ஞாயிறு, டிசம்பர் 20, 2015

அதிகாரம் 014: ஒழுக்கமுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமை

0131.  ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
           உயிரினும் ஓம்பப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம், ஒருவருக்கு ஒப்பற்ற மேன்மையைக் கொடுப்பதால்; 
           ஒழுக்கம், உயிரைவிட உயர்ந்ததாய் காக்கப்பட வேண்டும்.
(அது போல்...)
           பெற்றோர், பிள்ளைகளுக்கு ஒப்பற்ற தியாகத்தை அளிப்பதால்; பெற்றோரை, 
           இயற்கையைவிட சிறந்ததாய் போற்ற வேண்டும்.

0132.  பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
           தேரினும் அஃதே துணை

           விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றையும் பகுத்தறிந்து ஆராய்ந்திடினும், ஒழுக்கமே 
           வலிமையானது என்பதால்; சிரமப்பட்டேனும், ஒழுக்கத்தைக் காக்கவேண்டும்.
(அது போல்...)
           எல்லோரையும் வீரத்துடன் வென்றிடினும், மனிதமே மானுட-தத்துவம் என்பதால்; 
           அடிபணிந்தேனும், மனிதத்தைப் பழகவேண்டும்.

0133.  ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
           இழிந்த பிறப்பாய் விடும்

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடன் வாழ்வதே, உயர்ந்த குடிமக்களின் அடையாளம்;
           ஒழுக்கம் இல்லாதோர், தாழ்ந்த குடிமக்களாய் ஆகிவிடுவர்.
(அது போல்...)
           நேர்மையுடன் கற்பிப்பதே, உயர்தர ஆசிரியர்களின் தொழில்-தர்மம்; நேர்மை அற்றோர்,
           தகுதியற்ற ஆசிரியர்கள் ஆகிவிடுவர். 

0134.  மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
           பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: வேதம் ஓதுவோர் - கற்றதை மறப்பின், மீண்டும் கற்றுக்கொள்ளலாம்; 
           ஒழுக்கம் தவறினால், உயர்ந்த பிறப்பிலிருந்து தாழ்வர்.
(அது போல்...)
           மனிதனாய் பிறந்தோர் - செய்கையில் குறையிருப்பின், திருத்திக் கொள்ளலாம்; மனதில் 
           கறையிருந்தால், ஆறறிவு விலங்கிலிருந்து குறைவர்.
          
0135.  அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
           ஒழுக்க மிலான்கண் உயர்வு

           விழியப்பன் விளக்கம்: பொறாமை உள்ளவர்கள், மேன்மையடைதல் சாத்தியமில்லாதது 
           போல்; ஒழுக்கம் இல்லாதோர், உயர்வதும் சாத்தியமில்லை.

(அது போல்...)
           மனச்சிதறல் உள்ளவர்கள், ஒருமுகப்படுதல் சாத்தியமில்லாதது போல்; நற்சிந்தனை 
           இல்லாதோர், உறங்குவதும் சாத்தியமில்லை.

0136.  ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
           ஏதம் படுபாக் கறிந்து

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம் தவறுதல், குற்றம் விளைவிக்கும் என்பதை உணர்ந்து;
           மனதுரம் கொண்டோர், ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டர்.
(அது போல்...)
           வருங்காலம் மறத்தல், சிரமத்தைக் கொடுக்கும் என்பதை உணர்ந்து; சுறுசுறுப்பான
           எறும்புகள், முற்காப்பிலிருந்து தவறுவதில்லை.

0137.  ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
           எய்துவர் எய்தாப் பழி

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கத்தால் ஒருவர் மேன்மையடைவார்; ஆனால், 
           ஒழுக்கமின்மையால் அடையக்கூடாத பழியை அடைவார்.
(அது போல்...)
           விடாமுயற்சியால் வாழ்க்கை வெற்றியடையும்; ஆனால், முயற்சியின்மையால் எதிர்பாராத 
           தடுமாற்றத்துக்கு உள்ளாகும்.

0138.  நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
           என்றும் இடும்பை தரும்

            விழியப்பன் விளக்கம்: நல்ல ஒழுக்கம் நன்மைக்கு விதையாக இருக்கும்; தீய ஒழுக்கம்,
            எந்த நிலையிலும் துன்பத்தையே தரும்.
(அது போல்...)
           நல்ல நிலங்கள் நல்-விவசாயத்திற்கு காரணியாக அமையும்; கடின நிலங்கள், எந்த
           நிலையிலும் பயனற்றதையே விளைவிக்கும்.

0139.  ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
           வழுக்கியும் வாயாற் சொலல்

           விழியப்பன் விளக்கம்: நன்னடத்தை உள்ள ஒழுக்கமானோர்க்கு; வாய்-தவறி கூட, தீய  
           சொற்களை சொல்லுதல் சாத்தியமேயில்லை.
(அது போல்...)
           நல்-நம்பிக்கைகள் உள்ள உறவுகளுக்கு; கனவிலும் கூட, உறவிலிருப்பவரைக்
           காயப்படுத்த நினைத்தல் சாத்தியமேயில்லை.

0140.  உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
           கல்லார் அறிவிலா தார்

           விழியப்பன் விளக்கம்: நிகழ்காலத்திற்கு ஏற்ப உலகத்தோடு ஒன்றி பயணிக்க 
           முடியாதவர்கள்; எவ்வளவு கற்றிருந்தும், அறிவில்லாதவர்களே.
(அது போல்...)
           நிகழ்கால பிரச்சனையை மட்டும் விவாதித்து பயணிக்காத உறவுகள்; எவ்வளவு
           ஆண்டுகளாயினும், பலவீனமானவையே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக