வியாழன், செப்டம்பர் 07, 2017

அண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்


     அண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும் தமிழ்த் திரைப்படம். இணையாக "இந்திரசேனை" என்ற பெயரில், தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. தேர்ந்தெடுத்தத் திரைப்படங்களுக்கு மட்டும், விமர்சனம் எழுதும் நான்; முதன்முதலாய், ஒரு திரைப்படத்திற்கு முன்னோட்டம் எழுதியிருக்கிறேன். விமர்சனங்களில், கதையைப் பற்றி எதையும் குறிப்பிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்பேன். ஆனால், விமர்சனம் சுவராஸ்யமாய் இருக்கவேண்டும் என்ற அக்கறையுண்டு. அதே அடிப்படையிலேயே, இந்த முன்னோட்டம் எழுதப்பட்டு இருக்கிறது.
  • இம்முன்னோட்டத்திற்கு முதற்காரணம் - என் நண்பன் சீனிவாசனின் திரைப்படம் என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை; ஆனால், அது மட்டும் காரணம் அல்ல! இத்திரைப்படத்தின் முழு "ஸ்கிரிப்ட்"டையும் படித்து; அது என்னை உண்மையாய் கவர்ந்ததால் தான், இதை எழுதியிருக்கிறேன்.
  • ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பின்னர், ஓர் நாள் வாட்ஸ்-ஆப்பில் தொடர்பு கொண்டோம். உடனே, தொலைபேசியில் உரையாடினோம்! உரையாடல் முடியும்போது "இளங்கோ! உனக்கு ஸ்கிரிப்டை அனுப்புகிறேன்; படிச்சுட்டு சொல்லேன்!" என்றான். என்னால், இன்னும் அதை நம்பமுடியவில்லை!
  • 27 ஆண்டுகளாய், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருந்த நிலையில், எந்த நம்பிக்கையில் அப்படி சொன்னான்? அவன் நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், எனக்கு ஸ்கிரிப்டை அனுப்பியதை; என்னவள் மற்றும் என் நண்பன் சுரேஷ் பாபு மட்டுமே அறிவர். அவர்களுக்கு கூட, அதைச் செய்தியாய் தான் சொல்லி இருக்கிறேன்; அதைப் பகிரவில்லை. அதுதான், அவன் நம்பிக்கைக்கு நான் செய்த மரியாதை!
  • "ஸ்கிரிப்ட்டை" அனுப்புகிறேன் என, அவன் சொன்ன பிரம்மிப்பு அடங்குவதற்குள், அனுப்பியும் விட்டான். அதே பிரம்மிப்போடு, படிக்க ஆரம்பித்தேன். இன்றைய காலக்கட்டத்தில், 90 விழுக்காடு திரைப்படங்களில்; பார்வையாளர்களால், அடுத்தடுத்த காட்சிகளைக் கணிக்க முடிகிறது. இதைப் பார்வையாளனின் திறமை என்பதா? அல்லது படைப்பாளியின் திறமையின்மை என்பதா?? - தெரியவில்லை! அந்த "பார்வையாளனின்" திறமையோடு, திமிரும் கலக்க; 2-ஆவது காட்சியிலேயே, என் கணிப்பு தலைதூக்கியது! அதை அதே காட்சியிலேயே, சுக்குநூறாய் உடைத்ததில் துவங்கியது - அவனின் இராஜாங்கம்! ஸ்கிரிப்ட்டை எனக்கு அனுப்பியதில் இருந்த பிரம்மிப்பு, இப்போது அவனின் ஸ்கிரிப்ட்டின் மேல் கடந்தது.
  • படம் முழுவதுமுள்ள, இம்மாதிரியான திரைக்கதை பார்வையாளர்களைக் கவர்ந்து, படத்தின் சுவராஸ்யத்தைக் கூட்டும். சில காட்சிகள், நாம் கணித்தது போலவே தொடரும்; ஆனால், ஓரிரு நிமிடங்களில் அதைத் தகர்த்து, வேறொரு தளத்தில் இருந்து கதைப் பயணிக்கும். திரைக்கதை தான் அவனின் பலம்; அதுதான், படத்தின் பலமும்!
  • 5 காட்சிகள் வரைப் படித்துவிட்டு, அன்றிரவு உறங்கினேன்; அதிகாலை 02:30 மணியளவில், உறக்கம் களை(ந்/த்)து; தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அன்றே, முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துவிட்டு, என் எண்ணங்களைத் தொகுத்து; ஓர் மின்னணுக் கோப்பாய் அனுப்பினேன். பெரும்பாலும், பல இயக்குனர்களின் முதல் படத்தில் - அதீத திறமை வெளிப்படும். அதைத் தொடர்ந்து, வெளிப்படுத்தி வெற்றியடைவோர் - மிகச் சிலரே! அந்த பட்டியலில், என் நண்பன் சேர்வான், என்ற நம்பிக்கை மிகுந்தது! அனுபவமான வசனங்கள் மற்றும் இயல்பான/உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்புகள்.
  • ஆழ்ந்த அர்த்தத்துடன் எழுதுவதோடு, குசும்பாயும் வசனங்கள் எழுதும் திறமை; இதுவோர், கொடை! படைப்பாளியின் வெற்றி, படைப்பைப் படிக்கும்போதே; வாசகனைக் கற்பனையில் காட்சிப்படுத்த வைத்து, சிந்தனையைத் தூண்டுவதில் இருக்கிறது. அதை மிகக் சிறப்பாய் செய்திருக்கிறான். இதை செய்யமுடியும் ஒரு படைப்பாளியால், வெகு நிச்சயமாய், அதை அற்புதமாய் காட்சிப் படுத்தமுடியும்; அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி! அந்த வகையில், என்னளவில், என் நண்பன் வெற்றியடைந்து இருக்கிறான்.
  • பல திரைப்படங்களில், (மன்னிக்கவும்!) கதாநாயகியைக் "காட்சிப்பொருளாய்" தான் காண்பிக்கிறார்கள். அதனாலேயே, அந்த நடிகைகளை நான் வெறுப்பதுண்டு! நிச்சயமாய், அவர்களின் தவறல்ல; அது, படைப்பாளியின் தவறு! அப்படிப்பட்ட படங்களில், கதாநாயகியே தேவையில்லை என்பதே என் எண்ணம். 2013-ஆம் ஆண்டு, அப்படியோர் அபூர்வ திரைப்படம் வெளிவந்தது; அதன் கதாநாயகியின் பாத்திரப்படைப்பு பற்றி, விமர்சனத்தில் சிலாகித்து எழுதி இருக்கிறேன். அவ்வகையில், அண்ணாதுரை படத்தில் - கதாநாயகியின் பாத்திரப் படைப்பு, மிக அருமை! "அழகான குறும்பு செய்யும்" பெண்களால் கவரப்படாத - பெண்களோ/ஆண்களோ இருக்கமுடியாது! இப்படத்தின், கதாநாயகி, அனைவரையும் நிச்சயம் கவர்வார்!
  • திரு. விஜய் ஆண்டனி நல்ல நடிகர் என்பது தெரியும்! ஆனால் "அவரின்  நடிப்புத் திறனுக்கு; இதுவரை, மிகச் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை!" என்பது என் புரிதல். அக்குறை, இப்படத்தில் பெரிதும் நிவர்த்தி செய்யப்படும். ஸ்கிரிப்ட்டைப் படிக்கும் போது, என்னுள் காட்சிகளாய் விரிந்த... இல்லையில்லை! என்னுள் காட்சிகளாய் விதைத்த, என் நண்பனின் எதிர்பார்ப்புகளை; நிவர்த்தி செய்யும் அனைத்து திறமைகளும், அவரிடம் இருக்கிறது. "அதை மிகச் சிறப்பாய் செய்திருப்பார்!" என நம்புகிறேன். வெகு நிச்சயமாய், இத்திரைப்படம் வெளிவந்த பின்; திரு. விஜய் ஆண்டனி "நல்ல நடிகர் என்பதிலிருந்து, சிறந்த நடிகர்" என்ற எண்ணத்தில், நம் மனதில் இருப்பார். அவருக்கும் என் வாழ்த்துகள்.
  • கதாநாயகன்/கதாநாயகி மட்டுமன்றி; அவர்களின் குடும்பம், அவர்களுடன் பயணிப்போர் மற்றும் பிற பாத்திரப் படைப்புகளும் அருமையாய்/இயல்பாய் இருக்கின்றன. அந்த இயல்பான பாத்திரப்  படைப்புகள், இயல்பான வசனங்களோடு நம்மை வசீகரிக்கும். இப்படம், கொஞ்சம்/கொஞ்சமாய் நாம் இழந்து கொண்டிருக்கும் உறவுகளை/உணர்வுகளை; நமக்கு, நினைவாய் மீட்டுத் தரும். 
*******
  • "படைப்பின் தரத்துடன் சேர்ந்து, தனிமனிதனாய் ஒரு படைப்பாளி எப்படி இருக்கிறான்?!"  என்பதிலும் ஒரு படைப்பாளியின் வெற்றி இருக்கிறது! அவ்வகையில், மேற்குறிப்பிட்டது போல்; தன் முதல் படைப்பையே, எனக்கு அனுப்பும் அந்த நம்பிக்கையில் துவங்குகிறது, அவனின் தனிமனிதத் தரம்.  பள்ளிப் பருவத்தில், நண்பர்கள் எங்களை எப்படி கவனித்து இருக்கிறான் என்பதை; அவன் விவரிக்கும் போது, அவனை மேலும் பிரம்மிக்கிறேன். அந்தப் பருவத்தில், என் போன்றோர் விளையாட்டாய் வாழ்ந்து கொண்டிருந்த போது; இவனெப்படி அதுபோல் ஆழ்ந்து கவனித்து இருக்கிறான்? அது தான் ஒரு படைப்பாளியின் திறன்! ஆம், நடப்பவற்றை ஆழ்ந்து கவனிப்பது, படைப்பாளியின் மிகப்பெரிய பலம். அவன் அப்போதே படைப்பாளியாய் தான் இருந்திருக்கிறான், என்பது இப்போது புரிகிறது.
  • அவனுக்கிருந்த வேலைப்பளு காரணமாய் (கடந்த சூலையில், இந்தியா சென்றபோது), படக்குழுவினர் தங்கியிருந்த; விடுதிக்கு சென்றும், அவனைக்  காணமுடியவில்லை! நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, ஏறக்குறைய 27 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இப்போது நல்ல தொடர்பில் இருக்கிறோம்; இப்பதிவை, வரைவாய் எழுதும் முன் கூட; நாங்கள் வாட்ஸ்-ஆப்பில் உரையாடினோம். அத்தனை வேலைப்பளுவிலும், நட்புகளுக்காய்; நேரம் ஒதுக்கி உரையாடும், அவனின் இயல்பு அவனை இன்னும் உயரத்திற்கு இட்டுச்செல்லும்.
படைப்புடன், சீனுவின் தனிமனித தரமும் இணைந்து...
"அண்ணாதுரையை" வெற்றிப்படமாக்கும் என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!

"அண்ணாதுரையை" படைத்தவனுக்கும்...
"படைப்பில் துணைபுரிந்த அனைவருக்கும்" என் வாழ்த்துகள்!!

*******

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 
07092017
www.vizhiyappan.blogspot.com

{பதிவரைப் பற்றி: இளங்கோவன் இளமுருகு, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர். தமிழ்ப் புலவரும், ஓய்வுப் பெற்ற ஆசிரியருமான; தன் தந்தை திரு. இளமுருகு அண்ணாமலை அவர்களால், தமிழ்ப்பால் ஊட்டப்பட்டு தமிழ்-பால் நாட்டம் கொண்டவர். "விழியமுதினியின் அப்பன்" என்ற பொருளில் "விழியப்பன்" எனும் புனைப்பெயரில் "விழியப்பன் பார்வை" எனும் தமிழ் வலைப்பதிவையும் (https://vizhiyappan.blogspot.com); "Vizhiyamudhini's Father Views" எனும் ஆங்கில வலைப்பதிவையும் (https://vizhiyappan-en.blogspot.com) எழுதி வருகிறார். சமூகம்/வாழ்வியல் சார்ந்த பார்வைகள் மற்றும் புரிதல்களை; தலையங்கம்/மனதங்கம் உட்பட பல பிரிவுகளில் எழுதி வருகிறார். குறிப்பிடப் படவேண்டியது - "திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை" என்ற பிரிவில், தமிழில் திருக்குறள் விளக்கவுரை மற்றும் "Thirukkural - Vizhiyappan's Translation" என்ற பிரிவில், ஆங்கிலத்தில் மொழியாக்கம் & விளக்கவுரை எழுதி வருவது ஆகும். இரண்டு வலைப்பதிவுகளில் "தினம் ஒரு குறள்" என பதிந்து வருகிறார். அவரைப் பற்றியும், அவரின் பதிவுகள் பற்றிமும் மேலும் அறிய விரும்புவோர்; மேலுள்ள இணைய இணைப்புகளைச் சுட்டவும்.}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக