வெள்ளி, டிசம்பர் 09, 2011

சிறந்த கணவன் ⇔ சிறந்த தந்தை



(எனக்கு தெரிந்த/ தெரியாத சிறந்த கணவன்-மனைவிக்கும், தாய்-தந்தைக்கும், இந்த உறவுகளை சரி செய்யும் "என் மகள்" போன்ற குழந்தைகளுக்கும் சமர்ப்பணம்)
*******

    என்னுடைய அனுபவம் மற்றும் சிந்தனையின் அடிப்படையில், சிறந்த கணவனால் தான் சிறந்த  தந்தையாயும் இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. இதை உணர்ந்தவர்களுக்கு இது பெரிதாய் படாமல் போகலாம்; இதை மேலோட்டமாய் அல்லாமல் வேறொரு பரிமாணத்தில் ஆழ்ந்து பார்க்க முயற்சித்திருக்கிறேன். நான் மிக சிறந்த (நல்ல) தந்தைகளை சந்தித்துள்ளேன்; அவர்கள் அனைவரும் சிறந்த (நல்ல) கணவன்களாகவும் இருப்பதை அறிந்துள்ளேன்.  நான் சந்தித்த நபர்களின் வாழ்க்கை முறையை கொண்டே "சிறந்த கணவன் = சிறந்த தந்தை" என்பதை அறிந்துகொண்டேன். இதை என் சுய அனுபவத்தின் பால் தெரிந்துகொண்டது, என் மகள் பிறந்ததற்கு பின்; ஆனால், நான் பின்னோக்கி சென்று இதை உணர்ந்திருக்கிறேன். அதாவது, நான் சிறந்த தந்தையாய் செய்த செயல்களின் அடிப்படையில் என்னை அலசிப்பார்த்தபோது அதே மாதிரி விசயங்களை, அதே அடிப்படையில் (அதாவது உணர்வுபூர்வமாய்) என்னவளுக்காய் செய்யவில்லை என்பதை உணர்ந்தேன். நான் என்னவளை  எத்தனை நன்றாய் பார்த்துக்கொண்டாலும், எவ்வளவு விசயங்கள் செய்திருப்பினும் சில விசயங்களை உணர்வு-ரீதியாய் செய்ததில்லை என்பது தெளிவாய் தெரிந்தது. இது என் போன்ற சிறந்த தந்தைக்கு அவர்களின் நிலையை உணர்ந்து, அவர்களை சிறந்த கணவனாயும் வெளிப்படுத்த என்ன செய்வேண்டும் என்பதை உணர்த்த உதவும் என்று நம்புகிறேன். அதிலும், இன்னமும் திருமணமாகாதவர்களுக்கு இது மிகப்பெரிய புரிதலை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!!!

   இந்த புரிதலை, என் மகளுக்காய் (இதுவரை) நான் செய்தவைகளில் மிகவும் முக்கியமானதாய், எனக்கு தலையானதாய் தோன்றும் ஒரு செய்கையின் மூலமாய் விளக்க விரும்புகிறேன். அது! நான் "புகைப்பிடிக்கும்" பழக்கத்தை அறவே நிறுத்தியது தான். நான் சாதரணமாய், ஒரு நாளைக்கு 4 அல்லது 5 "வெண்சுருட்டு" மட்டுமே புகைப்பது வழக்கம். வேறொரு தவறு (என்னவென்று வேறொரு சமயத்தில் எழுத முடிவு செய்துள்ளேன்) செய்யும் நாளில், எண்ணிக்கை அதிகமாகும். எத்தனையோ முறை, எதற்கு புகைக்கிறோம் என்ற "ஞானோதயம்" வந்ததுண்டு; உடனே "அவசர சட்டம்" இயற்றி  ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் (அதிகபட்சமாய்) நிறுத்தியதுண்டு. ஆனால், நிரந்தரமாய் நிறுத்தியதில்லை/ நிறுத்த முடியவில்லை. இப்படியாய் கிட்டத்திட்ட 16 ஆண்டுகள் நான் கொண்டிருந்த பழக்கத்தை ஒரு சில மாதங்களில் என் மகள் அறவே விட்டுவிடச் செய்தாள். நான்  வீட்டில் இருக்கும் நாளில் (குறிப்பாய் வார இறுதி நாட்களில்), வீட்டின் "நுழைவுக்கதவை" மூடிவிட்டு வெளியில் (மாடிப்படிக்கட்டில்) அமர்ந்து புகைப்பது வழக்கம். என் மகள் தவழ்ந்து வந்து "கதவை" தட்டிக்கொண்டே இருப்பாள்; நான் அதற்கு அசராமால், புகைத்துவிட்டு பின்னர் தான் கதவை திறப்பது வழக்கம். இந்த கதவைத் தட்டும் சத்தம் ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும் என்னவளை தொந்தரவு செய்ய ஆரம்பித்த பின், அவள் வந்து கதவைத் திறந்துவிட்டு விடுவாள். என் மகள் வந்து என்னருகில் உட்கார்ந்து கொள்வாள்; அதற்கும் அசராது புகையை கையால் தட்டிவிட்டு (அதாவது, புகையை திசை திருப்பினேனாம்!!!???) புகைப்பிடித்துக் கொண்டிருந்தேன்.

     இதனிடையில், ஒவ்வொரு முறையும் என் மகள் என்னருகில் உட்காரும்போதும் இப்பழக்கத்தை நிறுத்திவிட எத்துனையோ முறை முயன்று நிறுத்தியும் பயனில்லை. இவ்வாறாய், ஓரிரு மாதங்கள் கழிந்த பின் திடீரென ஓர் நாள் எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது; அது "புகைப்பிடிப்பவரை விட அருகில் இருப்பவரை அந்த புகை அதிகம் பாதிக்கும் என்பது". இது நினைவிற்கு வந்தவுடன் கூட, உடனடியாய் நிறுத்தவில்லை; என்னவளை அழைத்து "எங்கள் மகளை" உள்ளே அழைத்துக்கொண்டு சொல்வேன். என்னவள் தெளிவாய் சொல்வாள்: "நீங்களாயிற்று, உங்கள் மகளாயிற்று; வேண்டுமானால் புகைப்பிடிப்பதை விட்டுவிட்டு அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்பாள். இவ்வாறாயும், ஓரிரு வாரங்கள் ஓடிற்று. பின்தான் அந்த "வலி(மை)-மிகுந்த" சிந்தனை வந்தது! நாம் ஏன் புகைப்பிடிக்கவேண்டும்? புகைப்பிடித்து, நம் உடம்பை கெடுத்துக்கொள்வதோடு அல்லாமல், ஏன் ஒரு தவறும் செய்யாத என் மகளின் உடல்நிலையையும் கெடுக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த யோசனை வந்தவுடன் 2010 ஆம் ஆண்டு "ஆகஸ்ட்டு" மாதம் 27 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) இரவு தான் கடைசியாய் புகைப்பிடித்தது. இந்த நிமிடம் வரை புகைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் மீண்டும் வந்ததே இல்லை; ஒரு முறை கூட வந்ததில்லை. ஒவ்வொரு முறை நிறுத்தும்போது, ஏதேனும் ஒரு சிறு பிரச்சனை காரணமாய் மீண்டும் "புகைக்க" ஆரம்பித்துவிடுவேன்; மாறாய், இம்முறை எத்துனை பெரிய பிரச்சனை(கள்) வந்தபோதும் மீண்டும் புகைக்கும் எண்ணம் வந்ததே இல்லை. 

   இதை யோசிக்கும்போதெல்லாம் நான் பெருமிதம் கொள்வது மறுக்கமுடியாதது! ஆனால், ஒரு சமயத்தில் நான் வேறொரு வடிவில் இந்த நிகழ்ச்சியை யோசிக்க ஆரம்பித்தேன். என்னவள், எத்தனையோ முறை அப்பழக்கத்தை விடுமாறு கேட்டும், நீண்ட காலத்திற்கு நிறுத்தமுடிந்ததில்லை. நாம், திருமணத்திற்கு முன் "நம் குடும்பம்" என்பதை நம் பெற்றோரை முன்னிறுத்தி யோசிக்கிறோம். அதே போல், குழந்தைப் பிறந்தவுடன் (அதுவும் பெண் எனில்) குழந்தையை முன்னிறுத்தி யோசிக்கிறோம். ஆனால், திருமணமானவுடன் குறைந்தபட்சம் குழந்தைப் பிறக்கும் வரையாவது, "குடும்பம் என்பதை மனைவியை  முன்னிறுத்தி யோசிக்க வேண்டும் என்பதை" இந்த சமுதாயம் கற்றுக்கொடுக்கவில்லை; இன்னும் மேலே போய், இச்சமூகம் அதை தடுத்திருக்கிறது என்று கூட குற்றம் சாற்றத் தோன்றுகிறது. அதனால், என் போன்ற பலரால் (குறிப்பாய்  கிராமத்து சூழ்நிலையில் அதிகமாய் வளர்ந்திருப்பின்) மனைவி என்ற உறவை உணர்வுப்பூர்வமாய் (தன்னிச்சையாய் கூட) உணர முடியாமல் போனதாய் படுகிறது. இல்லையேல், என் மனைவியை எல்லா விதத்திலும் நல்ல விதமாய் கவனித்துக் கொண்ட என்னால் ஏன் அவளை உணர்வுப்பூர்வமாய் அணுக முடியவில்லை? அவ்வாறு, அணுகியிருப்பின் நான் இந்தப் புகைப்பழக்கம் போன்ற பல விசயங்களை அவளுக்காய் (முன்னரே) செய்திருப்பேன் என்று தோன்றுகிறது. நான் வேண்டுமென்றே எதையும் அவளுக்காய் செய்யக்கூடாது என்றிருக்கவில்லை; உண்மை என்னவெனில், அவ்வாறு தோன்றவில்லை!

   இவ்வாறாய், என் மகள் எனக்கு கற்றுக்கொடுத்த விசயங்கள் பற்பல; ஒவ்வொரு நிகழ்வையும், என்னுள் நானே அலசிப்பார்க்கும்போது என்னவளை எப்படி உணர்வுப்பூர்வமாய் அணுகுவது என்ற வழிமுறையும் தோன்றுகிறது. நான் அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறேன்; நான் உண்மையில் நல்ல கணவன் எனினும், என்னை உணர்வுப்பூர்மாய் (என் மகளிடம் இருப்பது போல்) என்னவளிடம் வெளிக்காட்டவில்லை என்பது கசப்பான உண்மை; இதை எனக்கு உணர்த்தியவள் என் மகள். அதாவாது, ஒரு தந்தையின் நிலையிலிருந்து "ஒரு கணவனாய்" எப்படி என்னை மேலும் சிறந்த வழியில் வெளிக்காட்டமுடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன். இதை உணர்ந்த போது, ஒரு சிறந்த கணவன் கண்டிப்பாய் சிறந்த தந்தையாய் இருப்பார் என்பதை போல், "ஒரு நல்ல தந்தையும், கண்டிப்பாய் நல்ல கணவனாய்த் தான் இருக்க முடியும்" என்பது புரிந்தது. இந்த இரண்டு உறவும், ஒன்றுடன் ஒன்று மிகுந்த தொடர்புடையது என்பது பொருள்பட வேண்டும் என்பதால் தான் "தலைப்பில்" இந்தக் குறியீட்டை "⇔" வைத்தேன். மிகத்தவாறன பழக்கம் கொண்ட ஒரு ஆண்மகனால் மனைவியிடம் சரியாய் இருக்க முடியாது; அப்போது, கண்டிப்பாய் நல்ல தந்தையாய் இருக்கமுடியாது. இங்கே விதிவிலக்குகள் கண்டிப்பாய் உண்டு! ஒரே ஒரு தவறான பழக்கவழக்கத்தால் நல்ல கணவன் என்ற நிலையில் சிறிது தவறி இருப்பினும், சிறந்த தந்தையாய் இருக்கும் விதிவிலக்கு உண்டு. அதே மாதிரி மனைவியின் புரிதலில்லாததால், நல்ல கணவன் என்ற நிலையிலிருந்து தவற நிர்ப்பந்திக்கப்பட்ட ஒருவர் மிகச்சிறந்த தந்தையாய் இருக்கும் விதிவிலக்கும் உண்டு.

சிறந்த பெற்றோர்க(ளை)ளாய்   உறுவா(க்)க முயற்சிப்போம்!!!                              

பின்குறிப்பு: இத்தலையங்கத்தை முடிக்கும் போது வேறொரு கேள்வி எழுந்தது! அப்படியாயின் "சிறந்த மனைவி ⇔ சிறந்த தாய்" எனலாமா என்று? நிச்சயமாய், ஆம் என்பேன்; அதற்கு முதல் உதாரணம் என் மனைவி. அதன் பின் என்னை வயிற்றில் சுமந்த என் தாய் மற்றும் என்னை நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கும்  என் நெருங்கிய நண்பனின் தாய் (அவர் எனக்கு இரண்டாவது தாய்).  அதே போல், இங்கும் மேற்கூறிய இரண்டு விதிவிலக்குகளும் பொருந்தும். ஒரு தாயின் நிலையிலிருந்து என்னால் இதை விளக்கமுடியுமா எனத் தெரியவில்லை! அப்படி முடியும் எனில் தக்கதொரு சமயத்தில் "சிறந்த மனைவி ⇔ சிறந்த தாய்" என்ற தலையங்கத்தை நிச்சயமாய் எழுதுவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக