ஞாயிறு, மே 08, 2016

அதிகாரம் 028: கூடாவொழுக்கம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 028 - கூடாவொழுக்கம்

0271.  வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
           ஐந்தும் அகத்தே நகும்

           விழியப்பன் விளக்கம்: வஞ்சக மனதுடையோரின், பொய்யான ஒழுக்கத்தைக் கண்டு; 
           அவரின் உடம்பிலுள்ள ஐவகை பூதங்களும், தம்முள்ளே சிரிக்கும்.
(அது போல்...)
           காழ்ப்புணர்வு உடையோரின், போலியான உறவைக் கண்டு; அவரின் பிணைப்பிலுள்ள 
           ஐவகை உறவுகளும், மனதுள்ளே இகழும்.

0272.  வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் 
           தான்அறி குற்றப் படின்

           விழியப்பன் விளக்கம்: மனசாட்சிக்குத் தெரிந்தே, குற்றச்செயல்களைச் செய்வாராயின்; 
           ஒருவரின்  விண்ணளவு தவத்தால் என்ன பயன்?
(அது போல்...)
           குடிமக்களுக்குத் தெரிந்தே, ஊழல்களைச் செய்கிறதெனின்; ஓர்கட்சியின் கண்டமளவு 
           ஆதரவாளர்களால் என்ன நன்மை?
           
0273.  வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 
           புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

           விழியப்பன் விளக்கம்: மனதை ஒருமுகப்படுத்தும் வலிமையற்றோரின், வலிய தவக்கோலம்; 
           வலுவற்ற பசு, வலிமையான புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு மேய்வது போன்றதாகும்.
(அது போல்...)
           ஊழலைக் களையெடுக்கும் திராணியற்றோரின், புரட்சிப் பிரச்சாரம்; இளம் குழந்தை, 
           முதிய வயதினரின் வேடத்தை அணிந்துகொண்டு மிரட்டுவது போன்றதாகும்.

0274.  தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து 
           வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

           விழியப்பன் விளக்கம்: தவக்கோலம் கொண்டும், தீவினைகளைச் செய்வது; வேடர்கள் புதரில்
           மறைந்து, பறவைகளைக் கண்ணிவைத்து பிடிப்பது போன்றதாகும்.
(அது போல்...)
           எல்லா-வளமும் இருந்தும், பிறர்பொருளை அபகரிப்பது; கோழைகள் பிறரின் ஆதரவுடன்,
           எதிரிகளை மறைந்திருந்து தாக்குவது போன்றதாகும்.

0275.  பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
           ஏதம் பலவுந் தரும்

           விழியப்பன் விளக்கம்: "ஆசைகளைத் துறந்துவிட்டோம்!" என்போரின் பொய்யொழுக்கம்; 
           "என்ன செய்தோம்? என்ன செய்தோம்?" என வருந்தும் பல துன்பங்களைக் கொடுக்கும்.
(அது போல்...)
           "ஊழல்களை ஒழித்துவிட்டோம்!" என்போரின் பொய்ப்பிரச்சாரம்; "ஏன் தோற்றோம்? ஏன்
           தோற்றோம்?" என வருந்தும் பல நிகழ்வுகளை உருவாக்கும்.

0276.  நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
           வாழ்வாரின் வன்கணார் இல்

           விழியப்பன் விளக்கம்: மனதளவில் ஆசைகளைத் துறவாமல், வெளியில் துறந்தவர் போல்; 
           ஏமாற்றி வாழ்வோரை விட, இரக்கமற்றோர் வேறெவருமில்லை.
(அது போல்...)
           நடைமுறையில் ஊழல்களை ஒழிக்காமல், மேடையில் ஒழித்தது போல்; ஏமாற்றி
           ஓட்டுகேட்போரை விட, இழிவானோர் வேறெவருமில்லை.

0277.  புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி 
           மூக்கிற் கரியார் உடைத்து

           விழியப்பன் விளக்கம்: புறத்தில் - குன்றிமணியின் அகன்ற செம்மையாய் தோன்றிடினும்; 
           அகத்தில் - குன்றிமணியின் குறுகிய கருமையைக் கொண்டவரை உடையது இவ்வுலகம்.
(அது போல்...)
           பேச்சில் - இயற்கையின் பரந்த கருணையாய் பொழிவதும்; செயலில் - இயற்கைசீற்றத்தின்
           கொடிய சீரழிவுமான இரட்டையரைக் கொண்டது சமூகம்.

0278.  மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
           மறைந்தொழுகு மாந்தர் பலர்

           விழியப்பன் விளக்கம்: மனதில் தீய-எண்ணங்கள் நிறைந்திருக்க, தவமிருப்போர் இயல்புடன்;
           புனிதநீரில் குளித்து, பொய்யான ஒழுக்கத்துடன் வாழ்வோர் பலருண்டு.
(அது போல்...)
           செயலில் ஒழுங்கீனங்கள் பலவிருக்க, மாமனிதர் இயல்புடன்; மேடைப்பேச்சில் கவர்ந்து,
           போலியான தோற்றத்துடன் வலம்வருவோர் பலருண்டு.

0279.  கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
           வினைபடு பாலால் கொளல்

           விழியப்பன் விளக்கம்: நேரான அம்பு கொடியது செய்யும்! வளைவான யாழ், இனிமையான 
           இசைதரும்! அதுபோல், ஒருவரை - பேச்சால் அல்லாது செயலால் வரையறுத்தல் வேண்டும்.
(அது போல்...)
           முரடான பலாப்பழம் அமிழ்தாய் இனிக்கும்! வழவழப்பான எட்டிப்பழம் உயிரை அழிக்கும்! 
           அதுபோல், ஓர்-உறவை - அழகால் அல்லாது அன்பால் நிர்ணயிக்க வேண்டும்.

0280.  மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
           பழித்தது ஒழித்து விடின்

           விழியப்பன் விளக்கம்: உலகத்தார் விமர்சிக்கும் கூடாவொழுக்கத்தை ஒழித்துவிட்டால்; 
           முடியை மழிப்பதோ அல்லது நீளமாய் வளர்ப்பதோ தேவையில்லை.

(அது போல்...)
           பொதுமக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அளித்துவிட்டால்; சூறாவளிப் பிரச்சாரமோ 
           அல்லது மிகையான வாக்குறுதியோ தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக