திங்கள், மார்ச் 19, 2018

அதிகாரம் 096: குடிமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை

0951.  இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
           செப்பமும் நாணும் ஒருங்கு

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தோரைத் தவிர்த்து, மற்றவர்களிடம்; 
           இயற்கையான நடுநிலையும்/நாணுதலும் ஒன்று சேர்ந்து இருப்பதில்லை!
(அது போல்...)
           நேர்மையான கட்சியில் இருப்போரைத் தவிர்த்து, மற்றவர்களிடம்; உண்மையான 
           பொதுநலனும்/ஆளுமையும் ஒன்றாக இணைந்து அமைவதில்லை!
      
0952.  ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
           இழுக்கார் குடிப்பிறந் தார்

           விழியப்பன் விளக்கம்: நல்லறம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தோர்; ஒழுக்கம்/வாய்மை/
           நாணுதல் - இம்மூன்றிலும் தவறிழைக்க மாட்டார்கள்!
(அது போல்...)
           நல்லாட்சி அளிக்கும் கட்சியில் இருப்போர்; ஊழல்/பரிந்துரை/விதிமீறல் - இம்மூன்றிலும் 
           நாட்டம் கொள்ளமாட்டார்கள்!
           
0953.  நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
           வகையென்ப வாய்மைக் குடிக்கு

           விழியப்பன் விளக்கம்: நல்லறம் மிக்க குடும்பத்தில் பிறந்தோர்க்கு; புன்னகை செய்வது/
           பெற்றதைப் பகிர்வது/நற்சொல் பேசுவது/இகழ்ந்து பேசாதது - இந்நான்கும், இயல்பான 
           குணங்களாகும்!
(அது போல்...)
           நற்சிந்தனை விதைக்கும் கட்சியைத் தொடர்வோர்க்கு; சேவை செய்வது/உரிமையைப் 
           பகிர்வது/நற்செயல் செய்வது/தாழ்ந்து போகாதது - இந்நான்கும், சிறப்பான 
           காரணிகளாகும்!  

0954.  அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
           குன்றுவ செய்தல் இலர்

           விழியப்பன் விளக்கம்: பன்மடங்கு கோடி மதிப்புடைய சன்மானத்தைப் பெற்றாலும்; 
           நல்லறம் மிக்க குடும்பத்தில் பிறந்தோர், அறத்தன்மை குறையும் செயல்களைச் 
           செய்வதில்லை!
(அது போல்...)
           பல்வேறு விதங்களில் இலஞ்சம் கிடைப்பதே ஆயினும்; நற்தலைமை உள்ள கட்சியில் 
           இருப்போர், மக்களாட்சியை அழிக்கும் குற்றத்தைச் செய்வதில்லை!

0955.  வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
           பண்பில் தலைப்பிரிதல் இன்று

           விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிரும் உயர்பண்பால், வறுமையில் சிக்கினாலும்; 
           தொடர்ந்து நல்லறம் காத்த குடும்பத்தில் பிறந்தோர், அந்த பழையப் பண்பிலிருந்து 
           விலகுவதில்லை!
(அது போல்...)
           மக்களுக்காகப் போராடும் பொதுவாழ்வில், தோல்வியைச் சந்தித்தாலும்; தொடர்ந்து 
           பொதுநலம் காக்கும் உறுதி கொண்டோர், அந்த தலைமைப் பண்பிலிருந்து 
           விலகுவதில்லை!

0956.  சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
           குலம்பற்றி வாழ்தும்என் பார்

           விழியப்பன் விளக்கம்: களங்கமற்ற வரலாறு கொண்ட குடும்பத்தை, பின்பற்றி வாழ்வோம் 
           என்பார்; எதற்காகவும் வஞ்சம் கொண்டு, மாண்பற்ற செயல்களைச் செய்யார்!
(அது போல்...)
           ஊழலற்ற மரபு கொண்ட கட்சியை, பின்தொடர்ந்து செல்வோம் என்பர்; எப்பதவியிலும் |  
           பற்று கொண்டு, முறையற்ற கூட்டணியைச் சேரார்!

0957.  குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
           மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

           விழியப்பன் விளக்கம்: வானத்தின் நிலவில் இருக்கும் இருள் போல்; நல்லொழுக்கம் மிகுந்த 
           குடும்பத்தில் பிறந்தவரிடம் இருக்கும் தவறுகள், பிரம்மாண்டமாய் தெரியும்!
(அது போல்...)
           வெள்ளைத்தாளின் மத்தியில் இருக்கும் கரும்புள்ளி போல்; அறச்சிந்தனை மிக்க கட்சியின் 
           உறுப்பினரிடம் உருவாகும் ஊழல்கள், இழிவாய் உருமாறும்!

0958.  நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
           குலத்தின்கண் ஐயப் படும்

           விழியப்பன் விளக்கம்: வளங்கள் நிறைந்த ஒருவரிடம், அன்பற்ற தன்மை தோன்றினால்; 
           அவரின் குடும்ப உறுப்பினர்களும், சந்தேகத்திற்கு உள்ளாவர்!
(அது போல்...)
           தகுதி உடைய தலைவரிடம், செயலற்ற தன்மை உருவானால்; அவரின் கட்சித் 
           தொண்டர்களும், அவநம்பிக்கைக்கு ஆட்படுவர்!

0959.  நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
           குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

           விழியப்பன் விளக்கம்: நிலத்தின் கீழுள்ள விதையின் வீரியத்தை, மேலுள்ள பயிர் 
           உணர்த்தும்! அதுபோல் ஒருவர் பிறந்த குடும்பத்தின் உயர்வை, அவரின் வாய்ச்சொல் 
           உணர்த்தும்!
(அது போல்...)
           மனதின் அகத்திலுள்ள சிந்தனையின் தன்மையை, புறத்திலுள்ள முகம் வெளிப்படுத்தும்! 
           அதுபோல் ஒருவர் சார்ந்த கட்சியின் கொள்கையை, அவரின் சமூகசிந்தனை 
           வெளிப்படுத்தும்!

0960.  நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
           வேண்டுக யார்க்கும் பணிவு

           விழியப்பன் விளக்கம்: நல்ல வாழ்க்கை வேண்டுமெனில், நாணம் இருக்க வேண்டும்! 
           அதுபோல் நல்ல குடும்பம் வேண்டுமெனில், குடும்பத்தார் யார்க்கும் பணிவு இருக்க 
           வேண்டும்!
(அது போல்...)
           நல்ல சமுதாயம் வேண்டுமெனில், மனிதம் வளர வேண்டும்! அதுபோல் நல்ல மக்களாட்சி 
           வேண்டுமெனில், அரசியலார் யார்க்கும் பொதுமை வளர வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக