
                             {வேனில் பாண்டியன்; விழியமுதினி வேனில் இளங்கோவன்}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக