வெள்ளி, டிசம்பர் 02, 2011

விழியமுதினி பிறக்கும் முன்...

என்னப்பன் எனக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தேதி: 24.02.2009
*******

நல்லறத்தின் நாயகியே! இளங்கோ! உங்கள்
      நலம்வளர வாழ்த்துகிறோம்! குழந்தைப் பேறு
இல்லறத்தில் இனிதமைய இறையை வேண்டி
      இதயத்தால் வேண்டுகிறோம்! பலவாய் நாளும்
சொல்லறத்தை வளர்த்திடுக! சுற்றம் நட்பு
      சொந்தத்தை அரவணைத்து மகிழ்ச்சி இன்பம்
தொல்லறத்தால் பெற்றிடுக! தொடரும் வாழ்வில்
      தொடங்கட்டும் தேரோட்டம்! பொதுமை வாழ்க

கண்ணொளியாய்! கடல்முத்தாய்! தமிழின் ஊற்றாய்
      காலமெலாம் நாடுபோற்றும் மழலைச் செல்வம்
தண்ணிலவாய் மலரட்டும்! புரட்சிப் பாடல்
      தந்ததிரு பாவேந்தர் எண்ணம் போல
பெண்ணரசே! பெருமகளே! ஆனோ! பெண்ணோ! 
      பாசத்தைப் பொழியட்டும்! நல்லோர் வாழ்த்த
மண்ணுலகில் மணிமுத்தாய்! காதல் நாளும்
     மலரட்டும்! மணக்கட்டும்! இனிமை வாழ்க!

நல்லகுடும் பம்பலகலைக் கழகம் என்றார்!
     நாவேந்தர்! வழிநடத்து மேலும் மேலும்
கல்விவளம் பெறுவதுடன் காலம் காலம்
     கைப்பிடித்த நீங்கள்மணம் வாழ்வில் பெற்றே 
பல்வளமும் பெருமைகளும் பெறுக! என்றும் 
     பார்முழுதும் தினம்வாழ்த்த பண்பை அன்பை
இல்லறமாம் இதயத்தின் உடமை ஆக்கி
     இன்குளாய்! தேன்தமிழாய்! வளர்க! வாழ்க!

                                                                        {புலவர். இளமுருகு அண்ணாமலை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக