வெள்ளி, டிசம்பர் 01, 2017

அண்ணாதுரை (2017)


       அண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கான முன்னோட்டத்தில்  குறிப்பிட்டு இருந்ததுபோல்; இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இது படத்தின் விமர்சனம் எழுதும் தருணம்; என்முன் இருப்பவை இரண்டு சவால்கள்:
  1. சில நேரங்களில், அலுவல் சார்ந்த பரிந்துரைக் கடிதத்தை சிலரிடம் கேட்கும்போது; நம்மையே "ஓர் வடிவமாய் எழுதி" கொடுக்க சொல்லிவிடுவார்கள். பிறரைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதமுடிந்த நமக்கு, நம்மைப் பற்றி எழுதுவது எத்தனை சிரமானது என்பது; மேற்குறிப்பிட்ட நிலை வாய்ப்பின் புரியும். இப்படத்திற்கு விமர்சனம் எழுதுவதும் அதே நிலைதான் - அவனைப் பற்றி எழுதுவது, என்னைப்பற்றி எழுதுவதைப் போலத்தான்.
  2. ஸ்கிரிப்டைப் படிக்கும்போது, என்னுள் எழுந்த கற்பனைகளை; படத்தின் காட்சிகளுடன் ஒப்பிடாமல் இருப்பது சாத்தியமே இல்லை! ஆனால், என் திருப்தியின்மை; எக்காரணம் கொண்டும் விமர்சனத்தில் வெளிப்படக்கூடாது.
   இவ்விரண்டு சவால்களையும், மிகக்கவனமாய்/மிகச்சரியாய் எதிர்கொண்டு; நேர்மையான விமர்சனத்தை இங்கே கொடுத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். 😊🙏


நிறைகள்:
  • கந்துவட்டிக் கொடுமையால், திரைத்துறையைச் சார்ந்த ஒருவர் தன்னுயிரை இழந்திருக்கும் வேளையில்; ஓர் "சராசரியான முதலீட்டில்" படத்தைத் தயாரிக்கும் வண்ணம்; கதையை, ஓர் அறிமுக இயக்குனர் கையாண்டிருப்பது சிறப்பு. முதல்படத்தில் தன்னை நிரூபிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் "பிரம்மாண்டம் என்னும் மாயையில் சிக்காமல்"; சிக்கனமாய் படத்தை முடித்திருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள். இதுபோன்ற திரைக்கதைகள் பெருகி, இயல்பான தயாரிப்பாளர்கள் பெருகட்டும்/வளரட்டும்! "வளமும்/பலமும்" இருப்போர் மட்டும் பிரம்மாண்டத்தின் பின்னே செல்லட்டும்!
  • சிக்கனத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் - படத்தின் ஆரம்பக் காட்சிகள்! சமீபத்திய படங்கள் பலவற்றில், டைட்டிலின் "கிராஃபிக்ஸ்" மாயாஜாலங்களில் பணத்தை செலவிடுகிறார்கள். சில படங்களில், கதையின் சாராம்சத்தை விளக்குவதாய் அமைந்தாலும் - அவை தேவையா? என்ற கேள்வி எழும். அப்படியேதும் இல்லாமல்; படத்தின் காட்சிகளைப் பின்னணியில் வைத்திருப்பது சிறப்பு. இதை ஏதோ "தமிழ்த்திரை வரலாற்றிலேயே, முதன் முதலாக" என்பதாகச் சித்தரிக்கவில்லை! ஆனால், அப்படியிருந்த எதார்த்தத்தை; மீண்டும் கொண்டு வந்திருப்பதும்/செலவைக் குறைத்திருப்பதும் - குறிப்பிடப் படவேண்டியவை!
  • "டைட்டில்" காட்சியின் போது; மதுக்கடைக்கு மதுவருந்த செல்லும் கதாநாயகன், அங்கு மதுவருந்தும் மாணவர்களை விரட்டியடிப்பார். அதுபோன்ற காட்சிகளை, நிஜவாழ்வில் பார்த்துவிட்டு  வெறுமனே கடப்போர் பலரும்; அதைக் காணொளியாய் எடுத்து "காமெடி கருத்து" சொல்லும் சிலரும் சேர்ந்ததாய் - இச்சமூகம் இருக்கும்போது - மதுவருந்த செல்லும் ஒருவர், அங்கேயே/அப்போதே கண்டிக்கும் காட்சி(யி/யா)ல்; மதுவின் விளைவை உணர்த்தும் - கதாநாயகப் பாத்திரப் படைப்பில் வெளிப்படுகிறது, இயக்குனரின் அக்கறை! ஆரம்பக்கட்ட காட்சிகள் (10/15 நிமிடங்கள் வரை) - இயக்குனராய், அவனின் திறமையை - அழுத்தமாய்/ஆழமாய் உணர்த்தி இருக்கிறது.
  • முதல் காட்சியில் துவங்கி, இறுதிவரை - எதார்த்தமான காட்சிகளுடன்; எந்த "செட்"டிங்கும் இல்லாமல்; இன்னமும் இயற்கையோடும்/இயல்போடும் என் கிரமாத்தின் அருகிலிருக்கும் "திருக்கோவிலூர்" நகரை - அப்படியே காட்டியிருப்பது - அவனின் படமாக்கும் திறமையை கூர்மையாய் விவரிக்கிறது. கிராமமோ/நகரமோ/பெருநகரோமோ - இவ்வித இயல்புதான் நிலைத்து எஞ்சும். அதில், நிலையாய் இருந்திருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள். இம்மாதிரி, இயல்போடு வெளிவரும் படங்கள் மிகவும் குறைவு. ஓர் உதாரணம்: ஓர் காட்சிக்கு, திரு. ஜனார்த்தனன் என்ற எங்கள் நண்பனொருவனின் வீடு பயன்படுத்தப் பட்டிருக்கும்  - நேரில் காணும் அதே இயல்பு/அழகு!
  • தமிழ்த் திரையுலகமே "பேய்" மற்றும் "(எரிச்சலூட்டும்)ஹீரோயிசத்தை" நம்பி படங்களை எடுக்கும் வேளையில்; என்றும் பசுமையான "உறவுகளையும்/உணர்வுகளையும்" முன்வைத்து, ஓர் திரைக்கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
  • "இந்த உலகத்துக்கு... பழி சொல்லத்  தெரியுமே தவிர; வழி சொல்லத் தெரியாது!" - படத்தின் துவக்கத்தில் வரும் வசனத்தின் கூர்மை; படம் தொடரத் தொடர மென்மேலும் கூர்மை அடைகிறது. வெறும் "பன்ச் டையாக்குகளாய்" கேட்டு சலித்த நம்மில் பலருக்கும்; இவ்வித "வசனங்களின் உண்மையான வாசம்" ஓர் புது அனுபவத்தை அளிக்கும். "வசனம் எழுதுவது ஓர் கலை!" என்பதை முதல் படத்திலேயே நிலைநாட்டி இருப்பது இயக்குனருக்கு கிடைத்திருக்கும் வரம்; அவ்வரம் தொடரட்டும்!
  • பல காட்சிகளிலும், வழக்கமான திரைப்படங்கள் போல், அடுத்த காட்சியை நம்மை யோசிக்க வைத்து; அதுபோலவே தொடரவும் செய்து, ஆனால் அடுத்தக் காட்சியிலேயே அதைத் தகர்த்து; வேறொரு கோணத்தில் நகர்த்துவது அருமை. படம் முழுவதும், இம்மாதிரியான காட்சிகள் நிறைந்திருக்கின்றன. "சுவராஸ்யமான திரைக்கதையை" இப்படியும் அமைக்கலாம் என்பதற்கு இப்படமோர் உவமை!
  • தொடர்ந்து "செண்டிமெண்ட்" படங்களில் நடித்திருந்தாலும், திரு. விஜய் ஆண்டனிக்கு இந்தப் படம் மிகப்பெரிய சவாலாய் இருந்திருக்கும்! அவருடைய நடிப்புத்திறன் பல இடங்களில், மேம்பட்டு வெளிப்படுகிறது. இயக்குனரும்/நடிகரும் ஒருங்கிணைந்து இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் - இருவருக்கும் வாழ்த்துகள்.
  • "கதாநாயகியின் அப்பாவின்" கதாபாத்திரம் மிக அருமை! "மனிதமும்/அன்பும்/எதார்த்தமும்" நிறைந்த; அவற்றை உணர்ந்த சராசரி மனிதனின் சாயல். ஒரு சராசரி மனிதன் இப்படித்தான் இருப்பான்! அவனுள், வெளியுலக உணர்வுகளும்/உணர்ச்சிகளும் திணிக்கப்படும்போது தான், அவனின் செயல்பாடுகள் - உறவு/உணர்வு/உணர்ச்சி - இவைகளைக் கடந்து செல்லும். அந்த கதாபாத்திரத்தைக் கூர்ந்து கவனியுங்கள் - நம்மில் பலரும், வெளியுலகத் தாக்கத்தால் தான்; இயல்பில் இருந்து மாறி நிற்கிறோம் என்பதை உணர்த்தும்.
  • "கதாநாயகனின் தாயின்" கதாபாத்திரமும் - எதார்த்தமும்/தாய்மையும்/மனிதமும்/கண்டிப்பும் - நிறைந்த கதாபாத்திரம்! "கிளீஷேவான" திரை-அம்மாக்களையே பார்த்த நமக்கு; இந்தப் படம் - நம் ஒவ்வொருவரின் தாயையும் நினைவுக்கு கொண்டுவரும். நிஜவாழ்வில் ஒரு தாய் இப்படியே இருப்பாள். அன்பை - அலையாய்/கடலாய், பரந்து/விரிந்து காட்டும் அவளேதான்; கண்டிப்பை - நெருப்பாய்/எரிமலையாய் உமிழ்ந்து/பொழிந்து கொட்டுவாள்! திரையிலும், நம் நிஜவாழ்வு அம்மாக்களை - மீண்டும் கொண்டு வர, இப்படம் அடிக்கல் இட்டிருக்கிறது என நிச்சயமாய் சொல்லலாம். உடையில் கூட - சீரியல் சாயலோ/சினிமா சாயலோ இல்லை. சபாஷ் டா சீனுவாசா!
  • தயவுசெய்து, இந்த விமர்சனத்தைப் படித்த பின்னர் படம் பார்ப்போர்; இவ்விரண்டு கதாபாத்திரங்களை - மனதில் இருத்தி, ஆழ்ந்து கவனியுங்கள். இதைக் குறிப்பிட காரணம் - ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும்; அவனுடைய தாயும்/மருதந்தையும்(மாமனார்) இரண்டு அதிமுக்கியமான உறவுகள். இவையிரண்டும் - இல்லற வாழ்வில் இணையும்; ஓர் ஆண்/பெண் இருவரின் முக்கியமான வழிநடத்தும் உறவுகள். இவ்விரண்டு உறவுகளின் அன்பும்/அரவணைப்பும்/அடித்தளமும் - கிடைக்கும் மனிதனின் வாழ்வியல் சிரமங்கள், பெருமளவில் குறையும்!
  • சண்டைக் காட்சிகள் அனைத்தும், பெரும்பான்மையில், மிகவும் யதார்த்தமாய்/சுருக்கமாய்/சிறப்பாய் இருக்கின்றன! இவ்விதமான இயல்பான சண்டைக் காட்சிகளைப் பார்ப்பது - இப்போது அபூர்வமாய் ஆகிவிட்டது. இன்னமும் சிறப்பாய் அமைந்திருக்க ஓர் பரிந்துரை உண்டு; அதை இயக்குனருக்கு தனியே தெரிவிக்கிறேன்.
  • முதல் அனுபவம் எனினும், திரு. விஜய் ஆண்டனி "எடிட்டிங்கை" சிறப்பாய் செய்திருக்கிறார் என்பது என் புரிதல். என்னறிவுக்கு எட்டிய வகையில், எப்பிழையும் இல்லை; இசையிலும், குறிப்பிட்டு சொல்ல எப்பிசகும் இல்லை - அவருக்கும் என் வாழ்த்துகள்.
  • ஒவ்வொரு காட்சியும், இயக்குனரின் படமாக்கும் திறத்தை பளிச்செனப் பறைசாற்றுகிறது. ஒளிப்பதவி இயக்குனர், திரைக்கதை இயக்குனரின் மனதை/தேவையை ஆழப் புரிந்திருப்பது விளங்குகிறது. அவர்கள் இருவரும், காட்சிகளை இருகண்களாய் பார்த்து செதுக்கி இருப்பது புரிகிறது. அவருக்கும் வாழ்த்துகள்.
  • பாடல்வரிகள் அருமை! படத்தின் கதையோடு ஒத்துப்போகும் வண்ணம், பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைப்பதும் ஓர் வரம்! ஒரு பாடலைத் தவிர (விளக்கம் கீழே), மற்றனைத்தும் படத்தோடு இணைந்து பயணிப்பவை. பாடலாசிரியருக்கு என் அன்பும்/வாழ்த்துகளும்.

குறைகள்:
  • இதைச் சொல்லாமல் தவிர்த்துவிடலாம் என ஆழ்ந்து யோசித்தும்; என் மனம் ஒப்பவில்லை.  அண்ணாதுரையின் மிகப்பெரிய பலம் - ஸ்கிரிப்ட்டின் தரம்! திரு. விஜய் ஆண்டனி சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால், ஸ்கிரிப்டின் உயிர்ப்பு, பார்வையாளனுக்குக் கடத்தப்படவில்லை என்பதை பின்வரும் உதாரணத்தால் விளக்க விரும்புகிறேன்: மகாநதி திரைப்படத்தில், கதாநாயகன் சிறையில் இருப்பார்; "கைதிகளைச் சந்திக்கும் தினம்" ஒன்றில் கதாநாயகனின் மகள் "தாவணி" அணிந்து, தன் பாட்டியின் பின்னே ஒளிந்திறந்து - பின், மெதுவாய் கதாநாயகனுக்கு தெரியும் வண்ணம் நகர்வாள். தன் மகளை "முதன்முதலாய், தாவணியில் பார்க்கும் தகப்பனின் சந்தோசத்தை" மிகச்சிறப்பாய் வெளிப்படுத்தும் அதே நேரத்தில்; மகள் பருவமடைந்து விட்டதை உணர்ந்த ஆதங்கமும் வெளிப்படும். தன் மருதாயை(மாமியார்) நோக்கி சைகையால் அதை உறுதி செய்துவிட்டு; "எப்போ?!" என வினவுவார்; அழுகையும்/ஆற்றாமையையும் இணைந்து உணர்வும்/உணர்ச்சியும் வெளிப்படும். அது - பார்வையாளனுக்கு, அப்படியே பரிமாற்றப்படும். அந்தக் காட்சியின் பலம் - அந்த ஸ்கிரிப்ட்! அதை, நம்மிடம் கொண்டு சேர்த்தது - அந்த நடிப்பு! அவ்விரண்டும் ஒருபுள்ளியில் மிக அருமையாய் இணைந்திருக்கும்.
  • அதற்காக, அதையே எதிர்பார்க்கிறேன் என்பதல்ல இங்கே பொருள்: அண்ணாதுரையில் - "மிகக்கூரிய வசனத்தால், அண்ணனின் ஒட்டுமொத்த ஒழுக்கத்தையும்" - சந்தேகத்தால் தம்பி கலங்கப் படுத்தும் காட்சியொன்று இருக்கிறது! எத்தனை வாய்ப்புகள் அந்த காட்சியில்? அந்த காட்சி ஆரம்பிக்கும் போது, வீட்டினுள் நுழையும் தம்பி "வழியில் இருக்கும் வாலியை, எட்டி உதைக்கும்" அந்த உணர்ச்சி கூட - அக்கேள்வியைக் கேட்கும் போது, தம்பியின் முகத்தில் இல்லை! கேள்வியை எதிர்கொண்ட அண்ணனின் உணர்ச்சியும்/உணர்வும் எப்படி வெளிப்பட்டு இருக்கவேண்டும்?! - இரண்டுமே தவறியிருக்கிறது. அவ்விரண்டு உணர்வுகளும்/உணர்ச்சிகளும் நமக்கு சரியாய் பரிமாற்றப்பட்டு இருந்தால் - நம்மைக் கட்டிப்போட்டு இருக்கும்! படம் முழுவதிலும், இம்மாதிரியான நிறையக் காட்சிகள் இருந்தும்; தவறி இருக்கிறது.
  • "கதாநாயகியின் நடிப்பு" மேலும் ஏமாற்றம் அளிக்கிறது. மேற்குறிப்பிட்ட முன்னோட்டத்தில் "அழகான குறும்பு செய்யும் பெண்களால் கவரப்படாத - பெண்களோ/ஆண்களோ இருக்கமுடியாது! இப்படத்தின், கதாநாயகி, அனைவரையும் நிச்சயம் கவர்வார்!" - என எழுதி இருந்தேன்! ஆனால், பெருத்த ஏமாற்றம்; நிச்சயமாய், முன்பே அறிமுகத்தில் இருக்கும் "இந்த குறும்புள்ள" மற்றும் அதிக சம்பளம் எதிர்பார்க்காத ஒரு கதாநாயகியைத் தேர்வு செய்திருக்கலாம் என்பது என் புரிதல். ஆனால், மேற்குறிப்பிட்டது போல்; கதாநாயாகியின் அப்பா & கதாநாயகனின் அம்மா துவங்கி, மற்ற கதாப்பாத்திரங்கள் அனைத்தும் மிகச்சிறப்பாய் உணர்வுகளை/உணர்ச்சிகளைப் பரிமாற்றி இருக்கிறார்கள். கதாநாயகனும்/கதாநாயகியும் சளைத்தவர்கள் அல்ல எனினும்; அவை இன்னும் மேம்பாட்டு இருக்கலாம்.
  • "EMI ஆய் மாறிப்போன, GST பாடல்" - தேவையற்ற இடைச்செருகல்! என்னதான் "பாடல் காட்சியிலும், ஓர் இயக்குனரின் தரத்தை சிறப்பாய் உணர்த்துவதாய் இருப்பினும்" அப்பாடல், நிச்சயமாய் தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும். மற்ற அனைத்துப் பாடல்களும், கதையின் உயிர்ப்பைக் குலைக்காமல்; நம்மோடும்/கதையோடும் இனிதே/இணைந்து பயணிக்கும் போது - இப்பாடல் மட்டும் திருஷ்ட்டி!
  • அண்ணனும்/தம்பியும் ஒரேமாதிரியாய் இருப்பதான "தோற்ற மாற்றங்கள்" இருவேறு இடங்களில், இருவேறு விதங்களில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன! "அண்ணாதுரை என்பதை உறுதி செய்யும்" அடையாளத்தை, ஒரு காட்சியில்; நண்பனிடம், அண்ணாதுரையே குறிப்பால் உணர்த்துகிறான். வேறு காட்சியில், அதை அண்ணாதுரையை ஒருதலையாய் காதலிக்கும் பெண்ணொருவள் அறிகிறாள். எல்லோருக்கும் தெரியும்படி, அந்த அடையாளம் இருப்பதால்; முடிவுக்காட்சி மனதில் நெருடலை உருவாக்குகிறது! 
  • இந்த குறைகள் எல்லாம், எளிதில் தெரிபவை; படம் முடிந்து "முதல் வடிவத்தை" பார்க்கும்போதே, இவை உணரப்பட்டு; களையப்பட்டு இருக்க வேண்டும்! எப்படி தவற விட்டார்கள் என்பது வியப்பாய் இருக்கிறது; பல படங்களிலும், இந்த வியப்பு இருக்கவே செய்கிறது. "நம் பிள்ளை" என்ற சார்பைக் கடந்து; அதே வேளையில் "நம் பிள்ளை" என்ற அன்போடு அணுகும் பெற்றோர்களை போல்; நம்முடைய படைப்புகளையும் நாம் அணுகுதல் மிக முக்கியம். வெகு நிச்சயமாய், இதை அடுத்த படத்தில்; என் நண்பன் மிகச் சிறப்பாய் கையாள்வான், கையாள வேண்டும்! அதற்கு என், முற்கூட்டிய வாழ்த்துகள்.
  • முதல்படம் என்பதால், மேற்குறிப்பிட்ட குறைகளை எளிதில் மறக்கலாம்! இயக்குனருக்கு இருந்த நெருக்கடியால் கூட, இவை நிகழ்ந்திருக்கும். அடுத்தப் படத்தில் இம்மாதிரியான குறைகள் நிச்சயம் களையப்படவேண்டும். "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" மட்டுமல்ல; நண்பனும் கெடுவான். எனவே, நண்பனாய் மட்டுமல்லாது, ஓர் பார்வையாளனாய் ஆகவும் இவற்றைக் குறிப்பிடுவது என் கடமையாகிறது.

தீர்ப்பு:
  • படம் முடிந்தபின், பின்வரிசையில் அமர்ந்திருந்தோரில் ஒருவர் உரத்த குரலில் "இந்தப் படத்தால், சமுதாயத்துக்கு என்ன கருத்து சொல்ல வருகிறார்கள்?" என்ற விமர்சனம் வைத்தார். அதே கேள்வியை, நேற்று காலை படம் பார்க்கும் முன் என்னையே கேட்டுக் கொண்டதால், என்னிடம் பதில் தயாராய் இருந்தது! திரும்பி அவருக்குப் பதில் சொல்லும் ஆவல் எழுந்தது; இங்கே விமர்சனத்தில் சொன்னால் போதுமானது எனத் தவிர்த்து விட்டேன்.
  • இந்தப்படம் சொல்லும் கருத்து என்ன? - முதலில், இல்லற/சமூக வாழ்வில்; நாம் இழந்து கொண்டிருக்கும் உறவுகளை/உணர்ச்சிகளை/உணர்வுகளை - நமக்கு நினைவூட்டும். வாழ்க்கை ஓட்டத்தில், எதற்கு ஓடுகிறோம் என்ற தெளிவு கூட இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் நமக்கு; இந்த நினைவூட்டல் மிக அவசியமாகிறது! "உறவுகளை எப்படி அணுகவேண்டும்?" என்பதைப் பல கட்சிகளின் மூலம் நமக்கு, நினைவூட்டி இருக்கிறார் இயக்குனர்! அவற்றை உணர்ந்து, நாம் இழந்தவற்றை நாமே மீட்டெடுக்க முயல்வோம். இதுதான், இந்தப்படம் நமக்கு சொல்லும் கருத்து.
  • தயவுசெய்து, வாய்ப்புக் கிடைப்போர் இப்படத்தைத் திரைப்படத்தில் "உறவுகளோடும்/ஊரோடும்" சேர்ந்து பாருங்கள்! அப்படி இணைந்து பார்ப்பதில், நம்முடைய மீட்டெடுத்துதல் துவங்கட்டும். மேலும், படத்தில் இருக்கும் "உணர்வு/உணர்ச்சி" பரிமாறப்படும் காட்சிகள்; நமக்கு அருகில் இருப்போர் வெளிப்படுத்தும் பல்வித உணர்ச்சிகளும்/உணர்வுகளும் நமக்கும் பரிமாறப்படும். வெகு நாட்களுக்குப் பின், ஒரு திரைப்படம் முழுவதிலும் "எவ்வித சலசலப்பும்; காமெண்ட்டும்" இல்லாமல்; ஒட்டுமொத்த பார்வையாளருக்கு அமைதியாய் படம் பார்த்ததை உணர்ந்தேன். அதுவோர் மிகப்பெரிய சாதனை! அந்த அமைதி, பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றியிருந்ததை உணர்த்தியது.
  • மேலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியது கூட; சில காட்சிகள் "உணர்வு/உணர்ச்சி" பரிமாற்றங்களை அளிக்க தவறினாலும், ஸ்கிரிப்டில் இருந்தது எனக்குப் பரிமாற்றப்பட்டது போல்; உங்களுக்கும் பரிமாறப்படவேண்டும் என்ற அக்கறையில் தான்! எனவே, காட்சிகளின் அடிப்படையை ஆழ உள்வாங்கிப் பாருங்கள். ஆம்... உங்களைப் போலவே; நானும், இந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, இன்னுமோர் முறைப் பார்த்து அனுபவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.
தவறாமல் படத்தைப் உறவோடும்/ஊரோடும் இணைந்து 
திரையரங்கில் பார்ப்போம்... 
இழந்த உணர்வு/உணர்ச்சி இன்னபிறவற்றை மீட்டெடுப்போம்!!!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக