ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

நண்பர்கள் தினம்!!!



        இன்று நண்பர்கள் தினம்! பலரும், இன்று தங்களது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியவண்ணம் உள்ளனர். எனக்கும், சில வாழ்த்துக்கள் வந்தன; அவற்றிற்கு நன்றிகளும் தெரிவித்தேன்!! சமூக-வலைதளங்களிலும் இது சார்ந்த பல வாழ்த்துக்களையும், செய்திகளையும் காண முடிந்தது. இதுபற்றி என்னுடைய பார்வையை எழுதவேண்டும் என்று தோன்றியது; ஒரு மணி நேரத்திற்குள், இந்த சிந்தனை வந்து அதை மனதங்கமாய் எழுதி பதிவும் செய்துவிட்டேன். இது என்னுடைய பார்வை தான்! இதில் எவருக்கு மாற்றுக்கருத்து இருப்பினும் - நான் மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறேன். மிகப்பெரிய என்ற அளவில் இல்லை எனினும் - எனக்கும் ஓர் நெருங்கிய நட்பு வட்டம் உள்ளது; அதிலும் என்னுடைய முக்கிய நண்பர்கள் என்று சிலரை அவ்வப்போது என்னுடைய வலைப்பதிவில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன். நானோ அல்லது என் நட்பு-வட்டத்தில் எவரோ இதுவரை "நண்பர்கள் தினம்" என்று சொல்லப்படும் இந்த நாளில் - இதுவரை வாழ்த்துக்கள் சொல்லியதில்லை. ஓரிரு முறை, எதேச்சையாய் தொலைபேசியில் உரையாடிய போது -  நானும், சுரேசும் "ச்சும்மா" வாழ்த்து சொல்லியிருக்கிறோம். 

      "அன்பே சிவம்" படத்தில் வருவது போல் "இது என்ன, காதலா? அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்க??" என்றே வினவத் தோன்றுகிறது. எனக்கு இந்த வாழ்த்துக்கள் கூறுவது பிடிக்கவில்லை என்பதை காட்டிலும், இதை சார்ந்த ஓர் பயம் எழுகிறது. காதலுக்கு அடுத்து அல்லது நிகராக - நாம் அனைவரும் நட்பை பார்க்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய பயம் எல்லாம், இதுமாதிரி வாழ்த்துக்கள் சொல்லி - நட்புவட்டத்திற்குள்ளும் பெரிய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி விடுவோமா! என்பதுதான்; எதிர்பார்ப்பு இல்லாதது தானே நட்பு!! அதனால் தான், பிறந்தநாள் வாழ்த்து சொல்லாததால் காதலர்கள் இடையே வரும் பிரச்சனைகள் போல் - "நண்பர்கள் தின" வாழ்த்து சொல்லவில்லை என்று நண்பர்களிடையே பிரச்சனை வந்துவிடுமோ என்ற ஐயம் வருகிறது. இது போல், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற பல தினங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்முடனே, நாமாய் இருக்கும் நண்பர்களை...

வாழ்த்துவதற்கு - தனியே எதற்கோர் தினம்???      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக