சனி, மே 28, 2016

அதிகாரம் 030: வாய்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 030 - வாய்மை

0291.  வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
           தீமை இலாத சொலல்

           விழியப்பன் விளக்கம்: வாய்மை என்பது என்னவென்றால்; எந்த ஒரு சொல்லும், தீமைப் 
           பயக்காத வகையில் பேசுவதேயாகும்.
(அது போல்...)
           மனிதம் என்பது எதுவெனில்; எந்த ஒரு எண்ணமும், துரோகத்தை விதைக்காத வழியில்
           சிந்திப்பதேயாகும்.

0292.  பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
           நன்மை பயக்கும் எனின்

           விழியப்பன் விளக்கம்: எந்த குற்றமும் இல்லாத, நன்மையை விளைவிக்கும் எனில்; பொய் 
           கூட, வாய்மையின் தன்மையுடையதே ஆகும்.
(அது போல்...)
           எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவை வலுப்படுத்தும் எனில்; ஆற்றாமை கூட,
           அன்பின் வடிவமே ஆகும்.
           
0293.  தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
           தன்நெஞ்சே தன்னைச் சுடும்

           விழியப்பன் விளக்கம்: நம் மனதுக்கு பொய்யென தெரிந்தும், பொய்யைச் சொல்லக் 
           கூடாது; அப்படி பொய் சொன்னபின், நம்மனமே நம்மை துன்புறுத்தும்.
(அது போல்...)
           நம் உணர்வுக்கு துரோகமென தெரிந்தும், துரோகத்தைச் செய்யக்கூடாது; அப்படி
           துரோகம் செய்தபின், நம்சுயமே நம்மை காயப்படுத்தும்.

0294.  உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
           உள்ளத்து ளெல்லாம் உளன்

           விழியப்பன் விளக்கம்: மனதில் கூட பொய்யின்றி, ஒழுக்கமுடன் வாழ்வோர்; 
           உலகிலுள்ளோர் அனைவரின் மனதிலும், நீங்காமல் நிறைந்திருப்பர்.
(அது போல்...)
           பிரச்சாரத்தில் கூட மிகையின்றி, இயல்புடன் பேசுவோர்; குடிமக்கள் அனைவரின் 
           நம்பிக்கையிலும், நீக்கமற கலந்திருப்பர்.

0295.  மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு 
           தானஞ்செய் வாரின் தலை

           விழியப்பன் விளக்கம்: மனசாட்சியோடு உடன்பட்டு, உண்மை பேசுவோர்; தவத்துடன், 
           தானமும் பழகுவோரை விட உயர்ந்தவராவர்.
(அது போல்...)
           கொள்கையுடன் ஒன்றுபட்டு, அரசியல் செய்வோர்; அதிகாரத்துடன், படையும் 
           கொண்டோரை விட வல்லவர்களாவர்.

0296.  பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை 
           எல்லா அறமுந் தரும்

           விழியப்பன் விளக்கம்: பொய் சொல்லாததற்கு இணையான புகழேதும் இல்லை; அது 
           பெருமுயற்சி இல்லாமலேயே, அனைத்து அறங்களையும் விதைக்கும்.
(அது போல்...)
           சுயத்தை இழக்காததற்கு நிகரான ஆத்மதிருப்தி ஏதுமில்லை; அது முயற்சியேதும் 
           இன்றியே, எல்லா நற்பண்புகளையும் கற்பிக்கும்.

0297.  பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
           செய்யாமை செய்யாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: பொய் சொல்லாத நிலைப்பாட்டைப், பொய்க்காமல் செய்தால்; 
           அறம் தவிர்த்த செய்யக்கூடாதவற்றை, செய்யாதிருக்கத் தவறினாலும்  நன்மையே.
(அது போல்...)
           மனிதம் மறக்காத அடிப்படையை, அழியாமல் பாதுகாத்தால்; தேவை இல்லாத 
           இனவாதங்களை, செய்யாதிருக்க மறந்தாலும் சிறந்ததே.

0298.  புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 
           வாய்மையால் காணப் படும்

           விழியப்பன் விளக்கம்: உடலை சுத்தமாய் வைப்பது, நீரால் சாத்தியமாவது போல்; 
           உள்ளத்தைச் சுத்தமாய் வைப்பது, வாய்மையால் சாத்தியமாகும்.
(அது போல்...)
           செயலை சரியாய் நிர்ணயிப்பது, சிந்தனையால் வலுவடைவது போல்;  சுயத்தைச் சரியாய் 
           நிர்ணயிப்பது, சுய-ஆய்வால் வலுவடையும்.

0299.  எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
           பொய்யா விளக்கே விளக்கு

           விழியப்பன் விளக்கம்: வெளிப்புற இருளை நீக்கும் விளக்குகள், சான்றோர்க்கு 
           விளக்காகாது! அகத்தின் இருளை நீக்கும் பொய்யாமையே, அவர்களுக்கு விளக்காகும்.
(அது போல்...)
           நட்பின் துயரத்தைத் துடைக்கும் நற்பணிகள், அடியார்க்கு மனிதமாகாது! எதிரியின் 
           துயரத்தைத் துடைக்கும் நற்பணிகளே, அவர்களுக்கு மனிதமாகும்.

0300.  யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் 
           வாய்மையின் நல்ல பிற

           விழியப்பன் விளக்கம்: உண்மையை ஆராய்ந்து, நாம் கண்டறிந்த எல்லாவற்றிலும்; 
           வாய்மையை விட நன்மையான வேறெதுவொன்றும், இருப்பதற்கு சாத்தியமில்லை.
(அது போல்...)
           ஆனந்தத்தை உணர்ந்து, நாம் செய்திட்ட அனைத்திலும்; பகிர்வதை விட உயர்வானது 
           வேறெதுவும், இருந்திட வாய்ப்பில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக