வியாழன், நவம்பர் 09, 2017

அதிகாரம் 083: கூடா நட்பு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 083 - கூடா நட்பு

0821.  சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
           நேரா நிரந்தவர் நட்பு

           விழியப்பன் விளக்கம்: உறவாடுவது போல் நடித்து, சுயத்தேவைக்காகப் பழகுவோரின் கூடா-
           நட்பு; சரியானத் தருணத்தில் வெட்டியெறியத் தாங்கிப் பிடிக்கும், பட்டடைக்கல் 
           போன்றதாகும்!
(அது போல்...)
           வாழ்வியலை உயர்த்துவதாய் சித்தரித்து, வாக்குக்காக முழங்குவோரின் பொய்-பிரச்சாரம்; 
           உரிய நேரத்தில் கழுத்தறுக்க ஏந்தி நிற்கும், பலிப்பீடம் போன்றதாகும்!
      
0822.  இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
           மனம்போல வேறு படும்

           விழியப்பன் விளக்கம்: ஒருமித்தவர் போன்று தோற்றமளித்து, செயல்களில் ஒன்றாமல்  
           இருப்போரின் நட்பு; அன்பானவர் போல் நடித்த, அன்பிலா விலைமகளரின் மனம் போல்    
           மாறுபடும்.
(அது போல்...)
           கர்மவீரர் போல் முழக்கமிட்டு, கர்மத்தில் திறமின்றி இருப்போரின் ஆட்சி; உழைப்பாளி 
           போல் பழகிய, உழைப்புணரா முதலாளிகளின் அதிகாரம் போல் உருமாறும்.
           
0823.  பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
           ஆகுதல் மாணார்க் கரிது

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவு வளர்க்கும் பல நல்ல நூல்களைக் கற்றிருப்பினும்; 
           மாட்சிமை இல்லாதோர்க்கு, மனதைச் சீர்படுத்தி நல்நட்பாக ஆகுதல் அரிதானதாகும்.
(அது போல்...)
           பொதுநலம் காக்கும் பல சிறந்த தலைவர்களைப் பார்த்திருப்பினும்; நேர்மை    
           இல்லாதோர்க்கு, அறத்தை முன்னிருத்தி மக்களாட்சி வழங்குதல் இயலாததாகும்.

0824.  முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
           வஞ்சரை அஞ்சப் படும்

           விழியப்பன் விளக்கம்: முகத்தில் இனிமையானப் புன்முறுவலை வெளிப்படுத்தி; அகத்தில் 
           கெடுதலை நினைக்கும், வஞ்சகம் நிறைந்த நட்புக்கு அஞ்சவேண்டும்!
(அது போல்...)
           ஆசிரமத்தில் நேர்மையான செயல்களைப் போதித்து; வாழ்க்கையில் அறத்தைத் தவறும், 
           பொய்மை மிகுந்த குருவை விலகவேண்டும்!

0825.  மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
           சொல்லினால் தேறற்பாற்று அன்று

           விழியப்பன் விளக்கம்: மனதோடு இணையாத ஒருவரின் கூடா நட்பை; எவ்வொரு 
           விடயத்திலும், அவரின் சொல்லை நம்பி தெளிவடைதல் கூடாது!
(அது போல்...)
           மக்களோடு இணையாத ஒருவரின் முறையற்ற தலைமையை; எந்தவொரு நிலையிலும், 
           அவரின் பிரச்சாரத்தை நம்பி பின்தொடர்தல் கூடாது!

0826.  நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
           ஒல்லை உணரப் படும்

           விழியப்பன் விளக்கம்: நண்பர்கள் போல் நல்லவற்றைச் சொன்னாலும்; கூடா நட்புடையப் 
           பகைவரின், சொல்லில் மறைந்திருக்கும் தீய எண்ணங்களை விரைந்து உணரவேண்டும்!
(அது போல்...)
           உழைப்பாளிகள் போல் சமமாய் பழகினாலும்; வஞ்சகம் நிறைந்த முதலாளிகளின், 
           பழக்கத்தில் ஒளிந்திருக்கும் உழைப்பு சுரண்டல்களை உடனடியாய் அறியவேண்டும்!

0827.  சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
           தீங்கு குறித்தமை யான்

           விழியப்பன் விளக்கம்: வில்லின் பணிவான வளைவின் குறிக்கோள் தீமையே! அதுபோன்றதே 
           கூடா-நட்பின் பணிவான சொல்லும் என்பதால், அவர்களின் சொல்லை ஏற்கக்கூடாது!
(அது போல்...)
           கடலின் அமைதியான பகுதியின் அடிப்படை ஆழமே! அதுபோன்றதே அதிகார-வர்க்கத்தின் 
           அமைதியான சிரிப்பும் என்பதால், அவர்களின் சிரிப்பை நம்பக்கூடாது!

0828.  தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
           அழுதகண் ணீரும் அனைத்து

           விழியப்பன் விளக்கம்: தொழுது நிற்கும் பகைவரின் கைகளுக்கிடையில், ஆயுதம் 
           மறைந்திருக்கும்! கூடா நட்பு ஒருவரின், அழுகையில் வெளிப்படும் கண்ணீரும் 
           அத்தகையதே!
(அது போல்...)
           புன்னகை பூக்கும் முகத்தின் ஆழ்மனதில், வஞ்சகம் நிறைந்திருக்கும்! அறமற்ற தலைவர் 
           ஒருவரின், பேச்சில் வெளிப்படும் கருணையும் அவ்வாறே!

0829.  மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
           நட்பினுள் சாப்புல்லற் பாற்று

           விழியப்பன் விளக்கம்: பகையை வெளிப்படுத்தாமல் போலியாய் நட்பாடி, மனத்துள் 
           இகழ்வோரிடம்; அவர்களின் கூடா நட்பை அழிக்கும் வண்ணம், நாமும் போலியாய் 
           மகிழ்ந்து பழகவேண்டும்!
(அது போல்...)
           சுயத்தை மறைத்து இனிமையாய் பேசி, அரசியல் செய்வோரிடம்; அவர்களின் பொய் 
           உருவத்தைத் தகர்க்கும் வகையில், நாமும் பொய்யாய் நம்பிக்கையளித்து ஏமாற்றவேண்டும்!

0830.  பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
           அகநட்பு ஒரீஇ விடல்

           விழியப்பன் விளக்கம்: பகைமை உணர்வு கொண்ட கூடா நட்பிடம், பழகும் சூழல் 
           எழும்போது; முகத்தளவில் மட்டும் நட்பாடிவிட்டு, மனதுக்குள் அந்நட்பை பதியாமல் 
           கைவிடுதல் வேண்டும்!
(அது போல்...)
           ஊழல் எண்ணம் மிகுந்த அறமற்ற கட்சி, படியேறி பிரச்சாரம் செய்யும்போது; பெயரளவில் 
           மட்டும் கேட்டுவிட்டு, குடும்பத்தில் அக்கட்சி வேரூன்றாமால் அழித்தல் வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக