வெள்ளி, பிப்ரவரி 19, 2016

சாலை (வீ/வி)திகள்... {பாகம் 2}



           சாலைகளில் வாகன-ஓட்டிகள் செய்யும் விதிமீறல்களை முன்பே "சாலை (வீ/வி)திகள்" என்ற தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். அதில், முறையான விதத்ததில் ஓட்டுனர்-உரிமமே இல்லாமலும்; சாலைவிதிகள் என்றால் என்னவென்றே தெரியாமலும் - நாம் செய்யும் தவறுகளை - என் அனுபவத்தையும் "சேர்த்தே" பகிர்ந்திருந்தேன். உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் தவறுகளையும் அடிக்கோடிட்டிருந்தேன். இந்த உணர்ச்சி வயப்படுதலின் உச்சகட்டமான செயல் ஒன்று நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எந்த வித வாகனத்துடனும், கனரக வாகனங்கள் மோதிவிட்டால் - ஓட்டுனரை அடிக்கும் செயல் மிகப்பரவலாய் நடக்கிறது. இப்படி ஓட்டுனரை அடிப்பது - உணர்ச்சி மிகுதியால் நடப்பது என்பது புரிகிறது. இருப்பினும், அப்படி ஓட்டுனரை அடிப்பது/காயப்படுத்துவது; சட்டப்படி குற்றம் என்பதை நாம் உணரவேண்டும். அதை மேலும் வலியுறுத்தவே "சாலை விதிமீறல்களை"ப் பற்றிய இந்த இரண்டாம் பாகம்.

           இதுசார்ந்து, சமீபத்தில் என் நட்பொன்றோடு விவாதித்து இருக்கிறேன். கனரக வாகனங்கள் மட்டுமல்ல! மகிழ்வுந்தில் செல்வோர், மிதிவண்டி/இருசக்கர-வண்டி மீது மோதினாலும் - "உணர்ச்சி மிகுந்த தன்மையால்" இதுபோன்ற தவறுகள்  பெருமளவில் நடக்கின்றன. மகிழ்வுந்து ஓட்டுனரின் மேல் தவறிருப்பினும் கூட; அப்படி ஓட்டுனரை அடித்துக் காயப்படுத்துதல் தவறு. அதிலும், அவர் மேல் தவறே இல்லாத சமயத்தில் - ஓட்டுனரை அடிப்பது - தவறு மட்டுமல்ல! அது குற்றமும் கூட!! இது சாலை விதிமுறைகளை மீறும், விதி-மீறல் ஒழுங்கீனம். எந்த விதமான வாகனங்கள் எனினும், சாலையில் விபத்துகள் நடப்பது தவிர்க்கமுடியாதது என்பதை, எவரும் மறுப்பதற்கில்லை. அப்படி தவறுகள் நேரும் போது; அபராதம் விதித்து அதை ஒழுங்கு படுத்தவே "சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை" மற்றும் அதன் கீழ் வரும் அலுவலகங்களும் இயங்குகின்றன. விபத்து நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவிக்கவேண்டும்.

       அதுசார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதுதான், அந்த துறை சார்ந்த அதிகாரிகளின் முக்கிய அலுவல்; அதற்காகத்தான் "ஓட்டுனர்-உரிமம்/காப்பீடு/சாலைவரி/வாகன-பரிசோதனை" போன்ற  பல விசயங்களும் உள்ளன. இருசக்கரம்/மகிழ்வுந்து/சிற்றுந்து/பேருந்து/கனரகம் - இப்படி எவ்விதமான வாகனங்களுக்கு இடையே விபத்து நடந்தாலும்; சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் என்பதே விதி. அதை விடுத்து, விதிகளை மீறி ஓட்டுனர்களை அடிப்பதில் எந்த நியாயமும் இல்லை! அது குற்றம். ஓட்டுனர் மீது தவறே இருப்பினும், அதை சட்டத்தால் தண்டிக்கவே - மேற்குறிப்பிட்ட அத்தனை காரணிகளும் உள்ளன. அப்படி இருக்கும் போது, ஓட்டுனர் மீது தவறே இல்லாதபோது, இப்படிப்பட்ட குற்றங்கள் நிகழ்வதை என்னவென்று சொல்வது? ஒரு முறை, புதுவை-கடலூர் சாலையில் உள்ள இராஜீவ்-காந்தி மருத்துவ கல்லூரிக்கு எதிரே இருந்த சாலைத்தடுப்புக்கு அருகே மகிழ்வுந்தை நிறுத்தி; சாலையைக் கடந்த...

         ஒரு பெண்மணிக்கும்/அவர் குழந்தைக்கும் வழிவிட்டு காத்திருந்தேன். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நிறுத்தியிருந்த என் வாகனத்தில் இடித்துவிட்டார். நான் கீழே இறங்கி, அவரிடம் நிறுத்தியிருந்த வண்டியில் இப்படி இடித்துவிட்டீரே! உரிய பராமரிப்பு செலவைக் கொடுங்கள் என்றேன். அவர், என் மீது தவறில்லை என்று வாதிடுகிறார். எனக்கு பெருத்த வியப்பு! நிறுத்தி இருக்கும் மகிழ்வுந்தில் இடித்தால் கூடவா, அது மகிழ்வுந்து ஓட்டுனரின் தவறு?! என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் கொஞ்சமும் யோசனை இன்றி "கார்ல வந்தாலே, திமிராத்தான் வருவானுங்க!" என்று சொன்னார். எனக்கு பெருத்த ஆற்றாமை; நானும் ஒருமையில் "ஏண்டா, இங்கே என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா?! என்றே ஆரபித்தேன்". என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மகிழ்வுந்து/கனரக ஓட்டுனர் மேல் எடுத்தவுடன் குற்றம் சுமத்தும் செயலும் சர்வசாதரணமாய் நடக்கிறது.

           பேசிக்கொண்டிருக்கும் போதே, அந்த இருசக்கர ஓட்டுனர் கடந்து சென்றேவிட்டார். இதே, நான் அவரை இடித்ததாய் வைத்து யோசிப்போம்; உடனடியாய், என்னை அடிக்கும் எண்ணத்திலேயே துவங்கி இருக்கும், அருகே இருந்த அந்த மனிதரின் செயல். இப்படித்தான் பல இடங்களில் நடக்கிறது; இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு அடிபட்டு விட்டதால் மட்டுமே - மற்ற ஓட்டுனர் மீதே தவறென்பது! எப்படி நியாயமாகும்? ஆனால், பெரும்பான்மையில் இப்படியே நடக்கிறது. இதை எவர் எப்படி இடித்துரைத்து திருத்துவது?! இப்படி, அடிப்பதாலேயே மகிழ்வுந்து அல்லது கனரக வாகன ஓட்டுனர்கள் "பயம் காரணமாய்" நிறுத்தாமலேயே செல்ல முயல்கின்றனர். இதுவும், தவறு தான் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! அப்படி, தப்பித்து செல்லும் வாகன-ஓட்டிகளை துரத்தி பிடித்து, அடித்து - அவர்களிடம்  இருந்து பணத்தைப் பறிக்கும் கும்பல்களும் பெரும்பான்மையான ஊர்களில் உள்ளன. அவர்களின் வேலையே...

       இப்படி ஓட்ட்டுனர்களிடம் இருந்து பணம் பறிப்பது மட்டுமே. பயத்தின் விளிம்பில் இருக்கும் அந்த ஓட்டுனர்களும், வேறு வழியில்லாமல் - அடியும் வாங்கிக் கொண்டு பணத்தையும் இழக்கின்றனர். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்?! இதில், அந்த ஓட்டுனர் "அதிகார வர்க்கம்" சார்ந்தவராய் இருந்தால், பிரச்சனை திசை திரும்பிவிடும். அல்லது, அந்த ஓட்டுனரின் உறவினர்/சுற்றம் அங்கு கூடினாலும் பிரச்சனை வேறுவிதமாய் திரும்பிவிடும். விபத்தில் ஒருவர் அடிபட்டதால் - உணர்ச்சிவயப் பட்டு அடித்துவிட்டேன்! என்று மட்டும் சொல்லி இதை நியாயப்படுத்த முடியுமா? அடிவாங்கியவர் - பதிலுக்கு, தன் திமிரைக் காட்ட விரும்பினால்?!... அப்படியும் நிகழ்வுகள் தொடர்கின்றன!  "வலியவன் வெல்வான்!" என்றா, இதை அணுகமுடியும்?! அல்லவே!... இப்படிப்பட்ட ஒழுங்கீனங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு தானே மேற்குறிப்பிட்ட வண்ணம் - பல துறைகளும்/ஆவணங்களும் நெறிப்படுத்தப் பட்டுள்ளன! பெரும்பான்மையான இருசக்கர...

       வாகன உரிமையாளர்களிடம் முறையான ஆவணங்கள் இருப்பதில்லை. அப்படி இருப்பின், காப்பீடு மூலம் அவர்கள் "முறையான" இழப்பைப் பெறமுடியும். அப்படி முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலேயே, அவர்கள் சட்ட-ரீதியாய் இவற்றை "அணுகமுடியாது" என்பதால்  இப்படி மற்றவரை அடிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். மேலை நாடுகளில், இப்படி நடப்பதேயில்லை; அது, விதிமீறல் விசயம்! என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். ஏன்? நம் இந்தியர்களே கூட இங்கே "அடங்கித்தான்" நடக்கின்றனர்! நடக்கவேண்டும். விபத்து நடந்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் "அவர்களிடையே" பேசுவது கூட அபூர்வமே! அப்படி இருப்பினும், பேச்சில் எந்த உணர்ச்சி-மீறலும் இருக்காது! இருக்கக்கூடாது. என்ன நிகழ்ந்தாலும், துறை சம்பந்தப்பட்ட காவலர்களை அழைக்க வேண்டும்! அதுவரை, சம்பந்தப்பட்ட வாகனங்கள் அங்கேயே இருக்கும். அவர்கள் வந்ததும், விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து...

          தவறிழைத்தவரின் காப்பீட்டில் இருந்து, சரியாய் ஓட்டியவருக்கு இழப்பீடு வழங்க உதவுவர். நம் நாட்டிலும், இதே விதிமுறைகள் தான்! சாலைப் போக்குவரத்து விதிகளை - மற்ற நாடுகளுடன், ஒன்றுபட்ட-உடன்படிக்கை மூலமே, பல்வேறு நாடுகளும் உருவாக்கியுள்ளன. சாலைவிதிகளைப் பற்றிய அறிவீனத்துடனும்; எந்த "குற்ற உணர்வுமின்றி" உரிய ஆவணங்கள் இன்றியும் - பல்வேறு வகையான வாகனங்களை ஓட்டுவது - நம் நாட்டில் சர்வசாதரணமாய் நடக்கின்றது. இந்த விதிமீறல்கள் தான், தன் ப(ய/ல)த்தைக் காட்ட மற்றவரை அடிக்கும் செயலுக்கு வழிவகுக்கிறது. இந்த விதிமீறல்கள் பெரிய குற்றமா?! என்றால்... நிச்சயம் பெரிய குற்றம் தான். நேரடியாய் இந்த நிகழ்வை சந்திக்கும் வரை, இந்த குற்றத்தின் தாக்கம் முழுமையாய் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த "விதிமீறல்கள் குற்றமே!" என்ற அடிப்படை நம் எண்ணத்தில் அழுத்தமாய் பதிந்து, செயலாய் உருப்பெற வேண்டும். இப்படிப்பட்ட ஒழுங்கீனங்களின் உச்சகட்டம்தான்...

சாலை-விபத்துக்காய்...
கறுப்பினர் என்ற "பொய்ப் போர்வையில்" 
ஒரு பெண்ணை நிர்வானப்படுத்திய அவமானச்செயல்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக