வெள்ளி, அக்டோபர் 05, 2018

அதிகாரம் 116: பிரிவு ஆற்றாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை

1151.  செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
           வல்வரவு வாழ்வார்க் குரை

           விழியப்பன் விளக்கம்: பிரிந்து செல்லாத நிலையிருப்பின், எனக்கு உரை! மாறாய், உன் 
           "விரைவில் வருவேன்" போன்ற செய்தியை; வரும் வரை வாழும் இயல்பு உடையோருக்கு 
           உரை!
(அது போல்...)
           ஊழல் செய்யாத உறுதியிருப்பின், எமக்கு சொல்வீர்! மாறாய் உம் "இலவசம் அளிப்போம்" 
           போன்ற வாக்குறுதியை; அளிக்கும் வரை ஏமாறும் இயல்பு உடையோருக்கு சொல்வீர்!
      
1152.  இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
           புன்கண் உடைத்தால் புணர்வு

           விழியப்பன் விளக்கம்: என்னவரின் பார்வையும், இன்பம் அளிக்கும் இயல்புடையது! ஆனால் 
           பிரிவை எண்ணி அஞ்சும் இந்நிலையில், அவரின் புணர்வு கூட துன்பத்தையே அளிக்கிறது!
(அது போல்...)
           என்னம்மையின் உருவமும், அன்பை அருளும் தன்மையுடைது! ஆனால் முதுமை நோயில் 
           வாடும் இந்நிலையில், அவரின் இருப்பு கூட வெறுப்பையே அளிக்கிறது!
           
1153.  அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
           பிரிவோ ரிடத்துண்மை யான்

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவுடைய காதலரே ஆயினும், என்றோ ஓர் காலத்தில்; காதல் 
           பிரிவு நிகழும் வாய்ப்பிறப்பதால், தெளிவான மனநிலையில் இருப்பது அரிதானது!
(அது போல்...)
           சகலகலா வல்லவரே ஆயினும், எங்கோ ஓர் தொகுதியில்; ஊழல் விதை வளரும் 
           வாய்ப்புள்ளதால், முழுமையான மாற்றத்தை நம்புவது அரிதாகிறது!  

1154.  அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
           தேறியார்க்கு உண்டோ தவறு

           விழியப்பன் விளக்கம்: "அச்சம் வேண்டாம்! உனைப் பிரியேன்!" என உறுதி அளித்தவர் 
           பிரிந்தால்; அவரின் ஐயமற்ற வாக்கை நம்பியோர்க்கு, குற்றம் ஏதும் உண்டோ?
(அது போல்...)
           "தயக்கம் வேண்டாம்! உமைக் காப்போம்!" என பிரச்சாரம் செய்தோர் கைவிட்டால்; 
           அவர்களின் பகட்டான பேச்சை நம்பியோர்க்கு, பாவம் ஏதும் உண்டோ?

1155.  ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
           நீங்கின் அரிதால் புணர்வு

           விழியப்பன் விளக்கம்: காப்பதாயின், வாழ்க்கைத் துணையாக அமைந்தவரின் பிரிவு 
           நிகழாமல் காக்கவேண்டும்! மாறாய், அவர் பிரிந்து விலகினால்; சேர்வது அரிதாகும்!
(அது போல்...)
           தடுப்பதாயின், கொடுங்கோல் ஆட்சியை அளிப்போரின் காலம் நீளாமல் தடுக்கவேண்டும்! 
           மாறாய், அவர் வென்று திரும்பினால், மீள்வது அரிதாகும்!

1156.  பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
           நல்குவர் என்னும் நசை

           விழியப்பன் விளக்கம்: வாழ்க்கைத் துணையானவர், துயரமின்றி பிரிவை உரைக்கும் 
           கொடியவர் ஆயின்; தேவையான அன்பை அவர் வழங்குவார், என்னும் விருப்பம் 
           அர்த்தமற்றது ஆகும்!
(அது போல்...)
           ஆட்சியை நடத்துவோர், கவலையின்றி வரியை உயர்த்தும் கொடுங்கோலர் எனில்; 
           வேண்டிடும் மாற்றத்தை அவர் அளிப்பார், என்னும் நம்பிக்கை மூடமானது ஆகும்!

1157.  துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
           இறைஇறவா நின்ற வளை

           விழியப்பன் விளக்கம்: தான் மறைத்தாலும், கையின் மணிக்கட்டில் கழலும் நிலையிலுள்ள 
           வளையல்கள்; துணைவனவன் பிரிந்த செய்தியை, ஊருக்கு அறிவிக்காமல் இருக்குமோ?!
(அது போல்...)
           நாம் தடுத்தாலும், மனதின் ஆழத்தில் எரியும் நிலையிலுள்ள நினைவுகள்; எதிரியவன் செய்த 
           சதியை, பிறருக்கு உணர்த்தாமல் இருக்குமோ?!

1158.  இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
           இன்னாது இனியார்ப் பிரிவு

           விழியப்பன் விளக்கம்: ஒத்த உணர்வுடையோர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது! 
           இனிய வாழ்க்கைத் துணையின் பிரிவு, அதைவிட துன்பமானது!
(அது போல்...)
           ஒத்த இலக்குடையோர் இல்லாத குழுவில் பணிபுரிவது கொடுமையானது! நல்ல குழு 
           மேலாளரின் பணிமாற்றம், அதைவிட கொடுமையானது!

1159.  தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
           விடிற்சுடல் ஆற்றுமோ தீ

           விழியப்பன் விளக்கம்: நெருப்பு, தன்னைத் தீண்டினால் சுடுவதை விடுத்து; காதலால் 
           விளையும் காமநோய் போல், விட்டு விலகும்போது சுட வல்லதாகுமோ?!
(அது போல்...)
           மனிதன், தன்னை நேசிப்பதால் மகிழ்வதை விடுத்து; தாய்மையால் விளையும் அன்புள்ளம் 
           போல், வெறுத்து பேசும்போது மகிழ முயல்வானோ?!

1160.  அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
           பின்இருந்து வாழ்வார் பலர்

           விழியப்பன் விளக்கம்: குடும்பத்தைப் பிரியும் அரிய செயல் செய்து, வறுமையெனும் துன்ப 
           நோயை நீக்குவோரும்; அப்பிரிவை ஏற்று, தொலை தூரத்திற்குப் பின்னிருந்து வாழ்வோரும் 
           பலருண்டு!
(அது போல்...)
           வாழ்வை இழக்கும் அரிய செயல் செய்து, ஊழலெனும் தீய சக்தியை அழிப்போரும்; 
           அவ்விழப்பை உணர்ந்து, வெகு காலத்திற்கு தொடர்ந்து வருவோரும் பலருண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக