ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2018

அதிகாரம் 112: நலம்புனைந்து உரைத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்

1111.  நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
          மென்னீரள் யாம்வீழ் பவள்

          விழியப்பன் விளக்கம்: அதிமென்மை கொண்ட அனிச்சம் பூவே! நீ வாழ்வாய்! ஆனால், நான் 
          விரும்பும் என்னவள்; உன்னினும் மென்மையானவள் என்பதையும் உணர்வாயாக!
(அது போல்...)
          அதிவலிமை கொண்ட பூமித் தாயே! நீ சிறப்பாய்! ஆனால், நான் வணங்கும் என்னம்மை; 
          உன்னினும் வலிமையானவள் என்பதையும் ஏற்பாயாக!
      
1112.  மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
           பலர்காணும் பூவொக்கும் என்று

           விழியப்பன் விளக்கம்: மலர்களைக் கண்டால், மயங்கும் நெஞ்சமே! இவளின் கண்களும், 
           பலர் கண்டு வியக்கும் பூக்களுக்கு இணையாகும், என்றெண்ணி தான் மயங்குகிறாயோ?
(அது போல்...)
           உறவுகளைக் கண்டால், உருகும் மனிதமே! இயற்கையால் பாதிக்கப்பட்டோரும், பலர் 
           உறவாடி உருகும் உறவுகளுக்கு இணையாவர், என்றெண்ணி தான் உருகுகிறாயோ?
           
1113.  முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
           வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

           விழியப்பன் விளக்கம்: மூங்கில் போன்ற தோளை உடையவளுக்கு - மேனி, 
           இளந்தளிருக்கும்; பல், முத்துக்கும்; உடல்மணம், நறுமணத்திற்கும்; மைதீட்டிய கண், 
           வேலுக்கும் - இணையாகும்!
(அது போல்...)
           வைரம் போன்ற சிந்தனை உடையோருக்கு - செயல், உயிர்மூச்சுக்கும்; சொல், 
           குருதிக்கும்; உடல்வலிமை, மனவலிமைக்கும்; பண்பட்ட மனம், அரணுக்கும் - 
           இணையாகும்!  

1114.  காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
           மாணிழை கண்ணொவ்வேம் என்று

           விழியப்பன் விளக்கம்: அழகிய குவளை மலர், என்னவளைக் கண்டால்; சிறந்த 
           அணிகலனாகிய அவள் கண்ணுக்கு ஒப்பமாட்டேன் எனவுணர்ந்து, தலைகுனிந்து நிலம் 
           நோக்கும்!
(அது போல்...)
           தேர்ந்த அரசியல் விமர்சகர், நற்தலைவரைக் கண்டால்; உயர்ந்த குணமாகிய அவர் 
           வாய்மைக்கு ஒப்பமாட்டேன் என்றறிந்து, வழிவிட்டு விலகி நிற்பர்!

1115.  அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
           நல்ல படாஅ பறை

           விழியப்பன் விளக்கம்: தன் மென்மையை உணராமல், காம்பு களையாத அனிச்சம் பூவைச்      
           சூடியதால்; ஒடிந்த என்னவளின் இடுப்புக்காக, மங்களமற்ற இசை ஒலிக்கும்!
(அது போல்...)
           தன் கடமையைச் செய்யாமல், ஊழல் கலையாது அரசியல் ஆதாயம் தேடியதால்; இழந்த 
           மக்களின் ஆட்சிக்காக, அறமற்ற தண்டனை கிடைக்கும்!

1116.  மதியும் மடந்தை முகனும் அறியா
           பதியின் கலங்கிய மீன்

           விழியப்பன் விளக்கம்: ஒளிமிக்க என்னவளின் முகத்தில், மதிமயக்கம் கொண்ட 
           விண்மீன்கள்; நிலவுக்கும்/பெண்முகத்திற்கும் வித்தியாசம் அறியாமல், தன்னிலை மறந்து 
           அலைகின்றன!
(அது போல்...)
           புகழ்மிக்க எந்தலைவனின் கடமையில், சித்தம் கலங்கிய எதிர்க்கட்சிகள்; குடும்பத்திற்கும்/
           மக்களாட்சிக்கும் வித்தியாசம் அறியாமல், தன்கடமை மறந்து இருக்கின்றன!

1117.  அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
           மறுவுண்டோ மாதர் முகத்து

           விழியப்பன் விளக்கம்: மறைந்து மீண்டும் தோன்றும் நிலவில் இருக்கும், ஒளிவு குறைந்த 
           இருள் போல்; என்னவளின் ஒளிமிக்க முகத்தில், களங்கம் ஏதுமுண்டோ?... இல்லையே!
(அது போல்...)
           ஆவியாகி மீண்டும் பரவும் கடலில் இருக்கும், உப்பு மிகுந்த நீர் போல்; என்னம்மையின் 
           ஒப்பற்ற அன்பில், குறை ஏதுமுண்டோ?... இல்லையே!

1118.  மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
           காதலை வாழி மதி

           விழியப்பன் விளக்கம்: அழகான நிலவே! என்னவளின் முகம் போல், ஒளியை வீசும் 
           வல்லமையைப் பெற்றால்; என் காதலைப் பெற்று வாழ்வாயாக!
(அது போல்...)
           மக்களுக்கான ஆட்சியே! என்னம்மையின் தாய்மை போல், அன்பைப் பகிரும் இயல்பைப் 
           பெற்றால்; என் தொண்டைப் பெற்றுத் தொடர்வாயாக!

1119.  மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
           பலர்காணத் தோன்றல் மதி

           விழியப்பன் விளக்கம்: நிலவே! அழகுமலர் போன்ற விழியுடைய என்னவளின் முகத்திற்கு, 
           நிகராய் இருக்க விரும்பினால்; பலரும் காணும் வண்ணம் தோன்றாதே!
(அது போல்...)
           அரசே! அன்புக்குவியல் போன்ற இதயமுடைய என்னம்மையின் பொதுமைக்கு, இணையாய் 
           வளர விரும்பினால்; பலரையும் அழிக்கும் பிரிவினையைக் கைவிடு!

1120.  அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
           அடிக்கு நெருஞ்சிப் பழம்

           விழியப்பன் விளக்கம்: அனிச்சம் பூ/அன்னப்பறவையின் இறகு - இவையிரண்டும் கூட, 
           என்னவளின் பாதங்களுக்கு; நெருஞ்சிப் பழத்தின் மேலுள்ள, சிறிய முட்களுக்கு 
           நிகரானவை ஆகும்!
(அது போல்...)
           ஒருவேளை உணவு/ஓரிரவு தூக்கம் - இவையிரண்டும் கூட, ஆதரவற்றோரின் 
           வாழ்வியலுக்கு; இமய மலையின் மீதேறி, உச்சத்தைத் தொடுவதற்கு இணையானவை 
           ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக