வெள்ளி, டிசம்பர் 02, 2011

மகளே! விழியமுதினி...





என் மகளே விழியமுதினி!
உன் முகம் காணும்
முன்னே எழுதிட நினைத்ததிது!!
பெண்ணே! நீ பிறந்த
பின்னே எழுதுகிறேன் இக்கவியை!!
என்னே, எங்கு தொடங்க?

உன் தாய் கருவுற்றவுடனே
என் உள்ளம் உறுதியளித்தது
கருவிலிருப்பது பெண் தானென்று
உருவில்லை அப்போது எனினும்
ஒவ்வொரு இரவிலும் நாங்கள்
எவ்வாறு உனக்கு பெயரிட்டிட
என்றே சிந்திக்கலானோம் - சிந்தித்து
வென்றே விட்டேன் ஓர்நாளில்!

விழியமுதினி!!! - பிடித்திருக்கிறதா மகளே?

உன் பெயர் பிறந்த
முன்னுரை அறிய வேண்டாமோ
நான் கொண்ட நிபந்தனை
நம் செம்மொழி தமிழின்
சிறப்பு எழுத்துக்களாம் - "ழ" கரமும், "ய" கரமும்
இருப்பு கொளல் வேண்டுமென்பதே
என்னே அதிசயம்! இரண்டும்
ஒன்றி அல்லவா அமைந்தன! 

எனக்குள் ஒரு கர்வம்
உனக்கு வைக்கும் பெயர்
முதன்மையாய் இருக்க வேண்டுமென
முழுமையாய் தேடினோம் ஊடகங்களனைத்தும்
எங்கும் கண்டிலோம் இத்திருநாமத்தை
எவர்க்கும் இருந்ததாய் அல்லது 
இப்போது இருப்பதாய் எங்களுக்கு
இன்னமும் சான்று இல்லை!

எப்போது நீ இந்த
என் கண்டுபிடிப்பான
இத்திருநாமத்தை தெளிவாய் - உன்
இனிமை மொழியால்
உச்சரிப்பாய் என
உணர்ச்சி பொங்க
காத்திருக்கிறேன்! விரைவில்
காலம் கனியப்போகிறது!
கனவாய் காணுகிறேன்
கலை மகளே!
உந்தன் செம்மொழி
உச்சரிப்பு எப்படியென?
தமிழச்சி மட்டுமல்ல!
தமிழுடன் மட்டற்ற
உறவும் (பிறப்பால்)கொண்ட
உம்மொழி எங்கனம் 
பிழையாகும்? மாறாய்
பிறரை வசீகரிக்கும்!

கண்டிப்பாய் இக்கவியை
கடிந்த மனதுடனே
முடிக்கிறேன்! இல்லை
மன்னிப்பாய், மகளே!!
எப்படி முடிவுறும்?
என்றுமழியா எம்மகள்
பற்றிய கவிதை??
வற்றாத நதியை
போல வாயிற்றே??
பொன் மகளே!
இக்கவியை அதனால்
இங்கே துவக்கியுள்ளேன்!
இது தொடருமென்பதை
இயம்பவும் வேண்டுமோ?
இல்லை, இதற்கு
இறுதியில்லை என்பதை
இச்சிறியேன் இன்பமுடன்
இறுதியாய் கூறவும் வேண்டுமோ!!! 
  

2 கருத்துகள்:

  1. அருமை,நான் இதை என் மகளுக்கு தகுந்தார் போல் மாற்றிக்கொள்ள போகிறேன். copy அடிக்க உங்கள் சம்மதம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆனந்த்,

    கண்டிப்பாக என்னுடைய் சம்மதம் உண்டு; என் மகள் பற்றிய கவிதை உ ங்களுக்கு - ஊக்கமளிப்பது எனக்கு மகிழ்ச்சியே! முடிந்தால், இக்கவிதையின் இணைப்பை கொடுக்கவும்.

    பதிலளிநீக்கு