ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

இன்று, என் முதல் பிறந்த நாள்!



          இன்று (11.08.2013), என் முதல் பிறந்த நாள்!  என்ன, ஆச்சர்யமாய் இருக்கிறதா? உண்மைதான், 41 அகவை கடந்து 42-வது அகவையில் காலடி எடுத்து வைப்பினும் - என்மகள் இந்த பிறந்தநாளின் போது தான், முதன்முதலில் பிறந்தநாள் வாழ்த்தினை கூறினாள். கண்டிப்பாக, என்னவள் கூறிதான் "என்மகளுக்கு இன்று, எனக்கு பிறந்தநாள் என்று" தெரிந்திருப்பினும் - அவளின் வாழ்த்தும், விசாரிப்பும் எனக்கு பெருத்த-வியப்பை தந்தது. மேலும், அவள் விசாரித்த விதம் என் அம்மாவை நினைவுபடுத்தியது; "என் தாய்க்கு பின் அவள்தான்" என்பதை உணர்ந்தேன்! ஆம், "தாய்க்கு பின் தாரம்" என்பது வெற்றி பெற்றதாய் தெரியவில்லை - அது பல பிரச்சனைகளைத் தான் உருவாக்கி இருக்கிறது; மேலும், "தந்தைக்கு பின் யார்" என்பதும் கூறப்படவில்லை என்பதை முன்பொரு தலையங்கத்தில் விளக்கி இருக்கிறேன். எனவே, "தாய்க்கு பின் தன்மகள்" என்பதே பொருந்தும் என்று உணர்கிறேன்; இதை உணர்ந்தவுடன் நான் - மீண்டும் பிறந்ததாய் நம்பினேன்! எனவே,  இது முதல் பிறந்தநாள் தானே?

        என்மகள் - முதலில், அப்பா! "ஹாப்பி பர்த்டே" என்றாள்; பின், உங்களுக்கு இன்னைக்கு "ஹாப்பி பர்த்டே"வா? என்றாள்; ஆம், என்றேன்!! "கேக்" வாங்கிட்டீங்களா? என்றாள்! இல்லை என்றேன்; ஏன் என்றாள்!! நீ தான் என்னுடன் இல்லையே! என்றேன். பின் - தீபா-அக்கா, அரவிந்த், தென்னவன் (என் தமக்கை மற்றும் தமையன் பிள்ளைகள்) எல்லாம் வந்திருக்காங்களா?? என்றாள்! இல்லை என்றேன்; ஏன் என்றாள்? அவளின் பிறந்த-நாளுக்கு எல்லோரும் வந்து வாழ்த்தியது போல் (அல்லது உடனிருந்தது போல்) தன்-தந்தையின் பிறந்த நாளுக்கு எல்லோரும் இருப்பார்கள்/இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்திருக்கிறாள்! என் அம்மாதான் ஒவ்வொரு முறையும் - சாப்பிட்டியா? என்ன சமைச்ச?? என்று உணர்வும், உறவும் சார்ந்து விசாரிப்பார்! அதன் பின், என் தமக்கை - அவ்வப்போது விசாரிப்பார்!! நான், என்னுடைய எல்லா உறவுகளையும் - இம்மாதிரி அவ்வப்போது விசாரிப்பினும் - இவ்விருவர் தவிர வேறெந்த உறவும் என்னை இப்படி விசாரித்ததில்லை - இப்போது, என்மகள் சேர்ந்திருக்கிறாள்!

என்மகளுக்காகவாவது - இனி, என்னுடைய பிறந்தநாளை கொண்டாடவேண்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக