ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

ஏனோ கோவிலின் பரவசம் கிடைக்கவில்லை!!!



      நேற்றுமுன்தினம் - என் தமக்கை-மகன் மற்றும் அவன் குடும்பத்தாருடன் - துபாயில் உள்ள கோவிலை காணும் வாய்ப்பு கிடைத்தது. எப்போதோ செல்ல எத்தனித்தது; என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் - என் கற்பனை திரையில் காட்சிகளாய் ஓடிக்கொண்டே இருந்தது! என்னுடைய ஆவல் அதிகமானது!! கூடவே - போர்த்துக்கல் நாட்டில் இருக்கும் "வெறும்"பிரம்மாண்டமான "ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா" கோவில் போல் இருந்துவிடுமோ என்ற பயம்!!! உண்மையில், அந்த கோவிலுக்கு அதிகபட்சமாய் 7 முறைகள் (8 ஆண்டுகளில்!) தான் சென்றிருப்பேன் - அதிலும், ஓர் முறை கூட - கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு செல்லவில்லை - ஏனோ அம்மாதிரி உள்ளவைகளை என்னால் கோவில் என்றே ஒப்புக்கொள்ள முடியவில்லை! ஓர் வழியாய் கோவிலை அடைந்தோம்; அது ஓர் சாதாரண வீட்டை போன்று தான் இருந்தது - அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை; இங்கு கோவில் ஒன்று இருப்பதே பெரிய-விசயம்  அல்லவா? 

   உள்ளே சென்று பார்த்தால் - கோவில் என்பதற்கான உணர்வு எதுவும் எனக்கு எழவில்லை! போர்த்துக்கல் நாட்டிலாவது ஓர் பிரம்மாண்டம் இருந்தது; இங்கு அது கூட இல்லை! "இவர்களுக்கு (மட்டும்) உருவிலா வழிபாடு எப்படி சாத்தியமாயிற்று???" தலையங்கத்தில் குறிப்பிட்ட என்னுடைய ஆச்சர்யம் மேலும் விரிவடைந்தது. கோவில் என்பதில் நம்மை மயக்கும், நம்மை கவரும், நம்மை பரவசப்படுத்தும் சிலைகளை பார்த்தே பழகியவன் ஆயிற்றே?! சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த பிரமாண்டமும் இல்லை; ஆனால், 48 மைல் தொலைவு நடந்து அங்கு சேரும்போது - ஓர் பரவசம் கிடைக்கும்! திருப்பதியில் - பிரம்மாண்டத்துடன் பரவசமும் கிடைக்கும்!! சமயபுரத்தில் - பிரம்மாண்டம் ஏதுமில்லை; ஆனால், அந்த அம்மனின்-சிலையில் ஓர் உயிர்ப்பு இருக்கும்!!! இதே உயிர்ப்பு பெங்களூர்-மஹாலக்ஷ்மி நகரில் இருக்கும் "ஆஞ்சநேயர் சிலையில்" மற்றும் "கோகர்ணா" முருடேஷ்வர்-சிவனிடம் இருக்கும்!! "தென்னிந்திய-வடஇந்திய" வேறுபாடு இதிலும் இருக்கிறதா??? எது, எப்படியோ...

      இம்மாதிரி - உயிர்ப்பும், பரவசமும் கிடைக்கும் கோவில்களே என்-விருப்பம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக