வெள்ளி, டிசம்பர் 23, 2011

கலையை எப்படி வளர்ப்பது?

             

("இத்தலையங்கத்தையும்"  எழுத தூண்டிய என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்)

*******

          இத்தலையங்கத்தின் கரு கிடைத்ததும், முந்தைய தலையங்கமான "தமிழை யார் வளர்ப்பது?" -ன் கரு கிடைத்த அன்று தான். மேலும், அந்த விவாதம் நடக்கும் முன்னரே இந்த விவாதம் நடந்தது! ஆனால், இதைப் பற்றி மிகத் தெளிவாய் எழுதவேண்டும் என்பதால் தான், சற்று காலம் கடந்து எழுதுகிறேன். அன்று, பேச்சுக்கிடையில் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் மூலம் வெளியுலகிற்கு நன்கு அடையாளம் காட்டப்பட்ட "போதி தர்மர்" பற்றிய என் ஆதங்கத்தை கூறினேன். நான் கூறியது, நாம் இப்படிப்பட்ட ஒரு மாமனிதனை எப்படி தெரிந்து கொள்ள தவறினோம் என்ற அடிப்படையில் பேசினேன். அவரைப் பற்றியான முழு சரித்திரமும் தெரியவில்லை என்றாலும், ஒரு செய்தியாய் கூட தெரிந்து கொள்ளமுடியாமல் போனது எங்கனம்? என்ற அடிப்படையில் என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். நம்முடைய கலையை, நம் முன்னோர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டு இன்று வேறு ஒரு நாடு தன்னுடையதாய் பறைசாற்றும் "அவல நிலை" எவ்வாறு உருவானது? அந்த கலையை ஏன் நம்மால் தொடர்ந்து பயிற்றுவிக்க முடியவில்லை??  என்ற கேள்விகளை எழுப்பினேன். அந்த கலை ஏன் நம் நாட்டில் பரவலாய் பரவவில்லை என்றும் கேள்வியை எழுப்பினேன். உடனே என் நட்பு வட்டாரங்கள், அதற்கு அளித்த விளக்கம் என்னை திடுக்கிட வைத்தது; நாம் ஏன் நம்மை நாமே தாழ்த்திக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணத் தோன்றியது! அதை, ஒரு சமுதாயப் பார்வையுடன் என் கோபமும் கலந்து இங்கே விளக்கி இருக்கிறேன். 

     என் நண்பர்கள் ஒரு சேர, அந்தக் கலையை வளர்த்தவர்கள் அதை சரியாய் மற்றவருக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்றனர்; ஒப்புக் கொள்ளக் கூடிய காரணம் தான். நான், அவர்களுக்கு வேண்டுமான சன்மானம் கிடைத்திருக்காது; அதனால், அவர்கள் சரிவர சொல்லிக் கொடுக்க முடியாமல் போய் இருக்கலாம் என்றேன். மேலும், அதை ஆர்வமுடன் கற்க ஆட்கள் இல்லாத  காரணத்தால் கூட இருக்கலாம் என்றேன். என்னுடைய சிறுவயதில், எங்கள் கிராமத்தில் பார்த்த "தெருக்கூத்து" கலை இன்னும் என் மனக்கண்ணில் தோன்றுகிறது. அந்த கலை செய்தவர்களின் அடுத்த தலைமுறை இன்னும் கூட எங்கள் கிராமத்தில் இருக்கிறார்கள். நான், இதனை எல்லாம் நினைவு கூர்ந்து, தெருக்கூத்து எனும் கலை "தொலைகாட்சி" பெட்டியில் திரைப்படம் காண்பிக்க ஆரம்பித்ததால் நலிங்க ஆரம்பித்தது என்றேன். எனக்கு, நன்றாய் நினைவிருக்கிறது! இந்த "தொலைகாட்சி" பெட்டி ஆரபமானதும் தான் "தெருக்கூத்து" குறையத் துவங்கியது. இதன் காரணமாய், அவர்களை "அடிமாட்டு" விலைக்கு கூத்து செய்ய அழைத்தார்கள்; இதன் காரணமாய், முதலில் கூத்து குறையத் தொடங்கியது. பின், அவர்களால் குறைந்த வருமானத்தில் பிழைக்க வழியில்லாததால், வேறு வேலை செய்ய சென்னை போன்ற பெருநகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். நான், என் கண் முன்னாள் நிகழ்ந்த இந்த அழிவை மனதில் கொண்டு, "வர்மக்கலை" போன்றதை சொல்லிக்கொடுத்தவர்களுக்கு கூட, இம்மாதிரி பொருளாதாரப் பிரச்சனை வந்திருக்க வாய்ப்புண்டு என்றேன்.

        இங்கே தான் என் மனதை பாதிக்கும் அந்த கருத்து ஒரு சேர வந்த சேர்ந்தது. அது, கலையை வளர்ப்பவர்கள் இலவசமாக சொல்லிக் கொடுக்க வேண்டும்; அப்போது தான், அது வளரும் என்று கூறினர்; அது தான் "போதி தர்மரை" தெரிந்து கொள்ளாததற்கும் காரணம் என்றனர். எனக்கு, கடுங்கோபம் வந்தது; அது எப்படி இலவசமாக ஒருவரால் கலையை கற்றுக் கொடுக்க முடியும்? அது அவர்கள் தொழில் சார்ந்தல்லவா இருக்கிறது?? வாதத்திற்காகவே கூறப்பட்டதாய் இருப்பினும் இது மிகத் தவறான ஒரு பார்வை. ஏனெனில், நான் உட்பட அனைவரும் கடல் கடந்து வந்தவர்கள் தான்; இங்கு வந்ததற்கு பல காரணங்கள் சொல்லிக்கொண்டாலும், முதன்மையான காரணம் "அதிக வருவாய்" வேண்டுமென்று தான். நம்முடைய அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அறிவை/ திறமையை இவ்வுலகிற்கு கொண்டு சேர்க்க, இந்தியாவில் நல்ல வருவாய் இருப்பினும், அதிக வருவாய் வேண்டும் என்பதற்காய் கடல் தாண்டி வந்திருக்கிறோம். நம்மில் எத்தனை பேர், நமக்கு தெரிந்த கணினி-அறிவை இந்தியாவில் உள்ள ஏழை குழைந்தைகளுக்கு இலவசமாய் எடுத்து செல்ல முயன்று இருக்கிறோம் அல்லது அது பற்றி நினைத்து இருக்கிறோம்? மிகப் பெரும்பான்மையோனோர் அதை ஒரு முதலீடாகக் கொண்டு பொருளீட்டவே விரும்புகிறோம். இதே நிலைப்பாடு தானே அவர்களுக்கும் பொருந்தும்; ஒரு வேலை, நாம் ஒரு மாமனிதனைப் பற்றி தெரிந்து கொள்ளாதது தவறு என்று உணர மறுக்கிறோமா? இதற்கு ஏன் சற்றும் நியாயமில்லாத ஒரு வாதம் செய்ய வேண்டும்?

         இதை விட மிக அதிர்ச்சியான இன்னுமொரு விளக்கம் வந்து சேர்ந்தது! அது மேற்கூறியதினும் அபத்தமாய் பட்டது. அது, "போதி தர்மர்" ஒரு குறிப்பிட்ட மதத்தை பரப்புவதற்காய் சென்றவர்!! அதனால் தான், அவரை எவருக்கும் தெரியாமல் போனது என்றனர். எனக்கு செய்வதரியாத கோபம் வந்தது; உடனே, சில நண்பர்கள் எதற்கு இந்த கோபம், இது விளையாட்டான விவாதம் தானே என்றனர். என்னால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. சராசரி, ஆயுளில் பாதியை கடந்துவிட்டேன் - இதே போல் விளையாட்டாய்! இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காய் தான் இந்த வலைப்பதிவை துவக்கியுள்ளேன். நம்முடைய வாதம் தார்மீகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்; நாமும், நம் சக இந்தியர்களும்  இந்தியாவில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அதை வேறு நாடுகளில் பரப்பத்தான் கடல் கடந்து வந்தோம் என்றால், நாம் ஒப்புக் கொள்வோமா? அதனால் நம்மை நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது (இந்தியாவில் வசிக்கும்) இந்தியர்கள் கூறினால் அதை எவ்வாறு எடுத்துக்கொள்வோம்?? அதே தான், "போதி தர்மர்" அக்கலையை அல்லது ஒரு மதத்தை பரப்புவதற்காய் வேறு நாடு சென்றார் என்றால் அது அவருடைய கடமை. மேலும், என்னுடைய பார்வை அவர் கற்றிருந்த கலை மீது தான்; மதத்தை பற்றி கற்றறிந்த நாம் விமர்சிப்பது தவறு. என்னுடைய வாதத்தின் அடிப்படை, இந்த விசயம் தெரியாதது தவறு என்பதைக் குறிப்பிடவும் மற்றும் இப்போதாவது அதை வெளியுலகிற்கு கொண்டு சேர்த்த அந்த இயக்குநரை பாராட்டவும் தான்.

       நம்முடைய கலையை நாம் தொடர்ந்து கற்க/ கற்றுவிக்க தவறியதன் விளைவாய், நாம் அந்த கலையை இழந்தது மட்டுமல்ல அதை இன்னொரு நாடு தனதாய் கொண்டாடும் அவல நிலையும் எழுந்துள்ளது. விருட்சமாய் வேரூன்றி இருக்கவேண்டிய ஒரு கலையை, இப்போது விதையிட நாமே முயன்று கொண்டிருக்கிறோம். இதை மீண்டும் நிலைநாட்ட முயற்சிக்கும் ஒருவரை பற்றி இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். கோவையில் "Sri Ramakrishna Mission Vidyalaya College"-ஐ சார்ந்த தமிழ்ப்-பேராசிரியர் ஒருவர் பழைய தமிழ் வேதங்களை உதவியாய் கொண்டு "வர்மம் சார்ந்த சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். மேலும், அவர் தமிழ்நாடு மற்றும் "கேரளா" மாநிலங்களில் எஞ்சியிருக்கும் குருக்களின் மூலமும் வர்மம் சார்ந்த  தமிழில் மருத்துவத்தை கற்றிருக்கிறார். அவரின் இந்த மகத்தான சேவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விருப்பமெனின் இந்த இணைப்பை அழுத்துவதன் மூலம் அறியலாம். இந்த மாதிரி ஒரு மகத்தான முயற்சி செய்பவரையும், அவர் பணம் வாங்கிக்கொண்டுதான் கற்றுக்கொடுக்கிறார் என்று உதாசீனப்படுத்தாமல் அவரின் உன்னதமான நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவரையும் அவரைப் போன்றவர்களையும் பாராட்ட கற்றுக்கொள்வோம். மேலும், அம்மாதிரி செய்பவர்களைப் பற்றி நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவருக்கு தெரியப்படுத்த முயற்சி செய்வோம். கலையை வளர்ப்பவரை…

பாராட்டி ஊக்குவிக்க கற்றுக்கொள்வோம்! 

பின்குறிப்பு: இலவசம்  கொடுக்கும் அரசாங்கத்தை குறை கூறும் நாமே இன்னொரு புறம் ஒரு கலையை இலவசமாய் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தவறான விமர்சனத்தையும் செய்யாதிருப்போம். இலவசமாய் கொடுக்கப்படும் "உயிரில்லாத" ஒரு பொருளே ஒருவரை சோம்பலாய் ஆக்கும், அதன் மதிப்பு இலவசமாய் பெறுபவருக்கு தெரியாது போய்விடும் எனும் நாமே "உயிரோட்டமுள்ள" ஒரு கலையை இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று எப்படி கூறமுடியும்? கலையின் மதிப்பும் தெரியாது போய் விடாதா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக